தலைப்பு

திங்கள், 24 மே, 2021

'வடநாட்டு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி' பத்மபூஷண் ஹிராபாய் பரோடேகரின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!



பத்மபூஷன் ஸ்ரீமதி ஹிராபாய் பரோடேகர் உன்னதமான இசைக்கலைஞர் மட்டுமல்ல. தனது வாழ்கைக் காலத்தில் ஷிர்டி சாயி, சத்ய சாயி ஆகிய இருவரின் தரிசனத்தையும் காணும் நற்பேறு பெற்ற ஒப்பற்ற தனித்தன்மை வாயிந்த பக்தை...


(1911ம் ஆண்டு அவருக்கு கடும் ஜுரம் ஏற்பட்டு, தனது தந்தையால் ஷிர்டி சாயிபாபாவிடம் அழைத்துச் செல்லப்படார். பாபாவும் 6 வயதே ஆன அக்குழந்தையை (ஹிராபாயை) தனது மடிமேல் வைத்து, சிறிது விபூதியை தடவி அக்குழந்தையின் ஜுரத்தைப் போக்கினார்)



🌹முதல் சந்திப்பு:

54 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹிராபாய் அவரது 60வது பிறந்த நாளன்று ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் திருமுன்னிலையில் அழைக்கப்பட்டார். ஆனால் அதே நாளன்று பூனாவில் ஹிராபாய் அவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் நாட்டின் பல முக்கியமான இசைக்கலைஞர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்வதாக இருந்தனர். நிகழ்ச்சிக்கு முந்தினம் காலை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா பம்பாய் (மும்பை) வந்திருக்கிறார் என்றும் அவர் திருமுன்னிலையில் ஹிராபாய் பாட வேண்டுமென விரும்புவதாகவும் செய்தி கிடைத்தது. ஹிராபாயின் உறவினர், நண்பர் மற்றும் அவரது ரசிகர்கள் பாராட்டு விழா முடிந்தபிறகே மும்பைக்கு செல்ல வேண்டுமென அழுத்ததைத் தந்தாலும், இறைவனுடைய அழைப்பிற்கு அடிபணிய வேண்டுமென ஹிராபாய் முடிவு செய்தார். பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு நிகழ்ச்சியை அன்று மாலைக்கு ஒத்திப்போடுவதைத் தவிர வேறு வழி இல்லை.



பகவான் விரும்பியபடி காலையில் மும்பை சென்றடைந்த ஹிராபாய், அவர் முன்னிலையில் இதயம் நிறைந்து பாடினார். கச்சேரியின் நிறைவில் பகவான் ஆசிவழங்கி, “நீ இதற்கு முன்பே சாயியை சந்தித்திருக்கிறாய்” என்று ஹிந்தியில் கூறினார். ஹிராபாய் அகத்தினுள் எப்போதும் இறைவனுடன் ஒன்றியிருந்தாலும், இப்போதுதான் அவருடனான வெளிப்புறப் பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அந்தத் தளையினை அவர் தமது வாழ்க்கையில் மிக மதிப்புள்ள செல்வமாக போற்றிப் பாதுகாத்தார்.

🌹பாராமல் கிடைத்த பரிசு!

1974ல் வெளிநாட்டு பிரதிநிதிகளும், ராஜ தந்திரிகளும் அடங்கிய முக்கியஸ்தர்கள் சபையோரின் முன்னிலையில் புதுடெல்லி, பார்லிமென்ட் ஹவுஸில் இசை நிகழ்ச்சி நடத்துமாறு அழைக்கப்பட்டார். நிகழ்ச்சி பல நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்கள் முன்னதாக, அதே நாளன்று, புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் அவர் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென பாபா விரும்புவதாக செய்தி வந்தது. இது அவரை சிக்கலான நிலைக்கு தள்ளிவிட்ட கடுமையான சோதனை. ஆனால் அவர் வெளிநாட்டு பிரமுகர்கள், நாட்டை ஆள்வோர் முன்னிலையில் பாடுவதைத் தவிர்த்து, பகவானின் காலடியில் தமது இசையை சமர்பிக்க முடிவு செய்தார். தலைநகரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரசாந்தி நிலையத்துக்கு விரைந்தோடி வந்தார். இசை நிகழ்ச்சி முடிந்து மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினார். பகவான் அவருக்கு பல பேட்டிகள் அளித்து அருள் புரிந்தார்.



🌹கதை இத்துடன் முடியவில்லை!!!

பூனாவிற்குத் திரும்பிய சில நாட்களில், பார்லிமென்ட் ஹவுஸில் மிகச் சிறப்பாக பாடியதற்கு பாராட்டுத் தெரிவித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து ஒரு பதிவுத் தபாலுடன் ஒரு காசோலையும் அவருக்கு கிடைத்தது. இதனை பெற்ற ஹிராபாய், டெல்லி அலுவலகத்தில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கும் என கருதி, தான் அங்கு வந்து பாடாமல் இருந்ததற்கு வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதி, அத்துடன் காசோலையையும் இணைத்து திரும்ப அனுப்பினார்.

டெல்லியில் இந்த கடிதத்தை கண்டு அதிசயமடைந்த அதிகாரிகள், ஹிராபாயை அழைத்து, இசை நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார் என்றும் அனைவரும் அவரது கச்சேரியை பாராட்டினார்கள் என்றும் தெரிவித்தார்கள்!!! இது சர்வ வல்லமை படைத்த சத்ய சாயியின் தெய்வீக அருட்ச் செயல் அன்றி வேறு இல்லை என அறிந்துணர்ந்து ஆனந்தம் அடைந்தார் ஹிராபாய்.


🌻 எப்பேர்ப்பட்ட அனுபவம் ஹிராபாய் அம்மையார் பெற்றிருப்பது.. சுவாமியின் சந்நதி அன்றி மனிதர்களுக்காக பாடுவதில்லை எனும் வைராக்கியம் இசைமேதை தான்சேன் அவர்களின் குருவினுடைய மனோ பாவத்தை நினைவுப்படுத்துகிறது.. மேன் மக்கள் எப்போதுமே மேன் மக்களாகவே பக்தியில் திளைக்கிறார்கள். பணம் / பெயர் / புகழ் இவற்றுக்கு ஆசைப்படாத ஆன்மாக்கள் எப்போதும் சுவாமியால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். 🌻
 
ஆதாரம்: சத்தியம் சிவம் சுந்தரம், பாகம் 7 – அத்யாயம் 4ல் இருந்து... 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக