தலைப்பு

வெள்ளி, 14 மே, 2021

நேர்காணல் அறையிலிருந்து மெக்கா சென்று திரும்பிய சிறுவன்!


"காலமும் வெளியும் (Space)  என்னைக் கட்டுப்படுத்துவதில்லை" என இறைவன் சத்ய சாயி அருளியதைப் போல் அவர் நிகழ்த்திய ஆச்சர்யகரமான அற்புதம் இதோ.. 

🌍 சர்வ தேவதா அதீத ஸ்வரூபன் - நம் ஸ்ரீ சத்ய சாயிநாதன்:

ஒரு நாள் பாபா மிகவும் எளிமையான முஸ்லீம் குடும்பம் ஒன்றை நேர்காணல் அறைக்கு அழைத்தார். அவர்களிடையே ஒரு ஹிந்துவும் இருந்தார். (இந்த சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்தவர் இந்த ஹிந்து மனிதரிடமிருந்து நேரடியாக கேட்டவர்).

அந்த முஸ்லிம் குடும்பத்திலிருந்த ஒரு சிறுவன் தனது நெருங்கிய சகாக்கள் போல தானும் மெக்கா புனித யாத்திரை செல்ல முடியாமல் போய்விட்டதே என்று சொல்லொண்ணாத் துயரில் இருந்தான். மேலும் அவன்  பெற்றோர்களாலும் அவ்வளவு தூரம் செலவு செய்து அனுப்ப இயலவில்லை. (சிறுவனது மனம் ஆறுதல் அடையவே அவனை சத்ய சாய்பாபாவிடம் அழைத்து வந்தனர்). 


பாபா அச்சிறுவனிடமிருந்தே தன் பேச்சை துவக்கினார் "ஆக  உனக்கு இப்போது மெக்கா போக வேண்டும் அல்லவா!". இதைக் கேட்டதும் சிறுவன் கண்களில் கண்ணீர் பெருக்கோடியது. ஆனால் பாபா திரும்பி மற்றவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.  சிறுவனோ தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். கடைசியில் பாபா அச்சிறுவனை நோக்கி "நீ கண்டிப்பாக மெக்கா போக விரும்புகிறாய்... இல்லையா?" எனக் கேட்டு தன் கரத்தால் நேர்காணல் அறையின் சுவற்றில் தட்டினார். அங்கு சுவர் மறைந்து அதற்கு பதிலாக சவூதி அரேபியாவின்  தெருக்காட்சிகள் தோன்றியது.
"அதோ பார்... உனது இரு நண்பர்களையும்.  இப்போது நீ போகலாம். உனக்கு அரை மணி நேரம் அவகாசம் உள்ளது." என்றார் இறைவன் பாபா.
சிறுவன் கண்ணெதிரே தெரிந்த தெருவினுள் நுழைந்தான்...மறைந்த சுவர் மீண்டும் தோன்றியது. 


நேரில் கண்ட காட்சியை நம்ப முடியாமல் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களுடன் பாபா அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மீண்டும் ஒருமுறை சுவற்றைத் தட்டினார். அங்கே அரேபிய தெருக்கள் தென்பட்டது. மெக்கா புனித யாத்திரையின் இரண்டு வார நினைவுகளை சுமந்த வண்ணம் அச்சிறுவன் நேர்காணல் அறைக்குள்  நடந்து வந்தான்.

ஒரு மாதம் கழித்து, நண்பர்கள் வீட்டிற்கு திரும்பி வந்ததும், சிறுவனின் பெற்றோர்கள் அவர்களிடம் எவ்வளவு நாட்கள் எங்களது மகன் உங்களுடன் தங்கியிருந்தான் எனக் கேட்டனர். சிறுவன் ஏற்கனவே சொன்னதை நிரூபிக்கும் வண்ணம் அவனது நண்பர்கள் எங்களுடன் உங்களது மகன் இரண்டு வாரங்கள் தங்கி இருந்தான் எனக் கூறினர்.

🌻 காலம் முழுமையாக பகவானின் கட்டுப்பாட்டிலும் ஆதிக்கத்திலும் உள்ளது.
இவ்வாறு சத்ய சாய்பாபா சங்கல்ப மாத்திரத்தில்  தனது நேர்காணல் அறையிலிருந்து பக்தர்களை தூர தேசத்திற்க்கு அனுப்புவதான பேரற்புத சம்பவங்களில் நான் கேள்விப் பட்ட நான்காவது மகிமை நிகழ்வு இது. 🌻


ஆதாரம் :- Face to Face with God, V.I.K. Sarin, Sai Towers Publishing, Prashanti Nilayam, 1993; pp. 227-228.
தமிழாக்கம் :- ரா வரலட்சுமி,  குரோம்பேட்டை,  சென்னை.



1 கருத்து: