தலைப்பு

சனி, 29 மே, 2021

கொரோனா காலத்தில் தற்காத்து கொள்ள சாயி பக்தர்கள் சொல்ல வேண்டிய முக்கியமான மந்திரங்கள்!


இது கொரோனாவின் இரண்டாம் அலை காலக்கட்டம். தீவிர ஊரடங்கிலும் இந்தியா தத்தளிக்கிறது. கிருமியோடு சேர்ந்து பலருக்கு பயமும் தொற்றுகிறது. வெறும் பயத்தால் மட்டும் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுமா?


சுவாமி பக்தர்கள் நாம் எச்சரிக்கையாக .. மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். அதற்காக பயந்தபடியே இருந்தால் ஆரோக்கியமாக இருப்போம் என்பதில்லை.
முகக் கவசம்... Hand sanitizer... சமூக இடைவெளி போன்ற அவசிய கட்டுப்பாடுகளோடு நமக்கு இரண்டு வித மருந்துகள் இருக்கின்றன...
அந்த இரண்டு மருந்துகள் இரண்டு மாபெரும் மந்திரங்கள்...
ஒன்று காயத்ரி மந்திரம்
இரண்டாவது பிரம்மார்ப்பண மந்திரம் .
சுவாமியே இந்த இரண்டு மந்திரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்.
கூடுதலாக நாம் சொல்லி சுவாமி விபூதி இட்டுக் கொள்ளும் மந்திரம் பரமம் பவித்ரம் ..


🌹 காயத்ரி மந்திரம்:

மந்திரங்களின் ராணி காயத்ரி. காயத்ரி மந்திரத்தை அனைவரும்... வெளிநாட்டினரும் உச்சரிக்கலாம்..
அனைவரும் உச்சரித்து நற்பயன் அடைய இறைவன் சத்ய சாயி ஒருவரே முதன்முதலில் வழிவகுத்தார்.
சுவாமியே ஒருமுறை 1983ல் கனிஷ்கா விமானத்தில் நூற்றுக்கணக்கான பேர் இறந்ததற்கு... அதில் ஒருவரேனும் காயத்ரி மந்திரம் சொல்லியிருந்தால் விபத்திலிருந்து தப்பித்திருக்கலாம் என்கிறார். அத்தகைய மகிமை வாய்ந்த மந்திரம் காயத்ரி..


அப்படி இருக்க நாம் தினமும் குளித்துவிட்டு குறைந்தபட்சம் 9 தடவையாவது நல்ல நெடிய உச்சரிப்பில் காயத்ரி சொல்லலாம்.
அது போக .. நாம் அத்தியாவசியமாக வெளியே செல்வதாக இருந்தால்‌.. வீட்டில் இருந்தபடி கட்டாயம் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தபின்னர் வெளியே செல்லலாம். இதை தவறாமல் கடைபிடிக்கலாமே...  இதுவே நமக்கு வழித்துணை காவலாக அமையும் என்பதை ஆழமாக நாம் உணர்ந்து கொள்ளலாம்.
காயத்ரி மந்திரம் என்பது வீரியமுள்ள விதை.. அதை உச்சரிக்க உச்சரிக்கத் தான் அதன் பேராற்றல் நம்முள் விளைச்சலாகும்... அதன் பேரதிர்வலைகள் நமக்குள் வேலை செய்வதை நாமே உணரலாம்...

ஓம் பூர் புவ ஸுவஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தீயோ யோன ப்ரச்சோதயாஆத்

(பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை  தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தப்படம்)..


சுவாமியே தன் திரு உதடுகளால் காயத்ரியை உச்சரித்து அதற்கு மேன்மை தந்திருக்கிறார். சுவாமி மாணவர்கள் கூட இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்..
இந்த மந்திர சப்தமானது நமது உள் அவயங்களுக்கு திடமும்.. பலமும் அளித்து நம் ஆரோக்கியத்தை காப்பாற்றுகிறது.


🌹 பிரம்மார்ப்பண மந்திரம்:

நாம் இன்றைய காலக்கட்டத்தில் பீட்சா பர்கரை மறந்து இயற்கை உணவை .. கபசுர குடிநீர்.. முருங்கைக் கீரை சூப்.. எலுமிச்சை ஜுஸ் ‌.. காய்கறி சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.. இதுவே பெரிய மாறுதலும்... ஆறுதலும்..
சத்தான உணவை எடுத்துக் கொள்வதற்கு முன் சத்தான மந்திரமான பிரம்மார்ப்பணத்தை சொல்லி சாப்பிடுவது மிகமிகக் கட்டாயம்.



சாப்பிடும் உணவு சுவாமிக்கு படைக்கப்படும் போதே பௌதீக ஆரோக்கியத்தோடு சேர்ந்து ஆன்மீக ஆரோக்கியமும் இணைகிறது.
உணவு பிரசாதமாவது சுவாமிக்கு படைப்பதால் மட்டுமே...
உணவு தருவது சுவாமியே.. அவருக்கு நன்றி தெரிவிப்பது பக்தராகிய நமது தலையாய கடமை...
நமது உடலுள்ளே ஜீரண சக்தியையும்... வாயுக்களை இயக்குவதும் சுவாமியின் சக்தியே என்பதனை மறக்காமல் பிரம்மார்ப்பண மந்திரத்தை சொல்லி சாப்பிட வேண்டும். சுவாமி மாணவர்கள் இந்த மந்திரம் சொல்லாமல் சாப்பிடுவதே இல்லை... இதை உச்சரிக்கும் போது.. நமது உள் அவயங்கள் சுத்தமாகி.. சாப்பிடுவதற்கு அதை ஏதுவாக்கி தயார்படுத்துகிறது... ஜீரணமாக்கும் வாயுக்களை சீராக்குகிறது. நம் உள்ளே இந்த பிரம்மார்ப்பண மந்திர அதிர்வலைகள் நிரம்பி பரிசுத்தப்படுத்தி.. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.. பிராணனை சுத்தப்படுத்துகிறது.


ஓம் பிரம்மார்ப்பணம் பிரம்ம ஹவிர்
பிரம்மாக்னௌ பிரம்மனாஹுதம்
பிரம்மைவ தேன கந்தவ்யம்
பிரம்ம கர்ம சமாதினா

அஹம் வைஷ்வானரோ பூத்வா
பிராணினா தேஹ மாஷ்ருதஹ
ப்ராணா ப்ராண சமாயுக்தா
பச்சாம்யன்னம் சதுர்விதம்

(சமர்ப்பிக்கும் செயல் என்பது பிரம்மம்...
சமர்ப்பிப்பதும் பிரம்மம்.. பிரம்மமே அக்னி எனும் பிரம்மத்தில் பிரம்மத்தை சமர்ப்பிக்கிறது. பிரம்மமே செய்யும் செயலை பிரம்மத்திற்காகவே செய்கிறது..

எது எனது உடம்பில் ஜீரண அக்னியானதை எல்லா உயிரினங்களிலும் ஒன்றாகவே இயக்குகிறதோ...உள் முக வெளி முக காற்றை செயல்படுத்தி சமன்படுத்துகிறதோ... நான்கு விதங்களில் ஜீரணமாகும் அன்னத்தை அதற்கே நான் சமர்ப்பிக்கிறேன்)



ஆக...கடைத் தெருவுக்கு நாம் சென்று வந்த பிறகு hand sanitizer செய்து வீட்டில் நுழைந்தவுடன் .. அந்தப் பொருட்களை பகிர்வதற்கு முன்போ.. உண்பதற்கு முன்போ.. சமையலுக்கு பயன்படுத்துவதற்கு முன்போ கட்டாயமாக பிரம்மார்ப்பண மந்திரத்தை உச்சரித்த பின்னர் அந்தந்தப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இப்படி செய்துவந்தால் அது சுவாமிக்கு அர்ப்பணமாகி நமக்கும் பாதுகாப்பாக அமையும்... சுவாமியை வழிபட்டு வணங்கி ஆரம்பிக்கும் எந்த செயலும் அதற்குரிய மேன்மையை அடையும் என்பதை நாமே அன்றாட வாழ்வில் அனுபவித்து தானே வருகிறோம்.


🌹 இதயத் தடுப்பூசி:

இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் மனவலிமை .. மனோ தைரியம் மிகவும் முக்கியம். தைரியமே இதயத் தடுப்பூசி. பயமே பாதி வியாதியை வரவழைக்கிறது. கவலையோ மீதி வியாதியை தாம்பூலம் வைத்து அழைக்கிறது.
அவசியம் இருந்தால் மட்டுமே கடைக்கு சென்று .. அங்கே டேபில் போன்றவற்றை தொடாமல் பொருட்களை வாங்கி வரவேண்டும்.. அடிக்கடி சென்று வராமல் மொத்தமாக வாங்கி வைத்திட வேண்டும்.. வீட்டிற்கு நுழையும் போது hand sanitizer பயன்படுத்த வேண்டும்.. 3 நிமிடமாவது தினமும் ஆவி பிடிப்பது சிறந்தது..
கொரோனா கிருமி உடலினுள் இறங்க மூன்று நாட்களாவது ஆகும்...மூக்கின் பாதையை ஆவி எனும் தீயால் மூள வைத்து அதை அழித்துவிடவும் முடியும்...
தினந்தோறும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். அது நுரையீரலை ... இதயத்தை வலுப்படுத்தும்...


தினந்தோறும் பரமம் பவித்ரம் சொல்லி சுவாமி விபூதியை உட்கொண்டும்.. நெற்றியில் இட்டும் வர வேண்டும்..‌அது சுவாமி இருக்கிறார் எனும் பரம சத்தியத்தை உணர்த்தி மனோ தைரியம் தரும்...

பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ பிரதானம்
பாபா விபூதிம் இதமாஷ்ரயாமி

(பவித்ரமானது.. விசித்ரமானதாகிய பாபா விபூதி என்பது மேலான மோட்சத்தையே தரவல்லது.. அந்த விபூதியை உட்கொண்டு இதமடைவோமாக)


பின்குறிப்பு:

வெறும் மந்திரம் மட்டும் சொல்வேன் முகக் கவசம் அணியாமல் தெருவில் சுற்றுவேன் என்றால் நம்மைத் தான் கொரோனாவுக்கு அதிகம் பிடிக்க ஆரம்பிக்கும்...



உடல் ஆரோக்கியத்திற்காகவே சத்தான ஆரோக்கிய உணவு..
சமூக ஆரோக்கியத்திற்காகவே முகக் கவசம்.. சமூக இடைவெளி போன்றவை..
அதே போல் மன ஆரோக்கியத்திற்காகவே மந்திரங்கள்..
மனம் எவருக்கு கவலையற்று .. பயமற்று.. உற்சாகமாக .. மகிழ்ச்சியோடு இருக்கின்றதோ.. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்கும்...
WBC எனும் வெள்ளை அணுக்கள் தைரியமாக இருப்பவர்களிடமே சுறுசுறுப்பாக இயங்கும்...
சுய பாதுகாப்பே சுவாமி தரும் பாதுகாப்பு
காரணம் சுவாமி நமக்குள்ளே தான் இயங்கிக் கொண்டே இருக்கிறார்...

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக