தலைப்பு

திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிரும் நீயே, உணர்வும் நீயே!

சிதம்பரத்தைச் சேர்ந்த திரு. டி.சி. ஏகாம்பரம் அவர்களின் சாயி அனுபவங்கள்.

நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே என் இதயத்தில் இரண்டு துளைகள் இருந்தன. அவ்வப்போது வலியால் துடிப்பேன். என்னுடைய முப்பதாவது வயதில் திருமணம் நடந்து மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. ஏழைமை நிலையில் இருந்த நான் வறுமையாலும், இதய வலியாலும் துன்புற்று நடக்கமுடியாமலும் கஷ்டப்பட்டேன்.

இப்படியே 48 வயதை அடைந்தபோது நோயின் தாக்கம் அதிகப்படவே, ஒரு ஜோதிடரிடம் என் ஜாதகத்தைக் காட்ட அவர் இப்போது மரணசை வந்துள்ளது. ஆனாலும் ஒரு மகான் பார்வை பட்டால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

நண்பர் ஒருவர் மூலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பற்றி அறிந்துகொண்டேன். டிசம்பர் 1989ல் அவரைப் பார்க்கச் சென்றபோது என் கஷ்டங்களைக் கடிதத்தில் எழுதி வைத்திருந்தேன். சுவாமி எனக்கு விபூதிப் பிரசாதம் தந்து, பாத நமஸ்காரம் அளித்து, என் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார். பின் எனக்கு விஸ்வரூபதரிசனமும் காட்டினார்.

பின்னர் நோயின் தாக்கம் அதிகமாகவே நான் சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் இதய சிகிச்சைக்குச் சென்றேன். அங்கிருந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையைத் தாங்கும் நிலையில் என் உடல் நிலை இல்லை என்றும் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்றும் கூறினார்கள். மேலும், சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என்றார்கள். கலங்கிய நான் பகவானைப் பிரார்தித்தபடி ஊர் திரும்பினேன்.

1990 பிப்ரவரி மகாசிவராத்திரி அன்று, புட்டபர்த்தி சென்று பாபாவைத் தரிசித்தேன். விடியற்காலையில் பாபா நான் இருக்குமிடம் வந்து எனக்கு சர்க்கரைப்பொங்கல் அளித்தார். அப்போது நான் பாபாவிடம் என் இதயத்தில் இரண்டு துவாரங்கள் உள்ளன என்று கூறினேன். அதற்கு பாபா “சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்குச் செல். நான் பார்த்துக்கொள்கிறேன்என்றார். அன்றே புறப்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்ந்தேன்.

எந்தச் செலவுமின்றி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு தையல் பிரித்துப் பார்க்கையில் தையல் கூடாமல், சீழ் அதிகம் வரவே மருத்துவர்கள் இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது, இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள் என்றார்கள். அன்றிரவு நான் பாபாவின் நினைவுடன் தூங்கும்போது, தையல் கூடாத நெஞ்சுக்குழியில் மண் பிசைந்து அப்பியதுபோல் சதை மூடிய நிலையில் காணப்பட்டது. அதுகண்டு மருத்துவர்களே அதிசயித்தார்கள். எனக்கு பகவான் பாபா காட்டிய கருணையை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. அவரளித்த இந்த உயிரையும் உடலையும் அவரது சேவையிலே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆதாரம்:இறைவனுடன் இனிய அனுபவங்கள் (பக்கம்: 195)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக