தலைப்பு

வியாழன், 28 ஏப்ரல், 2022

ஸ்ரீநரநாராயண குகா நூலாசிரியர் மகேஷ்வரானந்தாவின் அபூர்வ சாயி வாக்குமூலங்கள்!


இமயப் பனி உறைய.. இதயச் சனி கரைய நம்மை எல்லாம் தனது தெய்வீக எழுத்துகளால் இறைவன் பாபா பற்றிய பரவச அனுபவங்களை முதன்முதலாக நூல் வழி பகிர்ந்து கொண்ட தூயத்துறவி சுவாமிகள் மகேஷ்வரானந்தாவின் மனம் திறந்த பாபா பற்றிய அபூர்வ வாக்குமூலங்கள் முதன்முதலாக தமிழில் இதோ...


Is Sai Baba God? எனும் ஒரு அரிய பாபா புத்தகம் இன்னமும் உயிர்ப்போடிருக்கிறது.. அந்தப் புத்தகத்தின் அட்டை படத்தில் பாபாவே கையெழுத்திட்டு நவம்பர் 24 - 1994 - 4.43 மாலை பாபா தனது தெய்வத்திரு கரத்தாலேயே வழங்கிய புத்தகம் சுவாமி சங்கல்பத்தோடு அடியேனுக்கு கிடைத்தது! அது சுவாமி கருணையே அன்றி வேறென்ன...! 

அதில் நூலாசிரியர் திரு எம்.ஆர் குந்த்ரா பகிராத பொக்கிஷங்களே இல்லை! கடவுள் யார்? அவதாரம் எதற்கு? என ஆரம்பித்து ஒவ்வொரு மதங்களின் சூட்சுமங்களை விவரித்து.. அந்தந்த மதக்கோட்பாடுகளை அடிக்கோடிட்டு... பாபாவின் முந்தைய அவதாரமான ஷிர்டி பாபா.. மற்றும் பர்த்தி பாபா என அலங்கரித்து இறுதி அவதாரமும் மிக உறுதியான அவதாரமுமான சத்ய யுக இறைவன் ஸ்ரீ பிரேம சுவாமியை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்!

அந்தப் புத்தகப் பொக்கிஷங்களில்... தான் சந்தித்த சுவாமிகள் மகேஷ்வரானந்தா பாபாவை பற்றி நூலாசிரியரோடு  மனம்

திறந்து பகிர்ந்து கொண்ட அபூர்வ செய்திகளையும் எழுதி பொக்கிஷங்களை மேலும் புனிதப் படுத்தி இருக்கிறார்... அந்த 11 தூய இமய யோகிகளுக்கு அடுத்தபடி இமாலய ஸ்ரீ நரநாராயண குகையை சுவாமி சங்கல்பத்தோடு தரிசித்தவர் தூயத்துறவி சுவாமிகள் ஸ்ரீ மகேஷ்வரானந்தா மட்டுமே! பெறுதற்கரிய பேறு பெற்றவர் சுவாமிகள்... தியாகத்தால் மட்டுமே அப்பேற்றை பெற முடியும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம்! துறவிகள் பாபாவை இறைவன் எனப் போற்றுவதே விசேஷம்.. மனிதன் பாபாவை இறைவனே எனப் புகழ்வதில் "தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்! என்ற சுயநலமும் சேர்ந்தே தொக்கி இருக்கிறது.. ஆனால் துறவிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை.. விருப்பு வெறுப்பும் இல்லை...! அப்படி பாபா இறைவனே என உணர்ந்து போற்றிய துறவிகளின் வரிசையில் மிக முக்கியமானவர் சுவாமிகள் மகேஷ்வரானந்தா!


ஒரு முறை நூலாசிரியர் குந்த்ரா பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் தங்கி இருந்த போது... ஒரு நல்ல தெய்வச் சந்தர்ப்பமாய் மகேஷ்வரானந்தா சுவாமிகளை சந்திக்கிறார்... அவரோடு பல மதக் கோட்பாடுகளை கலந்துரையாடுகிறார்.. அப்போது நூலாசிரியர் "சுவாமிஜி.. நமக்கு பாபா கடவுளே என நன்கு அறிந்து உணர முடிகிறது...! ஆனால் அவரால் மட்டுமே மக்களை தர்ம வழியில் மீட்டெடுப்பது சிரமமான காரியம் இல்லையா?" எனக் கேட்கிறார்.. எப்பேர்ப்பட்ட பொதுநலக் கேள்வி அது! "சுவாமி சுவாமி அந்த எதிர் வீட்டுக்கு அருள் புரிவதைப் போல் நீ எனக்கு எப்போது அருள் புரியப் போகிறாய்?" எனும் பக்குவமற்ற கேள்விகளுக்கு மத்தியில் எப்பேர்ப்பட்ட பொது நோக்குக் கேள்வி.. அதற்கு சுவாமிகள் அளித்த விடை இதயத்தில் பதிக்கும் படியானது!


சுவாமிகள் மகேஷ்வரானந்த தனது திவ்ய உதடுகளைக் திறந்து "பாபா கடவுளே! பூமியில் அவதரித்திருக்கிறார்! அதில் சந்தேகமே இல்லை! பாபா தனியாக இல்லை... அவர் தனது தெய்வீகப் படையினரோடே வந்திருக்கிறார்! தெய்வீக அவதாரத்திருப்பணி பூர்த்தியடைய பாபாவோடு சேர்ந்து தர்ம மீட்புக்கான அனைத்து சேவைகளையும் அவர்கள் பாபாவுக்காக ஆற்றுவர்!" என மிகவும் திடமாகப் பேசுகிறார்... 


மேலும் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களை கோடிட்டுக் காட்டுகிறார் சுவாமிகள்‌... "இறைவனின் ஸ்ரீராமர் காலத்தில் லஷ்மணர், பரதர், ஹனுமன், சுக்ரீவன் , விஷ்வாமித்ரா என பல்வேறு தவ சிரேஷ்டர்கள், முனிப்புங்கவர்கள் இருந்தார்கள்...  வெவ்வேறு தளத்தில் இயங்கினார்கள்... ஆனால் அவர்களின் ஒரே இலக்கு தர்ம மீட்பே! இறைவனின் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் பலராமர், உத்தவர் , பாண்டவர்களில் அர்ஜுனன், ரிஷிகள் போன்றவர்களுக்கான பணியும் அதுவே!  நீங்கள் இறைவனின் தற்போதைய ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! சத்ய- தர்ம- சாந்தியை மீட்டு  நிலைநிறுத்த அவர் தனியாகவா அவதரித்திருக்கிறார்!? இல்லவே இல்லை...! அவர் தன்னுடைய முழு தெய்வீகப் பட்டாளத்துடனேயே வந்திறங்கி இருக்கிறார்... யார் யாராருக்கு எப்போது தனது பணியை தர வேண்டும் என பாபாவுக்கு நன்கு தெரியும்!" என்கிறார் சுவாமிகள்.. திடீரென ஆள்காட்டி விரலை நீட்டி...


"நீயும் அதில் ஒருவன் என் உனக்குப் புரியவில்லையா?" எனக் கேட்கிறார்... ஆச்சர்யப்படும் நூலாசிரியர் குந்த்ரா "நான் ஒன்றுமில்லை... நான் ஒரு பூஜ்யம்!" என்கிறார்.. "நீ இன்னும் அதை உணரவில்லை.. ஆகவே தான் அவ்வாறு சொல்கிறாய்!" என சுவாமிகள் நூலாசிரியரின் நெஞ்சகத்தில் ஞானச்சுடர் ஏற்றுகிறார்! "நாம் எல்லோருமே பாபாவின் தெய்வீகப் படையினர் தான்! நாம் எல்லோருமே பாபா விதித்த ஒவ்வொரு பணியையும் செய்து வருகிறோம்! பாபாவின் பேரவதாரப் பேரணியில் ஒருவரே நாமும்...! ஒட்டுமொத்த பேரிறைப் பேராற்றலே பூமியில் ஸ்ரீ சத்ய சாயியாக வந்திறங்கி இருக்கிறது! ஜீவராசிகளின் உள்ளுறை இறைப் பேரியக்கமே ஷிர்டியிலும் இப்போது புட்டபர்த்தியிலும் மேலும் ஸ்ரீ பிரேம சாயியாக தனது தர்ம மீட்பை தொடரும்...!" எனப் பட்டவர்த்தனமாய் சத்தியத்தை பளிச் பளிச் என பேசுகிறார் சுவாமிகள் மகேஷ்வரானந்தா!

( ஆதாரம் : Is SaiBaba God Page : 197 / Author: M. R. Kundra)


அத்தனை இன்னல்களையும் தாங்கும் இந்த பூமி இன்னமும் பொடிந்து போகாமல் இருப்பது பாபாவாலும் பாபா இயக்குகிற மகான்களாலும் மட்டுமே...! பக்கத்து வீட்டு பாழ்மனையில் குப்பையைப் போட்டுவிட்டு தனது வீட்டை சுத்தமாக்கிக் கொள்ளும் மனித செயல்முறை போல் அல்ல இறைவனின் தர்ம‌ மீட்பு செயல் முறை! மனிதன் பூமிக்கு வந்து போகும் வெறும் சுற்றுலா பயணியே.. இது பாபா பூமி.. இது மகான்களின் காவல் உலகம்! இங்கே தர்ம மீட்பை தான் தேர்ந்தெடுத்த நபர்களாலேயே பாபா தொடர்ந்து கொண்டே இருக்கிறார்...!


   பக்தியும்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக