தலைப்பு

திங்கள், 16 மார்ச், 2020

உன்னதமான காணிக்கை ... அன்பும் பக்தியும் கொண்ட தூய இதயத்திலிருந்து...


தெய்வீக தந்தைக்கும் மகனுக்கும் உரையாடல் வழி நிகழ்ந்த  அற்புத சம்பவத்தை நேரில் கண்ட மாணவரின் பகிர்வு இதோ...

சில ஆண்டுகளுக்கு முன், பகவான் பாபா புட்டபர்த்தியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டுவதற்கு உண்டான ஆயத்த பணிகளில் மும்முரமாக இருந்தார். அந்த சமயம், மாணவர்களுடன் அவரால் நீண்ட நேரம் செலவிட முடியவில்லை. புதிய மருத்துவமனை தொடர்பான விஷயங்களில் அவர் இரவும் பகலும், மிகவும் பிசியாக இருந்தார்;

அது அனைத்து விதங்களிலும் சிறந்து விளங்கக் கூடிய மருத்துவமனையானபடியால், மதிய தரிசனத்திற்குப் பிறகும் பகவான், மருத்துவர்களை அழைத்து கட்டுமானப் பணிகளைப் பற்றி விவாதிப்பார். இதற்கு முன் மாலை வேளைகளில், நேர்காணல் முடிந்தவுடன் அவர் வெளியே வந்து மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாடி, அவர்களை  வழிநடத்துவார். ஆனால் இப்பொழுது நேரமின்மையால், அவர்களைப் பார்க்க முடியவில்லை.சாய் அன்னையின் இந்த பிரிவைத் தாங்க முடியாத மிகச் சிறிய மாணவன் ஒருவன், பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி,மாலை தரிசனத்தில் சுவாமியிடம் கொடுப்பதற்கு எடுத்துச் சென்றான். அவனுக்கு பின் வரிசையிலேயே இடம் கிடைத்தது. பகவான் அவனருகில் வந்தபோது, சிறுவன் எழுந்து கடிதத்தை நீட்டினான். பகவான் பாபா, சற்றே சாய்ந்து, ஆவலுடன் அவனது கடிதத்தை பெற்று கொண்டார். அச்சிறுவன் அகமகிழ்ந்து போனான். தரிசனம் தொடர்ந்தது; எப்பொழுதும் போல், சில மருத்துவர்களை பாபா நேர்காணலுக்கு அழைத்தார். இன்றும் சுவாமியின் அன்பு மிகுந்த உரையைக் கேட்க இயலாது, மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஐந்து நிமிடம் கழித்து, அவர்கள் ஆச்சரியப்படும்படியாக, நேர்காணல் அறையைத் திறந்து.. பாபா தன் கையில் அம்மாணவன் கொடுத்த கடிதத்துடன் வெளியே வந்தார். பகவான் அச்சிறுவனை அருகில் அழைத்து, "சிறுவனே, நீ எனக்கு  என்ன எழுதியிருக்கிறாய் என எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே உன் கடிதத்தை உரக்கப் படிக்க போகிறேன்" என்று கூறினார். ஏதுமறியா அச்சிறுவன், "தங்களது விருப்பம் போல செய்யுங்கள், சுவாமி ",என்றான். அனைவருக்கும் கேட்கும்விதமாக, பகவானே அக்கடிதத்தை உரக்க  படிக்கத் தொடங்கினார்:

அன்புள்ள பகவான்,
நீங்கள் இங்கு எங்கள் அனைவருக்கும் நிறைய கொடுத்து இருக்கிறீர்கள். எனக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இலவச கல்வி அளித்துள்ளார்கள். நீங்கள் மிகப்பெரிய மருத்துவமனை கட்டுவதாகவும், அதன் மூலம் சமுதாயத்தில் அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கப் போவதாகவும் அறிந்தேன். பகவான்!! நானும் தங்களது இச்சீரிய பணியில் சேர விரும்புகிறேன். ஆனால் சிறியவனான எனக்கு எப்படி பங்கேற்பது என்று தெரியவில்லை. பகவான், எனது பெற்றோர் மிகவும் ஏழையானவர்கள். ஆயினும் என் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் அக்கறையாலும், ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை கைச்செலவிற்கு அனுப்புகிறார்கள். நான் கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய துணிகளை சலவைக்குப் போடுவதில்லை. இரவில், பிற மாணவர்கள் உறங்கும் போது, என் துணிகளைத் துவைத்துக் கொண்டேன். அந்த வகையில் சிறு தொகையை சேர்த்து வைத்துள்ளேன். மேலும் மிட்டாய்கள், சாக்லேட் முதலியவற்றை வாங்காமல் என்னைக் கட்டுபடுத்திக் கொண்டு, சிறு தொகையை சேமித்து வைத்திருக்கிறேன். அந்த வகையில் என்னிடம் இருக்கும் 100 ரூபாயை உங்களிடம் அளிக்கிறேன், பகவான்!!இச்சிறு தொகையை அளிப்பதற்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது; ஆனால் இதைக்கண்டு, புதிய மருத்துவமனைக்கு ஒரு செங்கலேனும் வாங்க முடிந்தால், நான்தான் இந்த உலகத்திலேயே மிக்க மகிழ்ச்சியான சிறுவனாக இருப்பேன்.

இப்படிக்கு,
உங்களது அன்பு மகன். 



தன் மகனது செயலால் பெருமைப்படும் ஒரு தாயின் கண்கள் எப்படி ஜொலிக்குமோ, பகவானின் கண்களும் அப்படி ஜொலித்தன. சிறுவன் கொடுத்த நூறு ரூபாயை பிடித்தபடி,"என் அன்புள்ள புதல்வனே!
இது வெறும் 100 ரூபாய் தாளல்ல. இது எனக்கு  கோடானுகோடி ரூபாய்க்குச் சமம்!" என்று பகவான் அருளினார்.

இதிலிருந்து நாம் கற்பது என்ன? இறைவனின் உலகில், ஒருவரது பதவி, சொத்து, அதிகாரம் ஆகிய எதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மாறாக, இறைவன் நாம் மனத்தூய்மையுடன் இருக்கிறோமா என்றே பார்க்கிறார். அவர் நம்மிடம் அன்பையும், பக்தியையுமே எதிர்பார்க்கிறார்!!

ஆதாரம்: An extract from the February 1995 issue of the Sanathana Sarathi.
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக