தலைப்பு

புதன், 21 ஜூலை, 2021

நள்ளிரவு தோறும் பாங்காக் புறநகரில் வாட்ச்மேனை எழுப்பிய பரம காவலர் பாபா! 


எழுப்ப வந்தவர் தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி... தூக்கத்திலிருந்து விழிப்பிற்கு...மாயையிலிருந்து ஞானத்திற்கு... கற்பனையிலிருந்து நிதர்சனத்திற்கு.. அவ்வகையில் பாதுகாவல் பணி செய்பவரை அப்பணியில் எவ்வாறு ஒழுங்குபடுத்தி அருளினார் என்பதை விளக்கும் தூர தேசத்து மகிமை பதிவு இதோ...


சுவாமியின் பக்தர்கள் எல்லா தேசத்திலும் வாழ்பவர்கள். உலக வரைபடத்தில் இல்லாத சின்னஞ்சிறு தீவுகளிலும் சுவாமியின் பக்தர்கள் வாழ்கிறார்கள்.. சுவாமிக்கான வழிபாடுகள் அங்கே தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன... ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் சாதாரண அவதாரமில்லை.. மண்ணுலகில் மாபெரும் உதாரண அவதாரம்.. இன்னும் ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்தில் அனைத்து உலக நாடுகளிலும் சாயி அவதார மேன்மை விஸ்தாரமாய் பரந்து விரியும்.. இவ்வகையில் Dr. ஆர்ட் ஓங்க் ஜும்சாய் என்ற சாயி பக்தர், பாங்காங்கில் சத்ய சாயி பள்ளியை தலைமை ஏற்று நடத்தி வருகிறார். 

Dr. ஆர்ட் ஓங்க் ஜும்சாய்  தன் பள்ளி மாணவர்களுடன்... 

அவர் Bangkok - இன் புறநகர்ப் பகுதியில் ஒரு ஃபாக்டரி வைத்து நடத்துகிறார். அங்கு கொள்ளையர்கள் அதிகம் என்பதால் ஒரு வாட்ச் மேனை நியமித்திருக்கிறார், அவன் இரவில் சரியாக வேலை பார்க்காமல் சற்று அருகிலுள்ள தன் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு தூங்கி விடுகிறான். சுவாமிக்கு எப்போதுமே ஒழுக்கம்.. சிரத்தை .. கடமையுணர்வு.. பவ்யம்.. செய் நேர்த்தி இதில் மனிதர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பதில் சுவாமி அருளும் மகிமையுமாய் இருப்பவர்.

ஒருநாள் அவனை உள்ளே வந்து ஒருவர் எழுப்பி தாய்லாந்து மொழியில் “நீ சரியாக வேலை பார்க்க வேண்டும். ட்யூட்டி நேரத்தில் இவ்வாறு தூங்கலாகாது, ஒழுங்காக வேலை செய்தால் தான் சன்மானம் கிடைக்கும்” என்று கூறி மறைகிறார். வாட்ச்மேனுக்கோ மிகுந்த குழப்பம். காற்றே இரவின் மடியில் தலைகுப்புற கவிழ்ந்து உறங்கும் இந்த நேரத்தில்‌... அப்படி ஒரு தூங்கா மனிதன் யார்? என யோசிக்கிறான்.. மேலும்  தன்னுடைய தாய் மொழியில் இவ்வளவு தெளிவாய் பேசிய இவர் யார் என வியக்கிறான். ஆனால் மீண்டும் அவ்வாறே அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு தூங்கி விடுகிறான். 


அந்த மனிதரும் தொடர்ந்து ஐந்து நாட்கள் உள்ளே வந்து எழுப்பியவாறு இருக்கிறார்! ஆகையால் அவனின் குழப்பம் பயமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு இரவும் இவ்வாறு எழுப்புகிறாரே.. இவரை முன்பின் கூட பார்த்தது இல்லையே.. சொந்த ஊராக இருக்கவும் வாய்ப்பில்லை.. இந்த முகத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லையே என மனம் நடுங்குகிறது.. அந்த பயத்தில் ஏற்பட்ட விழிப்புநிலை ஒவ்வொரு இரவிலும் அவனை ஒழுங்காக பணி ஆற்ற வைக்கிறது. ஆகவே அவன் முற்றிலும் நடுநடுங்கி தனது எஜமானரான ஆர்ட் ஓங்க் ஜும்சாயிடம் சென்று நடந்ததைக் கூறுகிறான். 


சுவற்றில் மாட்டியிருந்த பாபா ஃபோட்டோவைக் காண்பித்து “இவரா?” 

என ஜும்சாய் கேட்க... வாட்ச்மேன் ஆச்சரியத்துடன் ஆமாம் என்கிறான். “இவரே தான்! இவர் தான் என் அறைக்குள் வந்து எழுப்பியவர் என்கிறான். பாபாவை பற்றி கேள்விப்படுகிறான்.. கண் கலங்குகிறது.. அதுவரை முதலாளிக்கு சல்யூட் மட்டுமே அடித்து வந்தவன் தன்னையும் மறந்து இரு கைகளையும் குவித்து கைகூப்பி வணங்குகிறான்.

“இறைவனே பாதுகாவலனாக வந்த வித்தையை... விந்தையை என்னவென்பது?”

ஆதாரம்: Gems of Sai, Story No 70.

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻தன்னை யாரென்றே அறியாதவனுக்கும் தரிசனம் தருகிறார்.. அது தான் சுவாமியின் கருணை... ஏதுமறியாத ஜனங்களையும் ஆற்றுப்படுத்தும் ஏக இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. சுவாமி இவ்வாறு தொடர்ந்து இரவில் அந்தக் காவலனை எழுப்பியது தனது பக்தன் ஜும்சாயிக்காக ... ஸ்ரீ சத்ய சாயி பக்தர்கள் கொடுத்து வைத்தவர்கள்... நாம் சுவாமியிடம் சரணாகதி அடைந்துவிட்டால் மட்டும் போதுமானது‌.. பக்தர்களின் எல்லா சிறுசிறு தேவைகளையும் சுவாமியே கவனித்துக் கொள்கிறார். அப்பேர்ப்பட்ட மிக மிக அனுகூலமான .. எளிமையான பேரிறைவன் நம் சுவாமி. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக