தலைப்பு

செவ்வாய், 18 மே, 2021

விஞ்ஞானத்தையே அதிர வைக்கும் நாசா எடுத்த புகைப்படத்தில் சத்யசாயி!


நாசாவில் பணியாற்றும் விஞ்ஞானி ஒருவருக்கு நேர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம் விஞ்ஞான உலகையே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கானது.. அந்த வியக்க வைக்கும் அனுபவம் இதோ...


நாசா ஆராய்ச்சி மையத்தை பற்றிய அறிமுகம் உலகினருக்கு தேவையே இல்லை. நிலவுக்கு சென்று நாற்று நடுவது வரைக்கும் அவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர்கள். இறைவன் சத்யசாயியோ இவர்கள் ஆராயும் விண்வெளிகளையும்.. கிரகங்களையும் படைத்து.. காத்து பராமரிக்கும் அண்ட பிரம்மாண்ட பேரிறைவன்.

கலிபோர்னியாவில் வசிக்கும் டாக்டர் திரு. ஹோமர் ஒரு நாசா விஞ்ஞானி. அங்கே பணியாற்றிக் கொண்டுவந்தார். அவருக்கு லைலா என்ற மனைவி. 1972ல் யோகா கலையில் மிகவும் பிரபலமான மெக்சிகோவைச் சேர்ந்த இந்திராதேவி அம்மையாரின் சாயி வட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் லைலா. 


Indra Devi - The First Lady of Yoga
(இந்திராதேவி அம்மையார் தான் மேற்கத்திய நாடுகளில் முதல் முதலாக யோகா கலையை கொண்டு சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...) 

 பின்னர் அந்தக் குழுவினரோடு சேர்ந்து பிரசாந்தி நிலையத்திற்கு வருகிறார் லைலா. அதே நேரத்தில் அவரின் கணவர் விஞ்ஞானி ஹோமர் தன்னுடைய நாசா ஆபீஸிலிருந்து கொண்டே புட்டபர்த்தி எப்படி இருக்கிறது என பார்க்கலாம் என பூமியிலிருந்து இருநூறு மைல் தூரம் சாட்டிலைட் மூலமாக புட்டபர்த்தியை புகைப்படம் எடுக்கிறார். டெவலப் செய்து ஃபோட்டவை பார்த்த உடனேயே வெறும் கார்மேகம் வெண்மேகத்தைப் போல் கருப்பு திட்டு வெள்ளைத் திட்டு மட்டுமே காண்கிறார். பிறகு அவரது மனைவி புட்டபர்த்தியிலிருந்து மீண்டும் தனது இருப்பிடமான அமெரிக்காவிற்கு வந்து அந்தப் புகைப்படங்களைப் பார்த்து எதுவும் தெரியாததால் பெரிதும் ஏமாற்றமடைகிறார். இந்தப் புகைப்படங்களை எல்லாம் தனியார் மூலமாக டெவலப் செய்வதற்கு US60$ செலவளித்திருக்க வேண்டாமே என வருத்தம் கொள்கிறார். 

 


 ஒரு சில வருடங்களுக்குப் பிறகு இந்திராதேவி அவர்களின் மகளின் திருமணத்திற்காக வந்திருந்த சாயி பக்தர்கள் விஞ்ஞானி ஹோமர் அவர்களை பார்க்க செல்கிறார்கள். அந்நேரத்தில் அவர் கலிபோர்னியாவில் மிகபெரிய புக் சென்டர் நடத்தி வருகிறார். அதைப் பார்வை உற்ற அவர்கள் சிலப் புகைப்படத்தை ரசித்துப் பார்க்கிறார்கள்... பேச்சு சுவாரஸ்யத்தில் அந்தப் புகைப்படம் பற்றி விஞ்ஞானி ஹோமர் சொன்னவுடன் ... வந்திருந்தவர்கள் அதைப் பார்க்க ஆர்வம் கொள்கிறார்கள். இவரும் அவர்களுக்கு காட்ட அதை வெளியே எடுக்கிறார். அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்த அந்த விருந்தினர்களில் ஒரு பெண்மணி ஓ என்று ஆச்சர்யத்தில் கத்துகிறார். அந்த இடமே அதிர்ச்சிக்குள்ளான பூகம்பம் நேர்ந்தது போல் தோன்றுகிறது.. விருந்தினர் முதல் அந்த நாசா விஞ்ஞானி வரை ஏன் கத்துகிறாள்.. எதற்கு கத்துகிறாள் ... எனும் அதிர்ச்சி அனைவர் மனதிலும் நிலவுகிறது. இதோ சத்யசாயி பாபா என ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் கூச்சலிடுகிறாள் அந்தப் பெண்மணி.


 

அந்தப் புகைப்படத்தை வாங்கி ஒருவர் மாற்றி ஒருவர் பார்க்க அவர்களும் அதே மனநிலையில் உணர்ச்சிவசப்பட்டு ஸ்தம்பித்துப் போகிறார்கள். 

அந்த புகைப்படத்தில் இடம்பிடித்த கார் மேகம்‌.. வெண்மேகங்களுக்கு இடையே ஸ்ரீ சத்யசாயியின் முகம் தெளிவாக தெரிகிறது.. சுவாமியின் கேசம்... நேத்திரம் (கண்கள்)... நாசி (மூக்கு)... கன்னத்தில் இருக்கும் அதிஅற்புத மச்சம் என யாவையும் தெளிவாக தெரிகிறது. 

அதன் பிறகு விஞ்ஞானி ஹோமர் அக்ஷ ரேகைகளை கணக்கிட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். "சுவாமியின் ரூபம் நீளவாட்டத்தில் நாற்பது மைல் ... அகலவாட்டத்தில் இருபது மைல் என அவர் விவரிக்க அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். சுவாமி புட்டபர்த்தியில் இருக்கிறார் என்பது மட்டுமல்ல அதை கடந்தும் அவரின் பேராளுமை விரிந்திருக்கிறது என்பதை விஞ்ஞானப் பூர்வமாக .. அந்த புகைப்படம் வாயிலாக அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.. அந்தப் புகைப்படத்தில் சுவாமி பிரசாந்தி நிலையத்தை உற்றுப் பார்ப்பதாக விஞ்ஞானி ஹோமர் விளக்கிக் கூறுகிறார். சுவாமியின் கருணைப் பார்வைக்கு ஓர் எல்லை என்பதே இல்லை!

பின்னர் 1978ல் புட்டபர்த்தி வருகிறார் விஞ்ஞானி ஹோமர்.. அவர் சுவாமியின் தலைமேல் அளப்பரிய வட்ட வடிவ ஆராவை (Aura -- ஒளிவட்டம்) பார்த்துப் பரவசமடைந்து புகைப்படங்கள் எடுக்கிறார். அதை சுவாமியிடம் காட்டிய போது அர்ஜுனனுக்கு சுவாமி சொன்னது போலவே "இது என் தெய்வீகப் பேராற்றலின் முன் சிறு கீற்று மட்டுமே" என ஆதார சத்தியம் ஆணித்தரமாகவும்.. அழுத்தம் திருத்தமாகவும் இறைவன் சத்ய சாயி விஞ்ஞானி ஹோமரின் இதயத்தில் பதிவு செய்கிறார்.



இவர் 29 நவம்பர்1972ல் சுவாமி காட்சி தந்த நாசா புகைப்படங்கள் அனைத்தும் புட்டபர்த்தி சைதன்ய ஜோதி மியூசியத்தில் இன்றளவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.... 

(ஆதாரங்கள் : ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் ... ஆசிரியர் : பிரஷாந்த் பிரபாகர் பாலேகர்... பக்கம் : 64... & லிவ்விங் டிவினிட்டி .. ஆசிரியர் சகுந்தலா பாலு.. அத்தியாயம்: 10) 


விஞ்ஞானத்தால் மெய்ஞானத்தை விளங்கிக் கொள்வது கடினம். மெய்ஞானமே இறங்கி வந்தால் மட்டுமே இது சாத்தியம். இறைவன் இறங்கி வருவதே அவதாரம். அப்படி இறங்கா இறைவனை மனிதனால் உணர்வது கடினம். அப்படி இரங்கா இறைவனால் மனிதன் வாழ்வதே மிக கடினம். ஆகவே தான் இறைவன் சத்யசாயி அவதாரம் எடுத்தது. தன்னைச் சுறுக்கி தன்மையை இலகுவாக்கி மனிதனை தொடர்பு கொள்வதால் தான் சத்யசாயி இறைவன் கருணாமூர்த்தி. வசதியாக வாழ்வதற்கு விஞ்ஞானம் தேவைப்படுகிறது.. ஆனால் அமைதியாக வாழ்வதற்கு மெய்ஞானமே தேவைப்படுகிறது.. அந்த வசதியை இந்த அமைதியால் மட்டுமே ஒழுங்காக நிர்வகிக்க முடிகிறது. தன்னை விஞ்ஞானத்தில் பதிவு செய்ததும் மெய்ஞான இறைவனாகிய சத்ய சாயியின் பெருங்கருணையே அன்றி வேறில்லை..


பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து: