தலைப்பு

புதன், 8 மார்ச், 2023

நிழலாகப் பின்தொடர்ந்து இமய யோகிக்கு ஆன்மீக வழிகாட்டும் பாபா!

எவ்வாறு ஒரு இமய யோகிக்கு இறைவன் பாபா ஆன்மீக வழிகாட்டுகிறார் என்பது மிக சுவாரஸ்யமாக இதோ...


உத்தரகாண்ட் வெள்ளத்தில்  சிக்கிக் கொண்டு பாபாவால் உயிர் மீட்கப்பட்ட ஓம்குரு அதற்கு முன்பாகவே இமய யோகி தத்த சைதன்யாவை மௌனி பாபா ஆசிரமத்தில் பார்த்திருக்கிறார்! தத்த சைதன்யா கர்நாடகா - பெங்களூரை சேர்ந்தவர்! பிராமண குலத்தில் பிறந்த அவர் அதிகம் உலகக் கல்வி அறிவு பெறாதவர்! அவரும் ஓம்குருவை போலவே இறைவன் ஸ்ரீ சத்யசாயி பக்தர்! 

"இறைவனும் நாமும் வேறல்ல" எனும் பேருணர்வு பெற்றவர் யோகி தத்த சைதன்யா! 

அவரின் வாக்கில் ஞானமும் உதிறும் ஆவேசமும் உதிறும்! பனிமலை எரிமலை போல் இரண்டு விதமான மொழிவெளிப்பாட்டை தன் உதடுவழி வெளிப்படுத்துபவர் அவர்! 

ஓம்குருவுக்கு அவரோடு நன்கு பழக்கம்! 


தனது பக்தரான தத்த சைதன்யாவுக்கு இறைவன் பாபா கண்ணுக்கு தெரியும் ஒரு நிழல் போல அவர் செல்லும் வழிநெடுக வழிகாட்டுகிறார்!

யோகி தத்த சைதன்யா புட்டபர்த்தி சென்றிருந்த போதும் பாபா நிழல் வடிவமாக வழிகாட்ட ஆரம்பித்து‌... அவர் செல்லும் பல்வேறு இடங்களுக்கு அப்படியே அதிசயமாய் நிழல் உருவில் வழிகாட்டி வருகிறார்!

பாபா மேல் அந்த யோகி கொண்ட பக்தி அத்தகையது! 


154 கி.மீ  கொண்ட பெங்களூர் புட்டபர்த்தி தூரத்தை பாதயாத்திரையாக நடந்தே புட்டபர்த்திக்கு பாபா தரிசனம் பெற வருவார் அந்த யோகி!


முதலில் பாபா அவரை ஷிர்டிக்கு செல்லச் சொல்கிறார்... பிறகு காசிக்கு பயணம் மேற்கொள்ளச் சொல்கிறார்! நிழலாக பாபா அவரின் கண்ணுக்கு தெரிந்தபடி... பாபாவின் குரல் மட்டும் அவருக்கு கேட்கிறது.. இப்படியே பாபா அறிவுறுத்திய ஷேத்ராடன பயணத்தை அந்த யோகி மேற்கொள்கிறார்! பாபா தனது குரலால் பேசுவதை அந்த யோகி வெளியே பகிர்ந்து கொண்டதே இல்லை! அது இறைவனுக்கும் பக்தனுக்குமான ரகசிய உரையாடல்! 

பிறகு உஜ்ஜயினி செல்லுமாறு பாபா பணிக்க... அங்கே நீண்ட ஆண்டுகள் (2-3) தங்கி தவம் செய்கிறார்! 


அங்கிருந்து நேராக பத்ரிநாத் சென்று கீழே இறங்காமல் அங்கேயே தவம் மேற்கொள்ளும் படி இறைவன் பாபா அறிவுறுத்த அதனை அவ்வாறே கடைபிடித்து இமய யோகி ஆகிறார் யோகி தத்த சைதன்யா! 

உணவின்றி, உறக்கமின்றி தொடர் தீவிர தவம் மேற்கொள்கிறார்! பத்ரிநாராயணன் ரூபத்திலும் இறைவன் பாபா அவருக்கு காட்சி அளித்திருக்கிறார்!

இப்படி தவம் செய்யும் 

யோகிகள் 21 ஆன்மீக நிலைகளை அடைகிறார்கள் என அந்த இமய யோகி ரகசியம் அவிழ்க்கிறார்! அதில் மிக உச்ச நிலையில் இருப்பவரே இறைவன் பாபா! என்கிறார்! 

பத்ரி நாராயணன் ரூபம் மட்டுமின்றி ஸ்ரீ சத்ய நாராயணனான தன் ரூபத்திலும் அந்த இமய யோகி தவம் செய்யும் பத்ரிநாத்தில் தரிசனம் தருகிறார் பாபா! 21 ஆன்மீக நிலைகளையும் அவர் எட்டுகிற போது... எதிர்மறை எண்ணங்கள் சுசுமனா நாடியை வெட்டிவிடவே அவர் சாதாரண நிலைக்கு தள்ளப்படுகிறார்! உடல் உபாதைகளான வயிற்று வலி, மூச்சுத்திணரல் உருவாகின்றன...  இருந்தாலும் விரக்தி அடையாமல் தன் தவத்தை தொய்வின்றி நிகழ்த்தி வருகிறார்! 

அவரின் ஒரே பயண இலக்கு பாபா முன்பு 21 இமய யோகிகளுக்கு சுட்டிக்காட்டிய நரநாராயண குகைக்கு செல்வதே என்பது குறிப்பிடத்தக்கது! 


(ஆதாரம் : இமாலய ரகசியங்கள் | பக்கம் : 218 - 221 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


இறைவன் பாபா நாம் ஆன்மீகத்தில் உச்ச நிலை அடைவதற்கே அவதரித்தவர்... அதுவே ஒவ்வொரு ஆன்மாவின் இலக்கும்! பாபா புரிந்து வரும் பிற அதிசயங்களான உலகாயத காரியங்கள் எல்லாம் பாபாவுக்கு சர்வ சாதாரணமானவையே! ஆனால் ஆன்ம முக்தி ஒன்றே பேரவதாரமான பாபாவின் சங்கல்பமும் இலக்கும்! ஆக அதனை நோக்கியே பாபா பக்தர்களாகிய நாம் நடைபோட வேண்டும்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக