தலைப்பு

செவ்வாய், 2 ஜூலை, 2019

ஓ சாயி! ஆபத்துக்களை போக்கி உயிரைக் காப்பவரே!


104. ஓம் ஸ்ரீ சாயி ஆபந்நிவாரிணே நம:

ஆபந் – ஆபத்துக்களையும், 
நிவாரிணே - போக்குபவருக்கு

கிழக்கு ஆப்ரிக்காவுக்கு பாபா பக்தர்களுடன் சென்றிருந்தார். அங்கே ‘மூர்ச்சிகன்’ நீர்வீழ்ச்சியுள்ள பூங்காவிற்கு பாபா சென்றிருந்தார். பின்னால் பக்தர்களின் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக விரைந்தன. திரு. கஸ்தூரி மற்றும் சிலரை ஏற்றிச் சென்ற கார் ஓட்டுநர் பந்தயத்திற்காக ஒட்டுவதைப்போல முன்னால் சென்று கொண்டிருந்த கார்களை முந்திக்கொண்டு வெகு வேகமாகச் செலுத்தினார்.

வெகு வேகமாகச் சென்ற அந்த வண்டி ஒரு திடீர்திருப்பத்தில் உருண்டு சக்கரங்கள் நசுங்கி வேதனையான அமைதியில் அசைவற்று நின்றது! பாபாவின் கார் முப்பது மைல்களுக்கு அப்பால் உள்ள ‘மாசிந்தி’ என்ற ஊரைக்கடந்து சென்றுவிட்டது. பாபா காரில் தம்மோடு வருபவர்களிடம் “பின்னால் வரும் வண்டிக்கு விபத்து நேர்ந்துவிட்டது. அவர்கள் இனி வாடகைக் காரில் தான் பயணத்தை தொடரவேண்டும்” என்று கூறினார்! இங்கு வண்டியிலிருந்த நால்வரும் கூரைக்கும் தரைக்குமாக உருண்டு, அடியும் இடியும் காயமும் பெற்றனர். நால்வரும் “சாயிராமா” என்று கூவினார்கள். கார் ஓட்டுநர் வெளியில் சென்று விழுந்தார்! எதன் மேலோ இடித்து திரு. கஸ்தூரியின் மூக்குக் கண்ணாடி உடைந்து அவரது நெற்றியில் கீறி ரத்தகாயம் ஏற்பட்டது. பின்னால் வந்த வண்டியிலிருந்தவர்கள் இவர்களை மெதுவாக வெளியில் இழுத்தனர். ஒரு வினோதம்! இவர்கள் கார் விழுந்த இடத்துக்கு நேரே ஒரு மருத்துவமனை இருந்தது! நால்வரில் திரு. கஸ்தூரிக்கே அதிகம் அடிபட்டிருந்தது. நெற்றியில் வெட்டும் இடது காலில் காயமும் வலது காலில் வீக்கமும் ஏற்பட்டபோதும் மருத்துவமனைக்கு நடந்தே சென்றார். அங்கு அவருக்கு ஊசிபோட்டு மருந்து தடவப்பட்டது. பிறகு பின்னால் வந்த வண்டியில் ஏறி மாசிந்தி வந்து, அங்கிருந்து ஒரு வாடகை வண்டியை பிடித்து பூங்காவுக்கு சென்றனர். அங்கு பாபா தங்கியுள்ள விடுதிக்குச் சென்றனர். பாபா அவர்களைக் கண்டதும் வேகமாக விரைந்து வந்து அவர்களைத் தட்டிக் கொடுத்து புனித திருநீறு வரவழைத்து களிம்புகளையும் மாத்திரைகளையும் வரவழைத்து அவர்களுக்கு அளித்தார்! எல்லோரையும் அருகில் அழைத்து ஆறுதல் கூறி வலிமையை அளித்தார்!

ஓ சாயி! ஆபத்துக்களை போக்கி உயிரைக் காப்பவரே!
உமக்கு எனது வணக்கம்.

ஆதாரம்: பக்தியில் கோத்த நல்முத்துக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக