தலைப்பு

வியாழன், 12 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | சுவாமி புருஷோத்தமானந்தா


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

சுவாமி புருஷோத்தமானந்தா:

வெண்தாடி முக மழலையாய் ஒற்றை வேட்டியில் எளிமையாய். எளிமையே மகிமையாய் தவ வாழ்வு மேற்கொண்டவர் சுவாமி புருஷோத்தமானந்தா.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிஷ்ய பரம்பரையின் வழி பிரம்மானந்தர் மூலமாக துறவியாகி .. 30 வருடம் தனி குகையில் தவ வாழ்வில் தோய்ந்திருக்கிறார்.


1918ல் தனது குருவுக்கு
"எல்லாமே பொய்.. சத்தியத்தை முகத்துக்கு முகம் நேராக தரிசிக்கும் வரை எதிலும் திருப்தி அடையப்போவதில்லை" என புருஷோத்தமானந்தா ஒரு தீர்க்க மடல் எழுதினார்.

1918ல் தான் ஷிர்டி ஸாயியும் சமாதி ஆகிறார்.

அதே சத்யம் ..அவருக்கு சரியான நேரம் குறித்து
26 ஜுலை 1957ல்.. அவர் வரைந்த மடலுக்கு விடை அளிக்கவே ...
சத்யமே சத்யமாய் தரிசனம் தர வசிஷ்ட குகை க்கு எழுந்தருள்கிறது.

ஸ்ரீ ராமரின் குருவான வசிஷ்டர் திரேதா யுகத்தில் தங்கிய குகை தான் இது.

வசிஷ்டர் குகையின் முகப்பு தோற்றம் (2017)

மங்கலான ஒரு போர்டை பார்த்து யாரிடமும் தெரிவிக்காமல்  திடுமென சாயி இறைவன் குறுகலான அந்த இறக்கம் வழி விறு விறு என பின்தொடர்கிறார்.

பக்தர் சிலர் பின்தொடர்கின்றனர்.

ஆம்.. ஆச்சர்யம் நடக்கிறது.
அனுபவம் காத்திருக்கிறது.

சாயி ராமரே அந்த குகைக்கு எழுந்தருள்கிறார்.

வசிஷ்டர் குகையின் நுழைவாயில் (2017)

நீண்ட நெடு நாளாய் காத்திருந்து வரவேற்பதாய் அக மலர்ச்சியோடு நம் சுவாமியை வரவேற்கிறார் சுவாமி புருஷோத்தமானந்தா.

எப்பேர்பட்ட கருணை சுவாமிக்கு. எப்பேர்ப்பட்ட பாக்கியம் புருஷோத்தமானந்தருக்கு.

வரவேற்ற புருஷோத்தமானந்தா "கடவுளே உங்களை அனுப்பியது" என்கிறார்.. அதற்கு சுவாமியோ
கடவுளே இதோ வந்திருக்கிறேன் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கிறார்..

அதற்கு பக்குவத் துறவி .. தான் வெளி உலகமே அறியாதவன் ஆயினும் இசை என்றால் பரம உயிர் என்கிறார்.
அருகிலிருந்த காளிகாநந்தர்  இரண்டு தியாக ராஜ கீர்த்தனை பாட வேண்டும் படி சுவாமியிடம் வேண்டுகிறார்

என்ன பாடல் என சுவாமி கேட்க...

இரண்டு கீர்த்தனைகள் பெயர் சொல்ல...

"ஸ்ரீ ரகுவர சுகுணாலயா"

அருகே இருந்த இசை விற்பன்னர்களான பி‌.வி ராமனுக்கும்.. பி.வி லக்ஷமணனுக்குமே அது  தெரிந்திருக்கவில்லை...பழம் பக்தர் ராஜா ரெட்டியும்.. தெய்வீக வாழ்வு சங்க  சுப்பராமையாவும் சுவாமியையே பார்க்கிறார்கள்..

துளியும் யோசிக்காமல் சுவாமி அந்த இரண்டு கீர்த்தனைகளை காற்றுக்கே முக்தி தருவதாகப் பாடி முடிக்கிறார்...

ராமரே ராமரைப் பாட..
அப்போது வசிஷ்டரின் ஆன்மாவும் ஆனந்தப்பட்டிருக்கும்

ஆஹா ஆஹா ... என புருஷோத்தமானந்தா கரைந்து போகிறார்..

அவரே உங்களை அனுப்பியது என ராமரை குறிப்பிடுகிறார் புருஷோத்தமானந்தா.

26 ஜுலை 1957
இறைவன் சத்ய சாயி உடன் சுவாமி புருஷோத்தமானந்தா

யாரை யார் அனுப்புவது?
 அவரே இவர் என சுவாமி உணர்த்த...

வெட்டியான் வேடமிட்டு வந்தவரை சிவபெருமான் என சற்று நேரம் கடந்தபின்னரும் உணராமல்.. பிறகு வெட்டியானே தான் சிவபெருமான் என உணர்த்தியபின் உணர்ந்த ஆதி சங்கரராய் புருஷோத்தமானந்தா
சத்ய சாயியே  பரமாத்மா என சாயி புருஷோத்தமனை உணர்ந்து பெயருக்கு தகுந்தாற் போல் ஆனந்தம் எய்துகிறார்

நம் சுவாமி சிருஷ்டி செய்து ஒரு தூய ஸ்படிக மாலையை அவருக்கு அணிவித்துவிடுகிறார்.

குகையில் நெருப்புக்காக புருஷோத்தமானந்தா எவ்வளவு சிரமப்பட்டார் என அருகே பார்த்ததாய் சாயி ஜோதி விவரித்தது.

அந்தர்யாமி சாயிக்கு எதுவும் தொலைவில் லை.. அவரிடமிருந்து எதுவும் தொலைவதுமில்லை...

தானே அன்று தீப்பெட்டிகளை வைத்ததாகவும் நம் சுவாமி தெரிவிக்க..


வசிஷ்டர் குகைக்குள் சுவாமி புருஷோத்தமானந்தர் உறங்கிய இடம் 

சமையலுக்கு...
கற்களை உரசி நெருப்பு வரவழைக்கக் கடினப்பட்ட புருஷோத்தமானந்தர்.. ஒரு நாள் தீப்பெட்டிகளை அந்த குகைக்குள் இருப்பதைப் பார்த்து அதைப் பயன்படுத்தி இருக்கிறார். அது நினைவுக்கு வர .. அதை வைத்தது கருணைக் கடல் தான் எனப் புரிந்து பூரிப்பாகிறார்.

வயிற்று வலியால் சிரமப்பட்ட காளிகாநந்தருக்கு (காளிகானந்தர் சுவாமி புருஷோத்தமானந்தரை கவனித்துக் கொண்ட ஒரு ஆத்மார்த்த துறவி) சிருஷ்டி செய்து நிவாரண குளிகை (ஒளஷத மிட்டாய்)  அளித்து நம் சுவாமி பூரண குணம் தருகிறார்.

ஆசிரம வாசிகளின் சிரமம் போக்கவும் ஆசிரமம் அமைத்தது இறைவன் சாயி ஒருவரே...

சுவாமி சத்ய சாயி கடவுள் .. அவர் ஒருவரே பணிபவருக்கு நடமாடும் கோவிலாகவும் .. கனிபவருக்கு நடமாடும் ஆசிரமமாகவும் திக்கெட்டும் அக ஒளியாய் திசைதோறும் அகிலமெல்லாமும்  திகழ்கிறார்

பிறகு  சுவாமி குகைக்குள் புருஷோத்தமானந்தரை அழைத்துப் போகிறார்...


குகைக் கதவை சாற்றுகிறார்.

இதை வேங்கடகிரியில் சிவானந்தரின் தெய்வீக வாழ்வு சங்கத் தலைவர் சுப்பராமையா கதவிடுக்கு வழியே ஆர்வமிகுதியில் பார்த்தபடி இருக்கிறார்.

சுவாமி அறியாதவரா..
மனங்களைப் புரியாதவரா...
மகிமை தான் புரியாதவரா...

வெளி உலகத்திற்கு அந்த ஒளி உலகம் தெரிய வேண்டியே பார்க்கட்டும் என சுவாமி விட்டுவிடுகிறார்...

பிறகு சேயாய் மாறிய தாயான தயாளு சாயி.. புருஷோத்தமானந்தரின்  மடியில் சாய்ந்து கொள்கிறார்...

அவர் தலையும் சுவாமியின் தலையும் மிக மிக அருகில் நேர்கோட்டில் சந்தித்தபடி இருக்கிறது...

ஒரு குடம் தூய பாலும்.. ஒரு பால்வெளியும் பார்த்துக் கொள்வதாய் அமைகிறது.

தேஜோமய ஒளியால் சுவாமியின் உடல் பிரகாசிக்க.. உருவமே பெரும் பிரகாசத்தால் பெருக்க ஆரம்பித்திருக்கிறது..

சுவாமியின் வதனத்திலிருந்து வெளிச்ச கீற்றுகள் குகை எங்கிலும் பரவ ஆரம்பித்திருக்கின்றன



ஆம் குகைக்கு வெளியே ஆகாய நட்சத்திரம்.. குகைக்கு உள்ளே அக்னி நட்சத்திரம்...

இதை தரிசித்த புண்ணியவான் சுப்பராமையா ஆச்சர்யத்தின் உச்சிக்குப் போகிறார்.

சில நிமிடங்கள் கடக்க.. புருஷோத்தமானந்தரை சகஜ நிலைக்குத் திருப்பி அவரை காருண்யமாய்ப் பார்க்கிறார்.

பிறகு சுவாமி விடைபெறுகிறார்.

குகையினுள் நிகழ்ந்த அனுபவம் கேட்டதற்கு ...

புருஷோத்தமானந்தர் சிறுவயது முதல் வழிபட்ட பத்மநாபரை இன்று அவர் தரிசித்ததாகவும்..
அது ஜோதிர் பத்மநாப தரிசனம் என்றும் விவரிக்க..


அந்த அனுபவப் பிரகாசத்தின் காரணம் புரிந்துபோனது.

புருஷோத்தமானந்தரின் கண்கள் விண்மீன்களாய் ஒளியும் கூடவே நன்றிஉணர்வால் கண்ணீரும் கசிந்திருக்கிறது...

பிறகு ஒருமுறை புட்டபர்த்திக்கு விஜயம் செய்கிறார் சுவாமி புருஷோத்தமானந்தா.. தனது குரு பிரம்மானந்தரை சாயி இறைவன் வடிவில் தரிசனம் செய்கிறார்.

தன் குரு சுவாமியிடமே ஐக்கியமாகி இருப்பதாக சீடர் புருஷோத்தமானந்தா முழுமையாய் உணர்ந்து சுவாமியிடம் இதைப் பற்றி தெரிவிக்க .. சுவாமி அதை ஆமோதிக்கிறார்.

(ஆதாரம்: "சத்யம் சிவம் சுந்தரம்" பகுதி 1. பேரா. கஸ்தூரி பக்கம் : 111 -- 113) 

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு.. ஒரு சிவராத்ரி வைபவத்தில் சரியாக லிங்கோபத்பவம் நிகழ .. அருகிலிருந்த சிவானந்த சீடரிடம் புருஷோத்தமானந்தா தன் பாதகதி அடைந்துவிட்டதாகவும் அவரின் உடலை அந்த ஸ்படிக மாலையோடு சேர்த்து எரியூட்டும்படியும் நம் சுவாமி அறிவுறுத்த ..
சுவாமி புருஷோத்தமானந்தாவின் சமாதிக்கு பிறகு வசிஷ்டர் குகையில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் புகைப்படம்.

 அவ்வாறே அவருக்கான முக்தி வைபவம் நிகழ்கிறது.

அடியேன் சுவாமியை என் தாயாகவும்.. மகான்களை உறவுக்காரர்களாகவும் உணர்பவன்...

யோகி ராம்சுரத்குமார் சொல்வது போல் பாரதம் ராணுவத்தால் அல்ல ரிஷிகளாலேயே காப்பாற்றப்பட்டு வருகிறது..

அந்த ரிஷிகளின் தவ வாழ்வையும் கடினமின்றி காப்பாற்றி வழி நடத்துவதும் நம் சுவாமியே...

ஆகாயமாய் நம் சுவாமி எங்கும் நிறைந்திருப்பவர்.. மகான்கள் சுவாமியின் நட்சத்திரங்கள்..

அவர்களின் வெள்ளை ஒளி இரவில் மட்டுமல்ல பகலிலும் பேரருள் சாயியால் பிரகாசிக்கின்றன...

 பக்தர்களுக்கு தரிசனம் காட்டியும் முக்தர்களுக்கு கரிசனம் காட்டியும் இன்றும் வியாபித்து வருகிறது இந்தப் பிரபஞ்சத்தின் சத்தியமான.. சர்வ முழுமையான ஒரே சத்ய சாயி பரம்பொருள்...

பக்தியுடன்
வைரபாரதி

பின்குறிப்பு: இன்று ரஜினி போன்ற பிரபலங்கள்  தியானிக்கும் ரிஷிகேஷில் உள்ள இந்த வசிஷ்டர்  குகையை முதன்முதலில் கண்டறிந்தது சுவாமி புருஷோத்தமானந்தா தான். இந்த மகானின் வருகைக்கு முன்னால்.. இந்த குகை யாரும் செல்ல முடியாத ஒரு அடர்ந்த பகுதியாக இருந்தது. இந்த குகையில் புருஷோத்தமானந்தா தங்கி 30 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்.  சுவாமி புருஷோத்தமானந்தாவின் சமாதிக்கு பின்னர், இன்று அவருடைய சீடர்கள் இந்த குகையை பராமரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக