தலைப்பு

வியாழன், 26 மார்ச், 2020

நம்பாத முகமதியரை நம்ப வைத்து ஆட்கொண்ட அல்லா சாயி!


A. B. கோர்பு ( Abdul Razak Baburao korbu) சிறுவயதிலேயே தந்தையை இழந்து வறுமையில் வாடியவர். தாயின் திக்கற்ற நிலையால் அவரது படிப்பு கேள்விக்குறியானது. கல்விக் கட்டணம் செலுத்த இரவு நேரத்தில் ஒரு திரைப்பட கொட்டகையில் வேலை செய்தார். ஆனால் அவர் படிப்பில் படு சுட்டி அதனால் அரசின்  நிதி உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் ஆனார். பின் ஊக்கமுடன் மேற்பட்டமும் பெற்று பேராசிரியர்  ஆனார். ஆயினும்  அவரது உள்மனம் அமைதியின்றி ஒரு தேடலில் இறங்கியது. ஆம். அவர் தன் ஆன்மீக வழிகாட்டுதலுக்கு ஓரு குருவைத் தேடினார். அவர் தேடலின் முடிவு பர்த்தியில் அவர் தரிசித்த சாயிராமன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. பாபாவின் அருளால் அவர் ஸ்ரீசத்யசாயி கல்லூரியில்  பேராசிரியராகவும் ( visiting professor) பொறுப்பு வகித்தார்.

இனி வரும் செய்திகள் இறைவனின் லீலைகள்:

திரு.கோர்பு பாபாவின் தெய்வீகம் பற்றி பல அறிஞர்களிடமும் சொற்பொழிவுகள் ஆற்றுவதுண்டு. இறுதியில்  பலர் கேட்கும் கேள்விகளுக்கும் விடையளிப்பார். ஆனால் பாபாவின் சிருஷ்டிிகள் பற்றி அவரால் எந்த விளக்கமும் தர முடிவதில்லை. பாபா கேட்டார்... உனக்கு என் மேல் உள்ள நம்பிக்கை என் சக்திமேல் இல்லை. அப்படித்தானே. தலை குனிந்த கோர்பு கூறினார்.. ஆம் ஸ்வாமி.  கடகடவென்று நகைத்த பாபா கூறினார்.  வெளிப்படையான உன் பதிலை நான் பாராட்டுகிறேன். இப்போது என்னை சோதிக்க, நன்றாக யோசித்து ஒரு பொருளைக் கேள். அதை இக்கணமே நான் ஸ்ருஷ்டித்து தருகிறேன் என்றார்.

கோர்பு யோசித்த பின் கேட்டார். ஸ்வாமி இந்த அகிலம் அனைத்தையும்  அடக்கியதாகவும் ஆனால் என் மதத்தை( இஸ்லாம்)மட்டுமே சிறப்பாக காண்பிக்கக் கூடிய ஒரு பொருளை ஸ்ருஷ்டித்து தாருங்கள். பாபா சிரித்தார். இது என்னால் முடியாது என்று நினைக்கிறாயா.அருகில் வா என அழைத்து, தனது உள்ளங்கை மேல் கோர்புவின் உள்ளங்கையை வைத்து சுழற்றினார். அன்று யசோதைக்கு கண்ணன் தன் வாயில் அகிலம் எல்லாம் காட்டியது போல ஒரு அற்புதம் நிகழ்ந்தது. பாபாவின் உள்ளங்கை பிளந்து ஒரு கனமான வஸ்து வெளிப்பட, பிளவு பின் மூடிக் கொண்டது. ஆச்சரியத்தால் நிலைகுலைந்த கோர்புவின் கையில் பாபா அந்தப் பொருளுக் கொடுத்தார்.


அது ஒரு பளபளக்கும்  தங்க மோதிரம். எண்கோண வடிவத்தில் நவமணிகள் பதிக்கப்பட்டு மத்தியில் பிறைச்சந்திரன் மற்றும் நட்சத்திரம் மின்ன அது ஜொலித்தது. பாபா கூறினார் எண்கோணமும் எட்டு திசைகள், நவமணிகளோ ஒன்பது கிரகங்கள் ஆகவே இது அகிலத்தைக் குறிக்கிறது. நடுவில் இருக்கும் பிறை சந்திரன் மற்றும் நட்சத்திரம் இஸ்லாம்  மதச்சின்னம். அதை பச்சை நிறக்கற்களால் அமைத்துள்ளேன்.

திரு.கோர்பு தனது சந்தேகம் நீங்கப்பெற்று பாபாவைப் பணிந்தார். சங்கல்பித்த நொடியிலே ஸ்ருஷ்டி. அது பகவான் பாபாவின் தெய்வீக சக்தி.

ஆதாரம்: SAI SATHYA SAKHA (Divine interactions, experiences and transformations in my life) by Abdul Razak Baburao Korbu

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக