தலைப்பு

சனி, 2 ஏப்ரல், 2022

ஷிர்டி சாயிபாபா இறைவனா? பிறகு ஏன் அவர் "அல்லா மாலிக்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்?


ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா மகான் அல்ல.. இறைவனே! மகான்கள் இறை நிலை அடைந்தவர்கள்... ஆனால் இறைவன் அல்லர்..‌ அப்படிப் பார்த்தால் அத்வைத நிலைப்படி அனைத்தும் பரப்பிரம்மமே.. அந்த உயர்நிலையை அடையாமல் ஒருவர் நானும் இறைவன் எனச் சொல்வது நேர்மையற்ற செயல்! ஆகவே தான் மகாபெரியவர், ஸ்ரீ ரமண பகவான் என ஒரு மகான்கள் கூட அந்த உயர் அனுபூதி நிலையை அடைந்த போதும் தங்களை இறைவன் எனச் சொல்லிக் கொண்டதே இல்லை! காரணம் அது அடையப்படுவதே..! அப்படி "அடையப்படுவதே" மண்ணில் அவதரித்தால் அதுவே ஸ்ரீ ஷிர்டி சாயி- ஸ்ரீ சத்ய சாயி - ஸ்ரீ பிரேம சாயி! காரணம் மகான்களும் முற்பிறவி கர்மாவின் பாதிப்புகளை அடைந்திருக்கின்றனர்... 

இதில் ஒருவர் கூட விதிவிலக்கில்லை!


இருவர் மட்டுமே "தான் இறைவன்!" என சொல்லிக் கொண்டது.. ஒருவர் ஸ்ரீ ஷிர்டி சாயி.. இன்னொருவர் ஸ்ரீ சத்யசாயி... துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர்.. காரணம் அந்த பரப்பிரம்மமே ரூபம் எடுத்து வந்ததால் அப்படிச் சொன்னது! அது மிகையும் இல்லை கற்பனையும் இல்லை... இறைவன் மிகவும் எதார்த்தமானவர்! அந்த எளிய எதார்த்தத்தில் இருந்தே ஞானம் உதிக்கிறதே தவிர மனித சுய கற்பனையில் இருந்து அல்ல! ஸ்ரீ கிருஷ்ணர் தான் பரப்பிரம்மம் எனச் சொன்னது அர்ஜுனனிடம்.. அதற்கு சாட்சி கீதை.. ஸ்ரீ ஷிர்டி சாயி தான் பரப்பிரம்மம் எனச் சொன்னது சுத்தானந்த பாரதி போல் வெகு சிலரிடம்... அதற்கு சாட்சி அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவம்! ஸ்ரீ சத்ய சாயி தான் பரப்பிரம்மம் எனச் சொன்னது பலரிடம்.. அதற்கு நித்திய சாட்சி நாம் அனைவரும்.. இன்னும் ஸ்ரீ பிரேம சாயி தான் பரப்பிரம்மமே என்பதை தனது அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகு இந்த உலகத்தையே உணரச் செய்வார்!

இப்போது ஒரு குழப்பம் ஏற்படுகிறது! ஷிர்டி சாயிசத்சரிதத்தில் பாபாவை மகான் என சில இடங்களில் துறவி என பல இடங்களில் அந்த நூலாசிரியர் எழுதியிருக்கிறார்... அவர் தத்தரே என்கிறார்கள்.. அனுமனே என சிலர் சொல்கிறார்கள்...ஆக ஒரே குழப்பம்.. ஸ்ரீ ஷிர்டி சுவாமி இறைவனா? மகானா? 


 ஷிர்டி சுவாமியின் சத்சரித நூல் பாபாவால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பது சத்தியமே! ஆனால் அதை எழுதிய நூலாசிரியர் ஒரு மகான் அல்ல... ஒரு பக்தரே! மகான்களால் மட்டுமே இறைவனை ஓரளவுக்காவது உணர முடிகிறது.. காரணம் அவர்களின் ஆன்ம சாதனை! ஒரு பக்தர் பாபாவை பற்றி எழுதுவதற்கும்... ஒரு மகான் பாபாவை பற்றி எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் தூக்கத்திற்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசமே! இரண்டிலும் நாம் கண்களைத் தான் மூடுகிறோம் என்றாலும் இருநிலையில் ஆன்ம சாதனையை உச்சம் பெறுவது தியானம் மட்டுமே! தியானமே ஞானம் தரும் தூக்கம் அல்ல என்பது போல்... அந்த பக்தர் தான் எப்படி பாபாவை பார்த்தாரோ அதை அப்படியே பதிவு செய்கிறார்.. ஆகையால் தான் சில இடங்களில் தெய்வம் என்கிறார்.. மகான் என்கிறார்... யோகி என்கிறார்.. பாபா அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்! ஒரு கடலை பார்த்து இதில் இன்ன இன்ன நதிகள் கலந்திருக்கின்றன எனச் சொன்னால் தவறு இல்லை.. ஆனால் கடலை மனிதன் நதி என அழைப்பது போல் தான் பாபாவை மனிதன் மகான் என கற்பனை செய்வது! பாபாவிடம் அனைத்து தெய்வ ரூபங்களும் சங்கமம்.. அப்படி ஒரு அம்ச சங்கமமே ஸ்ரீ தத்த அம்சம்! அனுமன் ருத்ர அம்சம்... ஆக ருத்ரனும் பாபாவிடம் சங்கமமே.. விஷ்ணுவும் அவருள் சங்கமமே! 


சிலர் பாபாவை ஆஞ்சநேயர் அவதாரம் என்கிறார்கள்... ஆஞ்சநேயர் ராம நாமத்தை தவிர எதையும் உச்சரிக்காதவர்... சுவாமியே அழைத்த போதும் வைகுண்டத்திற்கு செல்லாமல்.. ராமநாமமே போதும் என சதா ராம நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிற பூலோக சிரஞ்சீவி! சிரஞ்சீவிகள் நித்தியமாய் வாழ்பவர்கள்... அவர்கள் பிறப்பதோ / அவதரிப்பதோ இல்லை... ஸ்ரீ கிருஷ்ணரை அனுமன் தரிசித்த போதும் ராமநாமமே தனக்கு போதும் என்றவர்... பாபா அனுமன் என்றால் "ராம ராம" என்றே உச்சரித்திருப்பாரே அன்றி "அல்லா மாலிக்!" என்பதாக அல்ல... காரணம் அவரது ஆன்ம சுபாவம் அது! அவர் வாயில் கிருஷ்ண நாமம் கூட வந்ததில்லை... அதுபோல் பாபா கிருஷ்ணனுக்கு தான் ஷிர்டியில் கோவில் கட்ட சொன்னாரே அன்றி ராமனுக்கு அல்ல... காரணம் ஒரு அவதாரம் கலியுகத்தில் தனது முந்தைய அவதாரத்தை உச்சியில் வைக்கிறது.. இதுவே தொடர்கிறது! தொடரும்..! ஆக அனுமன் வணங்கிய ராமரே ஸ்ரீசாயிராமனே தவிர பாபா அனுமன் அல்ல.. இல்லை எனில் புட்டபர்த்தியில் பாபா அனுமன் கோவிலை நண்பர்களின் பிடிவாதத்தால் சுற்றி வருகிற போது அனுமன் வந்து தடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! 


பாபாவை மகான் என கற்பனை செய்வது அவரை குறைவாக மதிப்பிடுவதே அன்றி வேறொன்றுமில்லை! சாம்பாரும் சுடுகிறது சூரியனும் சுடுகிறது என்பதால் இரண்டும் ஒன்றாகி விடுமா? பிறர் பாபாவை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமே இல்லை.. பாபா தன்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதே பாபா பக்தர்களுக்கு முக்கியம்! இரு பாபாவும் தன்னை பரப்பிரம்மமே என்கிறார்கள்! ஆக பாபா மகான் அல்ல.. மகான்களே உணர்கிற பரப்பிரம்மம்! ஆனால் இந்த காலத்தில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மனிதர்கள் மகான்களாக்கிவிடுகிறார்கள்! காரணம் சுயநலம்! ஆகவே தான் "ஆசையே அழிவிற்கு காரணம்" என்று சொன்ன அவதார புத்தர் ஒதுக்கப்பட்டார்.. "அனைத்திற்கும் ஆசைப்படு!" எனச் சொல்கிறவர் மகானாக்கப்பட்டார்! உச்ச கலியின் மிச்ச கூத்து இது!


பிறகு ஏன் பாபா "அல்லா மாலிக்" என சொல்ல வேண்டும்? "பாபா மாலிக்" எனச் சொல்லி இருக்கலாமே? என்பது உங்கள் கேள்வி! பாபா ஏன் இஸ்லாமிய சூஃபி தோற்றத்தோடு வலம் வர வேண்டும்? பரப்பிரம்மம் ஷிர்டி பாபாவாக அவதரித்ததே இந்து- இஸ்லாமிய ஒற்றுமையை உணர்த்தவே! அது சுதந்திரம் அடையாத காலம்! இஸ்லாமியர்கள் ஓரிறை கொள்கை உடையவர்கள்.. அல் என்றால் இல்லை என்று பொருள்.. அல்லா என்றால் இல்லாதவன் அதாவது அரூப இறைவனை வழிபடுகிறவர்கள்... உண்மையில் அது ஒரு கோணம் மட்டுமே! Single dimension ... மகாவல்லவன் மனிதனுக்கு வழிகாட்ட உருவமும் எடுத்து வரலாம் என்பது பன்முகத்தன்மை... அரூப / ரூப ஆகிய இரு வழியிலும் இறைவனை வழிபடுவது சனாதன தர்மம்.. இது Multi Dimensional... 

ஆனால் ஷிர்டி காலத்தில் இஸ்லாமியர்களே அங்கு அதிகமாக இருந்தனர்... அவர்களுக்கும் பாபா பெரிதாக வழிகாட்ட வேண்டும்.. காரணம் பரப்பிரம்மமான பாபா சமய சார்பற்றவர் என்பதால் "அல்லா மாலிக்" என்றார்... முதலில் இறைமை மீது நம்பிக்கை வரவேண்டும்.. பக்தி வேண்டும்.. பிறகே தான் இறைவன் என்பதை உணர்த்த முடியும்... முதலில் மண் வேண்டும்.. அதற்குப் பிறகே மண்பாண்டம் தயாரிக்க முடியும்!


 மசூதியில் தங்கியபடி தனக்கு ஆரத்தி காட்ட வைத்தார்.. ஊர்வலம் வந்தார்... ராமநவமியையும் இஸ்லாமிய பண்டிகையையும் சேர்ந்தே நடத்தச் சொன்னார்... இரு மதத்தினருக்கும் ஒற்றுமையை வலியுறுத்தினார்... இரு மதங்களின் மேன்மையை பரஸ்பரம் அந்த அந்த மதத்தினருக்கு எடுத்துரைத்தார்..

இதுவே ஷிர்டியில் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழ்ந்திருந்தால் "ஆமென்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக" எனச் சொல்லி.. மெது மெதுவாக ஏசுவின் பரமபிதா நானே என உணர்த்தி இருப்பார் பாபா! இதே இறை சுபாவம் தான் ஸ்ரீ கிருஷ்ணரும்.. போர்க்களம் என்பதால் போர் புரி என்றார்.. பூந்தோட்டமாக இருந்தால் பூக்கள் பறி ஏற்றிருப்பார் அர்ஜுனனை... மத ஒற்றுமையை பற்றி கீதையில் இல்லை.. காரணம் அப்போது சனாதன தர்மம் மட்டுமே இருந்தது.. ஆகவே சுவாமி மத ஒற்றுமையை கீதையில் குறிப்பிடாமல் பேதமற்ற நான்கு வர்ண ஒற்றுமையை குறிப்பிடுகிறார்! சத்தியம் ஒன்றாயினும் கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல் இறைவனின் வார்த்தைப் பிரயோகங்களும் மாறுகின்றன... ஸ்ரீ சத்ய சாயியும் இப்படியே.. பேசுகையில் பலமுறை இறைவன் என்பார்.. "சுவாமிக்கு சால சந்தோஷம்" என்பார்.. "எனக்கு/ நான்" என்பதை அதிகமாக பாபா பயன்படுத்த மாட்டார்... மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவன் அவதாரமாக மண்ணில் இறங்கி வருகிறான் என்பதை உணர்ந்து விட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்! "ஏன் பாபா அப்படி சொன்னார்? ஏன் பாபா அப்படி செய்தார்!" எனும் சந்தேகக் கேள்விகள்.. நமக்காகவே அப்படி சொன்னார்! அப்படி செய்தார்! என்பதாக மிக தீர்க்கமாய் தெளிவாகிவிடும்!* எடுத்த எடுப்பில் "நானே அல்லா" என்று பாபா ஒருவேளை சொல்லி இருந்தால் கலவரம் தான் நிகழ்ந்திருக்கும்! சமத்துவம் நிகழ்ந்திருக்காது! ஒவ்வொரு மனிதனும் தனது கர்ம கணக்குப்படி ஒவ்வொரு காலகட்ட சூழ்நிலையில் தான் ஞானம் அடைகிறான்! அதற்கு தகுந்தவாறே பாபாவும் செயல்படுகிறார்!


 "இடம் - பொருள் - ஏவல்" என்பதை மனிதன் பயன்படுத்துவதற்காக இறைவன் அதை வாழ்ந்து போதிக்கிறார்! அனைவரிடமும் பேரன்போடு பாபா திகழ்ந்த போதும் ஒவ்வொருவரையும் பாபா ஒவ்வொரு விதத்திலேயே அணுகுகிறார்... அது தான் சரியும் கூட.. கர்மாவையும் மறுபிறப்பையும் சில மதங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகவே அவ்விரண்டும் இல்லை என்பது பொருளில்லை..மண்ணைத் தோண்டினேன் தண்ணீர் ஊற்றெடுத்தது.. ஆக மண்ணுக்குள் தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது...தங்கம் இல்லை எனச் சொல்வது போல் தான் கர்மாவும் முன்/பின் ஜென்மமும் இல்லை என்பதும்..!


தங்கம் எடுக்க இன்னும் ஆழம் போக வேண்டும்! பாபா இறைவனே என்பதை அணுஅணுவாக அனுபவிக்க இன்னும் நாம் ஆன்ம சாதனையில் ஆழம் போக வேண்டும்!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக