தலைப்பு

வெள்ளி, 3 மே, 2019

💣 லண்டனில் ஹிட்லரின் குண்டு மழையிலிருந்து அன்பரைக் காப்பாற்றிய சாயிநாதன்


ஹிட்லர் போட்ட குண்டு மழையால் நடுங்கிப் போய் இருந்த லண்டன் மாநகரில்,  ஓர் அன்பரை சுவாமி எவ்வாறு காப்பாற்றினார் என்பதைப் பார்ப்போம்.

"ஏர் ரெய்டு வார்டன் (Air Raid Warden)  ஞாபகம் இருக்கா?"  - இப்படி சுவாமி கேட்டார், மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் முன் வரிசையில் இடம் பெற்றிருந்த ஒரு பிரமுகரை முதன்முறை கண்டபோது...

தப்பு, தப்பு ! பிரமுகர்தான் சுவாமியை இப்போது முதன்முறையாகக் காண்கிறார். அகிலத்தையும் அனவரதமும்   கண்காணிக்கும் சுவாமி இப்போதுதானா அவரை முதன்முறை பார்த்தார்?  சுவாமி முன்னரே பன்முறை - குறிப்பாக இரண்டு முறை -  அவருக்குக் கடாட்சித்த விசேஷம்தான் இன்று அம்மனிதர் உயிரோடு இத்தரிசனம் பெற வந்திருப்பதே! கூட்டத்தில் சுவாமி அவரைக் கண்டதும் இவ்விரண்டு பாதிப்புகளில் பிற்பாடு நடந்த ஒன்றை முதலில் குறிப்பிட்டார். (நாமும் இதை பிற்பாடு பார்ப்போம்).  அப்புறம்தான் அதற்கு பல்லாண்டுகளுக்கு முன் நடந்த இன்னொரு  பாலிப்பைப்  பற்றிச் சூசகமாக , “ஏர் ரெய்டு வார்டன் ஞாபகம் இருக்கா ?” என்றது.

(போர்க்காலத்தில் விமான குண்டு வீச்சின்போது எச்சரித்துக் கண்காணிக்கும் காவலரே ஏர் ரெய்டு வார்டன்.)

சுவாமி கேட்டதும் பிரமுகர் ஆச்சரிய - ஆனந்த - ஆழ் நன்றி உணர்வில் அகம் துள்ளினார் 'ஆஹா,  அதுவும் அப்படியா?'

சுவாமியின் முதல் தரிசனம் பெற்றபோது அம்மனிதர் அரசியல் - பொதுவியல் பிரமுகராகவே இருந்தார் . காந்தி மகாத்மாவின்   கீழ்   பயிராகி,  தியாகம் பல புரிந்து,  சுதந்திர பாரதத்தில்  மந்திரியாக இருந்தவர் அவர். சுவாமி தரிசனம் பெற்றபின் ஆன்மவியலில்,  அதாவது அன்பியல் ஆன பாபா வயலில் ஒரு பயிராகி சாயி சமிதியின் மாநிலத் தலைவர்,  சாயி ஸ்தாபனப் பிரமுகர் என்றெல்லாம் வளர்ச்சி கண்டார்.  அதன் ஒரு லட்சணமாகதான்  தமது அடையாளத்தைத் தெரிவிக்காமலே தம் விஷயமாக சுவாமி செய்த லீலைகளை தெரிவிக்கிறார்.

அந்த மகாலீலை நடந்தபோது  அவர் இளவயதினர். அது 1940-ன்  பிற்பகுதியில் ஜெர்மானியர் ப்ளிட்ஸ் ( Blitz) என்பதாக லண்டன் படுபயங்கரமாக முற்றுகையிட்டு வந்த காலம். அப்போது அதே லண்டனில் இவர் கல்லூரி மாணவராக இருந்தார்.  அறை அறையாக ஒவ்வொருவருக்கு வாடகைக்கு விடும் பழைய, 'அப்பார்ட்மென்ட் ஹவுஸ்'  ஒன்றில் 'ஆட்டிக்' எனப்படும் உச்சிக்கூரை அறையில்  வசித்து வந்தார்.

ஹிட்லரின் பேய்த்தனமான விமான குண்டு மாரிக்கு லண்டன் இலக்காயிற்று.  சர்ச்சிலின் வீர  முழக்கத்தில் அதிசிய நெஞ்சுரம் பெற்ற ஆங்கிலேயர், நாள் நாளாக , வாரம் வாரமாக எதிரியின் தாக்குதல் ஓங்கியும் அடிபணியாமல் அஞ்சாநெஞ்சம் காட்டி உலக சரித்திரத்தில் இடம் தேடிக் கொண்டனர்.

கல்லூரி வகுப்புகள் முடிந்து வந்து, ஹோம் ஒர்க் முடித்து நம் இளைஞர் அலுப்பும் ஆயாசமுமாகப் படுக்கையில் விழும் சமயம் பார்த்து அபாயச்சங்கு அலறத் தொடங்கும். ஜெர்மானியரின்  குண்டுதாங்கி விமானங்களின் வருகைக்கான எச்சரிக்கைதான்! சுருண்டு விழுந்த இளைஞர் உடனே வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து  ஆட் டிக்கில் இருந்து  அத்தனை படிகளிலும் விழாத குறையாக விறுவிறுவென இறங்கி வந்து நிலவறைக்  காப்பகத்தில் புகுந்து கொள்வார்.  அங்கே கூட்டம் நெரியும். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் போகும்.  மறுதினம் வாடிவதங்கி கல்லூரிக்குப் புறப்படுவார். மேலும் வாடிவதங்கி கிழவர்போல வீடு திரும்பி வேலையை முடித்து, படுக்கையில் விழப் போனால் அன்றும் பழிவாங்கும் அபாயச்சங்கு! நாளாக ஆக, அந்தச் அங்கே அவருக்கு அபாய அறிவிப்பாக இன்றி  அபாயமாக ஆகிவிட்டது!

அப்புறம் ஒருநாள் அவரால் தாங்க முடியவில்லை. தினமும் தான் சங்கு முழங்குகிறது.  ஆயினும் லண்டனின் மற்ற பல பகுதிகள் குண்டுவீச்சில் தூள் பட்டாலும் தம் பகுதியில்  என்னவோ இதுவரை ஒரு குண்டுகூட விழவில்லை. விழாத குண்டுக்காக பயந்து தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு உடல்நலனை வீணாக்கி கொள்வதுதான் மிச்சம்.  இன்று சங்கு ஒலித்தாலும் ஷெல்ட்டருக்கு ஓடவேண்டாம்.   சட்டப்படி அது குற்றம்தான்.  ஆனால் இப்படி இந்த உச்சி 'ஆட்டிக்'கில்  நான் ஒருவன் இருப்பதோ போவதோதான் இங்கே எவருக்கும் தெரியாதே!  யார் புகார் கொடுக்கப் போகிறார்கள்?  என்று தீர்மானித்து வீடு திரும்பினார். அன்றும் அவர் சலித்துச் சாய்ந்ததும் சங்கு ஊளையிடத் தொடங்கியது.

எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் தலையோடு கால் போர்த்திக் கொண்டு அப்படியே அரைத் தூக்கத்தில்  நழுவினார்.

 சில நிமிஷங்கள் சென்றிருக்குமோ என்னவோ!
டப்-டப்-டப்-டப் என அறைக்கதவை தட்டும் ஒலி வந்தது.

குரல் கொடுக்காமலே கிடந்தார் நம் இளைஞர்.

' டப்டப்' தட்டல் 'தபதப ' என்று கதவைப் பிளப்பதாக வலுத்தது. கடுமையான குரலும் கேட்டது. "திற! திற கதவை! ஆசாமி உள்ளே இருப்பது எனக்கு தெரியும் திற! இது சட்டம்!"

வேறுவழியின்றி , பயந்து நடுங்கியபடி இளைஞர் கதவைத் திறந்தார். ஆஜானுபாகுவாய், தக்காளியாகச் சிவந்த முகத்தோடு, ஹெல்மெட் போட்ட ஓர் ஏர் ரெய்டு வார்டன் வெளியே நின்றிருந்தார். அவரின் கையில் இருந்த டார்ச் இளைஞரின் முகத்தில் ஒளியை வாரி அடித்தது.

கண்டிப்பாக உத்தரவிட்டார் வார்டன். "சங்கு கேட்கவில்லை? க்விக்! வா என் பின்னே ஷெல்டருக்கு! சூட் போட்டுக்கொள்ள டயம் இல்லை, பைஜாமாவோடு வா.  பரவாயில்லை  க்விக்!"

பூட்ஸ்  அணிந்த  தூண் கால்கள் படி அதிர  வேகமாய் இறங்க,  அதைப் பின்பற்றின பைஜாமாவில்  ஒளிந்த  இரு சோனிக்  கால்கள்!

காப்பகத்தில இளைஞரை கொண்டு சேர்த்தவுடன், வார்டன் வெளியேயிருந்து அதன் கதவை இழுத்துப் பூட்டினார்.  அங்கே கூடியிருந்த கூட்டத்திடை இளைஞர் தமக்கு இடம் பண்ணிக் கொள்வதற்குள்ளேயே...

பூகம்பம்போலக் காப்பகம் ஒரு ஆட்டம் ஆடிற்று!

பூட்டிய கதவு பிளந்து, வெளியே இருந்து இடிபாட்டு துளும் புழுதியும் உள்ளே வாரி அடித்தன!

சிறிது போதுக்குப் பின் வெளியே வந்து பார்த்தபோது...

அன்று அந்தப் பகுதியிலேயே குண்டுமாரி பொழிந்திருப்பது தெரிந்தது. குறிப்பாக, நம் இளைஞர் குடியிருந்த அபார்ட்மெண்ட்டின் மாடிகள் அப்படியே தகர்ந்து போயிருந்தன!

"ஆஹா! ஆண்டவா! அந்த வார்டன்மூலம் எப்படித் தருணத்தில் காத்தாய்!" என்று ஓங்கிய இளைஞரின் உள்ளம் மறுகணமே தொய்ந்து சாய்ந்தது.

'அந்த வார்டன்?  ஷெல்டருக்கு வெளியே இருந்த அவர் - நமக்கு உயிர் அளித்த உபகாரி குண்டுக்குப் பலியாகி இருப்பாரே!'

அவர் பலியாகவில்லை என்று ஆண்டாண்டுகளுக்குப் பின் இளைஞரைப் பிரமுகராகக் கொண்ட குழுவில் நமது ஆண்டவனே ஐயம்திரிபறத் தெளிவு படுத்தினான்!

“ஏர் ரெய்டு வார்டன் ஞாபகம் இருக்கா?” என்று கேட்ட உடனேயே தொடர்ந்து “அந்த இடத்தில் உன்னை அந்தக் குண்டில் இருந்து காப்பாற்ற நானே வந்தேன்” என்றார் சுவாமி!

அடியாரைக் காக்க அத்தனை விரைவாய் ஓடி வந்தவர், காத்தது  தாமே எனத் தெரிவிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறார்? இதுவும் அவர் ஒருவராலேயே முடியும் என்பதான அற்புதம்தான்!

இந்தச் சம்பவம் நடந்த போது சுவாமியின் வயது பதினான்குதான் ஏறக்குறைய! தம்மை சாயிபாபாவாகப் பிரகடனம் செய்துகொண்டு உரவகொண்டா  வீட்டைவிட்டு வெளிக்கிளம்பி  உலகம் முழுதுடனும் அவர் உறவு கொண்டாடப் புறப்பட்ட சமயமாகவே இருக்கலாம் !

என்றுமே பூரண வளர்ச்சி கண்ட திவ்வியத் திறம் அவருடையது என்பதற்கு இதுவும்  சான்றுதான்.

ஆதாரம்:  அற்புதம் அறுபது, ரா. கணபதி

எழுத்தாக்கம்: N. ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம்-திருச்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக