தலைப்பு

ஞாயிறு, 17 மே, 2020

17 வருடங்கள் கை ஊனமுற்றிருந்த லட்சுமியை குணமாக்கிய சுவாமி!


தெலுங்கு சனாதன சாரதியின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய போது, ஒரு பெண்மணி தனது அனுபவத்தை, அற்புதத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுதெல்லாம் அத்தகைய செய்திகள், சனாதன சாரதியில் வெளியிடப்பட மாட்டாது. என்னுடைய நண்பர் ஸ்ரீ கிருஷ்ண மோஹன் ராஜு, அச்சம்பவத்தை அறிந்து, தன் தெலுங்கு மாத இதழான 'ஸ்ரீ வாணி' யில் வெளியிட்டார்.
அதன் சுருக்கம் ;

சரணாகதி தத்துவத்தை விளக்கும் V.M.R.ஷர்மா அவர்களின் பதிவு:

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின் பிதுகுரல்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனபதி லட்சுமி.12 வயதிலேயே திருமணமான அவருக்கு ஒருமுறை கடுமையான ஜுரம் ஏற்பட்டு, அவரது இடது கை பலகீனமாகி முடங்கிப் போனது. அதனால் அவளது கணவர் அவளை ஏற்க மறுத்தார். எனினும் கடவுள் தனக்களித்த இனிமையான குரல்வளத்தின் மூலம் அன்னமய்யா கீர்த்தனைகளையும், பஜன்களையும் பாடி , தன் தாயையும் சேர்த்து காப்பாற்றி வந்தார். அவரது புடவையைக் கூட, தானே கட்டிக்கொள்ள சிரமப்பட்ட அவரை அனைவரும் 'நொண்டி லட்சுமி' என்றே குறிப்பிட்டார்கள். நல்லிதயம் கொண்ட சிலர்,அவர் வேலூர் சென்று கையை குணமாக்கிக் கொள்ள ஆலோசனை வழங்கினர். அதற்குரிய பணத்தை சேமித்து கொண்டு, அவரது இசை
ஆசிரியரின் துணையோடு வேலூருக்கு புறப்பட்டார். 



அவர்கள் பேருந்தில் விஜயவாடாவை அடைந்தபோது, புட்டபர்த்தி செல்லும் பேருந்தைக் கண்டனர். உடனே லட்சுமி,சுவாமியைப் பார்த்துவிட்டு பின் வேலூர் செல்ல முடிவெடுத்தார். அதன்படி அவர்கள் புட்டபர்த்தி சென்று இறங்கினர். பேருந்து நிலையத்திலேயே சுவாமி பிருந்தாவனத்தில் இருக்கிறார் என அறிந்து உடன் பெங்களூருக்கு பயணமானார்கள். அங்கு சுவாமியின் அருளால்,பிறந்தநாளுக்கு ஆசி வாங்க வந்த பெண்ணின் பக்கத்தில் அமர  இடம் கிடைத்தது. சுவாமி அப்பெண்ணின் அருகில் வந்தவுடன், லட்சுமி சுவாமியின் தாமரைப் பாதங்களை தன் வலது கையால் தொட்டு வணங்கினார். இடது கையாலும் தொழ வேண்டி,மிகுந்த சிரமத்திற்கிடையில் கையை
நீட்ட முயல...என்ன அதிசயம்!! அவரது இடது கை நேராக, முற்றிலும் சரியாகிவிட்டது. அவர்,'என் கை சரியாகிவிட்டது' என உரக்கக் கூவினார். சுவாமி புன்னகைத்தவாறே சென்றுவிட, லட்சுமி ஆனந்தக்கண்ணீருடன், 'என் கை சரியாகிவிட்டது' என்று கூறியபடியே இருந்தார். இது நடந்தது 1990ம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம்தேதி - அதாவது லட்சுமியின் கை முடங்கிப்போன பதினேழு வருடங்கள் கழித்து!!

அதன்பின் வேலூர் செல்லும் முடிவைக் கைவிட்டு, புட்டபர்த்தி வந்த  லட்சுமி, அங்கு சிலரிடம் தன் அனுபவத்தைக் கூறிவிட்டு, தன் கிராமத்தை வந்தடைந்தார். பிதுகுரல்லா மக்கள் அனைவரும் நடந்ததை அறிந்து, மருத்துவமே பார்க்காமல் 'நொண்டி லட்சுமி' யின் கை பூரணமாக சரியானது அற்புதமே என மகிழ்ந்தனர். மேலும் இத்தகைய அற்புதங்கள் கடவுள் ஒருவரால் மட்டுமே நிகழ்த்தப்படும்; ஆகவே சாய்பாபா, கடவுள் ஆவார் என்று ஒருமித்து கூறினர்.

ஆதாரம்: SAI SPANDAN - Journal of SSSIHMS Prasanthi Gram - Third Issue.
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.

1 கருத்து:

  1. ���� ஓம் ஸ்ரீ சாயிராம் ����
    உண்மை தான் இப்படியான அற்புதங்கள் கடவுள் ஒருவரால் மட்டுமே நிகழ்த்த இயலும் ����

    பதிலளிநீக்கு