தலைப்பு

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

லண்டன் சன்ரைஸ் ரேடியோ அறிவிப்பாளர் ஜே.கேவின் சாயி அனுபவங்கள்!

பிரபல லண்டன் அறிவிப்பாளர் எவ்வாறு பாபாவை உணர்ந்து ஆச்சர்யகரமான வழியில் புட்டபர்த்தி வந்து சேர்ந்து பாபாவின் கருவியானார் என்பது மிக சுவாரஸ்யமாய் இதோ...


அவர் பெயர் திரு ஜெயந்த் கச்வாலா.. ஜேகே எனும் பெயர் லண்டன் ரேடியோ உலகத்தில் பிரபலம்... சன் ரைஸ் ரேடியோவில் அறிவிப்பாளராக இருக்கிறார்! அவர் நைரோபி தேசத்தை சேர்ந்தவர்! அவர் 1966 ஆண்டு வாக்கில் பாபாவை பற்றிய ஓர் செய்தி வாசிக்கிறார்.. ஆனால் பாபாவின் அந்த உகாண்டா விஜயத்தின் போது லண்டனில் இருந்தபடியால் அவரால் பாபாவை தரிசிக்கச் செல்லமுடியவில்லை! லண்டனில் இயங்கி வருகிற சாயி சென்டரலில் பஜனைகளில் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்! அவரின் இதய அடிவாரத்தின் ஆழத்தில் பாபா ஒரு புனிதமான மனிதர் என்பதைக் கடந்து வேறேதோ இருக்க வேண்டும் எனும் உள்ளுணர்வு உந்தித் தள்ளுகிறது...! பாபா கடவுளாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனும் ஓர் மெய்யுணர்வு மனதின் மையத்தில் மயில்தோகை போல் வருடிக் கொண்டிருக்கிறது... பாபாவே இறைவன் என்பதை உணர ஆரம்பிக்கிறார்... உடனடியாக அவரை தரிசித்தாக வேண்டும் என்ற தெய்வத் தள்ளுதல் அவரை பாரத தேசம் நோக்கி படையெடுக்க வைக்கிறார்‌... பம்பாயில் வந்திறங்குகிறார்... அந்த சமயம் பார்த்து நிகழ்ந்த கலவரத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது ! சாலைகள் வனாந்தரமானது! ஊரடங்கு போல் ஓரடங்கு அதில் தானும் முடங்கிப் போய்விடுவேனே என நினைக்கையில்... ஆச்சர்யங்கள் தனது கடிவாளத்தை கழட்டு புறப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அவரிடம் ஒன்ற வருகின்றன...


திடீரென ஒரு முதியவர் குதிரை வண்டி ஓட்டிய படி ஜே.கே முன் வருகிறார்... போக்குவரத்து மையத்திலிருந்து தர்மாவரத்திற்கு லாரி வரும்.. வாருங்கள் என ஜே.கே வை அழைக்கிறார்...அவருக்கு ஒரே ஆச்சர்யம்... அமர்ந்து கொள்கிறார்.. போக்குவரத்து மையத்தில் இறக்கி விட்டு பணம் கொடுக்க வந்த ஜே.கேவிடம் வாங்க மறுக்கையில்... சரியாக லாரி வருகிறது... சரி அதில் ஏறலாம் என முன்னேறுகிறார்.. இரண்டு நொடி கூட தாமதமில்லை... பின்னால் திரும்பிப் பார்க்கிறார் அந்த குதிரை வண்டி அப்படியே மறைந்து போய்விட... பிரம்மிப்பின் உச்சத்தில் லாரியில் ஏறுகிறார்... பணம் மடியில் பயம் மனதில்... யாரேனும் திருடிவிடுவார்களோ சாயி கிருஷ்ணா என பாபாவை வேண்டிய படி பயணிக்கிறார்.. ஒரு தீங்கும் இல்லை.. லாரி தர்மாவரத்தில் இறக்கிவிட்டு குதிரைவண்டிக்காரர் போல்  பணமே வாங்க மறுத்து... லாரி செல்வதையே பார்த்தபடி இருக்க ஜே.கேவின் முதுகு தட்டப்படுகிறது... பிரம்மிப்பு கலைக்கப் பட்ட பொழுதில் கழுத்தைத் திரும்புகிறார் ஜே.கே... நீங்கள் புட்டபர்த்தி தானே செல்ல வேண்டும்.. ஏறிக் கொள்ளுங்கள் என் ஒரு பைக்'காரர்...  பிரம்மிப்புக்கும் மேல் பிரம்மிப்பு.. ஏறி அமர்கிறார்... காற்றைத் கிழித்தபடி பைக் வேகமெடுக்க... அது புட்டபர்த்தி.. இறக்கிவிட்டவர்க்கு நன்றி சொல்லலாம் என பின்னே திரும்பிப் பார்க்கையில் பைக்'கும் இல்லை ஆளும் இல்லை... அதே ஆச்சர்யம் பூச்சொரிய மொழியற்றுப் போய் உள் நுழைகிறார்.. பாபா அவருக்கு தரிசன சமயத்தில் நேர்காணலும் வழங்குகிறார்.. மூன்று விதமான வாகனப் பயணத்தில் வந்து தன்னை பிரசாந்திக்குள் சேர்த்தவர் தான் வழிபடும் சாயி கிருஷ்ணரே என தீர்க்கமாக உணர்கிறார்!


அது முதல் ஜே.கேவை தனது கருவியாகப் பயன்படுத்துகிறார் பாபா! ஒரு பத்திரிகையாளராக இந்தியா மெயிலில் வேலைக்கு சேர்கிறார் ஜே.கே.  பிறகு ஒரு அறிவிப்பாளராக லண்டன் சன்ரைஸ் ரேடியோ... அங்கே தான் கோவர்த்தன் பாய் படேலின் வீட்டில் நிகழ்கிற சாயி பஜனில் விபூதியும் குங்குமமும் பொழியும்.. பல வித லீலைகள் அரங்கேறும்.. அதை எல்லாம் நிதர்சனமாய் நேரில் கண்டு ஆன்ந்தப்படுகிறார் ஜே.கே! ஒரு முறை ஒரு பாபா புகைப்படத்தில் விபூதி தோன்ற.. படேல் மகளின் திருமணத்திற்கான பாபாவின் ஆசியாக அவர்கள் உணர்கிறார்கள்!

ஜே.கேவின் பாபா உணர்தலும் ஆழமாகிப் போனது! ஒருமுறை சௌத்தாலில் இருந்து வந்த ராம் எனும் புகைப்படக் கலைஞர் படேல் வீட்டில் உள்ள ஒரு பாபா படத்தை புகைப்படம் எடுக்கிறார்... நெகட்டிவை கழுவிப் பார்க்கையில் அந்தப் புகைப்படத்தில் திட்டுத்திட்டாய் விபூதி பரவி.. God (கடவுள்) என அந்த விபூதித் தடங்கள் பளீச்சிடுகின்றன... 

நெகட்டிவில் எந்த கோளாறும் இல்லை.. அந்த பாபா படத்தில் எந்த விபூதியும் புகைப்படம் எடுக்கையில் தோன்றியிருக்கவில்லை... நிச்சயம் இது பாபா திருலீலையே... பாபாவே இறைவன் என்பதை அந்தப் புகைப்படம் வழி பாபாவே திருச்செய்தி விடுப்பதை தெள்ளத்தெளிவாய் உணர்கிறார் ஜே.கே!

விபூதி தோன்றிய பாபா படங்களை புகைப்படங்கள் எடுப்பது பரவலாய் நிகழ்வதே... ஆனால் விபூதியே வராத பாபா படத்தை புகைப்படம் எடுத்து அதை டெவலப் செய்கையில் விபூதி தோன்றிய படி காட்சி அளிப்பது ஓர் அபூர்வ லீலையாகவே உணர்ந்து அனுபவித்து கொண்டாடலாம்!


(ஆதாரம் : Is SaiBaba God Page : 203 / Author: M. R. Kundra)


உணர்தலும் கரைதலுக்குமான ஒத்திசைவு தருவது இறைவன் பாபாவே!

சத்தியம் எனும் உளி வைத்து நவவித கோட்பாடுகளால் ஒன்பது முறை அடித்து நம் இதயத்தை பக்குவப்படுத்துகிறார் பாபா... வாங்குகிற அடிகள் தான் தாங்குகிற திரு அடிகளை நோக்கி நம்மை நகர்த்துகின்றன... தன் பிறப்பிடத்திற்கு அழைப்பதும்... ஆத்மா எனும் தனது இருப்பிடத்திற்கு அழைப்பதும் சுவாமி கருணையே... அக்கருணையே நம் அகக்கண்களையும் திறந்து வானத்தை மேலும் விரிய வைக்கிறது!*


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக