தலைப்பு

சனி, 11 ஜூலை, 2020

தனது தெய்வீக அற்புதங்களை பற்றி சத்யசாயி பகவான்!

தனது தெய்வீக அற்புதங்களை பற்றி குஜராத் ‘நவகால்’ பத்திரிக்கைக்கு பகவான் பாபா அளித்த பேட்டி (மும்பை, ஜூன் 14, 1969)

கேள்வி: பொருட்களை சிருஷ்டிக்கும் உங்களது சக்தி குறைவற்றதா?

பாபா: அந்த சக்தி எல்லையற்றது. சமுத்திரத்தைப் போலக் குறைவற்றது. ஒவ்வொருவரும், அவர் யாராக இருந்த போதிலும், அவர் எங்கே இருந்த போதிலும் சரியே. தமக்குத் தேவையானதை, போதுமான அளவு என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: அது குறைவற்றதாகில், அதனை வறுமையும், மனிதனின் துன்பங்களையும் போக்கப் பயன்படுத்தாதது ஏன்?

பாபா: (சிரித்துக் கொண்டே) நீ வறுமைகளையும், துன்பங்களையும், பொருள்களை உடமையாகப் பெறாத நிலையோடு ஒப்பிடுகிறாய். இன்பத்தை, மகிழ்சியை கொடுக்கக்கூடிய பொருள்களை அதிகாரத்தோடு பெறக்கூடிய நிலையில் உள்ள அரசர்கள் மன நிறைவோடு இருக்கிறார்களா? அவர்களுக்கு மன நிம்மதி இருக்கிறதா? மனதிற்கு சமநிலையை அளிப்பதுதான் என் செயல் திட்டம். பணக்காரர்களாக்குவதற்காக நான் பொருள்களைப் படைத்து தருவதில்லை. பக்தியும், நம்பிக்கையும் வளருதற்குத் தேவையானவைகளையே தான் அளிக்கிறேன்.


ஒரு நோயாளி மனிதன் என்னிடம் வருகிறான். நான் ஏதாவது ஒன்றை விபூதி அல்லது ஏதாவது ஒரு பொருளை சிருஷ்டித்து அவனுக்கு தருகிறேன். அப்பொழுது அவன் தெய்வசக்தியை உணருகிறான். அதன் மூலமாக மன அமைதியை பெறுகிறான். அந்த மனநிலையே அவனை குணப்படுத்துகிறது, சுகமளிகிறது. அவனுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறது. என்னிடம் பக்தி பூண்டவர்களுக்கு மட்டும்தான் இவைகளை நான் தருகிறேன் என்பதில்லை. துன்பத்திலாழ்ந்தவர்களை இறைவனை நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் நேரும்போது, அவர்களுக்கும் அளிக்கிறேன்.

கேள்வி:  அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி எது?

பாபா: அதனை அற்புதம் என்றோ, சமத்காரம் (திறமை, செயல்) என்றோ கூறுவது தவறு. இது நிதரிசனம் (சான்று) தானே தவிர பிரதரிசனம் (காட்சி) அல்ல. இது ஒரு லீலையைப் போன்றது. என் இயல்பான தன்மை அது. நம்பிக்கை, பக்தி, ஆத்ம விசாரணை, பின்னர் ஆத்ம தரிசனம் என்று மனிதனைத் திருப்ப உதவும் அடையாளம் அது. சங்கல்பத்தின் உத்தேசம் மனதில் தோன்றியவுடன் பொருள் தயாராகிவிடுகிறது. நான் விரும்பும்போது அது தயாராக இருகிறது. சங்கற்பித்த அந்த விநாடியிலேயே கையிலோ அல்லது வேறு எங்கு தோன்ற வேண்டுமென்று நான் எண்ணுகிறோனோ அங்கு அந்தப் பொருள் தோன்றுகிறது.


கேள்வி: அற்புதங்களை நிகழ்த்தும்போது எங்கேயோ இருக்கும் பொருள்கள் பெயர்த்துக் கொண்டுவரப் படுகின்றன என்று சொல்லப்படுகிறது. இந்தப் பொருள்கள் கொண்டுவரப் (அப்போர்ட்) படுகின்றனவா?

பாபா: அவைகள் புதிதாக சிருஷ்டிக்கப்படுகின்றன. கொண்டு தருதல் என்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வரவேண்டும் இல்லையா? அது ஏமாற்றும் செயல். நான் நினைத்த விநாடியிலேயே அந்தப் பொருள்கள் படைக்கப்படுகின்றன. எங்கேயும் காணமுடியாத பொருள்களையும் கூட நான் அளிப்பதுண்டு. இந்த சக்தியைப் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம்.

கேள்வி: எப்போதுமுதல் உங்கள் தெய்வீக சக்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தீர்கள்?

பாபா: சிறுவயதில் இருந்தே இந்த அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. பள்ளிக்கூடத்தில் நான் சிறுவர்களுக்கு மிட்டாய், சோழிகள் போன்ற பல பொருள்களைப் படைத்துத் தருவது உண்டு.

கேள்வி; எந்த வயதுமுதல் நீங்கள் இந்த தெய்வீக சக்தியைப் பெற்றீர்கள்?

பாபா: நான் பிறந்த அந்த வினாடி முதல். (உரையாடலை சிறிது நிறுத்தி, பிறகு அழுத்திச் சொன்னார்) அதற்கு முன்பிருந்தே!


கேள்வி: அப்படியென்றால்?

பாபா: அப்படியென்றால், நான் அவதாரம் எடுக்க முடிவு செய்தேன். எனக்கு யார் தாயாக வேண்டும் என்றும் முடிவு செய்தேன். சாதாரண மனிதர்கள் தமக்கு மனைவியாக அல்லது கணவனாக வரப்போகிறவர்களைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் கூட யார் தாயாக வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது. அப்பொழுதும்கூட அவதாரம் செய்வதற்கான காரணம் அனைவருக்கும் பிரேமையை வழங்குவதும், பிரேமையின் மூலமாக அறத்தின் பாற்பட்ட வாழ்வை வளர்ப்பதும்தான்.

என் செயல்கள் தெய்வீக சக்திகான சான்றுகள், தெய்வீகத்திற்கான அடையாளங்கள். பிரேமையின் தூண்டுதலால் நான் பொருள்களை வழங்குகிறேன். என் பிரேமை வற்றாத்து. எனக்கு எந்தவிதமான விருப்பமும் இல்லை. நான் அன்பைப்பற்றிப் பேசுகிறேன். அன்பின் வழியில் அழைத்துச் செல்கிறேன். அன்பே நான்!

(ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம், பாகம் 3, அத்யாயம் 8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக