தலைப்பு

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பாரா முகமே பாபா கொடுக்கும் தண்டனை!


இறைவன் சத்ய சாயி அவதரித்ததே மனித ஜீவராசிகளிடம் இதயத் தூய்மையை ஏற்படுத்தவே .. மனித தவறுகளை சாட்சியாய் இருந்து கவனிக்கிறார். அதற்கு அவர் கொடுக்கும் தண்டனை என்பது பாராமுகமே.. தவறுகளை மனிதனே உணரும் வண்ணம் செய்த பிறகு ஆன்மத் தொடர்புக்கு வருகிறார் என்பதை இதோ இறைவனே வலியுறுத்துகிறார். 

மக்கள் பஜனை பாடுகிறார்கள். பூஜைகள் புரிகின்றார்கள். புனித, மங்கல நாட்களில் உண்ணா நோன்பு காக்கிறார்கள். இதனால் தம்மை பக்தர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுவா உண்மையான பக்தி? இல்லவே இல்லை. எண்ணம், சொல், செயல் அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான பக்தி.

மேலோட்டமாக காணும் போது, உங்களது சொற்களும் செயல்களும் நல்லவையாக தோன்றலாம். ஆனால் உங்கள் எண்ணங்கள்
மாசுபட்டவையாக இருந்தால், சுயநலபாங்கினால் களங்கபட்டிருந்தால், உமது சொற்கள் அனைத்தும், செயல்கள் அனைத்தும், வெறும் சடங்குகளேயாகும்.


உண்மையில் பக்தி என்பது தூய்மையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான பக்தன், தன்னை நீத்து, இறைவனிடம் அன்பு தளும்பும் சீரான எண்ண பெருக்கத்தை குறையாது என்றும் கொண்டிருப்பான். இத்தகைய பரநலம் நிறைந்த எண்ணமே பக்தியின் வித்தாகும். உன்னுடைய சொற்களும், செயல்களும், இந்த விதையில் இருந்து வெளிவரல் வேண்டும். அப்போதுதான் நீ உண்மையான பக்தன் ஆகிறாய். ஆகவே மனிதன் எந்த ஆன்மீக சாதனை மேற்கொள்வதற்கு முன்னரும் ,எண்ணம், சொல், செயல் இவற்றின் பரிபூரணத்தை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் பருவத்திற்கு முன்னரே ஆன்மீக பயிற்சி தொடங்குகிறது. அன்னைதான் குழந்தைக்கு முதல் குரு. ஆகவே அவள் தான் ஆன்மீக பயிற்சியை பின் தொடர்வது எப்படி? என்று சிறாருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் .அன்னை என்ற தனது குரு என்றுமே தன்னுடன் இருப்பதால், அவரது மேற்பார்வையில் பிள்ளைப் பருவத்திலிருந்து சாதகன் முழு நிறைவு பெற ஆன்மீக முயற்சி செய்தல் வேண்டும். சின்னஞ் சிறு விஷயங்களில் கூட சாதகன் முழு நிறைவு பெறவேண்டும். இந்த நினைவு இருந்தால், இளம் சாதகன், எண்ணம், சொல், செயல் இவற்றில் உள்ள எந்த தீய இயல்பையும் முளையிலேயே கிள்ளி விடுவது எளிது என்று புரிந்து கொள்வான். தாய், குழந்தை மிக சிறு தவறு செய்தாலும் அவனை தண்டிக்க சிறிதும் தயங்கலாகாது. குழந்தையின் தவற்றை மூடி மறைக்கலாகாது. அவ்வாறு செய்தால், சிறுவனைக் கெடுத்து, அத்தகைய தவறுகள் புரிவதற்கு அவனை மறைமுகமாக தூண்டும். சிறு தவற்றுக்கு கூட பெரும் தண்டனை அளிப்பது நியாயமே. ஒரு சிறிய பாம்பை அடிக்க, அதனிடமிருந்து நீ பத்திரமாக விலகி இருக்கவேண்டும் என்பதற்காகவும், பாம்பு உயிருடன் இருக்கலாகாது என்பதற்காகவும், பெரிய கழியை எடுத்துக் கொள்கிறாய்.

அதுபோல ஒரு குறிப்பிட்ட மாணவனின் கெட்ட குணங்களை ,மற்ற மாணவர்கள் கிரகிக்காமல் இருக்கும்படி உறுதி செய்து கொள்ள வேண்டும். தவிர அம் மாணவன் நியாயமற்ற அவனது நடத்தையை விடுத்து, வருந்தற்குரிய குணங்களையும் விலக்கிக் கொள்ளும்படி செய்ய வேண்டும். ஸ்வாமியும்  கூட, பக்தர்களிடமும் மாணவர்களிடமும் பேசாமல் இருப்பதன் மூலம், தன் மலர் பாதங்களைத் தொட விடாமலும், அவர்களை ஏறெடுத்து பாராமலும் இருப்பதன் மூலம், அவர்களது குறைகளுக்கு தண்டனை கொடுக்கிறார்.
 அத்தகைய மனிதன் சுவாமியின் தரிசனம்( கர்ம நாசனத்துக்கான வாய்ப்பு), ஸ்பரிசம்_தொடுகை ( பாவம் விலகுவதற்கான வாய்ப்பு), சம்பாஷனம்_ உரையாடல்( சங்கடம் அழிவதற்கான வாய்ப்பு) இவற்றிற்கான வாய்ப்பை இழக்கிறான். அவன் மறுபடி செய்யலாகாது என்பதை உறுதிப்படுத்தவே இத்தகைய தண்டனை அவனுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதாரம்: சாயி அருளமுதம் || கொடை - 1994 (தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

🌻 ஆக பக்தி என்பது பிறர் தவறுகளைச் சுட்டிக் காண்பிப்பதை விட்டு அவரவர் தவறுகளை சரிசெய்து கொள்வதற்காகவும்.. பரிசுத்தமடைவதற்காகவும்.. இதையே இறைவன் சத்ய சாயி உணர்த்துகிறார். பக்தியில் பழுத்த பக்குவ ஆத்மாவானது தன் குறையைத் தவிர பிறர் குறைகளையே காணாது.. அரை வேக்காடுகளை இறைவன் சத்ய சாயியே முழுதாய் வெந்து பக்குவமாக்க பலவித கோணங்களில் அன்பால்.. மிக மிருதுவாய்  தண்டிக்கிறார்‌.. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக