தலைப்பு

புதன், 22 ஜூலை, 2020

🇿🇲 ஜாம்பியா நாட்டில் மாய ஜோதியாய் வழிகாட்டும் சத்ய சாயியின் Miracle School!


Mr. Victor Kanu, J.P., M.A. (Oxon) is former High Commissioner of Sierra Leone, Africa to Great Britain, with further accreditions to Norway, Denmark and Sweden.

இறைவன் சத்ய சாயிக்கு ஒருவரை தன் பக்தராக்க சிறு கடைக்கண் பார்வையே போதும். முரடரும் பாதம் விழுவர். நாத்திகரும் பாதம் தொழுவர். செல்வந்தரும் எளிமையாகி சேவையாற்றுவர். இந்த பிரபலம் என்னவானார்? எதனால்? என்ன சேவையாற்றினார் எனும் ஆச்சர்ய அனுபவப் பதிவு இதோ.. 

திரு. விக்டர் கானு அவர்கள் ஆப்பிரிக்க நாடான, 'சியாரா  லியோ நே'வின்(Sierra Leone) ஹை கமிஷனராக இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு பணியாற்றினார்.

அவர் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து இருந்தபோதிலும் சமயத்தில் இருந்தும், கடவுளில் இருந்தும் வெகுதொலைவில் இருந்தார். லண்டனில் அவர் பெரிய மனிதராக வாழ்ந்து வந்தார். ஏராளமான தீய பழக்கவழக்கங்களும் அவருடன் இருந்தன. ஆனால் பகவான் பாபா, 1975இல் அதிசயிக்க தக்க முறையில்,  அவரை ஆத்திகராக மாற்றினார். 


ஒருநாள் அவரது கனவில் இரண்டு தேவதைகள் தோன்றி, அவரை வானவெளியில் தூக்கிச் சென்று, அவருக்கு அறிமுகம் இல்லாத ஒரு இடத்தை காண்பித்தன. மேலும், அங்கிருந்த ஒரு ஆசிரமத்தின் நுழைவாயிலில் அவரை அமர்த்திவிட்டு அந்த தேவதைகள் மறைந்தன. அங்கே அவர், தன்னுடைய முன்னோர்களையும், சிறப்பானவர்களையும் கண்டார்.  அவர்கள் உபதேசம் செய்வதிலும், மக்களின் பிணி போக்குவதிலும்  ஈடுபட்டிருந்தனர். அத்துடன் கனவு முடிந்தது. கானு, கனவிலிருந்து விழித்து எழுந்து விட்டார்.


விழித்தெழுந்த நாள் முதல், அவர்  முழுமையாக மாறிவிட்டார். சிகரெட், குடி, போன்ற தீய  பழக்கவழக்கங்களை முழுமையாக விட்டுவிட்டார். ஆன்மீக முயற்சிகளில் அவரது மனம் தீவிரமாக ஈடுபட்டது. சர்ச்க்கு செல்ல தொடங்கினார். தினசரி பைபிள் படிக்க தொடங்கினார். அவரது மாற்றத்திற்கான காரணம் அவருக்கே தெரியவில்லை. இந்நிலையில் சில சாயி பக்தர்களின் நட்பினால் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களைப் பற்றி அறிந்தார். அவருக்கு பகவானை பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதியானது.

இங்கிலாந்திலிருந்து பகவானை பார்க்க புட்டபர்த்தி வந்தார். புட்டப்பர்த்தியின் நுழைவாயிலின் அருகே வந்த அவர், நுழைவாயிலை கண்டதும் திகைத்து நின்றுவிட்டார். காரணம், 1975இல் அவரது கனவில் தேவதைகள் காண்பித்த அதே இடத்தில் தான் நிற்பதைக் கண்டு பரவசமடைந்தார். 

பகவானின் அன்பும் தெய்வீகமும் விக்டர்  கானுவை மிகவும் ஈர்த்தன. அவர் சிறந்த சாயி பக்தர் ஆனார்.1980 ஆம் ஆண்டு பகவான் பாபாவின் மேற்பார்வையில், மனித மேம்பாட்டுக் கல்வி பயிற்சி  முகாம் துவங்கியபோது, அதில் விக்டர் கானுவும், அவரது மனைவியும் கலந்து கொண்டனர். 


வெளிநாடுகளில் மனித மேம்பாட்டு கல்வியை செயல்படுத்துவதில், ஒரு வழிகாட்டியாக அது விளங்கியது. இன்றைய கல்விமுறை, ஒரு மாணவனுக்கு  விஞ்ஞானத்தையும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே கற்றுத் தருகின்றன.

மனிதனின் உயர் குணங்களான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை போன்றவற்றை அவனுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. மனித மேம்பாட்டு குணங்களுடன் கூடிய விஞ்ஞான கல்வியே இன்றைய உலகிற்கு தேவை என்பது பகவானின் அறிவுரை. இதுவே EHV எனப்படும் Education with Human Values.


மேற்கத்திய ஏழை நாடுகளில் EHV சார்ந்த பள்ளிகளை நிறுவ வேண்டும் என பகவான் பாபா அறிவுறுத்தினார். ஒரு நேர்காணலின்போது  விக்டர் கானு தம்பதியினரிடம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஜாம்பியா சென்று, ஏழைகளுக்கான EHV பள்ளியை துவக்க கூறினார். 

ஜாம்பியா, மிகவும் ஏழ்மையான நாடு. உலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கிருத்துவ நாடு. அங்கு, அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் குறைவாகவே இருந்தன. ஏழாம் வகுப்பு தேறிய மாணவர்களை மட்டுமே அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் அனுமதித்தன. அதனால் அங்கு ஏழாம் வகுப்பு தோல்வியுறும் மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்க இயலாத சூழ்நிலை இருந்தது.

ஏழ்மையின் காரணமாக பல பெற்றோர்கள், போதை மருந்து கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். பள்ளிக்குச் செல்லாத மாணவர்கள் ஊர் சுற்றிக்கொண்டு, போதை மருந்துகளை பயன்படுத்துதல், கடத்துதல் போன்ற சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடலானார்கள்.  


பாமோட்ஜியில் அத்தகைய மக்கள் அதிகம். சுவாமி, ஜாம்பியாவின், இந்தப் பகுதியில், பள்ளியை துவக்குமாறு உத்தரவிட்டார். உடனிருந்து  தான் வழி நடத்துவதாக உறுதி அளித்தார். கானு, பதவியை ராஜினாமா செய்தார்.லண்டன் நண்பர்கள், "அந்தஸ்து, சொத்து, சுகத்தை விட்டு, ஏன் அறியாத இடத்தில் கஷ்டப்பட போகிறாய்?", என்றனர். "என் இறைவன் இருக்கிறார்! இறைவன் உத்தரவுக்கு பின் வேறு சிந்தனையே இல்லை!", என்றார்.

பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், படிக்காமல், பெயில் ஆகி, தவறான வழிகளில் பழக்கப்பட்டு, சுற்றிக்கொண்டிருந்த மாணவர்களை, பள்ளிக்கு வரவழைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. சுவாமியின் அருளால், பெற்றோர்களிடம் எடுத்துக்கூறியதில் பள்ளிக்கு, குழந்தைகள் வரலானார்கள். நாளடைவில், மாணவர்கள் எண்ணிக்கை எல்லா வகுப்புகளிலும் அதிகரித்தது. இறுதித் தேர்வில் 100% தேர்ச்சி கண்டது, இப்பள்ளி.


எந்த அரசுப் பள்ளியோ,  தனியார் பள்ளியோ, 100% தேர்ச்சி கண்டதில்லை. பெயிலான மாணவர்கள் நிரம்பிய இப்பள்ளி, 100% தேர்ச்சி பெற்றதை அறிந்து அனைவரும் பாராட்டினர். ஜனாதிபதி, கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் வந்து பார்வையிட்டு, "Miracle School",என அழைத்தனர்.


 டாக்டர் கானுவை கருவியாகக் கொண்டு, பகவான், எல்லையற்ற கருணையால் உருவாக்கிய Miracle School  இதுவாகும். திக்கற்று, தவறான வழியில் சென்று, சிறைச் சாலையில் தனது வாழ்வை தொலைக்க இருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில், கலங்கரை விளக்கமாக இப்பள்ளி திகழ்கிறது.

 ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: Sathyam Sivam Sundaram, PART 7
நன்றி: S. Ramesh, Ex-Convenor - Salem Samithi.

🌻 செயற்கரிய செயல் என்பது இறைவன் சத்யசாயியால் மட்டுமே செய்யப்படுவது. அந்த செயற்கரிய செயலை தன் பக்தரை கருவாக்கியும் அவர் செய்து கொள்கிறார். அந்த கர்வமில்லா கருவியாக இந்தப் பிரபலமும் திகழ்வது இறைவன் சத்ய சாயி சங்கல்பமே! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக