தலைப்பு

சனி, 19 டிசம்பர், 2020

விதி விளையாடிய விளையாட்டில்... ஜெயித்தது பாபாவின் கருணை!



பேராசிரியர் U.S ராவ் அவர்கள் , ஸ்ரீ சத்யசாயி மேல் நிலைக் கல்வி கழகத்தில், வணிகவியல் துறையின் தலைவராக 13  ஆண்டுகள் ( 1988-2011) பதவி வகித்தவர். பிரசாந்தி நிலைய கல்லூரி வளாகத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்... 

விதியின் வழியே மதி செல்கிறது. "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"
என்கிறது சிலப்பதிகாரம். ஆனால் நஞ்சினும் கொடிய பழவினை நஞ்சுண்ட கண்டனான பாபாவின் பார்வை தீட்சையால் பஞ்சாகப் பறந்து விடும் விநோதங்கள் பல உண்டு. அதில் ஒன்றுதான் திரு. U.S.ராவ் அவர்களுக்கு ஏற்பட்ட கார் விபத்தும் அதிலிருந்து அவர்களை மீட்டு ரட்சித்த பாபாவின் பெருங்கருணையும். 

🌹பாபாவின் தீர்க்க தரிசனம்:

திரு. U.S ராவ் கூறுகிறார்... என் வாழ்வில் நான் எடுத்த முக்கிய முடிவு, 1987 ம் ஆண்டு ஸ்ரீ சத்ய சாயி மேநிலைக் கல்வி நிலையத்தில்  பேராசிரியராக சேர்ந்தது தான். அப்போது கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை..வரும் இரண்டு ஆண்டுகளில் நானும் என் மனைவியும் கார்விபத்தில் சிக்குவோமென்று. அதில் நாங்கள் மடிந்திருந்தால், எங்கள் குழந்தைகள் அனாதைகளாகி இருப்பர். பகவானின் அளப்பறிய கருணையால் தான், நான் முன்கூட்டியே அவரது கரங்களில் அடைக்கலமாகி புட்டபர்த்தியில் வேலைக்கு சேர்ந்தது. பகவானை சரணடைந்தோர் சகலவிதமான நிதியங்களையும் அடைவர். மற்றும் மரண பயம் நீங்கி புத்துயிர் பெறுவர். அவர்களது வாழ்வு அமைதியுடனும் மற்றும் சந்தோஷத்துடனும் வளம் பெறும். 🌹பாபா.. நமது ஏழேழு ஜென்மங்களையும் அறிந்தவர்: கருணாமூர்த்தியான பாபா நமது கடந்த, நிகழ், வருங்காலம் மட்டுமல்லாது , ஏழேழ் பிறவிகளளையும் அறிந்தவர். என்மேல் அளவற்ற கருணையை மழையாகச் சொரிந்தவர் பாபா.என் இறுதி நாள் நெருங்குவதை சூசகமாக அவர் 1988ம் ஆண்டு அறிவித்தார்.

🌹"என்ன தயாரா"... பாபா வினவினார்:

அது ஒரு தரிசன நேரம். என்னை நெருங்கிய பாபா கேட்டார்..... "என்ன தயாரா" ஒன்றும் புரியாமல் ஆம் ஸ்வாமி என்றேன். புன்னகைத்த பாபா  "எதற்கு தயாராகிறாய்" என வினவ, தெரியவில்லை ஸ்வாமி என பதிலளித்தேன். பாபா கூறினார்.... "வாழ்க்கையில் அனைத்துக்கும் நீ தயாராக இருக்கவேண்டும்".ஒரு வாசகம் என்றாலும் அது புனிதத் திருவாசகமல்லவா.

🌹அன்னையினும் அன்பைச் சொரிந்து ஆதரித்து அரவணைத்த பாபா:

அது 1988 செப்டம்பர் மாதம். அப்போது பாபா பெங்களூர் த்ரயீ பிருந்தாவனத்தில் இருந்தார். நானும் சில கல்லூரி அலுவலர்களும் சேர்ந்து பாபாவைத் தரிசிக்க பெங்களூர் சென்றோம். பாபாவைச் சுற்றி அமரந்த எங்களிடம் சுமார் ஒருமணி நேரம் ஸ்வாமி உரையாடினார். சரணாகதி தத்துவத்தை எடுத்துரைத்து, த்ரௌபதி மற்றும் கஜேந்த்ர மோட்சம் பற்றி கூறினார். பிறகு ஒரு அன்னைக்குரிய பரிவோடு "கிளம்புங்கள், இருள் சூழுமுன் பர்த்த்தி செல்லுங்கள்" என்று கூறினார். 

🌹என் மனைவியின் கனவில்.. மனமோகன சாயியின் சூசகம்:

விபத்திற்கு சில மாதங்களுக்கு முன் பாபா என் மனைவியின் கனவில் தோன்றினார். தன் தலையில் இரண்டு இடங்களின் இருந்த தழும்புககளைக் காட்டினார். என் மனைவியோ அவருக்கு ஆறுதல் கூற முற்பட்டு, ஸ்வாமி உங்களுக்குதான் தலையில் மற்ற இடங்களில் அடர்ந்த முடி உள்ளதே அதை வைத்து இந்த இரு இடங்களையும் மறைத்துவிடலாம் எனக் கூறியுள்ளாள். ஆனால் பகவான் உணர்த்த வந்தது அதுவல்ல. என் மனைவியின் தலையில் விபத்தினால் அம்மாதிரி தழும்பு ஏற்படும், ஆனால் விபத்தின் முழு தாக்கத்தை தான் ஏற்றுக்கொள்ளப் போவதைத்தான் அவ்வாறு தெரிவித்தார் என பிறகு தெரிந்தது. 1989 பிப்ரவரி 9ம் தேதி  எங்களது 20வது திருமண நாளாகும். என் மனைவிக்கு மங்கலகரமான மஞ்சள் பட்டு புடவையை கொடுத்து, பூவோடும் பொட்டோடும் நிறைவாழ்வு வாழ்வாய்(தீர்க்க சுமங்கலி பவ) என ஆசீர்வதித்தார். 🌹ஊழ்வினை தந்த விபத்தும்.. உயிர் காத்த பாபாவின் கருணையும்: 1989 மார்ச் 26 விதி தன் சதியை அரங்கேற்ற தேர்தெடுத்த நாள். அன்று தான் அந்த கோர விபத்து நடந்தது. நம் முன்னோர்கள் சகுனங்கள் மற்றும் தமது  உள்உணர்வுகளின் மூலம் சில துர் நிகழ்ச்சிகளை எவ்வாறு முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்பதை இந்த விபத்து குறித்து என் சக நண்பர்களின் அனுபவத்தை கூற விழைகிறேன். பகவானிடம் கொடுக்க ஒரு கடிதத்தை என்னிடம் தந்த ஒரு நண்பர், தமது தியானத்தின்போது , இதுவே எங்கள் கடைசி சந்திப்பு என்ற உள்ளுணர்வை பெற்றார்( இதை பிறகுதான் என்னிடம் கூறினார்). மற்றொரு நண்பர், தான் இரத்தம் வழிந்தோடும் மண்டை ஓடுகளின் மத்தியில் நின்று கொண்டு இறந்த உடல்களை சுமந்து செல்வதாக கனவு கண்டதாக, ( பிறகு) கூறினார். எங்களுடன் வருவதாக இருந்த அந்த நண்பர் , வேனில் இடம் இல்லாததால் மற்றொரு வேனில் வந்தார். விபத்து நடந்த சில நிமிடங்களில் அவர் அங்கு வந்து, பகவானின் தூதராய், விபத்தில் அகப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார். நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி நம்மை வழிநடத்தி, நம் இடர்பாடுகளை சூசகமாக அறிவித்து நம்மை ரட்சிக்கிறது என்பதை மேற்கூறிய விளக்கங்களால் அறியலாம். 🌹26-03-1989 விதியின் விளையாட்டு: பகவான் பாபா பெங்களூரில் இருந்தார். எங்கள் துறை சார்ந்த சில விஷயங்களில் பகவானின் வழிகாட்டுதலும், அனுமதியும் தேவைப்படவே, நாங்கள் அவரைக் காண ஒரு வேனில் பெங்களூர் புறப்பட்டோம். உடன் என் மனைவியும், வேறு சிலரும் பயணப் பட்டனர். இளந்தென்றல் வீச, சாலையில் வேன் வேகமெடுத்து பறக்கத் தொடங்கியது. வேகத்தின் தாக்கம் எங்களை கண் அசர வைத்தது. என் மனைவி தமது கண்ணை மூடியதும், பாபாவின் தெளிவான தோற்றம் மூன்று முறை அவருக்கு தென்பட்டதாம்.. அதை அவர்கள் எங்களிடம் பகிர நினைத்த அக் கணத்தில் அந்த விபரீதம் நடந்தது மிகுந்த  வேகத்தால் தறிகெட்டு  ஓடிய வேன் நிலை தடுமாறி  மூன்றுமுறை குட்டிக் கரணம் போட்டு, தலைகீழாக பெருத்த சப்தத்துடன் கவிழ்ந்தது.



கவிழ்ந்த வேகத்தில் வேன் பின்புறக் கதவு திறந்து,  உள்ளே இருந்தவர்களில் சிலர் சாலையில் தூக்கி வீசி எறியப்பட்டனர். எனக்கு தலையிலும் , தாடையிலும் பலத்த அடி. கண்களில் கரு ரத்தம் பாய்ந்து ரத்தக்கட்டு ஏற்பட்டது. சில எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டது. அதிர்ச்சியில் நான் ஏறுமாறாக உளரத்தொடங்கினேன். என் மனைவிக்கு தலையில் தோல் கிழிந்து, பலத்த அடி பட்டிருந்தது. நாக்கு கடிபட்டு இரத்தம் கொட்டத் தொடங்கியது. இது சாதாரண விபத்து அல்ல. உயிர் தப்ப இயலாத மரண அடி. ஆனால் பகவானின் பகவானின் அருட்காப்பு 
என் மனைவிக்கு தரிசன ரூபத்தில் முன்னரே கிடைத்துவிட்டால், அவர் தெளிவுடன் இருந்தார். தனது முடிவு நெருங்கிவிட்டதாக நினைத்து , குழந்தைகளையும் என்னையும் காப்பாற்றுமாறு பகவானிடம் பிரார்த்திக்கத் தொடங்கினார்.ஆனால் பகவானின் சித்தம் வேறுவிதமாக இருந்தால் அவர் உயிர் பிழைத்தார். தலையில் 120 தையல்களுடன், ஒன்றரை மாதம் ஒயிட்பீல்ட் மருத்துவ மனையில் இருந்தார். ஆனாலும் வலியும் வேதனையும் அனுபவிக்கவில்லை.
பகவானின் அனுக்கிரஹம். எங்களைப் பின் தொடர்ந்து மற்றொரு வேனில் வந்த நண்பர்கள் உடனடியாக எங்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவ மனையில் முதல் உதவி பெற்று, பெங்களூர் ஒயிட்பீல்ட் மருத்துவ மனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த(பகவான் முன்பே அறிந்த தகவல்தானே இது) பாபா சிறப்பான மருத்துவ சிகிச்சையை தன் மேற்பார்வையில் ஏற்பாடு செய்தார்.  ஒயிட்பீல்ட்  மருத்துவ மனைக்கு விரைந்து நேரில் வந்து, ஆறுதல் கூறி விபூதி சிருஷ்டித்து வழங்கினார். என் மனைவியின் வாயில், குழந்தைக்கு தாய் கொடுப்பது போல, காபியை டம்ளரில் கொடுத்தார். மனம் நெகிழ்த என் மனைவி, பாபாவின் இத்தகைய அன்பைப் பெற, எத்தனைமுறை வேண்டுமாலும் விபத்தில் சிக்கலாம் என உருகி கண்ணீர் வடித்தார்.

🌹நம்பியவரைக் கைவிடாத நாயகன் பாபா:

ஒயிட்பீல்ட் மருத்துவ மனையில் ஸ்ரீசத்யசாயி உயர்கல்விக் கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தருடன் பாபா என் படுக்கை அருகே வந்து என்னைத் தடவிக் கொடுத்து, விபூதி ஸ்ரிஷ்டித்து என் உடலில் தடவி வாயிலும் இட்டது, கண்ணைத் திறந்து பார் ராவ் என்று கூறியது அனைத்தும் கனவுபோல தோன்றியது.


விபத்தின் காரணமாக எனக்கு ஞாபக மறதி ஏற்பட்டது. பல பழைய சம்பங்கள், நிகழ்வுகள் நினைவில் நிற்கவில்லை. பாபா என்னைப் பார்க்க பெங்களூர் மருத்தவ மனைக்கு வந்திருந்தார். சுமார் 20 நிமிட நேரம் எங்களுடன் இருந்த அவர், விபத்தைப் பற்றிய விவரங்களை விளக்கமாக கூறினார். ஆனால் எனக்கு ஏற்பட்ட மறதித் தன்மையால் , அவை யாவும் தெளிவின்றி புகைப் படலங்களாகவே புலப்பட்டன.எனது இந்த நிலையைக் கண்டு பாபாா எனக்கு மேலும் சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய அறிவுறுத்தினார். 

🌹பரிபூரண சரணாகதி.. பரந்தாமனே நீயே கதி:

இதற்கு உடன்படாத என் மனைவி பாபாவை கரம் குவித்து வேண்டினார்
"ஸ்வாமி மேற்கொண்டு எந்த மருத்துவ பரிசோதனையும் வேண்டாம். நீங்கள் இந்நிலை மாறிவிடும். பூரண குணம் ஏற்படும் என்று கூறினாலே போதும்."
இந்த விடாப்பிடியான பக்தியின் காரணமாக பகவான் மனம் இரங்கி
"சரி பங்காரு. அவர் எந்தவித இடர்பாடும் இன்றி, பூரண நலம் பெறுவார்" என வாழ்த்தினார்.எங்கள் பெங்களூர் மருத்துவமனை புறப்பாடும் ரத்து செய்யப்பட்டது.

🌹ஆயிரம் அன்னையின் அன்பு:

அதன்பின் பாபா காட்டிய பரிவு ஈடும் இணையுமற்றது.பழங்கள், பிஸ்கட்டுகள், எலக்ட்ரால் பவுடர், உடைகள் இவற்றை எனக்கு அனுப்பி வைத்தார். மனம் நெகிழ்வான ஒரு செய்தி. பற்பசை, பிரஷ், ஒரு பெரிய டவல் ஆகியவை அடங்கிய பையை அவரே நேரில் எடுத்து வந்து தந்தார். பிறகு குதூகலத்துடன் "ராவ் உனக்கு என்ன கொண்டு வந்துள்ளேன் என்று சொல்" என் ஸ்ரீ கூறி ஒரு கருப்புக் கண்ணாடியை பரிசாக அளித்தார். என் வீங்கிய கண்களை அவை மறைத்து பிறர் பார்வையிலிருந்து பாதுகாக்க அவரது கரிசனமான பாசம். அனந்தபூர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் பெரிய பெண்ணுக்கு தகவல் தந்து, அவள் கவலைப் படாமல் தேர்வு எழுதுமறும் நாங்கள் பாபாவின் மேற்பார்வையில் சுகமாக இருப்பதாகவும் கூறினார்.தேர்வு முடிந்தவுடன், மிக அக்கறையுடன் அவளை காரில் த்ரயீ ப்ருந்தாவனம் அழைத்த வந்து, பத்திரமாக அவளது தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்தார். எங்களது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஸ்வாமியே ஏற்றார். நாங்கள் அவரின் அன்புக் கடலிலின் அலைகளில் மிதந்து இன்பமும் ஏற்றமும் பெற்றோர்..

Source: Sai Vandana 1990 (65th Birthday Offering) 
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

🌻 சாய்ராம்... விதியை முறியடிக்கும் மாபெரும் சக்தி, நமது பதியான சாயிநாதருக்கே உண்டு. அவரிடம் பரிபூரண சரணாகதி அடைந்தால்  நமக்கு ஏற்படும் எல்லா இடர்களையும் களைந்து நம்மை ரட்சிப்பார் என்பது திண்ணம். 🌻 


 

1 கருத்து: