தலைப்பு

சனி, 10 ஜூலை, 2021

ஜப்பானில் நோய்வாய்ப்பட்ட பெண்மணிக்கு காட்சி தந்து குணமளித்த சுவாமி!

சுவாமி எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். அவரின் கருணைக்கு இந்த பூமியோ.. இந்த பூமியில் நிறைந்திருக்கும் பிரபஞ்சமோ சமானமில்லை. எல்லா இடத்திலு நீக்கமற நிறைந்திருக்கும் சுவாமி  ஜப்பானில் தோன்றி எவ்வாறு ஒரு பெண்மணியை குணமாக்கினார் என்பதும்.. சுவாமியை பிடிக்காத அவளின் மகனுக்கு எவ்வாறு பக்திப் படிப்பை ஏற்படுத்தினார் என்பதும் பரவசம் ததும்பத் ததும்ப இதோ...


ஒருமுறை ஜப்பானில் இருந்து விடுமுறைக்காக மாணவர்கள் இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்தனர். அவர்கள் பயணத் திட்டப்படி புட்டபர்த்தி வந்தனர்! அவர்களுள் ஒருவன் பாபாவையும், பர்த்தியையும் வெறுத்தான். சுவாமியின் அருகில் வந்து, “நான் உங்களை வெறுக்கிறேன்” என்று சொன்னான். பாபா புன்முறுவலோடு அமைதியாக கடந்து சென்றுவிட்டார். மனிதர்களின் விருப்பு வெறுப்பும் கலையும் மேகத்தைப் போல நிலையில்லாதவை.. உணர்ச்சிமயமான மனம் ஓடும் நீரைப் போல அதில் பக்தியின் திருமுகம் நிலைக்கும்படி பதிவதில்லை.. ஆனால் சுவாமிக்கு எவர் விருப்பும் எவர் வெறுப்பும் எதுவும் அவரை பாதிப்பதில்லை.  

இப்படி இருக்க மறுநாள் மரத்தடியில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். பாபாவின் கார் அவ்வழியே வந்து சற்று நின்றது. சுவாமி இவனருகில் வர, மறுபடியும் “உங்களை எனக்குப் பிடிக்கவில்லை” என்றான். பாபா மீண்டும் புன்னகைத்த படி ஒரு டாலர் வரவழைத்து இவன் கையில் கொடுத்தார். அதில் அவனது பழுதுபட்ட இதயம் படமாக இருந்தது. ஆகவே தான் சுவாமியை நாம் இதயவாசி என அழைக்கிறோம். அவனுக்கு இதயக் கோளாறு இருப்பது அவன் தாயாருக்கும், டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அனைத்தும் அறிந்தவராயகற்றே சுவாமி. இருந்தாலும், “இதை எல்லாம் கண்டு நான் ஏமாற மாட்டேன்” என்றான் அந்த ஜப்பானிய மாணவன். பாபா அதோடு அவனை விட்டு விடவில்லை. “உனது தாயார் ஜப்பானில்... திடீரென்று பலஹீனமாகி மரணப் படுக்கைக்கு செல்ல இருந்தாள் நான் சென்று அவளைக் காப்பாற்றி விட்டேன்” என்றார். அப்பையன் “நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள், நான் கிளம்பிய வரை அம்மா நன்றாகத்தான் இருந்தார்” என்றான். ஏதும் சொல்லாமல் பாபா அங்கிருந்து சென்றுவிட்டார். சில மனிதர்கள் இப்படித்தான்... சுவாமியின் திரு வார்த்தையையே சந்தேகப்படுவார்கள். பிறகு அனுபவம் ஏற்பட ஏற்பட சுவாமி சொல்வது சத்தியம் என மனப்பக்குவம் ஏற்பட ஏற்பட உணர்ந்து கொண்டும்.. சுவாமி சொல்லும் சத்திய வாக்குப்படி வாழ்வை அமைப்பார்கள்


அடுத்த நாள் காலை அந்தப் பையன், அலுவலகத்திற்கு வருமாறு செய்தி வந்து சென்றான். அவனுக்கு ஜப்பானிலிருந்து தந்தி வந்திருந்தது, “மகனே! உன் பிரயாண திட்டப்படி இப்பொழுது பர்த்தியில் இருப்பாய் என்று தெரியும்! நீ சென்ற பிறகு திடீரென நான் பலமிழந்து நோய் வாய்ப்பட்டு விட்டேன். டாக்டர்கள் பிழைப்பது கடினம் என்றனர். நானும் இறக்கப் போவதை உணர்ந்து விட்டேன், ஆனால் இந்தியாவிலிருந்து ஒருவர், புஷ் போன்ற முடியும், ஆரஞ்சு உடையும் அணிந்து வந்தார், என் நெற்றியில் ஏதோ பவுடர் பூசி விட்டு, ஆசீர்வதித்து என்னைக் காப்பாற்றி விட்டார்!  நீ வரும் பொழுது அவரைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டு வா! எனக்கு அவரைப் பார்க்க ஆவலாய் உள்ளது” என்று விவரம் இருந்தது. அனைவரும் ஆச்சரியம் உற்றனர். பாபாவைப் பற்றி எல்லா விஷயங்களும் சேகரித்து கொண்டனர். மறுநாள் இன்டர்வ்யூவில் இந்தப் பையன் நன்றியோடு பாபாவை வணங்கினான், அவனின் சந்தேக மேகங்கள் விலகி... பக்தி சூரியன் பளீச்சிட்டது... 

"உங்களை எனக்கு பிடிக்காது" என சொன்ன அந்த அறியாமை உதடு ஊமையாகி.. கண்கள் எரியும் மெழுகாகி தன் இதய வெளிச்சத்தை இன்டர்வியூ அறை முழுதும் பரப்பிக் கொண்டிருந்தது.

ஆதாரம்: Sri Sathya Sai Miracles and Spirituality – by Sarojini Palanivelu - P 31 to 33


🌻ஒரு லாரி பஞ்சு மூட்டையை எரிக்க ஒரு லாரி விறகு தேவையில்லை. ஒரே ஒரு தீக்குச்சி போதும்.அவ்வாறே  நமது அக மாற்றத்திற்கு சுவாமியின் ஒரே ஒரு கடைக்கண் பார்வையே போதும். ஆன்மீகம் என்பது வேறு ஒன்றுமே இல்லை.. குண மாற்றம் மட்டுமே!! அதையே நாம் சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து.. அவர் கருவியாகி அவரிடமே ஐக்கியப்பட வேண்டும்.. அதுவே சரணாகதி என்பதெல்லாம்...! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக