தலைப்பு

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

♥ மனத் திருத்தகமாக மாறிய முடி திருத்தகம்!

(திரு. கே. ராஜேந்தின்,அழகு ஹேர் கட்டிங் சலூன், கள்ளக்குறிச்சி அவர்களின் சாயி அனுபவங்கள்)

கள்ளக்குறிச்சி தாலுகாவில் நல்லாத்தூர் கிராமத்தில் ராஜேந்தின் என்ற ஒருவர் சின்ன கடை போட்டு முடி திருத்தும் தொழில் செய்து வந்தார். அப்போது வாடிக்கையாளரான சாயிபாபா பக்தர் ஒருவர், பாபாவின் படம் ஒன்றைத் தந்து, அவரின் மஹிமைகள் பற்றிக் கூறியிருக்கிறார்.ஆனால் அவருக்கோ பாபாவை
கடவுளாய் ஏற்று கும்பிடுவதில் விருப்பம் இல்லை. ஓரமாய் வைத்து விட்டார். மறுபடியும் அவரை சந்தித்த சாயி பக்தர், பாபாவை பூஜிக்குமாறு மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தி இருக்கிறார். அப்போது அவரின் குடும்ப சூழல் மிகவும் மோசமாக இருந்ததால் சரி நாமும் கும்பிட்டு தான் பார்ப்போம் என்று பாபாவை மனமுருகி கும்பிட ஆரம்பித்தார். அவர் கும்பிட ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல அவரின் வாழ்க்கையில் வளர்ச்சி எட்டிப்பார்க்க ஆரம்பித்தது  பின்னர் பாபாவின் ஆசியால் கள்ளக்குறிச்சியில் ஒரு பெரிய முடிதிருத்தும் கடையை எடுத்து நடத்தும் அளவுக்கு பாக்கியம் கிட்டி மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்.

நன்றாக சென்று கொண்டு இருந்த அவருடைய வாழ்க்கையில் திடீரென்று அவரது வலது கை செயலிழந்தது. முடி திருத்த பிரதானமான கையே செயலிழந்ததால் ராஜேந்தின் மனமுடைந்தார். மிகவும் கஷ்ட ஜீவனமாக இருந்த  அவரது குடும்பத்தாருக்கு இது அதிர்ச்சியாய் இருந்தது.

மருத்துவரை நாடியபோது  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு செலவாகும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அவருக்கு பகவானை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
 பிறகு அந்த மருத்துவரே பெங்களூர் ஒயிட் ஃபீல்டில் இருக்கும்  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விவரத்தை தெரிவித்து அங்கு செல்லும்படி குறிப்புரைகள் தர அதன்படி பெங்களூர் சென்று பெயரை பதிவு செய்துவிட்டு வந்தார்.

நான்கைந்து முறைகள் மருத்துவமனை சென்றும் அவருக்கு அறுவை சிகிச்சை தேதி குறிப்பிடப்படவில்லை. மனம் நொந்தார் அன்பர். ஆனால் தொடர்ந்து சாயியை தொழுதும் அழுதும் வேண்டினார்.
 திடீரென ஒரு நாள்  "தேதி குறித்தாகிவிட்டது, பெட்டும் ஒதுக்கி ஆகிவிட்டது, கிளம்பி செல்" என அசரீரி குரல் தனக்கு கேட்டதாக குடும்பத்தாரிடம் சொல்ல அவர்கள் நம்பவில்லை.

"சரியான தகவல் இல்லாமல் செல்வது வீண் செலவு, ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டும்" என்று அவர்கள் எச்சரித்தும் மனக் குரலின் நம்பிக்கை வைத்து ஒயிட்ஃபீல்டு  சென்றார்.
   என்ன ஆச்சரியம்!!!
    அறுவை சிகிச்சைக்கு தேதி குறிக்கப்பட்டு" பெட்" ஒதுக்கப்பட்டு இருந்தது.
 தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டது மட்டுமல்ல; பாபாவின் தரிசனமும் கிடைத்து ஊர் திரும்பிய அவர் நிரந்தர சாயி பக்தரானார்.

சாயி கீதம், சாயி நாமம், சாயி தியானம் என அவ்வன்பர் தனது பிழைப்புடன் இறை பணியையும் சேர்த்து செய்து வருகிறார்.
 பகவானுக்கு மாசில்லா அன்பிருந்தால் போதும். அவர் எந்தத் தொழில் செய்பவர் என்பது முக்கியமல்ல.  அவரின் தொழில் தர்மம் சரியான பாதையில் சென்றால் அவர் கூட இருந்து அவரது இன்னல்களை களைவது பாபாவின் வழக்கம். பிறகென்ன?

 அவ்வன்பர் வாழ்நாள் முழுவதும் சாயி பக்தராவதுடன்  அவரே ஒரு சனாதன சாரதி ஆகி பாபாவின் மகிமைகளை வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்...
     

ஆதாரம்:  'இறைவனுடன் இனிய அனுபவங்கள், அத்யாயாம் 21.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக