தலைப்பு

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி பாபாவை கிருஷ்ணராகப் பார்க்கிறேன் - Justice P.N. பகவதி


ஜஸ்டிஸ்  P.N. பகவதி அவர்கள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். இன்று 'பொது நல வழக்குகள்' என்ற பிரிவில் பல புகழ் பெற்ற வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன. இந்த முறையை முதலில் அமுலுக்கு கொண்டுவந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. சாயி பக்தரான இவர் 96 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்து 2017ல் சுவாமியின் திருவடியில் சங்கமித்தார். ஜஸ்டிஸ் பகவதி அவர்களின் சாயி அனுபவங்களை அவரே கூறக்கேட்போம்...

பகவான் சத்ய சாயி பாபாவும் ஸ்ரீ கிருஷ்ணரும் வேறல்ல. என் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை ஸ்ரீ சத்ய சாயி பாபா உருவத்தில் காண்கிறேன். அது 1969 ம் ஆண்டு. நான் குஜராத் மாநில உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தேன். அச்சமயம் சுவாமி அகமதாபாத் வருவதாக செய்தி வந்தது. அவரது ப்ரத்யேக தரிசனம் பெற விழைந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். அக்கோரிக்கைக்கு  பதிலாக நான் முற்றிலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அது...என் வீட்டில் சுவாமியை தங்க வைக்க இயலுமா.. என்ற கேள்விதான். இதனால் திக்குமுக்காடிப் போன நான் உடனடியாக என் வீட்டில் சுவாமி தங்குவதற்கான அறையை தயார் செய்தேன். மறுநாள் சுவாமியை வரவேற்க விமான நிலையம் சென்றேன். கிருஷ்ண பக்தரான எனக்கு சாட்சாத் கிருஷ்ணர் போலவே அவர் தோன்றினார். அக்கணமே என் வாழ்வின் திசை மாற்றத்தை உணர்ந்தேன். சுவாமி என் ஒவ்வொரு அசைவையும் கணித்து என்னை வழி நடத்துவதாகத் தோன்றியது. துவாபர யுக கிருஷ்ணன் கலியுகத்தில் சாயியாக அவதரித்ததை உணர்ந்தேன். என்னுள் இழையோடிக் கொண்டிருந்த ஆன்மீக உணர்வு சுவாமியின் தரிசனத்தால் கிளர்ந்து எழுந்தது.


இதன் பின்னர் சுவாமியின் தரிசனம் அதே ஆண்டு தசராவில் கிடைத்தது. என்னுடன் ஜஸ்டிஸ் கோபாலசாமி ஐயங்கார் தம்பதிகள் வந்திருந்தனர்.   அப்போது  ஜஸ்டிஸ் கோபாலசாமி துணைவியார் ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். அவர் ஒரு சமயம் உடல் நலம் குன்றி நலிவடைந்த நிலையில் ஷிரடி சுவாமி அவரது கனவில் வந்து "பயப்படவேண்டாம். அறுவைச் சிகிச்சை செய்துகொள்" என்றார். அவ்வாறே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உடல்நிலை சீரானது.பிறகு பர்த்தி சென்ற அவரிடம் சுவாமி கூறினார்  "கனவில் வந்து உனக்கு  அறுவைச் சிகிச்சை குறித்து தைரியமளித்தது நினைவில் உள்ளதா?." சுவாமியின் இந்த கேள்வியால் அவரது சர்வ வியாபகத் தன்மையையும்.. ஷிர்டி சுவாமியும் புட்டபர்த்தி சுவாமியும் ஒருவரே என உணர்ந்தார்.


அந்த தசராவில்  ஒரு ஆன்மீக அதிசயத்தைக் கண்டேன். ஒரு காலிக் குடத்தை கஸ்தூரி அவர்கள், ஷீரடி சுவாமி சிலையின் தலைக்குமேல் கவிழ்த்துப் பிடித்திருந்தார். இறைவன் சத்ய சாயி பாபா அவர்கள் தமது திருக்கரத்தை குடத்தினுள் விட்டு துழாவ அருவி  நீர் போல விபூதி ஷீரடி சுவாமியின் சிலைமேல் பொழிந்தது.


சுவாமி தனது கையை வெளியே எடுத்ததும் விபூதி வருவது நின்றுவிட்டது.


சுவாமியின் அருட்காப்பு எங்கும் எப்போதும் என்னைக் காத்திருந்தது. ஒருமுறை ஜெனிவா நகரில் நான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் என் தலைக்கு மேலே இருந்த ஒரு விளக்கு கூண்டு திடீரென கழன்று விழுந்தது. அறை முழுவதும் கண்ணாடித் துகள்கள் சிதறின. ஆனால் ஓரு சிறு துகள் கூட என் மேல் விழவில்லை. மற்றொரு நிகழ்ச்சி.. எனது பிறந்தநாள் ஆசிபெற பர்த்தி சென்றேன். சில நாட்களுக்கு முன்பு காலில் ஒருவீக்கம் தோன்றி அது எலும்பு முறிவு என டாக்டர்கள் கூறினர். சுவாமி என்னைப் பரிவோடு பார்த்தார்.தமது அருட் கரத்தை வைத்து என் காலை மும்முறை தடவினார். மறுநாளே வீக்கம் வெகுவாகக் குறைந்து, சில நாட்களில்  பூரண குணம் பெற்றேன். என் வாழ்வில் இறைவன் சத்ய சாயியின் உள்நுழைவே அவர் தந்த மாபெரும் ஆசியாகக் கருதுகிறேன்.

நாம் அனைவரும் நீதி தேவதையின் சிலையைப் பார்த்திருப்போம். கையில் தராசுடன், கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்டிருக்கும். அது போல ஒரு நீதிபதி வழக்கின் உண்மைத் தன்மையைப் பார்க்க வேண்டுமே தவிர வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அந்தஸ்த்தைப் பார்க்கக்கூடாது. ஆனால் நமது சுவாமி என்னும் நீதிபதி தன் அருட் கண்களால் அமுத அன்பை சொரிந்து பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அருளுகிறார். அவர் தர்பாரில் ஏழை பணக்காரன் ..பாமரர் பண்டிதர்..ஆண் பெண் பேதம் என்பதே இல்லை...
சொல்லப்போனால் இயலாதவர்பால் அவர்காட்டும் பரிவு  ஈடு இணையற்றது..


ஆதாரம்: https://www.lifepositive.com/miracle-of-love/
மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

Justice P.N. பகவதி அவர்கள் பாபாவைப் பற்றிய பேசிய வீடியோ. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக