தலைப்பு

புதன், 31 ஜூலை, 2019

🐱 பிறந்தநாள் அன்று பூனைக்கு பரிசளித்த சுவாமி!


ஒவ்வொரு ஜீவனுக்கு உள்ளோம் நான் தான் இருக்கிறேன் என்று பாபா பலமுறை சொல்லியிருக்கிறார். பாபாவை நேசிக்கும் நாம், ஒரு சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ நாய், பூனை போன்ற  ஜீவராசிகளை வெறுக்கின்றோம். ஒரு சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அளவு கடந்த அன்பை காண்பிப்பார்கள். அவர்களே அவர்களின் வீட்டின் வெளியே இருக்கும் தெரு நாயை கல்லெடுத்து அடிப்பார்கள். இவ்வாறு செய்யக் கூடாது. நம்மால் முடிந்த வரை அன்பை பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் காண்பிக்க வேண்டும்.  இதனை வலியுறுத்தும் விதமாக பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்...

1972-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி.

பாபாவின் பிறந்தநாள் விழா, புட்டபர்த்தியில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாபாவை தரிசனம் செய்ய அஸ்ஸாமின் தலைநகரிலிருந்து 60 பக்தர்கள் வருகை புரிந்திருந்தார்கள்.

நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்த அந்த பக்தர்களுக்காக பாபா சிறப்பு தரிசனம் அளித்து, சின்னதாக அருளுரையும் நிகழ்த்தினார். பின்னர் அவர்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கினார்.
ஒவ்வொருவரும் ஆனந்தமாக வரிசையில் வந்து, பாபாவின் பொற்கரங்களால் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்தக் குழுவில் லாக்கி என்று ஒரு பெண் இருந்தாள். நர்ஸ். அவளது முறை வரும்போது, அவளுக்கும் விபூதி கொடுத்தார் பாபா. அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவள் நகரும்போது, “ஒரு நிமிடம், இங்கே வா’ என்றார் சத்யசாய்பாபா. அந்தப் பெண் ஒன்றும் புரியாமல், என்னமோ ஏதோ என்று பதறி பாபாவை நெருங்கியபோது, அவளுக்கு மட்டும் மீண்டும் ஒருமுறை விபூதி தந்தார் பாபா.

அவளுக்கு எதுவும் விளங்கவில்லை. பாபா அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடியே “இந்த விபூதி உனக்கு அல்ல; உன்னுடைய செல்லப் பூனைக்கு!’ என்றார்.

அவ்வளவுதான். அந்தப் பெண் பொங்கிப் பொங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.
பாபா அவளுக்கு மட்டும் இர்டு தடவை விபூதி கொடுத்தது ஏன்? அதுவும் பூனைக்குத் தந்தது ஏன்? இத்தனைக்கும் அந்தப் பெண் பாபாவை தரிசனம் செய்வது அதுதான் முதல் முறை.

உண்மையில் என்னதான் நடந்தது? அந்தப் பெண் லாக்கியின் ஃபிளாஷ்பேக்குக்குள் கொஞ்சம் சென்று வரலாம், வாருங்கள்!

அது ஒரு மழைக் காலம்.
கௌஹாத்தி நகரம்.
லாக்கி, பிரபலமான ஒரு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தாள். பணி முடிந்து, மழையில் லேசாக நனைந்தபடி அவள் வீட்டுக்கு வரும்போது, சாக்கடைத் தண்ணீரில் தத்தளித்தபடி ஒரு சின்ன பூனைக்குட்டி உயிருக்குப் போராடுவதைப் பார்த்தாள்.
இயல்பாகவே இரக்க சுபாவம் மிகுந்த லாக்கி, அந்தப் பூனையைக் காப்பாற்றி, வீட்டுக்குக் கொண்டு வந்தாள். அதைச் சுத்தம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்தாள்.
லாக்கியின் அக்காவுக்கு அந்தப் பூனை வீட்டில் இருப்பது பிடிக்கவே இல்லை. எப்போது பார்த்தாலும் “மியாவ், மியாவ்’ என்று கத்திக்கொண்டு ரோமத்தை எல்லாம் உதிர்த்துக் கொண்டு நோஞ்சானாக ஒரு குட்டி அங்கே உலவுவதில் மிகுந்த வெறுப்புக் கொண்டாள் அக்கா. அருவருப்பு!
தங்கை லாக்கியை இதற்காக திட்டினாள் அக்காக்காரி. கொண்டு போய் எங்காவது விட்டுவிடு என்று கத்தினாள். தங்கை கேட்பதாக இல்லை.
இத்தனைக்குள் அவர்கள் இருவரும் மிகுந்த சாய்பாபா பக்தைகள். அவர்களின் வீடு முழுக்க சாய்பாபா படங்களாகவே இருக்கும். வீட்டில் இருக்கும் நூறு படங்களில் 60 சாய்பாபா!
மிருகங்களிடம் அன்பு கொள்வாயாக என்று பாபாவின் வார்த்தைகள் மட்டும் அந்த அக்காகாரியை எட்டவில்லை போலிருக்கிறது.
ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதா இருந்தார்கள். தடபுடலாக உணவு தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

விருந்தினருக்காக மேஜையில் வைத்திருந்த மீன் துண்டுகளில் ஒன்றைக் கவ்விக் கொண்டு அடுத்த அறைக்கு ஓடியது அந்த பூனைக்குட்டி.
அவ்வளவுதான், அதைப் பார்த்த அக்காகாரி, செமை டென்ஷனாகிவிட்டாள். தங்கை லாக்கியைப் பார்த்து கன்னாபின்னாவென்று திட்டனாள். “கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்லையாடி ஒரு திருட்டுப்பூனையைக் கொண்டு வந்த வீட்டில் வைத்திருக்கிறாய். பூனை வாய் வைத்த உணவை எப்படி விருந்தினர்களுக்குப் போட முடியும்? அறிவில்லாமல் ஒரு முட்டாள் பூனையை கொண்டு வந்து என் உயிரை எடுக்கிறாய்?’ என்றெல்லாம் இஷ்டத்திற்கு திட்ட ஆரம்பித்தாள். புகைப்படத்தில் இருந்த பாபா அதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
பூனைக்குப் பிடித்தமான உணவு மீன். அதை மூடி வைக்காததுதான் முட்டாள்தனம் என்றெல்லாம் அவர்கள் அறிவுக்கு எட்டவே இல்லை.
அக்கா திட்டத்திட்ட தங்கைக்கும் பூனை மேல் கோபம் வந்தது. அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து பூனையைத் தேடிச் சென்று எரிச்சலுடன் ஒரே அடி! மீன் துண்டு சிதற அலறியபடி அடுத்த அறைக்கு ஓடியது பூனை.
எரிச்சலுடன் மீண்டும் அதை அடிப்பதற்காக துரத்தியபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தடதடவென சப்தம்.
வீட்டுக்குள் ஏதோ குண்டு வெடிப்பது போல் ஓசை. சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்கள் எல்லாம் கீழே விழுந்து கண்ணாடிகள் சிதறின.
பூகம்பம்தான் வந்துவிட்டது என்று எல்லோரும் வெளியில் ஓடினார்கள்.
ஆனால், வெளியில் எந்த மாற்றமும் இல்லை.

ஒன்றும் புரியாமல் வீட்டுக்குள் வந்தபோது, சுவரில் இருந்த பகவான் பாபாவின் படங்கள் மட்டும்... சரியாக 60 படங்கள்... கீழே விழுந்து சிதறிக் கிடப்பதைக் கண்டார்கள்! மற்ற சுவாமிகளின் படங்கள் எல்லாம் சுவரில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருந்தன.
அந்தக் காட்சியைப் பார்த்ததுமே சகோதரிகளுக்கு ஒரு உண்மை புரிந்தது. பூனையை அடித்ததை பாபா விரும்பவில்லை. கூடுதலாக ஒரு அடி கூட பூனைக்கு விழக் கூடாது என்பதற்காகத்தான் பாபா இப்படி ஒரு செயலைச் செய்திருக்கிறார் என்பது புரிந்ததும் இரண்டு சகோதரிகளும் அழ ஆரம்பித்தார்கள். தேம்பி தேம்பி கதறினார்கள்.

தன் எஜமானிகளுக்கு என்னமோ ஆகிவிட்டது போலிருக்கிறதே என்று பதறியபடி அவர்கள் அருகில் வந்தது அந்த அடி வாங்கிய பூனை!
துடப்பக்கட்டை அடியின் வலி இன்னும் அதன் உடம்பி“ல இருந்ததால் தன்னை இளைப்பாற்றிக் கொள்ள, உடம்பை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது.

அப்போது அதன் உடம்பிலிருந்து தூசி போல் புகை மூட்டமாய்க் கிளம்பியது. அதன் மணத்தை நுகர்ந்த சகோதரிகள் ஆடிப் போனார்கள். அது விபூதியின் மணம். ஆமாம், அந்தப் பூனையின் உடம்பிலிருந்து உதிர்ந்தது எல்லாம் விபூதி! வாசனை விபூதி! பாபாவின் விபூதி.


நடுங்கிப் போன அவர்கள் மானசீகமாய் பாபாவிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அந்தப் பூனையைத் தடவிக் கொடுத்து, அதற்குப் பிடித்தமான உணவைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்கள்.

அப்புறம் என்ன? அக்காகாரிக்கும் அது செல்லப் பூனையாகிவிட்டது. அந்த வீட்டின் எஜமானி மாதிரி வலம் வர ஆரம்பித்தது, பாபாவினால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்த குட்டிப் பூனை.

அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து, கௌஹாத்தியிலிருந்து ஒரு பக்தர்கள் குழு, புட்டபர்த்திக்குப் புறப்பட்டது. இதுவரை அங்கே சென்றிராத தங்கை லாக்கியும் அந்தக் குழுவினருடன் பாபாவை தரிசனம் செய்யப் புறப்பட்டாள்.
அப்படி புட்டபர்த்தி சென்றபோதுதான் பாபா அவளுக்கு மட்டுமில்லாமல், செல்லப்பூனைக்கும் விபூதி கொடுத்து ஆசிர்வதித்தார்.


🌻ஒன்றை மட்டும் இதைப் படிக்கும் பக்தர்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அன்பு மறுக்கப்படும் ஒவ்வொரு இடத்தைம் ஒவ்வொரு கணத்தையும் சத்யசாய் பாபா துப்பறிகிறார். நாம் வழி தவறும்போதெல்லாம் அவர் நம்மை எச்சரிக்கிறார். அவரது திருக்கரம் அடிவானத்துக்கு அப்பாலும் செல்லக்கூடியது. காலச்சக்கரத்தின் சுழற்சியைத் தாண்டக்கூடியது. மனிதன், பறவை, விலங்கு, புழு, மரம், செடி எல்லோரின், எல்லாவற்றின் நலன் காக்க பாபா முன்மாதிரியாக இருக்கிறார். பாபாவின் அன்புக்கு எல்லையே இல்லை.. ஏனென்றால், எல்லாமாக இருப்பவர் அவரே.🌻

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 – 1985)

1 கருத்து:

  1. Very touching !!! YOU ARE DOING AMAZING SERVICE IN SPREADING BHAGAVAN'S LEELAS AND TEACHINGS TO TAMIL SPEAKING DEVOTEES ... TRUE INSTRUMENTS OF SWAMI ... PRANAMS TO YOU ALL !!!

    பதிலளிநீக்கு