தலைப்பு

வியாழன், 8 ஏப்ரல், 2021

முடிவிலா இறைவனின் முப்பெரும் சாயி அவதாரங்கள்!


இறை அவதாரங்கள் ஏன் நிகழ்கின்றன? 
புவியில் பல மாற்றங்களை ஏற்படுத்தவும், மானுட குலத்தைச் சீர்திருத்தி உயர்த்தவும் தான் இறை அவதாரங்கள் பூமியில் நிகழ்கின்றன. அப்படித்தான் சாயி அவதாரமும்.

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா தன் அவதாரத்தை நிறைவு செய்தார். இந்த நிலையில் இளம் சத்யா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் புட்டபர்த்தி மக்கள் அனைவரும் வியப்படைந்தனர்.

தனது 14ஆம் வயதில் தன்னை ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் மறுபிறவி என்று கூறியதுடன், ஷிர்டி பாபாவின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை தெளிவாக நினைவு கூர்ந்தார். அதுநாள்வரை சீரடி சாய்பாபாவின் பிறப்பு ரகசியம் மர்மமாகவே இருந்தது சீரடி சாய்பாபா தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய முதல் பதினாறு ஆண்டுகளைப் பற்றி யாரிடமும் சொல்லியதில்லை. ஏன் சீரடி சாய்பாபாவின் சத்சரித்திரத்தில் கூட பாபா முதன் முதலில் ஷீரடிக்கு வந்த வயதான பதினாறாம் வயதில் இருந்து தான் ஆரம்பமாகின்றது. இப்படி இருக்கும் தருவாயில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, சீரடி சாய்பாபாவின் பிறப்பு ரகசியத்தை ஆதி முதல் அந்தம் வரை  தெள்ளத்தெளிவாக சொன்னார். பின்னாளில் மகாராஷ்டிராவை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீ சத்ய சாய் பாபா சொன்ன அடையாளங்களை வைத்து சந்தேகத்தின் பெயரில் அதனை ஆராய்ந்து உறுதிப்படுத்தினார்கள்.


சீரடி பாபாவின் நேரடி பக்தையாக இருந்த சிஞ்சோலி நாட்டு ராணி, M.S.தீக்ஷித், சாரதாதேவி அம்மையார், மற்றும் சுந்தரம்மா போன்ற எண்ணற்ற பக்தர்களுக்கு தான் ஷிர்டி பாபாவின் மறுபிறவிதான் என்பதை நிரூபித்தார். தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா ஒன்றுதான் என்றும் கூறினார்.

 மேலும் பாபா தான் பிறந்து, சத்திய யுகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வெங்கோபா போன்ற பல யோகிகளும் பரத்வாஜர் போன்ற பல முனிவர்களும் பிரார்த்தனை செய்து கொண்டதால்தான்
தன் அவதாரம் நிகழ்ந்தது
என்றும் அவர் குறிப்பிட்டார்.

யோகி ஸ்ரீ அரவிந்தர், அலிப்பூர் சிறையில் அடைப்பட்டிருந்த சமயம்.  அங்கே ஒரு நாள் தியானத்தின் போது பகவான் கிருஷ்ணரின் காட்சியை கிடைக்கப் பெற்றார். அவரது அறிவுரையையும் பெற்றார். அதுமுதல் தான் தீவிரமாக இருந்த சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகி, யோக வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். புதுச்சேரிக்குச் சென்றவர் அங்கே தனித்திருந்து தியான வாழ்வைத் தொடர ஆரம்பித்தார்.

மானுடன் அதிமானுட நிலைக்கு உயர வேண்டும் என்று யோகத்தால் பாடுபட்ட அவர்...தெய்வீக சக்தி புவிக்கு இறங்கி வரவேண்டும் என்று அதி தீவிரமாக பிரார்த்தித்தார். ஸ்ரீ அரவிந்தர் 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தனது பிறந்த நாள் அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தன் யோக சாதனையில் கடந்த ஆண்டு வரை இருந்த தடைகள் முற்றிலுமாய் விலகி விட்டன என்றும், இனி விரைவில் பல மகத்தான செயல்கள்  நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.


 அதே ஆண்டு நவம்பர் 24 அன்று சாதகர்கள் அனைவரும் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன் அமர்ந்து தியானத்தில் மூழ்கினர். சற்று நேரத்தில் ஒரு மிகப் பெரிய பேரொளி மேலிருந்து கீழே இறங்கி வருவதை

அனைவரும் உணர்ந்தனர். தங்கள் தலைக்கு மேலே ஓர் தெய்வீக சக்தி வியாபிப்பதை அறிந்து பரவசப்பட்டனர். மேலிலிருந்து  இறங்கியது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சக்தி என்றும், மேல் நிலை மனத்திற்கான புதிய திரு உரு மாற்றப்பணி தொடங்கி இருப்பதாகவும் அன்று ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தார். ஸ்ரீ அன்னையும் அதை ஆமோதித்து அனைத்து சாதக்ர்களுக்கும் ஆசி அளித்தார். அன்று முதல் அது புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ‘Victory Day’ என்று கொண்டாடப்படலாயிற்று. இதனை அரவிந்தர் எழுதிய "Sri Aurobindo on Him­self and the Mother" (1953 பதிப்பு) என்ற புத்தகத்தில் 208ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஒருமுறை பக்தர் ஒருவர் சத்ய சாயி பாபாவிடம் கேட்டார் உண்மையில் ஸ்ரீ அரவிந்தர் யார்? உங்களின் புனித பிறப்பைப் பற்றி அரவிந்தருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? என்று கேட்டார். அதற்கு பாபா,

”அவதாரம் நிகழும் பொழுது அவனது அடியார்களும் அவருடனோ அல்லது அதற்கு முன்போ பிறந்து அதற்கு ஆயத்தமாகச் சில செயல்களைச் செய்ய வேண்டி வரும். அப்படி எனது சக்தியின் உயிர்ப்புடன் புவியில் தோன்றியவர்தான் அரவிந்தர் என்றும், எனது அவதாரம் துரிதமாக நிகழ்வதற்கான பணிகளை அவரும், வெங்காவதூதர் போன்ற பல யோகிகளும் முன்னரே பிறந்து, புவியில் செயல்பட்டனர்" என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், “இது போன்ற விஷயங்கள் உங்களது விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்டது. சாதாரண புலன்களால் இதுபோன்ற விஷயங்களை ஆராய இயலாது” என்றும் குறிப்பிட்டார்.

எங்கே விஞ்ஞானம் முடிவுறுகிறதோ அங்கே மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது பாபாவின் கூற்று.

ஸ்ரீ சத்ய சாய்பாபாவாக வாழ்ந்து தன் அவதாரத்தை நிறைவு செய்த பாபா அடுத்து பிரேமசாயியாக அவதாரம் எடுக்க இருக்கிறார். அதை அவரே ஒரு சில பக்தர்களிடம் கூறியுமிருக்கிறார். குறிப்பாக தனது உதவியாளராக இருந்த கஸ்தூரியே மறுபிறவியில் தனது தாய் என்றும் பாபா அறிவித்துள்ளார். ஒரு வெளிநாட்டு பக்தருக்கு ”பிரேம சாயி” உருவம் பொறித்த மோதிரத்தையும் வழங்கியுள்ளார்.


கர்நாடக மாவட்டம் மாண்டியாவில் உள்ள குணபர்த்தியில் பிரேம சாயி அவதாரம் நிகழும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 2024 பிறகு  அவருடைய அவதாரம் வெளிப்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ”பிரேம சாயி” அவதாரம் ’சக்தி’ அம்சத்துடன் கருணை உள்ளம் கொண்டதாக விளங்கி, மானுடத்தை உயர்த்தும் என்றும் பாபா, முன்பே தன் பக்தர்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி: ramanans.wordpress.com


🌻 ஆரம்பத்தில் நம்பிக்கையில்லா ஷிர்டி சாயி பக்தர்கள் இரு சாயியும் ஒன்றே என இறைவன் ஸ்ரீ சத்ய சாயியிடம் சரணாகதி அடைந்தது போல்... மூன்று சாயியும் ஒன்றே என இறைவன் ஸ்ரீ பிரேம சாயியிடம் சரணடைவார்கள்.
உடல் பற்றுள்ளவர்களே உருவத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்..
ஆன்மீக யோகம் அடைந்தவர்கள் உருவம் கடந்து மூன்று உருவமும் ஒன்றே என வரப்போகின்ற இறைவனோடு சங்கமமாவார்கள்! 


1 கருத்து: