தலைப்பு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

''அல்லா சாயி'' - எல்லாம் பாபாவின் கருணைதான்!


ஒரு எளிய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் பட்ட கஷ்டங்கள் நாங்கள் வணங்கும் அல்லாவிற்குத்  தான் தெரியும். வறுமை, நிரந்தர வருமானம் இல்லை. எங்கள் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, மொட்டை மாடியில்
கூரை போட்டு வாழ்ந்து வந்தோம். இந்த சூழ்நிலையில், என் மகன் சையத் ஹமீத் உளுந்தூர்பேட்டை  சாய் சமிதிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அவர்கள் செய்யும் சேவைப் பணியில் அவனுக்கு ஈடுபாடு அதிகரித்தது. அவனுக்கு 'பிளம்பிங்' மற்றும் 'எலக்ட்ரிகல்' வேலை நன்றாகத் தெரியும். இந்தத் தொழிலை செய்து அவனுக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் நாங்கள் வாழ்க்கை நடத்தி வந்தோம்.

பல நேரங்களில் தனக்கு வருமானம் கிட்டும் தொழிலையும் விட்டு, சாயி சேவையில் முழுமையாக இறங்கிவிடுவான். செய்யும் வேலையை, சுயநலமின்றி அக்கறையாய்ச் செய்வதால் அவன் எங்கு சென்றாலும் அவனை விரும்பி அனைவரும் அழைப்பர்.

சேவைக் காரியங்களில் ஈடுபடும் நேரங்களில், எங்களுக்குக் கிடைக்கும் வருமானமும் போய்விடும். இதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது. எப்படியாவது அரபு நாடுகளுக்குச் சென்றால், ஹமீதுக்கு நல்ல வேலையும் பணமும் கிடைக்கும், எங்கள் கஷ்டங்கள் விடியும் என்று நம்பினோம். இதற்கான 'ஏஜென்ட்' ஒருவரை அணுகி அவர் கேட்ட பணத்தை கடன் வாங்கிக் கொடுத்தோம். கடைசியில் அந்த ஆசாமி போலியானவர் என்பது தெரிந்தது.

எங்கள் பணமும் போயிற்று. ஆனால் ஹமீத் இதைப்  பற்றி கவலைப்படாமல், வழக்கம் போல் சேவை பணிகளில் ஈடுபட்டு வந்தான். இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது.

இந்த சமயத்தில் ''எலக்ட்ரிகல்''வேலைக்காக புட்டபர்த்திக்கு அவனை அழைத்தார்கள். அவன் திறைமையாக வேலை செய்ததால், அவனை அடிக்கடி புட்டபர்த்திக்கு அழைத்தார்கள். மாதத்தில் ஒரு பத்து நாட்கள் சென்றுவிடுவான். அங்குள்ள ''சர்க்யூட் டிவி கேமிரா''வை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் பாபா அவர்கள் காரில் அந்தப் பக்கமாக வந்து அவன் வேலை செய்வதைப் பார்த்தாராம். அவர் வந்தது கூட தெரியாமல், அவன் பணியில் மூழ்கியிருந்ததாக அவன் நண்பர் சொன்னார்.

அதன் பிறகு கும்பகோணம் மகாமக சேவைக்கு, அவனை சாயி தொண்டர்கள் அழைத்து சென்றுவிட்டனர். 15 நாட்களாகியும் வீடு திரும்பாததால் நாங்கள் கவலைப்பட்டோம். பிறகு தான் தெரிந்தது மகாமக சேவையை முடித்து, பழனியில் சேவைப் பணிக்காக சென்று வந்தான் என்று. இப்படி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாயி சேவையே உயிர் மூச்சாக செய்து வந்தான்.  

அவன் ஊரில் இல்லாத சமயம் தொடர்ந்து மழை பெய்ததால் கூரை வீடு ஒழுகிக் கொண்டிருந்தது. ஹமீதின் அம்மா, பாபா படத்தின் முன் நின்று பாபா எங்கள் பையன் ஹமீது உங்களைத் தான் நம்பி வணங்கி வருகிறான். சொந்த வீடு இருந்தும் அதே வீட்டின் மேல், ஒழுகும் கூரையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தாங்கள் என் பையனுக்கு வழிகாட்ட மாட்டீர்களா? என்று அழுதபடி வேண்டினாள்.

கும்பகோணம் சென்ற ஹமீதை சந்தித்த ஒரு சாயி பக்தர் ஒருவர் அவனை துபாய்க்கு வேலைக்கு அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார். துபாயில் நல்ல வேலை கிடைத்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாபாவிற்கு நன்றி சொன்னோம்,

வேளையில் சேர ஊர் கிளம்பும் தினமன்று, அவன் நண்பர் ஒருவர், அளித்த இஸ்லாம் மதச் சின்னம் பொருந்திய வாழ்த்து மடலை மீண்டும் பிரிக்கும் போது அதில் பாபாவின் ஆசீர்வாதமாக விபூதி வந்திருந்தது. வேலைக்கு சேர அவன் கிளம்பும் சமயம் விபூதியளித்து பாபா ஆசீர்வாதம் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியூட்டியது.

அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நாங்கள் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். நல்லொழுக்கமும், சேவை மனப்பான்மையுள்ள மகனைப் பெற்றது எங்கள் பாக்கியமே! என் மகனின் தன்னலமற்ற சேவையே, எங்கள் குடும்பத் தரத்தை உயர்த்தியிருக்கிறது. எல்லாம் பாபாவின் கருணைதான்!!!

ஆதாரம் : இறைவனுடன் இனிய அனுபவங்கள் (65)

1 கருத்து: