தலைப்பு

புதன், 17 ஜூன், 2020

இறையறிவே இளைஞர்க்கு அவசியம்!


பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் பரம்பொருள் சத்ய சாயி. அவரே வாழ்க்கையில் பரீட்சை வைத்து பாடம் நடத்துகிறார். அது பலப்பரீட்சை.. அந்தப் பாடம் வாழ்நாளை தேன் நாளாய் இனிக்கச் செய்யும் கீதையே.. 

ஒரு ஆசிரியர் ஒரு சமுதாயத்தின் வழிகாட்டியாய் திகழ வேண்டும். மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள். இருவரும் சேர்ந்து நாட்டின் பெருமையையும் நலத்தையும் செம்மைப்படுத்துவார்கள். எனவே மாணவரும் ஆசிரியரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அவர்களது நலமும் நாட்டின் நலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது என்பது. தமக்கும் தம்மை சூழ்ந்துள்ள உள்ளூர் உறவினர்க்கும் நன்மை பயக்க மனிதன் எப்பேர்ப்பட்ட காரியங்களையும் செய்ய எத்தணிக்கிறான். ஆனால், அதில் ஒரு சிலரே சமுதாயத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக தியாகம் செய்யத் தயாராகுகிறார்கள். ஒருவன் அனுபவிக்கின்ற எல்லா வசதிகளும் நலன்களும் உண்மையிலலேயே சமுதாயத்திலிருந்து அவனுக்கு தரப்பட்டதே அன்றி அவனது தனியான ஊழியத்தால் உண்டானது அல்ல என்பதை அவன் உணர்வதில்லை. இதனால் அவனை தனது பதவி, பெருமை, பொருட்செல்வம் ஆகியவற்றை அனுபவிக்க அனுமதிக்கும் சமுதாயத்திடம் அவன் நன்றி காட்டுவதில்லை. நன்றி மறந்தவர் விலங்கினும் கீழானவர். அவர்கள் இறையருளை இழக்கின்றனர்.

இறையருள் பெற வேண்டுமென்றால் ஒருவர் நன்னடத்தை, தூய சிந்தை, நற்செயல், இன்சொல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அன்பும் கருணையுமே ஒரு மனிதனின் உயர் இலக்கணங்கள். இன்றைய இளைஞர்கள் ஓராயிரம் பொய்களுக்கு செவிமடுக்கத் தயாராய் உள்ளனர். ஆனால் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளக் கூட பொறுமையற்றவர்களாகின்றனர். அன்புடன் உண்மை உரைக்கும் ஒரு மனிதன், புகழுரைக்கும் நூறு பேரை விடவும் மேல்.

இளைஞர்களுக்கு தங்கள் இளமைக்காலத்தில் தமது உடல் ஆரோக்கியம் பற்றியும் சக்தி பற்றியும் தெரிவது கிடையாது. இது அவர்கள் தம்மிடம் உள்ள இளமையின் சக்தியையும் ஆரோக்கியத்தையும் கேளிக்கைகளிலும் பொல்லா இச்சைகளிலும் வீணடிப்பதை விடுத்து அது விரயம் ஆகும் முன்னமே பொருளுள்ள பிறருக்கும் பயனுள்ள சுயநலமற்ற வாழ்க்கையை நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கிராமத்தில் தீய சிந்தனையுள்ள ஒருவன் இருப்பின் அவன் ஒரு விடம் நிறைந்த நீர்நிலையினும் கொடியவன்.

வேலை கிடைக்க இளைஞர்கள் பல பட்டங்களை பெற விழைகிறார்கள். ஆனால் தமது நடத்தையையும் ஆளுமையையம் சீர்படுத்திக்கொள்ள துளியும் முனைவதில்லை. நன்னடத்தையும் நாணயமுமே ஒரு மனிதனுக்கு இன்றியமையாதவை. ஆன்மீகத்தின் அடிப்படையும் அதுவே. ஆன்மீகம் மறக்கப்பட்டால் எந்த நல்ல மனிதனும் எந்த நல்ல குணங்களும் இல்லாத வெறும் இயந்திரமயமாகி விடுவான். இன்று இளைஞர்களுக்கு ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரிவதில்லை. இறையறிவு தான் மனிதனின் உண்மை குணம். அண்ட சராசரங்கள் அனைத்தையும்  இயக்கும் அனைத்திலும் இயங்கும் அடிப்படை தத்துவத்தை உணர்த்துவதே ஆன்மீகம்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17 

எது ஆன்மீகம்? எதனால் ஆன்மீகம்? என ஆன்மீக அஸ்திவாரமாய் நிறைந்திருக்கும் இறைவன் சத்யசாயி மட்டுமே அல்லவா சரிவர இதயத்தில் பதியும்படி உணர்த்த முடியும்.
மேற்சொன்ன எல்லா நெறிகளையும் இறைவன் சத்ய சாயி இடமே பிரார்த்தனை செய்து பெற்றுக் கொள்வோம்.
அவர் ஒருவரே பிரபஞ்ச சிற்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக