தலைப்பு

சனி, 14 ஆகஸ்ட், 2021

பாபாவின் விநோத பரிசளிப்பு - ஹோவர்ட் மர்பெட்டின் மலைப்பு!

மனிதர்கள் கால, நேரம் போன்ற விதிகளுக்கு கட்டுப்படவர்கள். ஆனால் பகவான் பாபா எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் மீறி , அவற்றை தமது கட்டுக்குள் வைத்து இயங்கச் செய்பவர். காலம், இடம், குணம், அன்பு , கருணை போன்ற அனைத்து விதிகள்/குணங்களிலும் அதீதமானவர்.

திரு. ஹோவேர்ட் மர்பெட் அவர்கள் பகவான் பாபாவின் பக்தர். இவரது Saibaba- Man of Miracles, உலகெங்கும் உள்ள சாயி பத்தர்களால் படித்து வியந்து பாராட்டப்பட்ட ஒரு புத்தகமாகும்.அதில் கூறப்பட்டுள்ள  ஒரு அற்புத சம்பவம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது... 

ஒருநாள் மாலை. நானும், என் மனைவி ஐரிஸ் மற்றும் இரண்டு பக்தர்களுமாக, பகவான் பாபாவின் அருகில் அமர்ந்து இருந்தோம். பாபா  இன்முகத்துடன் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென என்னிடம் "நீ பிறந்த வருடம் என்ன" எனக்கேட்டார். நான் அதைக் கூறியதும், கண்களை சிமிட்டியபடி "அப்படியா! அதே வருட முத்திரையோடு கூடிய அமெரிக்க நாணயத்தை உனக்கு பரிசளிக்கிறேன்" என்று கூறி,, இதோ வருகிறது, இதோ வருகிறது என குழந்தைகளுக்கு விளையாட்டு  காட்டுவது போல தமது வலது கரத்தை பலமுறை சுழற்றினார். பிறகு தமது கையை மூடினார் . என்னுடைய ஆச்சர்யமான தவிப்பை கண்டு மெல்ல நகைத்து, அந்த நாணயத்தை என் கரங்களில் போட்டார். என் கண்கள் அதைக்கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தன. அது ஒரு கனமான தங்க நாணயம். அதை கூர்ந்து நோக்கியதில், அதில் காணப்பட்ட விவரங்களைக் கண்டு  நான் பிரமிப்பு அடைந்தேன். அது ஒரு ஒரிஜனல்  10 டாலர் அமெரிக்க தங்க நாணயம். அதில் லிபர்டி சிலை உருவம் பொறிக்கப்பெற்று  அடியில் அதன் வெளியீட்டு ஆண்டும்  பதிக்கப் பட்டிருந்தது. அதுதான் நான் பிறந்த ஆண்டு என்பதால் என் வியப்பு பன்மடங்கானது. "நீ பிறந்த ஆண்டில் தான் அந்த நாணயம் வெளியிடப்பட்டது" என பாபா புன்னகை பூக்கக் கூறினார். 

அந்த நாணயத்தை நான் பெற்றுக் கொள்ளும்போது, ஒரு சாதாரண  நம்பிக்கையற்ற மனிதன் இதுபற்றி என்ன நினைப்பான் என எண்ணிப் பார்த்தேன். பாபா இது போன்ற நாணயங்கள் பலவற்றை தம்மிடம் ஸ்டாக் செய்து வைத்துக் கொண்டு என் பிறந்த வருடத்தின் நாணயத்தை எனக்கு அளித்திருக்கக் கூடும் என்றா?இருக்காது.. அத்தகைய பழைய வழக்கொழிந்த நாணயத்தை அவர் யார் மூலமாவது பெற்றிருக்க முடியவே முடியாது. அது பாபாவின் அற்புத சக்தியால்தான் நடந்திருக்க வேண்டும்.

அவர் நினைத்த க்ஷணத்திலேயே எங்கோ இருந்த அந்த பொருள் மின்னல் வேகத்தில் புறப்பட்டு அவர் கரத்தினுள் தஞ்சமாகிவிடுகிறது. அது எங்கிருந்து வருகிறது.  ஒருவேளை அவை  பழைய  மறைத்து வைக்கப்பட்ட புதையல்களோ, அவற்றை வைத்திருந்த நபர்கள் இப்போது இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டனரோ, எதுவுமே பொருந்தாத ஊகங்கள் தான். பாபாவுக்கு மட்டுமே இந்த அற்புதங்களின் செயல் இயக்கம் தெரியும். ஆனால் அதை அவர் ஒருபோதும் வெளியிட்டதில்லை.

பாபா நிகழ்த்தும் அற்புதங்கள் அவரது அளப்பரிய சக்தியின் ஒரு திவலை மட்டுமே. அவர் அவதாரப்பணிகள் பேரண்டத்தின் வீச்சு என்றால், அவர் நிகழ்த்தும் அற்புதங்கள், அண்டத்தில் ஒளிரும் ஒரு நட்சத்திரத்தின் அளவே ஆகும். அற்புதங்கள் பாபாவின் விசிட்டிங் கார்ட். அவரது தெய்வீக முகவரியை அற்புதங்கள் முலம் அறிந்து, அவரால் ஈர்க்கப்பட்டு  நல்வழியில் நடக்க அவர் நிகழ்த்தும் நாடகம் ஆகும் இது. ஆகவே நம் அறிவுக்கு அப்பாற்பட்ட  தேவையற்ற ஆராய்ச்சிகளையும் சந்தேகங்களையும் புறம் தள்ளி, பகவான் பாபாவின் நல் உபதேசங்களை ஏற்று , அவர் வழியில் நடந்து வாழ்வில் நலமடைவோமாக.


ஆதாரம்: “Sai Baba: Man of Miracles” by Mr. Howard Murphet. Page: 84 (Paperback Edition, 1972). Published by Macmillan India Ltd.

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக