தலைப்பு

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மின்சார வசதியற்று பெட்ரோமாக்ஸ் லைட்டில் பஜனை செய்த ஏழை குடும்பத்தை உயர்த்திய சாயி கடாட்சம்!


இல்லம் ஏழ்மையாக இருப்பது குற்றமில்லை இதயம் ஏழ்மையாக இருப்பதே குற்றம் என்பதாக இறைவன் ஸ்ரீ சத்யசாயி பக்தியையே பார்த்து அந்த வசதியான இதயத்திற்கு அருளை அள்ளி வழங்குகிறார் எனும் சத்தியம் குறித்த சாட்சியப் பதிவு இதோ...

1945 இல் ஆனந்தவல்லி, திருமணம் புரிந்து, கணவரோடு நீலகிரி மலையிலுள்ள வெலிங்கடனுக்குச் சென்றார். கணவர் வீட்டார் அனைவரும், முன்பே ஷீரடி சாய்பாபா பக்தர்கள். அதிலும் ஆனந்தவல்லியின் கணவர், தன் பதினைந்தாவது வயதிலிருந்தே ஷீரடி சாய்பாபாவை வழிபடுபவர். அப்போது முதற் கொண்டே வியாழக்கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவின் படத்தை அலங்கரித்து வைத்துப் பஜனை செய்து வழிபட்டு வந்தார். எனவே திருமணமாகிச் சென்றதிலிருந்தே ஆனந்தவல்லியும் ஷீரடி சாயி பக்தையாகி வழிபடத் துவங்கினார்.



1962இல் அவர்கள் வெலிங்டனிலிருந்து சென்னைக்கு வந்து விட்டனர். சென்னைக்கு வந்தபிறகே, ஷீரடி சாயிபாபா மறுபடியும் அவதாரம் எடுத்து புட்டபர்த்தி சாயி பாபாவாக வந்துள்ளார் என்று அவர்களுக்கு தெரிய வந்தது. ஜமீன்தார் ஜி.க்ஷி. வரதப் பிள்ளை என்பவர் மூலமாகத்தான் அவர்கள் அப்பேருண்மையை தெரிந்து கொண்டார்கள். சுவாமி சென்னைக்கு வரும்போது, ஜமீன்தார் வீட்டிற்கு விஜயம் புரிவது வழக்கம். அப்போதெல்லாம் ஆனந்தவல்லியும் தன் கணவர் குழந்தைகளுடன் சென்று சேவித்து வருவார்.

1966 ஆம் ஆண்டு, ஜமீன்தாருக்கு சஷ்டியப்தபூர்த்தி நடந்தேறியது. அதுபோது சுவாமி அங்கு வந்தார். ஆனந்தவல்லியும், கணவரோடு சென்று, சுவாமியைச் சேவித்தார்.  அவர்களை ஆசிர்வதித்த சுவாமி அவர்களிடம், "சால கஷ்டம் ஒச்சந்தி. ஓள்ளு  பாக லேகுண்ட போத்தனு, நேனு அன்த சூஸ்தாணு." என்று தெலுங்கில் கூறினார். அதாவது நிறையத் துன்பங்கள் வருகின்றன.  உடம்பும் சரியில்லாமல் போகும்.  நான் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.



அதே போல வீட்டில் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் உடல்நலம் தாழ்ந்து துன்புற்றனர். குடியிருந்த வீட்டைத் திடீரென வீட்டுக்காரர் காலி செய்யச் சொல்லிவிட்டார். வேறு நல்ல வீடு கிடைக்காமல் ஒரு குடிசையில் சில மாதங்கள் தங்கியிருந்தனர்  அந்தக் குடிசைக்கு மின்விளக்கு இணைப்பும் கிடையாது. இவ்வளவு துன்புற்றும் அவர்கள் வியாழக்கிழமை பஜனையைக் கைவிடவில்லை. ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளியுடன் . பஜனை தவறாது சிறப்பாக நடைபெற்று வந்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் பகவான் திருவருளால், ஜமீன்தார் வீட்டார் அவர்களுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்தனர். குழந்தைகள் நால்வரும் அப்போது சிறியவர்கள். மிகவும் சிரமப்பட்டே அவர்களை வளர்த்து ஆளாக்கினர். சுவாமி சொன்னது போல, வேண்டிய கஷ்டம் அவர்களை பற்றி வாட்டியது. அவ்வளவிலும் அவர்கள் சுவாமியிடம் கொண்டிருந்த அளவுகடந்த பக்தியும் நம்பிக்கையுமே அவர்களை காப்பாற்றி வந்தது.



பின்னர் படிப்படியாக அவர்கள் நிலை உயர்ந்து வந்தது. பெரிய மகளுக்கு திருமணம் செய்வித்தனர். அத்தை மகனாரையே மணந்து கொண்ட அவள் பெற்றோருக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறாள்.  பிறகு மற்ற மூன்று குழந்தைகளும் ஓவ்வொருவராகப்  படித்து முன்னேறினர். இப்போது அனைவரும் நல்ல பணிகளில் அமர்ந்து சிறப்புற வாழ்கின்றனர்.

சிரம் குவிவாரை ஓங்கி உயர்த்திவிடும் சீரோன் கழல்களில் அவர்கள் தஞ்சம் அடைந்து விட்டதால் வெயிலை கண்ட பனி போல அவர்கள் துன்பமெல்லாம் தீர்ந்து இறைவன் திருவடிகளை வாழ்த்தியபடி சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது மாதம் முதல் வியாழக் கிழமைகளில் அவர்கள் வீட்டில் மிகச் சிறப்பாகப் பஜனை நடைபெற்று வருகிறது. தந்தைக்குப் பிறகு பஜனைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகன் பாபு, சமிதியிலும், வீட்டுப் பஜனைகளிலும் இனிமையான குரலெடுத்துப் பாடி வருகிறார். 

ஆதாரம்: புத்தகம் - பவழம் – அத்தியாயம் 08

🌻ஆடம்பரமற்ற சிறைச்சாலையிலும்/ பிறகு வீட்டிலும் தான் அவதரித்தார் சத்யசாயி கிருஷ்ணர்...
பக்தி படைத்தவரே வசதி படைத்தவர்.. அப்படி இல்லாதோர் அசதி படைத்தவர் எனும் பேருண்மையை சுவாமி அனுகிரகம் புரியும் போதே அனைவராலும் உணர முடிகிறது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக