தலைப்பு

செவ்வாய், 13 ஜூலை, 2021

திருப்பதி மலையேற வைத்தபின் மாயமாய் மறைந்த அந்த அமானுஷ்ய நாய்!


சுவாமி எந்த ரூபத்திலும் வருவார். உயிர்திணை அஃறிணை என்ற பேதமே சுவாமியிடம் இல்லை. காரணம் எல்லா உயிரினங்களின் தாயும் அவரே.. தாய் தன் மகவை வெறுக்காதது போலவே சத்ய தாயும் நம்மை ஒருபோதும் வெறுத்து ஒதுக்குவதில்லை. அஃறிணை ரூபத்தில் தோன்றி எவ்வாறு சுவாமி வழிகாட்டினார் என்பதன் விசித்திர பதிவு இதோ..‌.

ஒரு முறை ஒரு பாபா பக்தர் குடும்பம் நெல்லூரிலிருந்து ப்ரசாந்தி நிலையம் வந்து பகவானின் தரிசனத்திற்காக காத்திருந்தது. பாபா வெளியே வந்து, “உங்கள் மகனை மலைக்கு அழைத்துச் சென்ற நாய்க்குட்டி எங்கே?” என்றார். சுவாமி அறியாதது ஏதும் இல்லை என்பதற்கு பொருள் சுவாமியே அனைத்தும் நடத்துகிறார் என்பதால் தான் . சுவாமியே அனைத்திற்குமான சிருஷ்டி கர்த்தா. இவ்வாறு இருக்க சுவாமி கேட்ட அந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் கூறிய பிறகு, நடந்த கதை என்ன என்று வெளிச்சத்திற்கு வந்தது.



அந்த குடும்பத்தில் உள்ள அவர்களது பையன் ஒரு வாரம் முன்பு, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். அவன் உடலளவிலும், மனதளவிலும் கொஞ்சம் ஆரோக்ய குறைவானவன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிலர் திருப்பதி சென்று பார்க்கச் சொன்னதன் பேரில் திருப்பதி மலை மேல் சென்று பார்த்தால் அங்கு தான் இருந்தான்! நீ எப்படி மலை ஏறினாய்! உனக்கு உடம்பு முடியவில்லையே என்று கேட்க, அவன், “ஒரு நாய்க்குட்டி என்னை வழிகாட்டி அழைத்து வந்தது. அது முதலில் ஏறி என்னை. “நீயும் ஏறி வா சுலபம் தான்! என்பது போல் என்னை பார்த்தது!


ஏறினேன். அது வேகமாக இன்னும் 10 படி ஏறி என்னை திரும்பி அன்போடு பார்த்தது வா என்பது போல் பார்த்தது. ஏறினேன். அது மிக அற்புதமாக எனக்கு வழிகாட்டிக் கொண்டே முன்னேறியது. பிரம்மித்தபடி நடந்தேன்...ஏன் இந்த நாய் நமக்கு வழிகாட்டுகிறது என யோசித்தபடி நடந்தேன்.. மலையேற்றம் கடினமாகவே இல்லை... இப்படியே மேலே வந்துவிட்டேன். வெங்கடாசலபதி கோபுரம் வந்ததும், திடீரென அதை காணவில்லை! சுற்றி எங்கும் திரும்பிப் பார்த்தேன்.. ஆனால் அது எங்கேயும் காணவில்லை..” என்றான். 

 இந்த விஷயத்தை இவர்கள் விவரிக்கும் பொழுது ஸ்ரீகஸ்தூரி அங்கு தான் இருந்தார், அவருக்கு புரிந்து விட்டது பாபா ஏன் முக்கியமாக அந்த நாய்க்குட்டியை பற்றி கேட்கிறார் என்று!!

ஆதாரம்: Sanathana Sarathy 1960 – P 58.
தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 

🌻அனைத்தையும் நடத்துபவரும் வழி நடத்துபவரும் சுவாமியே... அவரவர் கர்ம நகர்வை நிகழ்த்தி அதற்கான பிரதி பலன்களை அனுபவிக்க வைத்து பக்குவப்படுத்தி பற்று அற்ற நிலைக்கு நம்மை பயணிக்க வைப்பதே சுவாமியின் ஆன்மீகம். இதில் அந்தந்த பக்தரை வழிநடத்த அந்தந்த இடத்தில் வெவ்வேறு ரூபங்களில் தோன்றி துணையிருந்து காவல் புரிகிறார். சுவாமி நாய் வடிவமும் எடுப்பதால் தான் எந்த ஜீவனையும் ஹிம்சிப்பதோ ... அடிப்பதோ .. வதைப்பதோ நம்மை பாவங்களுக்கே ஆளாக்குகிறது. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக