தலைப்பு

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

🚗 காணாமல் போன கார்! | சத்ய சாயி லீலைகள்


1981 மார்ச்சில் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் மார்ட்டின் நியூ பரி என்பவர் ஒரு சாயி பக்தர். அவர் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அதன் விலை 5000 டாலர்கள். ஏர்கண்டிஷன் பண்ணிய கார் அது. ஸ்டீரியோ ஒலிபெருக்கியும் இருந்தது. காரை வாங்கிய மறுநாளே அவர் அதை வெளியே ஓட்டி சென்றார். தமது அலுவலகத்திற்கு அவர் செல்லவேண்டும்.
செக்க்ரோவில் உள்ள ரயில்வே ஸ்டேஷனை அடைந்தார். காரை வெளியே நிறுத்திவிட்டு, நிலையத்துக்குள் நுழைந்தார். ரயிலேறி பக்கத்தில் உள்ள மாநகருக்கு பிரயாணம் செய்தார். மதியம் அவர் திரும்பிவந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் கார் இல்லை. அவருக்கு இடி விழுந்தாற்போல் ஆகியது. காரை இன்சூர் செய்யவில்லை. அதற்கு ஆயிரம் டாலர் தான் டெபாசிட் கொடுத்திருக்கிறார். மீதியை இன்னும் கொடுத்தாகவேண்டும். சிறிது நேரம் பிரமித்து நின்று விட்டு மறுபடியும் தேடினார். சரி, இது கடவுள் சோதனை என்று நினைத்தார். நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். சார்ஜண்டிடம்  புகார் கொடுத்தார்.

கார் திருட்டு அதிகம், லேசில் கண்டுபிடிக்க முடியாது என்பது மார்ட்டினுக்கு தெரியும். மனம் குழம்பியவாறு வீடு திரும்பினார். பல நாட்கள் சென்றன. போலீசாரிடம் சென்று அடிக்கடி விசாரித்தார்." இன்னமும் கண்டுபிடிக்கவில்லை" என்று தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் பதில் சொன்னார்கள். கார் கிடைப்பதாக இருந்தால் சீக்கிரமே கிடைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் கிடைக்கவே கிடைக்காது. 1982 ஆம் ஆண்டு வருஷப்பிறப்பு வந்தது. மார்ட்டின் தமது இலவச சேவை காரணமாக 30 கிலோமீட்டர் தள்ளி உள்ள இடத்துக்குப் போக வேண்டி வந்தது. அங்கே இந்தோ சீன அகதிகள் குடி இறங்கி இருந்தார்கள். அவர்கள் இடையே சென்று அவர்களுக்கு தம்மால் இயன்ற சேவைகளை செய்து வருவது மார்ட்டினின் வழக்கம். தொலைவில் உள்ள அந்த இடத்துக்கு போவதற்கு அவர் தனது காரை உபயோகிப்பார். ஆனால் அன்று கிளம்பும்போது கார் இல்லாததால், தமக்கு சேவை செய்ய அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்று நினைத்தார். சத்யசாயியை மனதில் பிரார்த்தித்தார்." சுவாமி நான் இப்படி ஒரு இயலாத நிலையில் இருக்கிறேனே! கார் இருந்தால் உங்களது சேவை பணிகளை நான் மேற்கொள்ள முடியும்" என்று நினைத்தார்.

மார்ட்டினுக்கு ஒரு பெண் ஸ்நேகிதி இருந்தாள். அவள் நினைவு வரவே, அவளை அழைத்து உன்னுடைய காரை தர முடியுமா? என்று கேட்டார். தனது காரை கொடுத்து உதவினாள் அந்த ஸ்நேகிதி. அந்த காரை செலுத்திக் கொண்டு சென்றார். வழக்கமான நிலையத்திற்கு போனார். அங்கே சற்று நேரம் தயங்கி நின்ற அவர், திரும்பி விடலாம் என்று யோசித்து காரை திருப்ப யத்தனித்தார். திடீரென்று சுவாமி சத்யசாயி நினைவு வந்தது. ஒரு தெளிவு பிறந்தது. காரை திருப்ப வேண்டாம் என்ற எண்ணம் எழுந்தது. அந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேராக மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு காரை ஓட்டி சென்றார். பிறகு ஒரு திருப்பம் திரும்பி அருகிலிருந்த குன்றின் மீது ஏறி சென்றார். அந்த பகுதிகளை அவர் பார்த்ததே இல்லை. எனினும் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் ஓட்டி சென்றார். அங்கே மலைச்சாரலில் பார்த்த போது சற்று எட்டத்தில் ஒரு மரத்தடியில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. சினேகிதியின் காரை அவசரமாக ஓட்டி கொண்டு அந்த இடத்திற்குச் சென்றார் மார்ட்டின். ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் டிரைவர் லைசென்ஸ் உள்ள அவரது பை, சில நாணயங்கள், இதர பொருட்கள் யாவும் அப்படியே இருந்தன. சாயியின் படம் கூட அப்படியே இருந்தது. மார்ட்டினுக்கு தெரிந்து விட்டது, அந்த இடத்திற்கு காரை வரவழைத்துக் கொடுத்தது சாயியின் சக்திதான் என்று!!

ஆதாரம்: சத்யமே சாயி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக