தலைப்பு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சாய் பாபாவும் 17 திருடர்களும்!


பாபா இளைஞராக இருந்த காலம் அது... 

ஒரு நாள் மாலை, விடுவிடுவென்று நடக்கத் துவங்கினார் பாபா. வழக்கமாய் சித்ராவதி நதி வரை போவார். பக்தர்களும் கூட வருவார்கள். அவர்கள் கேட்கும் பொருட்களை சித்திராவதி ஆற்று மணலில் கைவிட்டு கிளறி எடுத்துக் கொடுப்பார். அது கனியாக இருக்கும். தின்பண்டமாக இருக்கும். சிலைகளாகவும் இருக்கும். பக்தர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள். ஆனால் அன்றைக்கு யாரும் தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வேகவேகமாக சித்ராவதி நதியையும் கடந்து நடந்தார். அவருடைய நடை, தொலைவில் இருந்த குன்றை நோக்கி இருந்தது.

அங்கே யாராவது பக்தருக்குப் பிரச்னையா? அதைச் சரி செய்ய விரைகிறாரா?
இல்லை! குன்றின் மேல் ஏறினார். அதன் மையப் பகுதியில், மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் வந்து அப்படியே நின்றார்.
அங்கே என்ன விசேஷம்?
ஒரு கொள்ளைக் கூட்டம் அங்கே இருந்தது. மொத்தம் 17 பேர்!
தாங்கள் சூறையாடிய பொருட்களை அப்போது அவர்கள் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் நடுவில் போய் நின்றார் பாபா.
திகைத்தனர் திருடர்கள்.

அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் நினைத்தால் பாபாவைத் தாக்கியிருக்கலாம்தான். ஆனால் பாபா என்ன வசியம் செய்தாரோ, அனைவரும் அதிர்ந்து எழுந்தார்கள். கை கூப்பி நின்றார்கள்.
பாபா அவர்களை நோக்கி கையை உயர்த்தினார். வேகவேகமாக விசுறுவது போல வீசினார். அவரது கரத்திலிருந்து விபூதி மழை பொழிந்தது. “பங்காரு பங்காரு’ என்று செல்லமாகக் கொஞ்சியபடியே, அந்த விபூதியை அந்த 17 கொள்ளையார்கள் நெற்றியிலும் பூசினார் பாபா.
“அன்பானவர்களே, போனது போனவையாக இருக்கட்டும். மற்றவர்களுக்கு ஆபத்து தரும் செயல் இனி வேண்டாம். நீங்களும் அச்சமோ ஆபத்தோ பாவமோ இன்றி உங்களால் முடிந்த தொழிலைச் செய்யுங்கள்’ என்று அற(றி)வுரை கூறினார்.

“எங்களுக்கு யார் வேலை தருவார்கள்?’ என்றான் ஒருவன்.
“நான்... நான் தருகிறேன்’ என்றார் பாபா. அவர்கள் 17 பேரையும் அப்போதே புட்டபர்த்திக்கு அழைத்து வந்தார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவர்கள் 17 பேரையும் புட்டபர்த்தியிலேயே அவரவர் தகுதிக்கேற்ற பணியில் நியமித்தார். அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்த சுப்பண்ணாவுக்கு பாபா கொடுத்த வேலை என்ன தெரியுமா?
தன் ஆசிரமம் இருக்கும் பழைய மந்திரத்தின் தலைமைக் காவலாளியாக அவனை நியமித்தார் பாபா.
திருடன் கையில் சாவி கொடுப்பது போல் என்று கிண்டலாகப் பழமொழி சொல்வார்களே....

அதை உண்மையாகச் செய்தார் பாபா..
திருடன் கையில் சாவி கொடுத்தார். சாவி மட்டுமல்ல, மந்திரமும் பத்திரமாக இருந்தது. எல்லாம் பாபாவின் மந்திரம்!

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 – 1985)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக