தலைப்பு

புதன், 28 ஏப்ரல், 2021

மருத்துவம் பிரம்மிக்கும் சாயி மகத்துவம்!


துன்பப்படுபவர் யாராக இருந்தாலும் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் மனதின் ஆழத்திலிருந்து நம்பிக்கை யோடு பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு என் உதவி நிச்சயமாக கிடைக்கும்.    
இறைவன் ஸ்ரீ சத்யசாயி  பாபா 

1981ம் ஆண்டு மார்ச் மாதம்,  மிலன் நகரில் "ஜெனி" (மக்கள்)  எனும் பிரபலமான பத்திரிகை ஒன்றில் இத்தாலிய பத்திரிக்கையாளர் திரு ரென்ஸோ அலெக்ரி அவர்கள் பாபாவின் வாழ்க்கை மற்றும் அவரது பொன் மொழிகளையும் விளக்கமாக வெளியிட்டிருந்தார். அதன்  ஒரு பகுதியாக மருத்துவர்களால் கைவிடப்பட்ட , அதிர்ச்சியூட்டும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை எவ்வாறு பகவான் சத்யசாய் இரக்கத்தோடு குணமாக்கினார் என்பது பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு முற்றிலும் நம்ப முடியாத இச் சம்பவம் தன் பெயரை வெளியிட விரும்பாத இத்தாலி நாட்டின் உயர் பதவி வகித்த மூத்த ராணுவ அதிகாரி ஒருவரோடு சம்மந்தப்பட்டது. அவரது மனைவி அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னிடம் கூறினார். அவர் சொன்னதை அப்படியே இங்கு எழுதுகிறேன் :-

1979ம் ஆண்டு இறுதியில் என் கணவருக்கு சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதன் விளைவாக மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஆலோசனைப்படி X Ray  எடுத்துப் பார்த்ததில்  என் கணவர் உடலில் "சர்கோயிடாசிஸ்" (நுரையீரல் வீக்கம்)  எனும் நோய் முற்றிய நிலையில் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து என் கணவர் ராணுவ மருத்துவ மனைக்குச் சென்றார்.  அங்கே மருத்துவர்கள் அவருக்கு இருந்த நோயின் தன்மையை பின்வருமாறு கூறினர் :- 


உங்களது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நீங்கள் உங்கள் பணியில் மேற்கொண்டு நீடிப்பது  சாத்தியமில்லை. இருப்பினும் உங்கள் தரப்பில் நோயை குணப்படுத்திக் கொள்ளும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அவற்றை முயற்சி செய்த பின்னர் 90 நாட்கள் கழித்து மீண்டும் வந்து பாருங்கள்.  அப்போது என்ன செய்வது என்று பார்க்கலாம் எனக் கூறினர்.

தான் பார்த்துக் கொண்டிருந்த ராணுவ வேலையில் மிகுந்த பற்று கொண்டிருந்த 47 வயதே ஆன என் கணவருக்கோ நோயைப் பற்றிய செய்திகள் அதிர்ச்சி தந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லை. எனவே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை தந்த மருத்துவரோ மிகவும் பிரபலமானவர். இருப்பினும் சிகித்சையின் ஆரம்ப கட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.  எனவே பையாப்ஸி செய்தால் மட்டுமே சரியான சிகிச்சை தர முடியும் என்று கூறினார்.  அபாய கட்டத்தில் இருந்த என் கணவரின் நுரையீரல் 20 சதவீதம் தான் வேலை செய்தது. அவரது ரத்தத்தில் போதுமான அளவு ப்ராணவாயு இல்லாத காரணத்தால் முதலில் இதை சரி செய்த பிறகே எந்த அறுவை சிகிச்சையும் செய்ய முடியும்.


இதை அடுத்து என் கணவர் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் ப்ராணவாயுவை அதிகரிக்கச் செய்யும் முகமூடியை பயன் படுத்தினார்.  எனினும் பயனில்லை. தன் நம்பிக்கையை இழந்தும் தன்னுடைய திறமைகள் அனைத்தும் பயன் படுத்தி பயாப்சி செய்தார்.  சோதனையின் முடிவு அவருக்கு "கேடஸ்ட்ரோபிக்"   என உறுதி செய்தது.  அதாவது யாராலும் குணப்படுத்த முடியாத புரோட்டினோசிஸ் அல்வியோலர். (அவரது நுரையீரல் புரத காற்றுப் பைகளால் நிரப்பப் பட்டிருந்தது). மருத்துவர் வெளிப்படையாகவே தன்னுடைய வாழ்நாளில் இத்தகைய அரிதான நோயாளிகள் மூவரை மட்டுமே பார்த்துள்ளதாகவும் அவர்கள் மூவருமே இந்நோய் தாக்கியதில் உயிரிழந்து விட்டனர். நோயாளி அதிக பட்சமாக ஒரு வருடம் மட்டுமே உயிர் வாழ முடியும். எனவே நோயிலிருந்து மீள வழி தேடி வேறு சில நிபுணர்கள் மற்றும் என் நண்பர்களை அணுகி விசாரித்தேன்.  சாதகமான பதில் எங்குமே கிடைக்கவில்லை.

மனம் நொந்து வீடு திரும்பிய நான் என் மூன்று மக்களிடமும் அவர்கள் தந்தையின் உடல் நலத்தை பற்றிக் கூறினேன். ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என் மூத்த மகளின் வகுப்பு ஆசிரியை இந்தியாவிலுள்ள  மும்பையைச் சேர்ந்தவர்.  கவலையும் கண்ணீருமாய் வகுப்பிலிருந்த என் மூத்த மகளிடமிருந்து காரணத்தை தெரிந்து கொண்டு என்னை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே நான் அந்த ஆசிரியை தொடர்பு கொண்டேன்.  என்னை தன் வீட்டுக்கு அழைத்து எனக்கு முன்பின் தெரியாத இறைவன் சத்ய சாய்பாபாவைப் பற்றி கூறி அவர் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தால் அவர் உதவுவார் எனக் கூறி சிறிது விபூதியும்  (புனித சாம்பல்)  இறைவன் சத்ய சாய்பாபாவைப் பற்றிய புத்தகம் ஒன்றை தந்தார்.


நாங்கள் தீவிர கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள்.  இருப்பினும் என் மன பாரத்தினால் சரிவர பிரார்த்தனை செய்ய முடியவில்லை. ஆனால் என் மகளின் ஆசிரியை பெருமளவில் நம்பிக்கையும் அமைதியும் தரும் வகையில் என்னுடன் பேசினார். இறைவன் பக்கம் நான் திரும்ப உதவி செய்த ஒரு நல்ல சிநேகமாக அவர் திகழ்ந்தார். வீடு திரும்பிய நான் என் குழந்தைகளுக்கு முழு விவரத்தையும் கூறி எனக்கு கொடுக்கப் பட்ட புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.  அடுத்த நாளே மருத்துவமனையிலிருந்து என் கணவரிடம்  சாய்பாபாவைப் பற்றி எடுத்துச் சொன்னதும் ஏதோவொரு உள்ளுணர்வால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். தினமும் இரவில் ஒரு அத்தியாயத்தை நான் அவருக்கு படித்துக் காண்பித்து சிறிது விபூதியும் உட்கொள்ளத் தருவேன்.


சில நாட்கள் கழித்து என் கணவரின் முடிவு நெருங்குவதாக மருத்துவமனையினர் தீர்மானித்து அவரை கடைசி காலத்தை வீட்டிலேயே நிம்மதியாக இருக்கச்  சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர். அவ்வாறு வீடு திரும்பிய பின் என் கணவரும் நானும் சத்ய சாய்பாபா பற்றிய புத்தகத்தை படித்தும்.. என் கணவர் தொடர்ந்து விபூதி உட்கொண்டும் வந்தார். பத்து நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் மருத்துவரிடம் சென்ற போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. என் கணவரின் நுரையீரல் முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது!!! மருத்துவரால் இதை நம்ப முடியவில்லை. முன்பு முதன்முதலில் தான் எடுத்த   X-Ray மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவர் நாம் மீண்டும் புதிதாக  X-Ray  எடுக்கலாம் என்று சொல்லி நம்பமுடியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது என்றும் கூறினார்.

இதற்கு அடுத்த நாள் என் கணவரின் உடல் நிலை பற்றி நன்கு அறிந்தவரும் அவருக்கு முதன் முதலாக நுரையீரல் X-Ray எடுத்த மருத்துவ நிபுணரை சந்தித்து புதிதாக மீண்டும் ஒரு  X-Ray எடுத்துப் பார்த்தார்.  புது X-Ray  முடிவு கவலை அளிப்பதாக இருந்தது.  ஆம்.. அதில் நுரையீரல் பாதிப்பு இருந்ததற்கான அறிகுறிகள் கொஞ்சமும் இல்லை!!! இதில் ஏதோ தவறு நேர்ந்துள்ளது என்று கருதி மருத்துவர் மீண்டும் பரிசோதனை செய்தார். அதன் முடிவை சொல்லும் போது நோயாளியினுள் நடந்த அற்புதத்தை நினைத்து மருத்துவர்  அழுதே விட்டார்.

அடுத்த நாள் மீண்டும் வேறொரு மருத்துவரிடம் சென்றோம்.  அவரோ ரேடியாலஜிஸ்ட் தொலைபேசியில் அனைத்து விவரங்களையும் சொன்னார். முதலில் எடுத்த  X-Rayவையும் தற்போது எடுத்த X-Rayவையும் ஒப்பிட்டு பார்க்கும் போது உங்களது ஆரோக்கியம் முன்னேறியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்கள் நுரையீரல் 20 சதவீதமே வேலை செய்தது.  ஆனால் இப்போதோ 80 சதவீதம் வரை வேலை செய்கிறது. உங்கள் சுவாசம் ஒரு சராசரி மனிதனைப் போலவே உள்ளது. எனக்குத் தெரியாமல் வேறெங்காவது சிகிச்சைக்கு சென்றீர்களா?  என்று மருத்துவர் எங்களைக் கேட்டார்.  நாங்களோ கன்னி மரியாளிடம் பிரார்த்தித்ததாக கூறினோம். சத்ய சாய்பாபா பற்றி நாங்கள் சொல்லாததன் காரணம் என்னவெனில் எங்களுக்கே அவரைப் பற்றி எப்படி சொல்லுவது என்று தெரியாது. மருத்துவர் ஆழ்ந்து சிந்தித்து பின் 'கன்னி மரியாள் தான் இந்த அற்புதத்தை செய்தார்கள் என்றால் எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டார். பிறகு நான் மருத்துவரிடம் என் கணவர் முன்பு போல் ராணுவ வேலைக்கு செல்லலாமா என வினவினேன். மருத்துவரும் என் கணவரின் உடல் நிலை சீராக உள்ளதால் பணிக்கு திரும்பலாம் என பதிலளித்தார்.


ஒரு வாரம் கழித்து என் கணவர் ராணுவ மருத்துவமனைக்கு  தனது அத்தனை பரிசோதனை முடிவுகளையும் எடுத்துச் சென்றார். ராணுவ மருத்துவர் என் கணவரிடம்   "எனக்குத் தெரியவில்லை யார் உன்னிடம் நீ குணமாகி விட்டாய் என்று சொன்னது"?? ஆனால் என்னை ஏமாற்ற முடியாது என சொல்லிக் கொண்டே மீண்டும் புதிதாக  X-Ray  எடுத்துப் பார்த்தார். X-Ray  முடிவைப் பார்த்தவுடன் தான் பேசியதற்காக வருந்தினார். ஏனெனில் அவர் முன்பு வைக்கப்பட்டிருந்த X-Ray  பரிசோதனை முடிவை பார்த்தும் அவர் கண்களை அவரால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அற்புதம் நிகழுமா!!! நம்பவே முடியவில்லையே என்றார்.

இது நடந்தது சனிக்கிழமை அன்று. அடுத்த திங்கள் கிழமை முதல் ஏதுவும் நடக்காதது மாதிரி என் கணவர் வழக்கம் போல வேலைக்குச் சென்றார். இவை எல்லாம் நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என் கணவர் நல்லபடியாக இருக்கிறார் என்று சொன்னார். தம்பதியர் இருவரும் தங்களது நன்றிகளை பாபாவிற்கு காணிக்கையாக்கினர்.

இறைவன் சத்ய சாய்பாபாவிடம் பூரண நம்பிக்கை நம்மிடம் இருக்கும் வரை.. அவரையே நாம் சரணாகதி அடைந்த பிறகு... எப்பேர்ப்பட்ட நோய்க்கும் நமக்கும் எந்த ஒட்டோ உறவோ இருக்காது. 

பரிபூரண ரட்சகர்..  மருத்துவர்க்கும் மகா மருத்துவர்... சூட்ச்சும அந்தர்யாமி...சர்வ வியாபியான இறைவன் சத்ய சாயி ஒருவரே!


ஆதாரம் :- 1981 May Sanathana Sarathi
தமிழாக்கம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை


1 கருத்து: