தலைப்பு

புதன், 15 ஏப்ரல், 2020

தரத்தை பார்த்தே வரத்தை அருளும் தெய்வம்!


நேர்காணல்  ஒன்றின்போது ஒரு சகோதரர் "சுவாமி மாநில அளவில் இளைஞர் மாநாடு  ஒன்றைப் பர்த்தியில் ஏற்பாடு  செய்ய அனுமதியுங்கள். அங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பர்த்திக்கு வரவும் சேவை செய்யவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். சுவாமி "என் மனதில் இருப்பதைச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்.

சுவாமிக்கு பிரியமானது என்பதை அறிந்து கொள்ளும் விருப்பத்தில் நாங்கள் பேசாமல் இருந்தோம். "எனக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, தரம்தான் மிகவும் முக்கியம். நீங்கள் கூறுகிற ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பதிலாக, தியாக எண்ணமும் சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள்தான் எனக்கு  முக்கியம். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தியாக எண்ணமும் சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் ஐந்து பேர் வந்தால் போதும்.அப்படிப்பட்ட இளைஞர்களை இங்கே அழைத்து வாருங்கள். அப்போது  உங்களுக்கு நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒதுக்குகிறேன்" என்றார்.


எண்ணிக்கையைப் பார்த்து சுவாமி மகிழ்வதில்லை என்பதை இது காட்டுகிறது. அவர் நம்மிடம் இருக்கும் சேவை மற்றும் தியாக எண்ணங்களையே கவனிக்கிறார். சற்றே நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த குணங்கள் நம்மிடம் இருக்கின்றனவா? அவற்றை எப்படி வளர்த்துக்கொள்ளப் போகிறோம்? சுவாமியால் தேர்ந்தெடுக்கப்பட நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம்? இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth

🌻தரமே உயரிய வரம்.. உள்ளத் தூய்மையே உன்னத இலக்கு.. இறைவன் சத்ய சாயி வெளியே பார்க்காமல் மனிதர்களின் உள்ளேயே பார்க்கிறார். 
வெளி வண்ணங்களை விடவும் உள் எண்ணங்களே அவருக்கான நெய்வேத்யங்கள்.🌻



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக