தலைப்பு

புதன், 22 மார்ச், 2023

இதய நோய் /நீரிழிவு தவிர்க்க பாபா கூறும் அற்புத வழிமுறைகள்!

இணை பிரியாத் தோழர்கள் கூட நம் இறுதிவரை உடன் இருப்பதில்லை. ஆனால் இணை நோய்களாய் உருவெடுக்கும் இருதய நோயும், நீரிழிவு நோயும்  வயதுவேறுபாடின்றி, அகில உலகத்திலும்  பல்கிப் பெருகி , நம் இறுதிவரை இணை பிரியாமல் இருக்கும் கால கட்டம் இது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் கூறும் காரணங்களையும்   பகவான் பாபா அவர்களின்  அற்புத வழிகாட்டுதல் களையும்  இந்தப் பதிவில் கண்டு பயனடைவோம்...


🌷வைத்தியநாத சாயியின் மருந்தில்லா வைத்தியம்:

அது 1999 பிப்ரவரி மாதம். பாபாவை  வணங்கி, அவரது திருமுன்னே அமர்ந்திருந்தனர் இரண்டு டாக்டர்கள். காரணங்களின் காரணரான பாபா , அவர்களிடம் உலகளாவிய தாக்கத்தை விளைவிக்கும் இரண்டு பிணிகளைப் பற்றிய விளக்கங்களைக் கேட்கிறார். மருத்துவ விஞ்ஞானம் செய்துள்ள ஆராய்ச்சிகளை அடியொற்றி அவர்களும் பாபாவுக்கு பதில் அளிக்கின்றனர். இடைமறிக்கும் பாபா எடுத்துரைக்கும் அற்புத விளக்கங்கள் என்ன என்பதையும்,  மெய்ஞானம் என்கிற பேரண்டத்தை இயக்கும் சக்தியை நோக்கினால், விஞ்ஞானம் என்பது ஒரு சிறிய அணுவைப் போன்றது என்பதையும்  அறிய, இப்பதிவை அடியொற்றி வாருங்கள்.



🌷நீரிழிவைத் தடுக்க பாபா கூறும் வழிமுறை:

பாபா கேட்கிறார்-" நீரிழிவிற்கு நீங்கள் அளிக்கும் சிகிச்சை என்ன?"

டாக்டர்கள்-" முதலில் உணவுக் கட்டுப்பாடு, பிறகு உடற்பயிற்சி, அதன்பின் மாத்திரைகள், இறுதியாக இன்சுலின் ஊசி."

பாபா- "இன்சுலின் இரத்த சக்கரையை , உடனடியாக குறைக்கும் தன்மை கொண்டது. குறைந்த சக்கரை அளவு, இரத்த அழுத்தத்தையும் குறைத்து, சில நேரங்களில் நோயாளி 'கோமா 'நிலைக்கு சென்றுவிட வாய்ப்புண்டு. ஆகவே கூடுமானவரையில் மாத்திரை கொடுத்து, சரிசெய்ய முயல்வதே நல்லது.அதுசரி. நீரிழிவின் காரணம் என்ன?                                                         


டாக்டர்கள்- பங்கிரியாஸ் என்கிற கணையப் பிரச்சனை தான் ஸ்வாமி"

பாபா- கணையப் பிரச்சனை என்பது நீரிழிவின் உண்மையான காரணம் அல்ல. தவறான உணவு முறைகளும், உடற்பயிற்சி மேற் கொள்ளாமையுமே இதன் முக்கிய காரணிகள். தென்னிந்தியர்கள் அரிசியையும், வட இந்தியர்கள் கோதுமையையும், அளவுக்கு அதிகமாக உண்கின்றனர். இவை உண்ட அரைமணி நேரத்திலேயே சக்கரை அளவை அதிகரிகரிக்கச் செய்துவிடும்.

 

மாறாக இருவருமே தங்களது உணவினில் மாற்றம் செய்து (தென் இந்தியர் கோதுமையையும், வட இந்தியர் அரிசியையும்) அளவைமும் குறைத்து உண்ணவேண்டும். மேலும் அனைவரும் உணவுப் பழக்கத்தை மாற்றி, நீங்கள் சோளம் அல்லது ராகி சாப்பிட்டால், இரத்த சர்க்கரை இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் மெதுவாக உயரும். அத்தகைய மெதுவான அதிகரிப்பை உடலால் நன்றாக நிர்வகிக்க முடியும், பின்னர் நீரிழிவு ஒரு பிரச்சனையாக இருக்காது மேலும் நாவடக்கம் பயிலவேண்டும். 48000 சுவை அரும்புகள் உள்ள நமது நாவை அதன் போக்குப்படி உண்ணவிட்டால், அது இன்சுவையை நனி விரும்பி, சர்க்கரை நோயை உண்டாக்கக் காரணமாகிவிடும். பகவான்மேலும் கூறியதாவது, உணவுக் கட்டுப்பாட்டை மருத்துவர்கள் முதன்மையாக வலியுறுத்துவது இல்லை.நீரிழிவிற்கு கேபேஜ் போன்ற பசுமைக் காய்கறிகள் நல்லது. ஆனால் காலிபிளவரைத் தவிர்க்கவேண்டும். பழங்களில் ஆப்பிள் பியரஸ், தர்பூசனி பப்பாளி போன்ற கருப்பு விதையுள்ள பழங்களை மிதமாகச் சேர்க்கலாம். கிழங்கு வகைகள் உண்பதைத் தவிர்க்கவும்.


🌷இதய நோய் தீர பாபாவின் இனிய வழிகாட்டுதல்கள்:

இதன்பிறகு பாபா, இதயநோய்க்கான காரணத்தை வினவ, டாக்டர்கள் அது கொழுப்பு மிகுதியாலும், இரத்த அழுத்தம் அதிகமாவதாலும் உண்டாகிறது என்று பதில் அளிக்க..

"இல்லை இல்லை, இதய நோய்க்கு காரணிகள் மூன்று.. அவசரம், கவலை மற்றும் ஒவ்வாத உணவுப் பழக்கம்( Hurry, Worry and Curry) ஆகியவைதான். சமையலில் அதிகமான  எண்ணெய் உபயோகிக்க வேண்டாம். தினசரி பாதம் பருப்பை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிட்டாலும். உணவில்  பூண்டு சேர்த்துக் கொண்டாலும், கொழுப்பு குறையும் இதைக் கேட்ட டாக்டர், ஸ்வாமி, பூண்டு ரஜோ குணத்தைத் தூண்டுமல்லவா. அது ஆன்மீக சிந்தனைகளுக்கு எதிர்மறை அல்லவா என்று கேட்க..பாபா கூறுகிறார். முதலில் ஆரோக்யம். பிறகு ஆன்மீகம். ஏனெனில் ஆரோக்யமான தேகம் இருந்தால்தான், அதில் ஆன்மீகம் பயில இயலும்.இந்நாட்களில் மக்கள் அனைவருக்கும் ஏற்படும் மனச் சோர்வும், தமது அன்றாட வேலைகளில் ஈடுபட இயலாத உடல் அசதிக்கான  காரணங்களை பாபா விளக்குகிறார். இது அவர்களது சக்திஓட்டத்தில் உள்ள குறைபாடு. அவர்கள் எண்ணத்தில் கள்ளம் புகுந்து, மாசு பட்டுவிட்டது. அதனால் தமது புலன்களை முறையற்று, தவறான வழிகளில் செலுத்துகின்றனர். இதனால் அவர்களிடம் இருக்கும் சக்தி வீண் விரயமாகிறது. ஆகவே களங்க எண்ணங்கள் விடுத்து, நிர்மலமான எண்ணங்களில் ஈடுபட்டு, புலன்களை நல்வழியில் செலுத்தினால், சோர்வு நீங்கும். சுகம் பிறக்கும்.


🌻சாய்ராம்... உடல் நலனே உள்ள நலனுக்கு முன்னோடி. இறைவன் வாழும் இந்த ஊனுடலைப் பேணி , நல்வழியில் செலுத்துவோம். இதுவே பகவான் நமக்குக் காட்டும் நற்பாதையாகும்.🌻


ஆதாரம்: Hinduism today. May/June 2000, part: Health

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக