தலைப்பு

வியாழன், 24 செப்டம்பர், 2020

நான்காவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...


4. மாதம் ஒருமுறையாவது (நிறுவனம் நடத்தும்) பொது பஜனை மற்றும் நகர சங்கீர்த்தனத்தில் பங்கேற்க வேண்டும்

சத்ய சாயி எத்தனை எளிமையான இறைவன்.!! எத்தனை அனுகூலமான கடவுள்..!! பெற்ற தாயை விடவும் கனிந்த கருணையோடு கழுத்தை நெறிக்கும் படியான கண்டிப்புகள் இன்றி மிக சகஜ பாவனா நிலையில் ஆன்மீகத்தை நம்முள் வளர்த்தெடுக்கும் நித்ய ஜோதியாக திகழ்கிறார்!!!

அதனால் தான் மாதம் ஒருமுறையாவது என்கிறார் இறைவன் சத்ய சாயி.

கம்பை வைத்து அதட்டும்படியான ஆசிரியராக இன்றி தன் கண்ணை வைத்தே நம்மை கட்டுப்பட வைக்கும் ஆச்சர்யமாக சத்ய சாயி பரம்பொருள் திகழ்கிறார்.

நான்காவது படிநிலையிலே தான் அதிகாலை எழுந்து சமிதிகளில் கலந்து கொள்ளும் நகர சங்கீர்த்தனம் பற்றி பேசுகிறார்.

ஜபம் / தியானம் - தனிமனிதனுக்கானது

கூட்டு பஜன் - குடும்பத்திற்கானது

பாலவிகாஸ் -- வாரிசுகளுக்கானது

நகர சங்கீர்த்தனம் -- சுற்று சூழலுக்கானது.

இப்படிப் படிப்படியாக எடுத்துச் சொல்லி அந்த ஆன்மீக நன்னெறிகளைக் கடைபிடிக்க வைத்து நமக்கு மட்டுமன்றி அண்டத்திற்கே நன்மையாற்ற வைக்கிறார்.

ஜபம் தியானம் எனும் முதல் படியிலேயே அதிகாலை எழுதல் துவங்கி.. அதைப் பழக்கப்படுத்தச் செய்து.. சமிதிக்கு சென்று நகர சங்கீர்த்தனத்தில் பங்கேற்கும் நிகழ்வை நான்காவதாக ஆக்கி.. நீ மட்டும் உள் சூழலை மாசுகள் இன்றி தெய்வீகமாய் வைத்தால் போதாது இந்தக் காற்று மண்டல வெளி சூழ்நிலையையே தெய்வீகமாய் வை என வீதி வீதியாய் பக்தர்கள் கூடி இறை நாமங்களைப் பாடி சூழ்நிலையை சுத்தப்படுத்தச் சொல்கிறார்.

சத்ய சாயி பஜன்கள் மந்திரங்களே. மந்திரங்களுக்கு உரித்தான அதே சக்தி நிலை சத்ய சாயி பஜன் எனும் இறை நாமங்கள் தரிக்கும் பாடல்களில் இம்மி அளவு கூட குறையாமல் இருக்கிறது.

மகான்கள் இப்படி பஜனைகள் பாடி வீதி வீதியாய் சுத்தப்படுத்தியவர்களே!

பக்தர்களை அடுத்த நிலையான மகான்களாக்கும் இறைவன் சத்ய சாயி முயற்சி தான் இது!

இறைவன் சத்யசாயியிடம் ஒரு கொலையாளி சரணடைந்தாலும் முதலில் அவன் மனிதனாவான் .. பிறகு பக்தனாவான்.. பிறகு மகானாவான்.

இது மிகையே இல்லை.

வால்மீகி இப்படி ஆனவர் தான்.

நகர சங்கீர்த்தனம் உயரிய சேவை.

சீ போ என்று தீய சொல் சொல்லி பிறர் நம்மை வசைபாடினால் மனம் புண்படுகிறது..

ஆகா ஓகோ எனப் புகழ்ந்தால் மனம் பூரிக்கிறது.

சாதாரண சொல்லுக்கே இத்தனை சக்தி என்றால்...

இறை நாமங்கள் சுமக்கும் திருச்சொல்லுக்கு எத்தனை சக்தி என்பதை நாம் யோசித்து உணர வேண்டும்.

கலி முற்ற முற்ற இயந்திர மாசு முதல் இதய மாசு வரை இந்த இயற்கையை பெரிதும் அவை பாதிக்கின்றன..

பருவ மாற்றமும் .. மழை குறைபாடும் அதனால் மட்டுமே நிகழ்கின்றன..

ஓஸோன் மண்டலம் இளைத்துத் துரும்பாகிவிட்டது.

இந்த இயற்கை குறைபாடுகளைக் களையவே நாம் நகர சங்கீர்த்தனம் புரிகிறோம்!

யாக யக்ஞம் போலவே 

நகர சங்கீர்த்தனம் என்பது நாத யக்ஞமே!

யாகத்தால் இயற்கை சீரடைதல் போலவே 

நாதத்தாலும் அது சீரடைகிறது.

நமக்குப் புரிகிறதோ இல்லையோ இறைவன் சத்ய சாயியின் உபதேசத் திருமொழிகள் வேதங்களே. அவை மட்டுமே சத்தியம். அதற்கு ஜெய வீரியம் அநேகம்.

அவை மட்டுமே நிச்சயமாய் நிதர்சனமாய் நிகழ்ந்தது/ நிகழ்ந்து கொண்டிருக்கிறது/ நிகழும்.

நகர சங்கீர்த்தனத்தில் இரு நன்மை ஒன்று அகம் சுத்தமாகிறது.. மற்றொன்று அண்டம் சுத்தமாகிறது.

சுப்ரபாதத்திற்குப் பிறகே நகர சங்கீர்த்தனம் ஆரம்பமாகும் ... 

சத்ய சாயி சுப்ரபாதமோ நம் அக விழிப்பு நிலையை அதிகப்படுத்தும்..

சகஜமாய் முதுகுத் தண்டில் இருக்கும் சுருண்ட பாம்பு வடிவ சக்தியான குண்டலினி எந்தவிதமான சிரமமும் இன்றி.. பெரிய பிரயத்தனமும் இன்றி..

முதுகு நிமிர்ந்து 21 முறை ஓம் சொல்லும் போதே எழுந்து ஆக்ஞா (நெற்றிப் புருவ மத்தி) எனும் ஆறாம் சக்கரத்தில் வந்து நிரம்புகிறது.

பிறகு சுப்ரபாதத்தின் இனிமையும்.. ஆழமும்.. தியான நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்...

பரம சாந்தியை சுப்ரபாதம் பருகும் படி செய்த பின்னரே சூழ்நிலைக்கு அந்த சாந்தியை .. அந்தப் புனிதத்தை இறை நாமங்களால் பரப்பும் சேவை ஆரம்பிக்கிறது.

சுப்ரபாதம்‌... நகரசங்கீர்த்தனம் அதில் கலந்து கொண்டபின் அந்த நாள் முழுக்க உற்சாகமும்.. உத்வேகமும்... 

நேர்மறை அதிர்வலைகள் நிரம்பி வழிவதும் அனைத்து பக்தர்களின் அனுபவமாகவே இருக்கிறது.

இறைவன் சத்ய சாயி வகுக்காத கோட்பாடுகள் யாரும் வகுக்கவில்லை.

அதிலும் இத்தனை எளிமையாக எவரும் இதுவரை அளிக்கவில்லை..

காரணம் சத்ய சாயியே பிரபஞ்சப் பரிபூரண இறைவன் ..

அவருக்கே அஃறிணைக்கும் உயர்திணைக்கும் எது எது எவ்வகையில் எவ்வாறு நன்மை .. எந்த நன்மை மேன்மை என நன்கு தெரியும்.

பதினெட்டு படிகள் கடந்தே மகர ஜோதி தரிசனம் காண்போம்.. ஆனால் ஒன்பது படியிலேயே ஆத்ம ஜோதி தரிசனம் காண வைக்கிறார் இறைவன் சத்ய சாயி.

நவரத்தினம் ஒளிரும்

 பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து: