தலைப்பு

வியாழன், 24 ஜூன், 2021

பரபரக்கும் ரயிலில் கொள்ளையடித்த திருடர்களிடம் இருந்து ஒரு நொடியில் காப்பாற்றிய சுவாமி! 

சுவாமி ஸ்ரீ சத்ய சாயி எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். ஆபத் பாந்தவர். எந்தவிதமான கொடிய ஆபத்திலிருந்தும் தன் பக்தர்களின் பதபதைக்கும் அழைப்பை ஏற்று அந்த நொடியே காப்பாற்றும் சுவாமி எவ்வாறு ஒரு திகில் கலந்த சூழ்நிலையில் ஒரு பக்தையின் உயிரையும்... உடமையையும் காப்பாற்றினார் என்பதை விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...


சில வருடங்களுக்கு முன்பு க்வீன்ஸ் எனும் இடத்திலிருந்து நியூயார்க்கில் உள்ள Manhattan எனும் இடத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார் நளினி! நளினி தீவிரமான சுவாமி பக்தை. எல்லாம் அவர்களுக்கு சுவாமி தான். சுவாமியிடம் நிரம்ப நிரம்ப ஆத்ம அனுபவம் பெற்றவர். சுவாமியை மனதிலும்.. தனது உடமையை ரயிலிலும் தாங்கி வந்த நளினி ஜன்னலில் நகரும் காட்சியைப் பார்த்தபடி ரயில் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ரயிலின் ஜன்னல் வழி பார்க்கும் காட்சியைப் போலவே வாழ்வின் சம்பவங்கள்.. வேகமாய் மாறக் கூடியவை .. எதுவும் நிரந்தரமில்லாதவை.. இதை உணர்த்திய படியே மூச்சு காற்றும்.. வீசும் காற்றும் உரசியபடி பேசிக் கொண்டிருந்தன...

ஒருசில நிறுத்தங்கள் தாண்டிய பின் சில குண்டர்கள் (திருடர்கள்) ரயிலில் ஏறி தொந்தரவு செய்தனர். அந்த தொந்தரவு பயணிகளை வேர்க்க வைத்தது.. ரயில் பயண நொடிகள் பறந்தாலும்.. பயமோ பயணியர் பொடிகளை உறைய வைத்தன... பயத்தில் பயணிகள் யாரும் எதிர்க்கவில்லை! திருட்டு குண்டர்களோ நளினியின் கைப்பையைப் பிடுங்கிக்கொண்டு, விரலில் இருந்த மோதிரத்தையும், எடுத்துக் கொண்டுவிட்டனர். நளினி இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.. அதிர்ச்சியில் ரயிலே தண்டவாளத்தில் தடுக்கி விழுந்ததைப் போல் தலை வெடித்தது போல் இருந்தது.. அதற்கான காரணம் நளினியின் ஆழ்மனதில் துடித்தபடி ”சுவாமி! எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் ஒரு விஜயதசமியன்று நீங்கள் எனக்கு சிருஷ்டித்து கொடுத்த உங்களின் ஃபோட்டோ மட்டும் கிடைத்தால் போதும்” என உள்ளம் உருகியபடி வேண்டினார். 

உடனே கைப்பையில் இருந்த ஸ்வாமியின் ஃபோட்டோ கீழே விழுந்தது. நளினிக்கு போன உயிர் திரும்ப வந்நது. “சுவாமி... சுவாமி...” என்று நளினி ஆனந்தத்தில் கூறியபடி அந்த ஃபோட்டோவை கைப்பற்றி எடுத்துக் கொண்டார். சுவாமி எனும் அந்த ஒலியைக் கேட்ட குண்டர்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டு, ஷாக் அடித்தது போல நின்று, அடுத்த ரயில் நிறுத்தத்தில் இறங்கி ஓடி விட்டனர்! அவர்கள் செய்த இந்த விசித்ரமான செய்கை ஏன் என்று ஒரு நொடி புதிராக தோன்றியும்.. மறு நொடி சுவாமியின் செயலே என உண்மை உணர்ந்த நளினி இதை யாரிடமும் கூறாமல் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். 


இந்த சம்பவம் நடக்கும் அதே சமயம் புட்டபர்த்திக்கு நளினியின் சினேகிதி சென்றிருந்தாள்.. அவள் அப்போது குழுவினரோடு சுவாமியின் இன்டர்வியூ அறையில் இருந்தார்கள்.. ஏதோ பேசிக் கொண்டிருந்த சுவாமி திடீரென்று நிறுத்திவிட்டு நளினியின் சம்பவத்தை விவரித்தார். பின்னர் “நல்லவேளை! என்னைக் கூப்பிட்டு பிரார்த்தித்தாள்! இல்லையேல் இந்தப் பெண்ணை அவர்கள் குத்திக் கொன்று இருப்பார்கள்” என்று இவ்வாறு கூறினார்.

ஆதாரம்: Nalini Gopal Ayya, Sai The Ominipresent One – P 22,23.

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻அக மாற்றத்தை வரவழைப்பது என்பது சுவாமியால் மட்டுமே சாத்தியம். சுவாமி ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டே இருக்கிறார். தன் கைப்பை வேண்டும் என கேட்காமல் அதில் இருந்த சுவாமியின் திருவுருவம் படம் வேண்டும் பிரார்த்தனை செய்தார்கள் அல்லவா.. அதுவே பக்தி.. அந்த பக்திக்கு கஜேந்திர மீட்பு போல் நளினி மீட்பை ஏற்படுத்தினார். உண்மையான பக்திக்கு சுவாமி ஓடோடி வந்து அருள் புரிவார் என்பது இன்றுவரை நிதர்சனமான.. என்றும் நிரந்தரமான சத்தியம்!! 🌻

1 கருத்து: