தலைப்பு

திங்கள், 21 செப்டம்பர், 2020

தடுமாறி தரையில் விழப் போன விமானத்தை தன் கைகளால் காப்பாற்றிய சத்திய சாயி!

Former chief justice of the Jharkhand High Court  and the Chairperson of the Appellate Tribunal for Electricity, Govt. of India.(Retd)


பிரார்த்தனை செய்தது என்னமோ ஷீரடி பாபாவிடம்... ஆனால் வந்து காப்பாற்றியதோ சத்திய சாய்பாபா. இப்படி இருவரும் ஒருவரே என்று பல பக்தர்களுக்கு சத்யசாயி நிரூபித்திருக்கிறார். அந்த வரிசையில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் M.கற்பகவிநாயகம் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் இதோ...  

ஜஸ்டிஸ். கற்பக விநாயகம், வழக்கறிஞராக தம்முடைய வாழ்க்கையைதொடங்கி , தமது திறமையாலும் நேர்மையாலும் படிப்படியாக உயர்ந்தவர். மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதிபதி, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற பதவிகளை வகித்தவர். பணி ஓய்வுக்குப் பின்னர் (மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு) மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு திறம்பட பணி ஆற்றினார்.இது சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு இணையான பதவியாகும்.

இனி, பகவான் சத்ய சாய்பாபாவிடம் தாம் சரண் அடைந்தது எவ்வாறு என அவர் கூறுவதைக் கேட்போம்.


🌷வழக்குரைஞராகிய நான் ஜஸ்டிஸாக உயர்ந்தது பாபாவின் கருணையே:

என்னை ஒரு நீதிபதி , ஜஸ்டிஸ், தலைமை நீதிபதி என்று கூறுவதை விட, பகவான் சத்ய சாயி பாபாவின் பக்தன் என அழைப்பதில் பெருமை கொள்கிறேன். ஒரு மனிதன் பெரிய பதவியில் இருக்கலாம். ஆனால் தன்னடக்கம் என்ற குணத்தை கைக்கொள்ளவேண்டும். கல்வி, அந்தஸ்து, உயர்பதவி இவற்றுடன் ஒருவன் விளங்கினாலும், பணிவு, பிறர்க்கு தொண்டு செய்யும் மனப்பாங்கு இவைகளை வளர்த்திட வேண்டும். நான் மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதிபதி ஆக்கப்பட்டதற்கு பகவான் சத்ய சாயி பாபாவின் சங்கல்பமே காரணம். இந்த நன்றியறிவிப்பை நான் எனது பதவி ஏற்பு விழாவிலேயே கூறியுள்ளேன்.


🌷எக்கணமும் விமானம் நொறுங்கலாம்.. மரணபீதியில் பிரார்த்தனைக்கு மனம் இறங்கி பாபா அபயஹஸ்தம்:

ஒரு சமயம் டெல்லி செல்வதற்காக விமானப் பயணம் மேற்கெண்டேன். வழியில் ஷீர்டி பாபா தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுநாள் வரை சாயிபாபா மீதே நம்பிக்கை அற்ற நான் இயந்திர கதியாக தரிசனம் செய்தபின் டெல்லி சென்றேன். மறுபடி சென்னை திரும்பும் சமயம் அந்த பயங்கர நிகழ்வு நடை பெற்றது. நன்றாக பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஒரு காற்று சுழலில் சிக்கியது. 35000 அடி உயரத்திலிருந்து படிப்படியாக 30000, 20000 அடி என வேகமாக தரையை நோக்கி தன் செயல் பாடுகளை இழந்த விமானம் பூமியிலிருந்து 5000 அடி தூரத்திற்கு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கப் போவது நிச்சயமாகிவிட்டது. மனம் பதைத்து, மனைவி மக்களை நினைத்தேன். யாறுளர் இந்த இக்கட்டிலிருந்து காக்க, பாபா தவிர என நினைத்து மனம்உருகி கண்மூடி பிரார்த்தனை செய்தேன்.


அப்போது என் மனக்கண் முன் ஒரு உருவம் தென்பட்டது. பாபா காப்பாற்றுங்கள் என கதறினேன். சத்ய சாயி தன் அபய ஹஸ்தம் காட்டினார். அடுத்த விநாடியே விமானம் தன் இயல்புக்கு திரும்பி படிப்படியாக மேலெழும்பி 35000 அடியில் நிலைநின்று பறக்கத் தொடங்கியது. விமானம் சென்னை அல்லாது ஹைதராபாதில் தரை இறக்கப்பட்டது. பைலட் கூறினார். விமானம் விபத்தலிருந்து காப்பாற்றப்பட்டது தெய்வீக சக்தியால் தான். எனக்கு அப்போதே தெரிந்தது அந்த சக்தி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவே தான் என்பது.


ஷிரடியிலிருந்து வந்து விமானம் ஏறிய இவர் அழைத்ததோ ஷிர்டி பாபாவை ஆனால் அந்த இக்கட்டிலிருந்து கரம் உயர்த்தி காப்பாற்றியதோ சத்ய சாயி பாபா.. இதிலிருந்தே இருவரும் ஒருவரே என்பதை உணர்ந்து கொண்டார்.


🌷பாத நமஸ்காரமும்.. பூரண சரணாகதியும்:

இதன் பிறகு சென்னைக்கு சென்ற நான் பகவான் திருமாளிகையான சுந்தரம் செல்ல ஆரம்பித்தேன். அங்கு நடைபெறும் பஜன்களிலும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தேன். பகவானை எப்படியாவது சந்தித்து தரிசனம் பெற விரும்பினேன். அதற்காக அன்றைய S.P. மகாதேவன் அவர்களின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவர் கூறினார்.. "பகவானை அணுக பிரார்த்தனை ஒன்றுதான் சிறந்த உபாயம்" என்று.

பகவான் அப்போது கோடைக்கானல் வந்திருந்ததால், தரிசனம் பெற அங்கு சென்றேன். முதல் வரிசையில் இடம் கிட்டியது. முதல் நாள் தரிசன பாக்யம் மட்டில் கிட்டியது. மறுநாள் மாலை நான் ஊர் திரும்ப வேண்டும். மாலை 4 மணிக்கு பஜன் ஆரம்பிக்க, பகவான் தரிசனம் தர ஆரம்பித்தார். வந்து கொண்டிருக்கிறார்.அனைவருக்கும் தமது திருக் கரங்களால் இனிப்பு வழங்குகிறார். எனக்கும் அவருக்கும் இடையே 6 அடி இடைவெளிதான். அருகிலிருந்த பக்தர் , பகவான் அனுமதித்தால் அன்றி பாத நமஸ்காரம் எடுக்கக் கூடாது என்கிறார். ஆயினும் ஆறடி தூரத்தை தாவி பகவானின் பொற் பாதங்களை பற்றினேன். பகவான் நகரவில்லை நான்கு நிமிட நேரம் அப்படியே நின்றிருந்தார். வேறு யாருக்கும் அன்று பாத நமஸ்காரம் கிட்டாத நிலையில், அனைவரும் என்னை வியந்து வாழ்த்தினர். பரிபூரண சரணாகதி நிலையை நான் அடைய பகவான் இதைச் செய்தார் போலும். ஐந்து நாட்கள் கழித்து இந்த பாத நமஸ்காரத்தின் புகைப்படத்தை நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். அதில் பகவானின் திருப்பாதத்தை நான் பற்றியிருக்க, பாபா தமது அபய ஹஸ்தத்தை காட்டியபடி நின்றிருந்தார். அதே அபய ஹஸ்தம். நான் விமானத்தில் பிரார்த்தித்த போது காட்டிய அதே அபய ஹஸ்தம்.


🌷வழக்குரைஞர்களின் வாசகர் வட்டம்:

இந்த தீக்ஷைக்குப் பிறகு எனது குணநலன்கள் மேம்படத் தொடங்கின. ஒரு சாந்தம் என்னைச் சூழ்ந்தது .பதட்டம் சூழும் வேளையில் B.P . ஏறாதிருக்க பாபா கூறிய உபதேசம் இது...

BE POLITE/BE PATIENT/BE PLEASENT

BE POSITIVE/BE PRAGMATIC.

மென்மை, பொறுமை, இனிமை,

நம்பிக்கை,விவேக அணுகுமுறை

இவைகளை கடைபிடித்தால் ரத்த அழுத்தம் குறைந்து படபடப்பு நீங்குமல்லவா.? இதற்கிடையில் திரு ரங்காராவ் I.A.S அவர்கள் இல்லத்தில் நடந்த வாசகர் வட்டத்தில் நான் பேசும் போது என்னை ஒரு வழக்குறைஞர் வாசகர் வட்டம் தொடங்க அறிவுறுத்தினார். இதன்படி 1995 ஜூன் மாதம் எனது வீட்டில் முதல் முதலாக ஒரு சாயி வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ஒரு வழக்குறைஞர் இல்லத்தில் சாயி பஜன் நடைபெற ஆரம்பித்தது. பின்னர் ஒரு அன்பர் என்னை "சாயி சத் சரிதம் படிக்கச் சொன்னார். படிக்க ஆரம்பித்து ஆறு நாட்கள் கழிந்த நிலையில் ஏழாம் நாள் மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்னை தொலைபேசியில் அழைத்தார். Mr. கற்பக விநாயகம் உங்களை ஹைகோர்ட் நீதிபதியாக நியமிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார். செய்திகேட்ட நான் பகவானின் அருளாசியை நினைத்து தலைமை நீதிபதியிடம் "ஐயா நான் சத்ய சாயி பாபாவிடம் என் பிரார்த்தனையை சமர்பிக்கிறேன்" என்றேன்.அதற்கு அவர் நானும் ஷீரடிபாபா பக்தன்தான் என்றார். இது தற்செயல்ல, தெய்வச் செயல் என உணர்ந்தேன். அதன் பின்னர் நான் 1996 ஜனவரியில் மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதன் வரவேற்பு விழா நிகழ்ச்சியில் நான் பேசும் போது பாபாவின் அருளால் இந்த பதவி கிடைத்ததாகக் குறிப்பிட்டேன். அதுமுதல் நான் பாபாவின் ஆள் என கோர்ட் வட்டாரத்தில் அறியப்பட்டேன்.

என் பதவிக் காலத்தில் பாபா பக்தர்கள் இருவருக்கு நீதிபதியாக பதவி அளித்தேன்.. அது அவர்களின் திறமையையும், நேர்மையையும் பரிசீலித்த பின். நான் குடும்பத்துடன் பகவானை தரிசிக்க செல்கையில் , என் மகளுக்கு ஒரு ருத்ராட்சம் கொடுத்து, அவளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் என ஆசீர்வதித்தார். எனக்கு பகவான் அருளால் நீதிபதி மற்றும் தலைமை நீதிபதி பதவி கிட்டியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி கிட்டவில்லை. அதுபற்றி நான் வருந்தவும் இல்லை. பணி ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணி ஆற்ற ஆரம்பித்தேன்..

🌷கலர் கலர் விபூதி... வித வித ருசியில்:

மேலும் ஒரு நிகழ்வைப் பகிர விழைகிறேன். ஒர் சமயம் லண்டன் மாநகரில் ஒரு மாநாட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. உடன் என் மனைவியையும் அழைத்துச் செல்ல எண்ணி விசா , பாஸ்போர்ட் எடுக்க முயன்றேன். எனக்கு உடனடியாக அனுமதி கிட்டியது . ஆனால் என் மனைவிக்கோ விசா வந்து சேரவில்லை. பிரயாணம் தொடங்க இரண்டே நாட்கள்தான் இருந்தன. பகவானிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தேன். 

அப்போது ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் முன்னாள் செயலர் என்னை சந்தித்து வண்டன் பிரயாணம் பற்றி வினவினார். நான் என் மனைவி விசா பற்றி அவரிடம் கூற , அவர் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். பகவானின் அருள். விசா மறுநாளே வந்துவிட்டது. லண்டன் மாநகரில் எங்களை சாயி அன்பர்கள் மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தனர். அங்கு திரு.படேல் என்னும் சாயி அன்பரின் வீட்டிற்கு சென்றோம். வீடு முழுவதும் ஸ்வாமியின் புகைப் படங்கள். அனைத்துப் படங்களிலும் விபூதி கொட்டுகிறது. பல வண்ணங்களில், பல சுவைகளில். அற்புத காட்சி அது.

🌷மேலும் சில நினைவுகள்:

கடந்த 16 வருடங்ககளாக தினமும் நான் பகவானுக்கு கடிதங்கள் எழுதுகிறேன். அதை பகவான் படிப்பதையும் அறிவேன். ஏப்ரல் 24 க்கு பிறகு சில நாட்கள் கடிதம் எழுதவில்லை. ஆனால் இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள், அவர் இருக்கிறார், கடிதங்களைத் தொடருங்கள் என அன்பர்கள் பலர் கூறினர். அது உண்மைதானே? அதனால் கடிதங்களைத் தொடர்ந்து எழுதிவருகிறேன்.


ஆதாரம்: மாண்புமிகு ஜஸ்டிஸ் கற்பக விநாயகம் அவர்கள் 2011இல் ரேடியோ சாயிக்கு அளித்த நேர்காணல்.

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம் நங்கநல்லூர்.

🌻 இறைவன் சத்ய சாயி ஒருவரே பிரபஞ்ச நீதிபதி.. கர்மா எனும் கோர்ட்டில் அவரே தலைமை ஏற்று அவரவர்க்கான கர்மாவிற்கு தகுந்தபடி வாழ்க்கையை தெய்வத் தீர்ப்பாக அருள்கிறார். அவர் சட்டத்தில் என்றும் ஓட்டை இல்லை. பணம் அங்கே செல்லுபடியாகாது. பக்தி ஒன்றே செல்லுபடியாகும். லஞ்சம் தாண்டவம் விரித்தாடாது. நெஞ்சமே தாண்டவம் ஆடிடும் சத்ய சாயீஷ்வரனைப் பற்றி சரணாகதி அடையும்! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக