தலைப்பு

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

301-350 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..







📝 நிகழ்வு 301:

திரு. S.A Pather என்ற பெயர் கொண்ட சாய் பக்தர் முதல்முறையாக 1970இல் மும்பையில் உள்ள தர்மக்ஷேத்ராவில் சுவாமியை தரிசனம் செய்தார். தரிசனத்திற்காக அவர் அங்கு வந்திருந்தபோது ஒரு மூதாட்டி அவரை அணுகினார். அவர் தனது கைகளில் ஒரு வயதான ஆண் மகனை தாங்கிக் கொண்டிருந்தார். நமது கலாச்சாரப்படி ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தரிசனத்திற்கு உட்காருவதால், இந்த இளைஞனை தன்னருகே வைத்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று அவரிடம் கேட்டார். அதற்கு திரு. S.A Pather ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த மூதாட்டி பெண்கள் பக்கம் சென்று அமர்ந்துகொண்டார். சுவாமி அவருக்கே உரித்தான நளின நடையில் தரிசனத்திற்கு வந்தார். திரு. S.A Pather ஐ சிறிது கடந்து சென்ற பிறகு , திடீரென திரும்பிய சுவாமி , "ஓ!"என்று சொல்லிக்கொண்டே, அனைத்து கைகளும் கால்களும் ஊனமுற்று கீழே கிடக்கும் அந்த இளைஞன் அருகில் வந்தார்! விபூதியை சிருஷ்டி செய்து அவனது வலது கையில் முழுமையாக தேய்த்தார். பிறகு அவனது இடது கையையும் வலது கையையும் சேர்த்து தேய்த்த பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தன் வலது கையினுள் இரத்தம் நகர்ந்து கொண்டிருப்பதைப் போல் உணர்வதாக திரு. Pather இடம் தெரிவித்தார் அந்த இளைஞர். முதலில் தன் விரல்களை அசைக்க ஆரம்பித்து, பிறகு தன் கையையே அசைத்தார். தன் வலது கையை உயரத் தூக்கினார்! வெகுவிரைவில் இதுபோலவே தனது இடது கையும் சுவாதீனத்திற்கு வருவதை உணர்ந்தார்! பிறகு மெதுவாக எழுந்து நின்றார்! தனது கால்களை ஒன்றன்பின் ஒன்றாக நகர்த்தினார். 

இருபத்தி நான்கு வருடங்களுக்குப் பிறகு தனது கைகளையும் கால்களையும் நகர்த்த முடிந்ததை எண்ணி விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தாயின் கண்களில் நீர் வார்த்தது! சுவாமி தரிசனம் முடிந்து இருந்ததால், அதே ஆனந்த நடனத்துடன் தன் தாயிடம் சென்றார்! தன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்! அப்போது அவர்கள் இருவரும் Pather அவர்களை மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த பார்வையுடன் நோக்கியபோது, Pather அவர்களின் கண்களிலும் நீர் ததும்பியது! 

தனக்குக் கிடைத்த சுவாமியின் முதல் தரிசனத்தின் போதே, எப்பேர்ப்பட்ட அனுபவம் அவருக்கு!

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 302:

14 வயது சிறுவனாக பாபா உரவகொண்டா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை சீரடி பாபாவாக நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்து அவர்களது குறைகளை தீர்த்து வைத்தார். அந்த காலகட்டத்தில் அதே உயர்நிலைப் பள்ளியில் நான் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். நானும் வியாழக்கிழமைகளில் அவரிடம் சென்று மிகவும் பயன் அடைந்தேன். என்னுடைய மாணவராக இருந்த சத்யா, அப்போதும்கூட தன் கைகளை அசைத்து விபூதியை வரவழைத்து கொடுத்தார். சில காலத்திற்கு முன்னால் 22 வயதே ஆகியிருந்த எனது மகள் காலமானாள். இதன்காரணமாக என் மனைவி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள். இதனால் சத்யா அவ்வப்போது என் வீட்டிற்கு வருவார். பிறப்பு இறப்பு எனும் இரு பெரும் தொல்லைகளை பற்றி நீண்ட உரை நிகழ்த்துவார்; பிறகு என் மனைவிக்கு ஆறுதல் சொல்வார். இதன் மூலம் என் மனைவி விரைவில் சகஜ நிலைக்கு திரும்பினாள். அவரது பிரேமை நிரம்பிய வார்த்தைகள் என் மனைவியின் மனக்குமுறல்களை அடக்கி அமைதியைக் கொடுத்தன. பகவானின் மேல் அவளுக்கு இருந்த பக்தியை அதிகப்படுத்தின. ஒரு வியாழக்கிழமை அவள் சுவாமியை வணங்கிய போது அவர் விபூதியை அளித்து, "அம்மா! நான் உன் பக்தியை போற்றுகிறேன். நான் திருப்தி அடைகிறேன். அடுத்த வாரம் நீ என்னை பார்க்க வா! நான் உனக்கு ஒரு அன்பளிப்பை தருகிறேன்!" என்றார். அதேபோல அடுத்த வாரம் அவள் வந்து சுவாமியின் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது, அவர் "அம்மா! நான் சீரடியில் சமாதி அடைந்த என்னுடைய இறுதி நாளன்று நான் அணிந்திருந்த அங்கியின் ஒரு சிறு துண்டை உனக்கு கொடுக்கிறேன்!" என்று கூறிவிட்டு தன் கையை ஒரு கணம் மூடித் திறந்தார்.. அவரது கையில் தோன்றியிருந்த நான்கு அங்குலம் நீளம் உள்ள ஒரு சதுர வடிவிலான துணியை காண்பித்தார்! என் மனைவியிடம் அதனைக் கொடுத்து, "இந்தத் துணியை உன் வீட்டில் வைத்து என் பெயரைச் சொல்லி பூஜை செய்து வா! அடுத்த வாரம் நீ வரும்போது மேலும் சிலவற்றைத் தருகிறேன்!" என்று கூறி எங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். மேலும் அவர், "இப்போதிலிருந்து , நீ மகிழ்ச்சியாகவே இரு! உன்னுடைய சுமைகள் அனைத்தையும் இன்று முதல் நான் தாங்குகிறேன்" என்று வரமளித்தார்! 

 அடுத்த வியாழக்கிழமை நாங்கள் சென்று சுவாமியை வணங்கிய போது முன்போலவே ஒரு கணம் தன் கையை மூடி திறந்தார். அவர் கை நிறைய அட்சதை நிரம்பியிருந்தது! அப்போது அவர், "சென்ற வாரம் நான் உனக்கு அளித்திருந்த துணியில் இதை கட்டி வைத்து பூஜை செய்! இது உனக்கு மன அமைதியைத் தரும்! இனிமேல் நீ கவலைப் படுவதற்கான எந்த காரணமும் இருக்காது! நீ என் மேல் முழுமையான பக்தியை பெறுவதற்கான வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்!" என்று கூறினார்!

 இதேபோல் 5வது வியாழக்கிழமையும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது! அவர் என் மனைவியிடம், "அம்மா! நீ உன் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தை வை! அங்கேயே நான் உனக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பேன்!" என்றார்! எங்களை உடனே அதை செய்யவும் வைத்தார்!

ஆதாரம்: சனாதன சாரதி ஆகஸ்ட் 2022 இதழில் பதிவாகியுள்ள பகவானுடைய ஆசிரியர், திரு. மஞ்சிராஜு தம்மிராஜு அவர்களது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 303:

✍🏻Mr. Eruch K. Wadia என்ற பக்தர், பெங்களூரில் இருந்து எழுதுகிறார்:

நூமோ தொராக்ஸ் என்ற நுரையீரல் நோயால் நான் மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டிருந்த போது, விக்டோரியா ஹாஸ்பிடலில் உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு நான் அறிவுறுத்தப்பட்டேன். ஏனெனில் அதுவரை நான் மேற்கொண்ட சிகிச்சைகள் எனக்கு பலன் கொடுக்கவில்லை. இந்த அறிவுரையை செயல்படுத்துவதற்கு முன்னால் நான் பிரசாந்தி நிலையத்திற்கு சென்றேன். சிறிது தொலைவில் இருந்து எனக்கு தரிசனம் கிடைத்தாலும் நான் மனதார சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன். மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதற்காக உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 

 மருத்துவர்கள் என்னை பலவிதமாக பரிசோதித்த பின்னர், "உங்களுக்கு நூமோ தொராக்ஸ் என்ற நோய் உள்ளது என்று யார் உங்களுக்குக் கூறினார்கள்?" என்று கேட்டார்கள்! உடனே நான், "தீவிர பரிசோதனைகளுக்காக, நான் எஸ் டி எஸ் சானடோரியத்திற்கு அனுப்பப்பட்டேன். எனது வலது நுரையீரல் பகுதியில் இந்த நோய் இருப்பதாக எனக்கு கூறப்பட்டது" என்று பதிலளித்தேன். அதற்கு அந்த மருத்துவர்கள், "நீங்கள் கூறுவது எங்களுக்குப் புதிராக உள்ளது. நீங்கள் கூறிய அதே வலது நுரையீரல், சாதாரணமாக உள்ள உங்களது இடது நுரையீரலை காட்டிலும், நன்றாகவும் பலமாகவும் உள்ளது! உங்களிடத்தில் எந்த குறையும் இல்லை ஆகவே எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை!" என்று கூறினர்! 

சுவாமியின் தரிசனம் மட்டுமே என்னுடைய நோயைப் போக்கி பூரணமான ஆரோக்கியத்தை அளித்துள்ளது!!

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 304:

ஒருமுறை சுவாமி ஒரு பெண் பாடகருக்கு பிரசாந்தி நிலையத்தில் ஒரு நெக்லஸ் வரவழைத்துக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்னர் அவர் திரு. ராஜா ரெட்டியுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது , திடீரென ஒளியுடன் மிளிர்ந்த ஒரு பொருளை காற்றில் இருந்து அவர் பிடித்தது போல தெரிந்தது! பாடகருக்கு அவர் அளித்த நெக்லஸ் தான் அது! அப்போது சுவாமி , "சற்று முன் தான் அந்த பாடகருடைய கணவர், நான் அளித்த நெக்லஸை ஒரு பெட்டியிலே வைத்து அதனை எடுத்துக்கொண்டு அதன் மதிப்பை தெரிந்து கொள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று கொண்டிருக்கிறார். பாவம்! அங்கு சென்று பெட்டியை திறக்கும் போதுதான் அவருக்கு தெரியும், அது காலியாக இருக்கிறது என்று!! வணங்கி வழிபடுவதற்கான தகுதியைக்கொண்ட அந்த நெக்லஸ், வணிகம் செய்யும் மனோபாவத்தில் தனது விலை மதிப்பை எடை போடும் முயற்சியை கண்டு வெகுண்டு என்னிடமே திரும்பி வந்துவிட்டது!" என்று விளக்கினார்!

 பிறகு அந்தப் பாடகரின் கணவர், இந்த விவரங்களை பின்னர் அறிய வந்து, சுவாமியிடம் மன்னிப்பு கேட்டு அதனை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆதாரம்: திரு. ரா. கணபதி அவர்கள் எழுதிய பாபா: சத்ய சாயி என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 305:


சுவாமி உடனான எனது முதல் அனுபவத்தை நான் இப்போதும் நினைவில் வைத்துள்ளேன்.  இன்டர்வியூ அறையில் நான் சுவாமிக்கு மிக அருகில் அமர்ந்து இருந்தேன். இந்த இளைஞன் இறைவனது அற்புதங்களில் நம்பிக்கை அற்றவன் என்பதை சுவாமி அறிந்திருந்தார். இந்த இளைஞன் சுவாமியைப் பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை  ஆதலால் அவனுக்கு தனது இறைத்தத்துவத்தின் ஒரு பொறியைக் காண்பிக்க அருள் கூர்ந்தார். ஆனால் அவர் விபூதி வரவழைப்பது மட்டும் நான்  ஏற்கனவே பார்த்திருந்தேன்.  எங்களைத் தவிர அங்கே மற்றொரு குழுவினர் இருந்தனர். பிறந்த சில மாதங்களே ஆகிய ஒரு குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வை நடத்தி கொடுக்குமாறு அவர்கள் சுவாமியை வேண்டினர். அப்போது அந்தக் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அந்தக் குழந்தையை சுவாமி தன் மடியில் வாங்கிக் கொண்டார்.  குறும்புத்தனமான பார்வையுடன்  அவர் என்னை பார்த்து, "குழந்தைக்கு நான் காது குத்த வேண்டும் என்று அவர்கள் ஆசைப் படுகின்றனர். இதோ பார்!"  என்று கூறிக்கொண்டே தன் கையை அசைத்து,  தங்கத்தினாலான இரண்டு காதணிகளை வரவழைத்தார்.  பிறகு என்னிடம், "இதோ!  இப்போது நான் இந்தக் காதணிகளை குழந்தையின் காதுகளில் குத்தப் போகிறேன்.  அப்போது என்ன நடக்கும் என்று உனக்கு தெரியுமா?"  என்று கேட்டார்.  அதற்கு நான், "மிகவும் வலிக்கும் ஆதலால் அந்த குழந்தை அழும்" என்று கூறினேன்.  உடனே அவர், "உண்மையாகவா?" என்றார்!  ஒரு சில நொடிகளில் சுவாமி அவற்றை குழந்தையின் காதுகளில் குத்தி விட்டார்!!  ஆனால் என்ன ஆச்சரியம்!  குழந்தை அழுவதை விட்டுவிடுங்கள்!  அது ஒரு சிறிதும் கூட  சிலிர்க்கவோ அல்லது  நகரவோ  இல்லை! இதுதான்  சுவாமி உடனான எனது முதல் அனுபவமும் உரையாடலும்!!
 
ஆதாரம்:  நாகேஷ் டி.  தாக்கப்பா  அவர்கள்  ஆகஸ்ட் 2022  சனாதன சாரதி இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 306:

1963 ஆகஸ்ட் மாதத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்தது. எங்கள் ஊரில் அப்போது இருந்த ஒரு நீதிபதியின் மகளுக்கு தனது முதல் பிரசவத்திற்கான நாள் நெருங்கிய நிலையில், அவளது மைத்துனி அவளை மருத்துவமனையில் இருந்த என்னிடம் அழைத்து வந்தாள். அவ்வப்போது வலி அதிகமாகவே வந்து கொண்டிருந்தது; ஆனால் ஒரு நாள் பொழுது கழிந்த பின்னரும் குழந்தை உடனே பிறக்க போவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்போது எங்கள் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. ஆகையால் நான் இடுக்கிகளுடன்(forceps) என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். அன்று இரவு அவளது மைத்துனி என்னிடம் வந்து, " நாள் முழுவதும் அவள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறாள் , ஆகவே நீங்கள் தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்" என்று கூறினாள். நானும் அதைப் பற்றி யோசித்து, அந்தப் பெண்ணிற்கு ஊசி போட்டுவிட்டு, பிரசவத்திற்கு தேவையான மற்ற வேலைகளை கவனித்தேன். பிரசவ அறை தயாராகிய பின்பு நான் வெளியே ஹாலில் வந்து அமர்ந்தேன். ஐந்து நிமிடத்திற்குள் என்னை மிகவும் அவசரமாக உள்ளே அழைத்தார்கள். நான் உள்ளே செல்வதற்குள் பிரசவம் முடிந்து விட்டிருந்தது!! ஐந்து நிமிடத்திற்கு முன்னால் சுகப்பிரசவம் ஆவதற்கான அறிகுறி முற்றிலும் இல்லாமல் இருந்தது. கருப்பையின் வாய் விரிவடையாமலேயே இருந்தது!! மிகுந்த வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தாள். சிசேரியன் மட்டும்தான் ஒரே வழி என்ற நிலை இருந்தும் கூட, கண் இமைகள் மூடித் திறக்கும் நேரத்தில் சுகப்பிரசவம் நடந்து விட்டிருந்தது! இதைப் பார்த்த நான் மிகவும் வியப்பில் ஆழ்ந்தேன்!! 
 மறுநாள் சுவாமியிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 
  அதில் அவர், " ஆகஸ்ட் 16ஆம் நாள் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி தினம் ஆகும். ஆகையால் நீ இங்கு வருவாயா?" என்று கேட்டிருந்தார். 
 பிரசவம் நடந்த மூன்றாம் நாள் நான் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினேன். சுவாமி அழைப்பு விடுத்திருந்ததால், சென்று வர வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படியே நான் அங்கு சென்றேன். ஜென்மாஷ்டமி முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சுவாமி என்னை அழைத்து பேசினார். அப்போது, " நீ எப்போது திரும்ப போகிறாய்?" என்று கேட்டார். இத்தகைய கேள்விக்கு நாங்கள் எப்பொழுதும், " சுவாமியின் விருப்பம்" என்றே பதிலளிப்போம். அதற்கு சுவாமி, " இப்போது என்ன அவசரம்? கிருஷ்ணமூர்த்தியின் மகளுக்குதான் பிரசவம் ஆகிவிட்டதே!" என்றார்! வேடிக்கை என்னவென்றால், அந்த நீதிபதியின் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பது அதுவரை எனக்கு தெரியாது!! ஆகவே நான், " சுவாமி! கிருஷ்ணமூர்த்தி என்பவர் யார்?" என்று கேட்டேன்! அதற்கு சுவாமி, " அவர்தான்! உங்கள் ஊரில் உள்ள நீதிபதி!! அவரது மகளுக்குத்தான் சுக பிரசவம் ஆகிவிட்டதே!" என்றாரே பார்ப்போம்!! எனக்கு தூக்கி வாரி போட்டது! "கடவுளே! நீதான் அவளுக்கு பிரசவம் பார்த்தாயா?" என்று என்னுள் கேட்டுக் கொண்டேன். ஊருக்கு சென்றவுடன், அந்த நீதிபதி குடும்பத்திடம், " பிரசவம் பார்த்ததற்கான ஊதியம் எனக்கு வேண்டாம். ஏனென்றால் நான் அதை செய்யவில்லை! சுவாமிதான் அதனை செய்திருக்கிறார்!" என்று கூறினேன்.
  
ஆதாரம்: டாக்டர். கோடேடி சரஸ்வதி என்ற பழம்பெரும் பக்தர், சனாதன சாரதி அக்டோபர் 2021 இதழில் எழுதிய பதிவு.

📝 நிகழ்வு 307:

ஒருமுறை, எனது மூன்று மகன்களையும் பெரியம்மை நோய் தாக்கியது. உடல்கள் முழுதும் கொப்புளங்கள் தோன்றின. மேலும் அவர்கள் வாந்தி எடுத்துக்கொண்டு, இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்தனர். அப்போது நான் பர்த்தியில் இருந்த என் தாய்க்கு கடிதம் எழுதினேன். உடனே ஊருக்குத் திரும்பி வந்து, இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். அதை அவள் சுவாமியிடம் எடுத்துச் சென்று, " சுவாமி! நான் பெங்களூருக்கு செல்கிறேன். பெரியம்மை தாக்கிய குழந்தைகளுடன் என் மகள் தவித்துக் கொண்டிருக்கிறாள். அங்கு சென்று சமையல் செய்தாவது நான் அவர்களுக்கு உதவுவேன்!" என்று கூறினாள். உடனே சுவாமி அவளிடம், " நீ வேறு என்ன செய்வாய்?"என்று கேட்க, அவள், " நான் உங்களிடம் வேண்டிக் கொள்வேன்!" என்று பதிலளித்தாள். அதற்கு சுவாமி, " அவ்வளவு தூரம் செல்வதற்கு பதிலாக, நீ இங்கிருந்து கொண்டே என்னிடம் வேண்டிக் கொள்ளலாமே! நீ இங்கேயே தங்கினால், நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன். எனது அறிவுறுத்தல்களைக் கடிதம் மூலம் உன் மகளுக்கு அனுப்பி விடு. ஆனால் நீ அங்கு செல்லாதே!" என்று கூறிவிட்டார். அதன்படியே என் அம்மாவும் எனக்கு கடிதம் எழுதி அனுப்பி விட்டாள். மிகவும் ஆச்சரியப்படும்படியாக , எனது பேரன்களின் உடல்கள் மீது இருந்த அனைத்து கொப்புளங்களும் திடீரென மறைந்து போயிருந்தன! கண்களும் தெளிவாக இருந்தன! காய்ச்சலும் குறைந்து போய் சீக்கிரமாகவே அவர்கள் தங்களது இயல்பான உடல் நிலையை அடைந்தனர். 
 சுவாமியிடம் அவர்களது உடல்நிலை குறித்து என் தாய் விவரிக்க ஆரம்பித்த அந்த கணத்திலிருந்து , அவர்களது இன்னல்கள் விலக ஆரம்பித்தன. சுவாமியினுடைய கட்டளைகளும் அவரது வாக்குகளும் எப்பேர்ப்பட்ட பேராற்றல் படைத்தவை!!
 
ஆதாரம்: ஜனவரி 2023 சனாதன சாரதி இதழில் திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி அவர்களின் பதிவு.


📝 நிகழ்வு 308:

திரு.பத்ரம் என்ற பக்தர் எனக்கு பல சந்தர்ப்பங்களில் மிகவும் உதவியாக இருந்தவர். அவர் ஒருமுறை தசரா பண்டிகையை முன்னிட்டு புட்டப்பர்த்திக்கு சென்று இருந்தார். அவரது மனைவி மாதவிடாய் காலங்களில் மிக அதிகமான இரத்தப் போக்கினால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். கணவர் ஊரில் இல்லாத நேரத்தில் இந்த சிக்கல் ஏற்பட்டதால், அவருக்கு நான் ஒரு சிறியதான அறுவை சிகிச்சை ஒன்றை செய்து விட்டு அவர் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் நானும் புட்டப்பர்த்திக்கு சென்றேன். அப்போது ஒரு நாள், சுவாமி திரு. பத்ரம் அவர்கள் அருகே வந்து, *"பத்ரம்! நான் நேற்று இரவு உன் வீட்டிற்கு சென்றேன்!"* என்றார். அதற்கு அவர், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள், சுவாமி !?" என்று ஒரு பதட்டத்துடன் கேட்டார். அதற்கு சுவாமி, *"உன் மனைவி உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நான் நேற்று இரவு அங்கு சென்று அனைத்தையும் சரி செய்து விட்டு திரும்பினேன்!"* என்றார். சில நேரம் கழித்து என்னை சந்தித்த திரு. பத்ரம், " என் மனைவி என்ன செய்தார் என்று தெரியவில்லை, உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது! சுவாமி அங்கே சென்று உதவியிருக்கிறார்!" என்றார். அவரது உடல்நிலை பற்றி எனக்குத் தெரியும் ஆதலால் அவர் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டும் என்று நானும் எண்ணினேன். திரு.பத்ரம் அவர்களும் தனது ஊரான அமலாபுரத்திற்கு உடனே விரைந்தார். அங்கு என்ன நடந்தது? மூத்த மகள், ஒரு சிறிய அறையில், தன் தாயின் அருகே மற்றொரு படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். திரு.பத்ரம் அவர்களின் மனைவி உறக்கத்திலிருந்து விழித்து, தன் மகளிடம், "எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, சிறிது தண்ணீர் கொடு!" என்று கேட்டுள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளின் காதுகளில் இந்த வேண்டுகோள் விழாமல் இருந்ததால், தண்ணீரைக் குடிப்பதற்குத் தானே எழுந்து செல்ல முற்பட்டபோது, கீழே விழுந்துள்ளார். அவ்வாறு கீழே விழும் போது, *"ஸாயீச்வரா!"* என்று அழைத்துள்ளார்! அதே நேரத்தில் *சுவாமி அங்கு தோன்றி அவருக்கு தண்ணீரும் திருநீறும் கொடுத்தார்! திருநீற்றை அவரது வயிற்றிலும் வாயிலும் போட்டுவிட்டு, அவரை மீண்டும் படுக்கச் செய்துவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்!* இதைத்தான் சுவாமி திரு.பத்ரம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்! மறுநாள் சுவாமி என்னை அழைத்து, *"ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை! அவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால்தான் அவ்வாறு நிகழ்ந்தது. நான் அங்கு சென்று அதனை சரி செய்து விட்டேன்! ஆகையால் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்"* என்றார்! அந்த நிகழ்வுக்குப் பிறகு திரு.பத்ரம் அவர்களின் மனைவி முற்றிலும் அந்த நோயிலிருந்து குணமாகி விட்டார்!!
 
ஆதாரம்: டாக்டர். கோடேடி சரஸ்வதி என்ற பழம்பெரும் பக்தர், சனாதன சாரதி அக்டோபர் 2021 இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 309:

 ஒரு நாள் சுவாமி என்னுடைய மருமகளிடம்,  தனது குழந்தைகளை கூட்டிக் கொண்டு  புட்டபர்த்திக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.  ஆனால்  சில நாட்களுக்கு முன்னர் தான்  எனது இரண்டாவது மகனை  நாய் ஒன்று கடித்து விட்டது.  அதற்குத் தேவையான மருந்துகளையும்  ஊசிகளையும் அவன் எடுத்துக் கொண்டிருந்த போதும்  அதைப் பற்றி கவலைப்படாமல் நாங்கள் அனைவரும் புட்டபர்த்திக்கு சென்றோம்.  நாங்கள் அங்கு சென்ற போது சுவாமி எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.  அப்போது கோடை காலம் தன் உச்சத்தில் இருந்த சமயம்,  என் பேர குழந்தைகள் எங்கு விளையாடுவார்கள் என்று கவலையில் நான் இருந்தேன்.  அப்போது என் பயத்தை உறுதி செய்வதை போல,  நீலு என்ற என்  பேரனின் காலில் மேல் லாரி ஏறியது!  அவனது பாதம் மிகவும் மோசமான நிலையில் காயமடைந்ததும்  இல்லாமல்,  அவனது கால் கட்டை விரல் மற்ற விரல்களில் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில் மிகவும்  அதிகமாக  இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.  அந்த காலகட்டமான 1950 களில்,  புட்டப்பர்த்தியில் ஒரு மிக சிறியதான  மருத்துவ சிகிச்சை மையம் இருந்தது. எனது மூத்த மகன்  உடனே சுவாமியிடம் சென்று  கவலைக்கிடமான இந்த நிகழ்வை அறிவித்தான்.  உடனே சுவாமி தன் அங்கியின் கைப்பகுதியை மேலே தூக்கிவிட்டு  லாரியின்  சக்கரம்  தன் கை மேல் ஏறிய பதிவைக் காண்பித்தார்!  அப்போது அவர் கையில் இருந்தும் இரத்தம் வெளிவந்து கொண்டிருந்தது!!
 என் பேரனை திரு.கஸ்தூரி  அவர்களின் வீட்டு  வாசலில் உள்ள வராந்தாவில்  படுக்க வைத்திருந்தோம்.  சுவாமி தினமும் அங்கு வந்து அவனைப் பார்த்துச் செல்வார்.  திரு.கஸ்தூரி அவர்களிடமும் அவ்வப்போது அவனைப் பற்றிக்  கேட்பார்.  அவ்வாறு ஒரு நாள் அங்கு வந்து அந்த வராந்தாவில் அமர்ந்து கொண்டு எங்கள் குடும்பத்துடன் பேசினார்.  அவர்,"  உங்கள் எல்லோரையும் நான் ஏன் இங்கு அழைத்தேன் என்று தெரியுமா?  இந்த விபத்து உங்கள் ஊரில் நிகழ்ந்திருந்தால் உங்களால் என்ன செய்திருக்க முடியும்?  இந்தச் சிறுவன் அங்கே இறந்திருக்க கூடும்.  நான் இந்த சம்பவம் நிகழாமல் பார்த்துக் கொண்டேன்.  அங்கே உங்களை யார் கவனித்துக் கொண்டிருக்க முடியும்?"  என்றார்.  அதற்கு என்னுடைய முதல் மகன், "  நாங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சுவாமியால் எங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியுமே!"என்று  கூறினான்!  அதற்கு சுவாமி, "  அப்படி அல்ல;   அனுபவிக்கப்படவேண்டிய  கஷ்டங்கள் அனைத்தும்  நான் இருக்கும் இடத்திலேயே  நடந்தேற வேண்டும் என்று நினைத்தே நான் உங்களை இங்கு அழைத்தேன்.  உங்களுக்குப் புரிகிறதா?  என் முன்னால் நிகழ்ந்தால் அதன் தாக்கம் உங்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும்!" என்று கூறினார்.  அவரது அன்பும் அனுக்கிரகமும் கூடிய அரவணைப்பில் நாங்கள்  மெய் மறந்து போனோம்!
  
ஆதாரம்: ஜனவரி 2023  சனாதன சாரதி இதழில்  திருமதி.  கருணாம்பா ராமமூர்த்தி அவர்களின்  பதிவு.


📝 நிகழ்வு 310:

 திரு ராமமூர்த்தி என்ற பக்தர் ஒருவர் புட்டபர்த்தியில் கேன்டீனில் மேலாளராக பணி செய்து வந்தார். அவரது ஏழு வயது மகளுக்கு ஒரு நாள் கடுமையான ஜுரமாக இருந்தது. அதனால் அவள் தன் சுயநினைவை இழந்தாள். அவளது தந்தை என்னிடம் வந்து இது குறித்து பேசினார்: " அவள் எழுந்திருக்கவே இல்லை. தன் சுயநினைவை இழந்து இருக்கிறாள்" என்று கூறினார். நான்கு நாட்களுக்கு இந்த நிலையே நீடித்தது. அதனால் நான் சுவாமியிடம் சென்று கூறினேன். உடனே சுவாமி என்னிடம், " இரவு முழுவதும் அவள் அருகில் நீ உட்கார்ந்து கொள்!" என்றார்! அதன்படியே நான் இரவு முழுவதும் அவள் அருகிலேயே அமர்ந்து அவ்வப்போது குளிர்ந்த நீரில் நனைத்துப் பிழிந்த துணியால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தேன். காலையில் அந்தக் குழந்தை தன் கண்களை திறந்தாள். அதனைப் பார்த்த எனக்கு நிம்மதி ஏற்பட்டது. அவள் தன் சுயநினைவை திரும்பப் பெற்று இருந்தாள்! 
 காலை உணவின்போது நான் சுவாமியிடம் சென்று, " சுவாமி! அந்தக் குழந்தை இப்போது தன் சுயநினைவை திரும்பப்பெற்று விட்டாள். இப்போது அவள் நலமாக இருக்கிறாள்!" என்றேன். அதற்கு அவர், "சரி!" என்று பதிலளித்தார்!
 நான் புட்டப்பர்த்திக்கு சென்றிருந்த போதெல்லாம், என் ஊரில் உள்ள நோயாளிகளை அவர்தான் காத்தருள் புரிவார்! நான் புட்டபர்த்தியிலிருந்து திரும்பி வந்தவுடன் எனது நோயாளிகள், " நீ இங்கு இல்லாத போது நாங்கள் மிகவும் நன்றாகவே பாதுகாக்கப்பட்டோம்! 
 ஏனெனில் சுவாமியே எங்களை (உன்னை விட) நன்கு கவனித்துக் கொண்டார்!" என்று கூறுவார்கள்!
 
ஆதாரம்: டாக்டர். கோடேடி சரஸ்வதி என்ற பழம்பெரும் பக்தர், சனாதன சாரதி அக்டோபர் 2021 இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 311:

எனது தாயார் தனது மைத்துனிகள் இருவருடன் முதல் முறையாக 1946இல் புட்டபர்த்திக்கு சென்றார்.  அப்போது ஒரு நாள்  தான் சமைத்த உணவை சுவாமி அருந்த வேண்டும் என்று பிரார்த்தித்தார்.  அவரும் உணவு அருந்துவதற்காக உடனே வந்து அமர்ந்தார்.  சுவாமி உணவை உண்டு முடித்த பின்னர் எனது தாயார்,  தனக்கு மந்திரோபதேசம்  செய்து அருளும்படி சுவாமியிடம் வேண்டிக் கொண்டார்.  உடனே சுவாமி, " சென்ற வருடம்  உனது ஆன்மீகத் தேடல் பொருட்டு நீ ஒரு இடத்திற்கு சென்றாய்.  அது ஒரு சிறந்த இடம் ஆகும்.  அங்கே உனக்கு என்ன மந்திரம் உபதேசிக்கப்பட்டதோ  அதையே உச்சரித்துக் கொண்டு இரு.  நீ மிகவும் ஆசைப்பட்டால்,  சாயி என்ற சொல்லை  மந்திரத்தின் முதலில் சேர்த்து சொல்லிக்கொள்!"  என்று உரைத்தார்.  இந்த உண்மை என் தாயைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத ஒன்றாகும்!
 சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாலைப் பொழுதில்  சித்ராவதி ஆற்றின் மணல் திடலில்,  அங்கு இருந்த பக்தர்களுக்கு மணலில் இருந்து விபூதி வரவழைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.  இப்போது என் தாயாரிடம்  தன் கையில் மணலை அள்ளி  எடுத்துக் கொள்ளும்படி கூறினார்.  அவரும்  மிகுந்த சிரத்தையோடு அவ்வாறே செய்தார்.  அப்போது சுவாமி, "  அந்த மணலில் என்ன இருக்கிறது என்று பார்!"  என்றார்.  ஆனால்  அந்த மணலில் ஏதும் இருப்பதாக  என் தாய்க்கு தெரியவில்லை.  உடனே சுவாமி தனது கை விரலால் அந்த மணலை சிறிது கிளறிவிட்டு அதிலிருந்து மடித்த காகிதம் ஒன்றை எடுத்தார்.  அதனை என் அம்மாவிடம் கொடுத்தார்.  சுவாமியின் இருப்பிடமான பழைய மந்திரத்தை அடைந்தபின், தான் தனியாக இருக்கும்போது அதனைப் பிரித்துப் பார்க்குமாறு கூறினார்.  அவ்வாறே அனைவரும் சித்ராவதியிலிருந்து  நடந்து பழைய மந்திரத்தை அடைந்த பின்னர்,  என் அன்னை அந்த சீட்டைப் பிரித்துப் பார்த்தார்.  அவளுக்கு ஏற்கனவே உபதேசக்கப்பட்டு இருந்த " மந்திரம்"   அதில் எழுதப்பட்டிருந்ததைப்  பார்த்து என் அன்னை மிகவும் ஆச்சரியமடைந்தார்!!
 
ஆதாரம்:  திருமதி கருணாம்பா ராமமூர்த்தி  என்ற  பழம்பெரும் பக்தை  எழுதிய "  ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி"  என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 312:

பழைய மந்திரத்தின் வழியாகச் செல்லும் திருமண ஊர்வலங்கள் அந்த காலங்களில் ஒரு வழக்கமான காட்சியாக இருந்து வந்தது.  அவ்வாறு ஒருநாள் திருமண ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்த போது சுவாமி உடனே எங்களை வாயிலுக்கு அழைத்து  அந்த ஊர்வலத்தை பார்க்கச் சொன்னார்!  அதில் இருந்த மக்கள் அந்த நிகழ்ச்சிக்கு என்று மிகவும் பாரம்பரியமான உடைகளை அணிந்திருந்தனர். ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஊர்வலம்,  சுவாமி  நின்று கொண்டிருப்பதை சிறிதும் கண்டுகொள்ளாமல் பழைய மந்திரத்தை கடந்து சென்றது.  ஆயினும் கள்ளமற்ற ஒரு சிறு குழந்தைக்கே உடைத்தான ஆர்வத்துடன் அந்த ஊர்வலத்தை சுவாமி பார்த்துக் கொண்டிருந்தார்.  சிறிது நேரம் கழிந்த பின்னர்  அவர் என்னை அழைத்து, "அம்மாயி!  இப்போது ஒரு திருமணம் நடந்து முடிந்து விட்டது. இந்தக் கணத்திலிருந்து ( உலக ரீதியான)  பிணைப்பு நீண்டு கொண்டே போகின்றது. வேண்டுகோள்கள் ஆரம்பிக்கின்றன -  முதலில் ஒரு ஆண் குழந்தைக்காக,  பிறகு அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்காக ,  கல்விக்காக,  வேலைக்காக,  பிறகு இவர்களைப் போலவே இவரது மகனின் திருமணத்திற்காக, என்று  இறைவனிடம் கோரிக்கைகள் தொடர்கின்றன!  மகனுக்கு ஒரு ஆண் அல்லது பெண் குழந்தையோ பிறந்தவுடன்,  மேலே குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளின் மற்றொரு சுழற்சி மீண்டும் தொடங்குகிறது! இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்காக எவரும் இறைவனிடம் வேண்டுவதே இல்லை!"  என்று உரைத்தார்!!

ஆதாரம்:  திருமதி கருணாம்பா ராமமூர்த்தி  என்ற  பழம்பெரும் பக்தை  எழுதிய "  ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி"  என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 313:

ஸ்ரீ புல்லூரி ராஜேஷம் சாஸ்திரி அவர்கள் நினைவு கூறுகிறார்:

 பிரசாந்தி நிலையத்தில் என்னை இன்டர்வியூவிற்கு அழைத்து என்னிடம் பேசுகையில் பாபா அவர்கள் என்னை ஆசீர்வதித்து எனக்கு விபூதி அளித்தார். எனக்கு வழிகாட்டியாகவும் காப்பாளனாகவும் தான் இருப்பதாக அவர் அப்போது உறுதி அளித்தார்.

 மிகச் சிறந்த குரு ஒருவரால் உபதேசம் பெற்ற நான் 'ஜகத் ஜனனி' யின் உபாசகராக இருப்பவன். என் பூஜை அறையில் எனது குரு எனக்கு அளித்திருந்த 'சக்ரம்' ஒன்றை வைத்து பல வருடங்கள் பூஜை செய்து வந்தேன்.

அனைத்தையும் சிருஷ்டிக்கும் அவரது கைகளால் எனக்கு ஒரு ஜகத் ஜனனி விக்ரகம் வரவழைத்து தருமாறு மிகவும் தைரியமாக அந்த இன்டர்வியூவில் சுவாமியிடம் வேண்டினேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டி , "நான் உனக்கு தருகிறேன்!" என்றார். பிறகு என்னை வெளியே அனுப்பிவிட்டு மற்றவர்களை அழைத்தார். இதனைக் கண்டு நான் குழப்பம் அடைந்தேன். அந்த விக்கிரகத்தை வாங்க வேண்டும் என்ற எனது தீவிரமான ஆவலில் நான் மேலும் இரண்டு நாட்கள் தங்கினேன். ஆனால் பாபா என்னை மீண்டும் அழைக்கவில்லை; என்னைப் பார்க்கவும் இல்லை! ஆகவே மிகவும் கனத்த இதயத்துடன் நான் என் கிராமத்திற்கு திரும்பினேன். என் பூஜை அறைக்குச் சென்று சக்ரம் வைக்கப்பட்டிருந்த வெள்ளிப் பேழையை எடுத்தேன். ஆனால் அப்போது அது வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததைப் போல தோன்றியது. உடனே அதன் மூடியை திறந்து பார்த்தேன். அங்கே ஒரு பொருள் ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. தங்கத்தில் மின்னிக் கொண்டிருந்த ஜகத் ஜனனி விக்ரகம் தான் அது! அதன் கீழே ஒரு காகிதப் பொட்டலம் இருந்தது. அதில் அனைவருக்கும் அபயம் வழங்கும் பாணியில் பாபாவின் படம் இருந்தது!! ஆனந்தக் கடலில் மூழ்கிய நான், அழுதேன்! நடனமாடினேன்!! அந்த விக்ரகத்தை என் கைகளில் எடுத்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்த என் கண்களின் அருகில் கொண்டு சென்று அதனை உற்று நோக்கிய போது அந்த உருவத்தின் கீழே பொறிக்கப்பட்டிருந்த "ஸ்ரீ சாயி அம்பா" என்ற வார்த்தைகளை பார்த்த போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை!

ஆதாரம்: முன்னாள் மாணவர் ஒருவர் அனுப்பிய பதிவு.


📝 நிகழ்வு 314:

1946 ஆம் வருடம் மே மாதத்தில் ஒரு நாள்- திருமதி சாக்கம்மா என்ற பழம்பெரும் பக்தை புட்டப்பர்த்தியில் சில காலம் தங்கி விட்டு மீண்டும் குடகு என்ற தனது சொந்த ஊருக்கு திரும்ப எண்ணினார். சுவாமியிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திய போது, அவர், மேலும் சில நாட்கள் தங்கி விட்டு செல்லுமாறு கூறினார். உடனே அந்த அம்மையார் சுவாமியிடம் விளையாட்டாக, "நீங்கள் வேறு ஏதாவது ஒரு புதிய வகையில், மிக அரியதும் சிறப்பு மிக்கதுமான ஒரு தரிசனத்தை எனக்கு அளிப்பதாக கூறினால் நான் இப்போது ஊருக்கு செல்வதை ஒத்திப் போடுகிறேன்" என்று பதில் அளித்தார்! 

 அன்று மாலையில் எப்போதும் போல பக்தர்கள் அனைவரும் சித்ராவதி ஆற்று படுகையில் சுவாமியுடன் கூடி அமர்ந்திருந்த போது சுவாமி திடீரென்று எழுந்து நின்றார். தனது வெறும் கைகளை காட்டி, "நான் டார்ச் லைட் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை!" என்று கூறிவிட்டு, அருகில் இருந்த குன்றின் மேல் ஏறத் தொடங்கினார். மெதுவாக இருள் சூழ ஆரம்பித்த அந்த அந்தி வேளையில் குன்றின் உச்சிவரை சுவாமி ஏறி செல்வதை நாங்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களால் அவரைப் பார்க்க முடிகிறதா என்று மூன்று முறை அவர் எங்களிடம் கேட்டார்.

  உடனே அனைவரும்," ஆம்!" என்று ஒரே குரலில் கூறினோம். அப்போது திடீரென்று அவரது உயரத்திற்கு ஒரு ஜோதி தென்பட்டது! சுவாமி அன்று மஞ்சள் நிற அங்கி அணிந்திருந்தாலும், அந்த ஜோதியின் உள்ளே சிவப்பு நிற அங்கியுடன் ஒரு பாறையின் மீது அவர் உட்கார்ந்து இருந்ததைப் போல நாங்கள் பார்த்தோம்! உடனே அந்த ஜோதி மறைந்து விட்டது. பின்னர் குன்றின் உச்சியில் இருந்து சுவாமி மெதுவாக கீழே இறங்கத் தொடங்கினார். அவ்வாறு இறங்கிக் கொண்டிருந்தபோது நடுவழியிலும் மேலும் சற்று கீழேயும்(மேலும் இரண்டு முறை) அதே ஜோதி தரிசனம் அளித்தார்!!

 மறுநாள் அவர் எங்களிடம்," ஜோதியில் என்ன கண்டீர் " என்று கேட்டார். அதற்கு நாங்கள்," சிவப்பு நிற அங்கியுடன் நீங்கள் காட்சியளித்தீர்கள்" என்று கூறினோம். அதற்கு சுவாமி, "வேறு பலர், சுவாமியை சிவன், கிருஷ்ணன், துர்க்கை போன்ற பல உருவங்களில் தரிசனம் செய்தனர்!" என்று கூறினார்!!

 

ஆதாரம்: திருமதி கருணாம்பா ராமமூர்த்தி என்ற பழம்பெரும் பக்தை எழுதிய " ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி" என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 315:

 1946 ஆம் வருடம், அக்டோபர் மாதம்:

 மைசூர் மகாராணியின் மாளிகையில் சுவாமி தங்கி இருப்பதாகவும், மேலும் சில தினங்களுக்கு சுவாமி அங்கே இருக்கப் போவதாகவும், சாகம்மா அவர்களிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அந்த மாளிகையினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்ற செய்தியினால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. யாரும் அணுக முடியாத இடத்தில் சுவாமி ஏன் தங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடையே மேலோங்கியது. ஆயினும் வெளி வாயிற் கதவுகளின் அருகே நின்று காத்திருந்தோம் எனில், சுவாமி நம்மை எப்படியாவது அழைப்பார் என்ற திடமான நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. மாலை 4 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலில் மாளிகையின் வெளி வாயிற் கதவுகள் அருகே காத்துக் கிடந்தோம். சில நேரம் கழித்து அங்கிருந்த வாயில் காவலர் எங்களின் மீது பரிதாபம் கொண்டு எங்களை உள்ளே அழைத்து அங்கிருந்த தோட்டத்தில் அமரச் செய்தார். சுவாமியின் வருகைக்காக எங்களுடைய எதிர்பார்த்து காத்திருத்தல் மேலும் தொடர்ந்தது. மெதுவாக இருள் சூழ்ந்த போது மாளிகையினுள் ஒளி விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. அப்போது ஒரு சிப்பந்தி எங்களிடம் வந்து உள்ளே வருமாறு பணித்தார்! உள்ளே சென்ற நாங்கள் அந்த இடத்தின் அமைப்பையும் அலங்கரிப்புகளையும் பார்த்து பிரமித்து போனோம்! வைகுண்டம் போல காட்சியளித்த இந்த இடம் சுவாமிக்கு ஏற்ற இடம் தான் என்று எங்களுக்குள் ஆமோதித்து கொண்டோம்! சிறிது நேரத்தில் சுவாமி எங்களை நோக்கி வந்தார்! கண்களில் கண்ணீருடன் நாங்கள் பாத நமஸ்காரம் செய்தோம்! நான் சுவாமியிடம், "சுவாமி! எங்களைப்போல ஏழை பக்தர்கள் வந்து உங்களை தரிசனம் செய்ய முடியாத இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்களே!" என்று கூறிவிட்டேன்! அதற்கு அவர், *"அம்மாயி! அவ்வாறு நீ நினைக்காதே! செல்வமும் பலமும் படைத்தவர்கள் சமூகத்திற்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர்களுக்கு நான் நினைவூட்ட வேண்டும் அல்லவா? இந்தக் குடும்பம் மிக நல்ல குடும்பம் தான்! மாளிகையின் வெளிக்கதவுகள் தூரத்தில் உள்ளதால் அவர்களால் உங்களைப் பார்த்திருக்க முடியாது. நானும் அவர்களிடம், "எனது பக்தர்கள் வெளியே காத்துக் கிடப்பார்கள்; அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்" என்றும் சொல்லிப் பார்த்தேன்! ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியில், தெலுங்கு மற்றும் கன்னடம் தெரிந்த ஒரு பக்தரின் மூலம் அவர்களுக்கு புரிய வைத்தேன்!" என்றார்!!

ஆதாரம்: திருமதி கருணாம்பா ராமமூர்த்தி என்ற பழம்பெரும் பக்தை எழுதிய " ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி" என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 316:

ஒரு நாள் பழைய மந்திரத்தில் எனது மகன் சங்கராவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இரவில் அது மேலும் அதிகரித்ததால், அவன் அமைதியற்ற ஒரு நிலையில் இருந்தான். படுக்கையில் இருந்து எழுந்து சித்தப்பிரமை பிடித்தவன் போல நடமாட ஆரம்பித்தான். நான் உடனே சுவாமியிடம் இந்த நிலையை அறிவித்தேன். உடனே அவர் அங்கிருந்த தெய்வச் சிலைகள் அருகே வைக்கப்பட்டிருந்த விபூதியை எடுத்து தடவச் சொன்னார். இரவு முழுவதும் நாங்கள் அவன் அருகே அமர்ந்து சுவாமியின் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தோம். காலையில் தரிசனத்தின் போது சுவாமி அவனது தற்போதைய நிலையை பற்றி விசாரித்தார். அதற்கு நான் "சிறிது பரவாயில்லை" என்று பதில் அளித்தேன். அதற்கு அவர் "இன்னும் சரியாகவில்லை" என்று கூறிவிட்டு விபூதி வரவழைத்து அவனது நெற்றியிலும் உடலிலும் பூசினார். "இனிமேல் சரியாகிவிடும்" என்று கூறினார். அதேபோல் மாலைக்குள் அவன் பூரண குணம் அடைந்து விளையாடத் தொடங்கி விட்டான்!

 

அன்று இரவு பழைய மந்திரத்தின் முற்றத்தில் பக்தர்களுடன் அமர்ந்திருந்தபோது, சுவாமி, அருகில் இருந்த வேணுகோபால சுவாமி கோயிலின் முக்கியத்துவத்தை எங்களுக்கு விளக்கினார்.

வால்மீகி மகரிஷி புட்டப்பர்த்தியில் தவம் செய்ததாக தெரிவித்தார்! மேலும் அவர், பழைய மந்திரம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததாகவும், இறைவன் நாராயணன் அங்கே ஒரு ரிஷி உருவில் வந்து தவம் செய்ததாகவும் கூறினார்! இந்த உண்மையை எங்களிடம் கூறியபின் அடுத்த கணத்தில் அவர் தன்னை சுட்டிக் காண்பித்துக் கொண்டு, "அதே ரிஷி தான் இப்போது அவதாரம் எடுத்துள்ளேன்!" என்று பறைசாற்றினார்!!

ஆதாரம்: திருமதி கருணாம்பா ராமமூர்த்தி என்ற பழம்பெரும் பக்தை எழுதிய "ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி" என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 317:

மும்பையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் கணக்காளராக ஒருவர் வேலை பார்த்து வந்தார். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பல லட்சங்கள் அளவில் அந்த நிறுவனம் நஷ்டம் அடைந்து வந்துள்ளது. ஆகையால் அதில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் எந்த நேரத்திலும் இந்த நிறுவனம் திவாலாகி தாம் அனைவரும் வேலை இழக்க நேரிடும் என்ற கலக்கத்தில் இருந்தனர். ஆகையால் இந்தக் கப்பல் முழுவதுமாக மூழ்குவதற்குள் வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்ற கவலையில் இருந்தனர். ஏற்கனவே நான் கூறிய அந்த ஊழியரின் மனைவி அவரிடம், "தாங்கள் சுவாமியிடம் சென்று 'இனி என்ன செய்வது' என்று கேட்கலாமே!" என்று கூறினார். இந்த யோசனையை ஏற்று அவர் புட்டபர்த்திக்கு வந்தார். சுவாமியும் அவரை இன்டர்வியூவிற்கு அழைத்தார். அவரிடம் பேசிவிட்டு, அவருக்கு விபூதி அளித்த சுவாமி, ' பங்காரு' என்று சொல்லி அவரது முதுகில் தட்டி விட்டு, அவரை அனுப்பி விட்டார்! சுவாமியிடம் தன் வேலை குறித்து எதுவும் கேட்கவில்லை என்பது வெளியே வந்த பிறகுதான் அவருக்கு மனதில் உதித்தது! இது குறித்து அவர் மிகவும் வருத்தப்பட்டார். அன்று இரவே சுவாமி அவரது கனவில் தோன்றி, "அடேய்! என்னிடம் என்ன கேட்க வேண்டும் என்று உன் மனைவி விரும்பினாளோ, அதை நீ கேட்க மறந்து விட்டாய்! கவலைப்படாதே! நீ உனது நிறுவனத்தின் மேலாளராக உயர் பதவி அடைவாய்!!" என்றார்!!!

  உடனே அந்த ஊழியருக்கு, "என்னது? மூழ்கும் கப்பலில் மேலாளரா? " என்று மனதில் தோன்றியது. ஆகையால் அவர் சுவாமி கூறியதை நம்பவில்லை. தன் இல்லத்திற்கு திரும்பி சென்ற பின் மனைவி, "சுவாமி என்ன கூறினார்?" என்று கேட்டாள். அதற்கு அவர், " இன்டர்வியூவில் நான் அவரிடம் கேட்க மறந்து விட்டேன். ஆனால் எனக்கு அன்று இரவு ஒரு புதுமையான கனவு வந்தது. அதில் அவர் தோன்றி,நான் இந்த நிறுவனத்தின் மேலாளர் ஆவேன் என்று கூறினார் " என்றார். அவருடன் சேர்ந்து பணிபுரிந்து வந்த மற்ற ஊழியர்களும் சுவாமியிடம் இவர் பெற்ற செய்தியை அறிவதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். இவரும் "நேரடியாக எந்த ஒரு நல்ல செய்தியும் இல்லை; ஆனால் எனது கனவில் அவர் தோன்றி நான் மேலாளராக பணி உயர்த்தப்படுவேன் என்று கூறினார்!" என்று தெரிவித்தார். அவர்கள் உடனே உரக்க சிரித்துக் கொண்டே "ஒரு பொருளற்ற செய்தியை பெறுவதற்கு நீ உன் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து உள்ளாய்!" என்று ஏளனம் செய்தனர்! ஆனால் சுவாமி கூறியது இறுதியில் பலித்தது! சிரித்தவர்கள் அனைவரும் சிந்தனையில் ஆழ்ந்தனர்! சுவாமியே இறுதியாக சிரித்தார்!! இந்த நிகழ்வை ஒரு கடிதம் மூலம் அந்த ஊழியர் எனக்கு தெரிவித்திருந்தார். பல வருடங்கள் கழித்து நான் மும்பை சென்று அங்கே உரையாற்றிய போது, இவ்வுலக வாழ்க்கையிலும் சுவாமி எவ்வாறு நம்மை காத்தருள்கிறார் என்பதை விளக்கும் படியாக இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். "நாம் அனைவரும் அவரது குழந்தைகள் ஆதலால் நாம் பட்டினியில் வருந்தும் நிலை என்றுமே ஏற்படாது" என்று கூறினேன். அப்போது அங்கு இருந்த அந்த பிரம்மாண்டமான கூட்டத்தின் நடுவே இருந்து ஒருவர் எழுந்துநின்று, "நான்தான் அந்த மனிதன்" என்றார்! அப்போது அவரை நான் நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். 

 தன்னுடைய சீரடி பாபா அவதாரத்திலுமே சுவாமி "என்னை நம்பி இருப்பவர் எவரும் பட்டினியில் என்றும் வாட மாட்டார்" என்று கூறி இருக்கிறார் அல்லவா!!

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 318:

மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் செவிலியர் பணியில் இருந்து விட்டு களைப்பும் பசியும் ஒன்று சேர அவசரமாக நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு தெருமுனையில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து இறைக்கும் மூச்சுடன், " நர்ஸம்மா! 

 பெரிய அக்காவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது! ஆகையால் தயவு செய்து உடனே எங்களுடன் வாருங்கள் "என்று கூறி என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்குச் சென்றனர். 

 அந்த வீட்டில் நான் பார்த்த காட்சி எனது பயம் கலந்த கவலையை அதிகரித்தது. ஒரு மரக்கட்டிலைச் சுற்றி சுமார் ஒரு டஜன் பெண்மணிகள் அழுது கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் இருந்தனர். வீட்டின் எஜமானர் ஒரு டாக்ஸி அழைத்து வர சென்று இருந்தார். அந்த 'பெரிய அக்கா' அவர்கள் கட்டிலிலே மிகுந்த வலியுடனும் மூச்சு விட முடியாமலும் திணறிக் கொண்டிருந்தார். " நான் இறந்து கொண்டிருக்கிறேன்" என்று முனகிக் கொண்டிருந்தார்.

  இவரது ஆறாவது கருத்தரிப்பு என்ற நம்பிக்கையில் பத்து மாதங்கள் கடந்துவிட்டன! ஆனால் கருப்பையில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை! எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத பல மருத்துவர்கள் இவரது நிலைமையை ஆராய்ந்து விட்டு இது ஒரு புற்றுநோய் கட்டி என்று தீர்ப்பு சொல்லி விட்டனர்! ஆனால் அறுவை சிகிச்சையைப் புறக்கணித்துவிட்டு ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற பலவிதமான துறைகளைச் சேர்ந்த மருந்துகளை, சரம் பீபி என்ற இந்தப் பெண்மணி எடுத்துக்கொண்டு உள்ளார்! ஆனால் நிலைமை மேலும் மோசமாகவே ஆகி உள்ளது. ஆகையால் அவரது கணவர் அவரை கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்திருந்தார். அந்த தருணத்தில் தான் நான் உள்ளே நுழைந்து இருக்கிறேன்.

 என்னை பார்த்தவுடன் சரம் பீபி எழுந்து உட்கார்ந்து என் கழுத்தை கட்டிக்கொண்டு புலம்ப ஆரம்பித்தார். அங்கிருந்த கூட்டத்தை வெளியே அனுப்பிவிட்டு நான் அவரை ஆராய்ந்தேன். அந்தக் கட்டி ஒரு கல்லை போல கெட்டியாக இருந்தது. வயிற்றில் குழந்தையின் இதயத் துடிப்பு, மற்றும் கால்களின் அசைவு போன்றவற்றிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தேன். அப்போது எனக்கு ஒரே ஒரு மருந்து மட்டும்தான் தெரிந்தது! பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் விபூதி பொட்டலம் ஒன்று எப்போதும் என்னுடன் இருந்தது. பாபா மட்டும்தான் இவரை காப்பாற்ற வேண்டும் என்று நான் எண்ணினேன். "சாயிமாதா! உனது பெண்ணை காப்பாற்று'' என்று கூறிக் கொண்டே பொட்டலத்தை பிரித்தேன். விபூதியினால் அவரது அடிவயிற்றில் ஒரு பெரிய 'ஓம்' வரைந்தேன். சிறிதளவு விபூதியை அவரது நாக்கில் வைத்தேன். அந்த கணத்தில் என்னையே அறியாமல், '' பயப்படாதே! நீ குழந்தையுடன் இருக்கிறாய்! சீக்கிரம் பிறந்துவிடும்!" என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து, என்னையே ஆச்சரியப்படுத்தும்படியாக உதிர்ந்தன!! இதனைக் கேட்ட சரம் பீபி அமைதி அடைந்து சாதாரணமாக மூச்சு விட்டார்! சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினார். அங்கு இருந்தவர்கள் என்னை வீட்டிற்கு செல்ல விடவில்லை. நள்ளிரவில் திடீரென்று சரம் பீபி எழுந்து உட்கார்ந்து," நர்ஸம்மா! இங்கே வந்து பாருங்கள்! குழந்தை நகர்கிறது!!"என்றார்! உடனே நான் அவரது கட்டில் அருகில் விரைந்து என் நடுங்கும் கரங்களுடன் அவரது அடிவயிற்றைப் பரிசோதித்தேன். அங்கே கல் போன்று உறுதியாக இருந்த அந்த கட்டி இப்போது தென்படவில்லை! குழந்தையும், இதயத்துடிப்பும், கை கால்களின் அசைவுகளுமே எனக்குத் தென்பட்டன! பிரசவ வலியும் சீக்கிரமே ஆரம்பித்தது! இரவு இரண்டு மணி அளவில் சுமார் எட்டு பவுண்டு எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது! அவரது கணவர் அமீர் ஜான் கொண்டு வந்திருந்த டாக்ஸி என்னை, காலை 4 மணிக்கு என் வீட்டில் கொண்டு சேர்த்தது!!

ஆதாரம்: சனாதன சாரதி - மே 1963 இதழில் வி. ஜே. தேவி என்ற பக்தை எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 319:

ஒரு நாள் மாலையில் சுவாமி எங்களை இன்டர்வியூவிற்கு அழைத்தார். உள்ளே இருந்த கடிகாரத்தை பார்த்தார். அப்போது பிற்பகல் 5:40 மணி . உடனே சுவாமி, "பஜனைக்கு இன்னும் 20 நிமிடங்கள் தான் இருக்கின்றது; நாம் என்ன செய்யலாம்?. நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்றார். இது ஒரு குழந்தையிடம் "உனக்கு ஒரு மிட்டாய் வேண்டுமா?" என்று கேட்பது போல் இருந்தது. சுவாமி பின்வருமாறு தொடர்ந்தார்:

 "தமிழ்நாட்டில் வைசிய குலத்தைச் சேர்ந்த பணக்காரரான ஒரு செட்டியார் இருந்தார். அவர் மையன்மாரில் ஏராளமான பணம் சம்பாதித்து வைத்திருந்தார். அவர் இந்தியாவிற்கு வரும்போது நிறைய தங்கம் மற்றும் நகைகளை கொண்டு வந்திருந்தார். அவர் நிரந்தரமாக தமிழ்நாட்டிலேயே தங்கி, ஒரு பிராமணர் குல பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர் மிகவும் மோசமான உலோபி(கஞ்சன்) ஆவார். அவர் தனது செல்வத்தை யாரும் அறியாத வண்ணம் பதுக்கி வைத்திருந்தார். மனைவி மக்கள் அனைவரும் அதைப் பற்றி கேட்டும் அவர் அந்த ரகசியத்தை அறிவிக்கவில்லை. உயில் ஒன்றாவது எழுதி வைக்கச் சொன்னார்கள்; தான் சேர்த்து வைத்த செல்வத்தின் மீது அவருக்கு இருந்த அளவிலாப் பற்றின் காரணமாக அதையும் அவர் செய்ய மறுத்துவிட்டார். ஒரு நாள் அவர் திடீரென்று இறந்து விட்டார். எங்கே என்ன வைத்திருக்கிறார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் இறந்த பின்பு வினோதமான நிகழ்வுகள் அரங்கேற ஆரம்பித்தன. வெறிபிடித்த பசு ஒன்று வீட்டின் பின்புறத்தில் நுழைந்து யாரையும் வீட்டினுள் வரவிடாமல் தடுத்தது. பல வருடங்கள் இவ்வாறாக இந்த பசு செய்து வந்த நிலையில் யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. திடீரென்று ஒரு வெறி நாய் வீட்டின் முன்புறம் வந்து நின்று கொண்டு யாரையும் உள்ளே வரவிடாமல் தடுத்தது. அந்த நாய் நாளடைவில் இறந்தது. அதே நேரத்தில் அவர்கள் வீட்டுக் கிணற்றின் அடியில் ஏராளமான பாம்புகள் தோன்றின. அருகில் ஒரு பெரிய நல்ல பாம்பு யாரையும் கிணற்றின் அருகில் வரவிடாமல் சீறிக் கொண்டு இருந்தது. இந்த தொல்லைகள் தாங்காமல் அவரது குடும்பம் அந்த வீட்டை காலி செய்து அந்த கிராமத்தை விட்டு அகன்றது. ஒரு வழியாக அந்த கிணற்றையும் மூடிவிட்டனர்" என்று சுவாமி சொல்லி முடித்த போது வெளியே ஓம்காரம் தொடங்கியது. 
  உடனே சுவாமி, " வாருங்கள், பஜனைக்கு செல்வோம்" என்று கூறி எழுந்தார்.  

"சுவாமி எப்போதுமே ஒரு கதையைக் கூறும்போது அதிலிருந்து நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய நெறிகளைச் சொல்லியே முடிப்பார்; இந்த முறைதான் அவர் வெறும் கதையோடு நிறுத்திவிட்டார்" என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அறையின் வாயிற் கதவு வரை சென்ற சுவாமி, " உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த பணக்காரர் தன் சொத்துக்களின் மீது வைத்திருந்த அளவு கடந்த ஆசையின் காரணமாகவே, அவர்தான் பசுவாகவும் நாயாகவும் பாம்பாகவும் பிறந்து, கிணற்றில் மறைத்து வைத்திருந்த செல்வத்தை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகையால் நீ உன் செல்வத்தின் மீது அளவிலாத பற்றுடன் சொந்தம் கொண்டாடினால் இந்த நிலை தான் ஏற்படும்; திரும்பத் திரும்ப பிறக்க நேரிடும்.இந்த பிறப்பு- இறப்பு சுழலில் இருந்து தப்பிக்க இயலாது!' என்று சொல்லி முடித்தார்.
 பஜனை முடிந்தவுடன் நாங்கள் எங்களது அறைக்கு வந்த போது அங்கே எங்களுக்காக காத்திருந்த ஒரு சிறுமி என்னுடைய பாட்டி உங்களுடன் பேச விரும்புகிறாள் அவள் உங்களது அண்ணனுடைய சிநேகிதியே ஆவாள்" என்றாள். நான் அவளிடம், " எனக்கு இப்போது நேரமில்லை; ஏனென்றால் உடனே ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கி
றேன்; ஆகையால் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக அவர்களை நான் பார்த்து பேசுகிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
 நான் சென்னைக்கு வந்தவுடன் என் அண்ணனிடம் "ஒரு வயதான மூதாட்டி என்னை சந்திக்க விரும்பினாள். உன்னுடைய சினேகிதியாம்!" என்றேன். உடனே என் அண்ணன், " உனக்குத் தெரியுமா? இந்த மூதாட்டியின் கதை விசித்திரமானது! நான் சொன்னாலும் உன்னால் நம்ப முடியாது. அவள் ஒரு பிராமண குல பெண் ஆவாள். அவள் ஒரு செட்டியாரை மணந்தாள். அவர் ஒரு பெரிய பணக்காரர் ஆனால் அதே சமயம் அவர் ஒரு மகா உலோபி! அவர் இறந்தபோது விசித்திரமான சம்பவங்கள் நடந்தேறின! வெறி பிடித்த பசு, வெறி நாய் போன்றவை வந்து அட்டகாசம் செய்தன! பாம்புகளின் நடமாட்டமும் அதிகமாகியது! அந்தக் குடும்பம் மிகவும் விரக்தி அடைந்து வீட்டை விற்றுவிட்டு பிரசாந்தி நிலையமே கதியாக வந்துவிட்டனர்!" என்றார்!
 இதைக் கேட்ட நான் மிகவும் அதிர்ந்து போனேன்!
 
ஆதாரம்: திரு. பி. வி. சங்கர் என்ற பக்தர் எழுதிய, "Yaksha Prashna ( யக்ஷனின் கேள்விகள்)" என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 320:

 கேரளாவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு அரவிந்த் என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். அவருக்கு கொல்கத்தாவில் ஒரு வேலை கிடைத்தது; திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் அங்கு சென்றார். நாளடைவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் நிறைய பணம் கையாடல் குற்றம் தொடர்பாக இவர் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனால் மிகவும் மனம் உடைந்த அவர் தன் மனைவிக்கு " என்னை இனி மறந்து விடு" என்று கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அந்த இளம் வயது மனைவிக்கு, என்ன செய்வதென்று அறியாமல் அரவிந்தின் அம்மாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவரத்தை தெரியப்படுத்தினார். கேரளாவில் இருந்த அந்தப் பெண்மணி ஒரு சாயி பக்தையாவார். ஆனால் மகனுக்கோ சுவாமியை பிடிக்காது; சுவாமியை பற்றி தவறாகவே பேசிக் கொண்டிருப்பார். இந்த தருணத்தில் அந்த தாய் சுவாமிக்கு கடிதம் எழுதினார்.

  அவருக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. அந்த கடிதத்தை வீட்டில் பூஜை அறையில் சுவாமியின் போட்டோவிற்கு கீழே வைத்து விட்டார். இதற்கிடையில் அரவிந்த், தற்கொலை மட்டும்தான் ஒரே தீர்வு என்று எண்ணி, ஹவுரா பாலத்தின் மீது நின்று கொண்டு கங்கை நதியில் குதிக்கும் தருவாயில் அவரது காதுகளில் யாரோ ஒருவர், " குதிக்காதே! குதிக்காதே! புட்டபர்த்திக்கு வா!!" என்று உறக்கமாக கூறுவது போல தோன்றியது! புட்டபர்த்தி பற்றி தன் அம்மாவிடம் கேள்விப்பட்டு இருக்கிறார் அரவிந்த்; உடனே அவர் அந்த தற்கொலை முயற்சியை கைவிட்டுவிட்டு ரயில் நிலையத்திற்குச் சென்று பெங்களூருக்கு பயணச்சீட்டு வாங்கினார். பல நாட்களுக்குப் பிறகு அவர் என்னிடம் பேசும் போது, " என்னால் தொடர்வண்டியில் தூங்கவே முடியவில்லை! பயணம் முழுவதும் என் மனத்தை 'புட்டபர்த்தி ' யே ஆக்கிரமித்தது! வண்டியின் சக்கரங்கள் நகரும்போதுகூட, ' புட்டபர்த்தி- புட்டபர்த்தி ' என்றுதான் என் காதுகளில் ஒலித்தது!" என்றார். பெங்களூருவை அடைந்த பின்பு அங்கிருந்த கவுண்டரில் பெனுகொண்டாவிற்கு அவர் பயண சீட்டு கேட்டபோது அங்கு இருந்த அலுவலர், 'இவர் புட்டபர்த்திக்கு போகிறார்' என்று அனுமானித்து, "நீங்கள் ஏன் புட்டபர்த்திக்கு போகிறீர்கள்? இப்போது பாபா வைட்ஃபீல்டில் உள்ளார்!" என்றார். ஆயினும் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்த 'புட்டப்பர்த்தி ' என்ற சப்தம் இன்னும் ஓயவில்லை ஆதலால், "பரவாயில்லை! நான் புட்டபர்த்திக்கே செல்கிறேன். ஆகையால் பெனுகொண்டாவிற்கே டிக்கெட் கொடுங்கள்" என்றார்!

 பெனுகொண்டாவை அடைந்தபின் அவர் மேலும் பயணம் செய்து புட்டபர்த்தி வந்தடைந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்! வைட்ஃபீல்டில் இருந்த சுவாமி திடீரென்று அன்று மாலையே 6:00 மணிக்கு புட்டபர்த்தி வந்தார்! உடனே நானும், குடும்ப ராவ் மற்றும் சிலரும் மந்திரத்தை நோக்கி ஓடினோம். நாங்கள் சுவாமியிடம் , " சுவாமி! இந்த முறை எந்த முன் அறிவிப்புமே இல்லாமல் திடீரென்று வந்து விட்டீர்கள்!" என்றோம். அதற்கு அவர், "பெங்களூருவில் நடக்கும் கோடை வகுப்புகளுக்குத் தேவையான சில அரிசி மூட்டைகளை எடுத்து செல்வதற்காகவே வந்துள்ளேன்!" என்றார்! இந்த பதில் எங்களுக்கு ஒரு புதிராகவே இருந்தது; திருப்தியை அளிக்கவில்லை. ஆகையால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம். மறுநாள் காலையில் அரவிந்த், தரிசன வரிசையில் அமர்ந்திருந்தார். சுவாமி அவரிடம் சென்று " ஏய்! கல்கத்தா!" என்று அழைத்துவிட்டு இன்டர்வியூ அறைக்கு செல்லுமாறு பணித்தார். அங்கே அவரிடம், " எப்பேற்பட்ட முட்டாள்தனமான செயலில் நீ ஈடுபட நினைத்தாய்! உனது தாய் மற்றும் மனைவியின் நிலைமையை சற்றாவது யோசித்தாயா? உனக்கு எந்த விபரீதமும் நடக்காதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு வேலை இடம் மாற்றம் கிடைக்குமாறு செய்கிறேன். உனது நிறுவனத்தின் மதராஸ் கிளைக்கு இடமாற்றம் அமையுமாறு செய்கிறேன்! பிறகு உன்னால் உன் சொந்த ஊருக்கு அருகில் இருக்க முடியும்" என்றார். மேலும் அவர், "நான் வைட்ஃபீல்டுக்கு திரும்பச் செல்கிறேன்! ஆனால் இங்கேயே ஒன்பது நாட்கள் நீ தங்கி இரு!" என்றும் கூறினார்!

  எதற்காக ஒன்பது நாட்கள்? சுவாமி வேறு ஒரு திட்டத்தை அவருக்காக வைத்திருந்தார்! அரவிந்த், தன் கைவசம் மீதம் வைத்திருந்த பணம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆதலால் டெல்லியில் இருந்த தன் நண்பன் ஒருவனுக்கு பணம் அனுப்புமாறு தந்தி கொடுத்தார். அப்போது "அரவிந்த், பெரிய ஷெட், பிரசாந்தி நிலையம் " என்று தன் முகவரியைக் கொடுத்திருந்தார்! இவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாத தாய் மற்றும் மனைவி, இவரது நண்பர்கள் அனைவரிடம், அரவிந்த் அவர்களது இல்லங்களுக்கு வந்தாரா என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர். தந்தி கிடைக்கப்பெற்ற இந்த நண்பர், உடனே அரவிந்த் புட்டபர்த்தியில் இருப்பதாக தாய் மற்றும் மனைவிக்குத் தெரிவித்தார். அந்த ஒன்பது நாட்களுக்குள் தாய், மனைவி மற்றும் சிலர் புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தனர்! இவ்வாறாக சுவாமி அவர்களுக்கு தெரியப்படுத்தினார்! அரவிந்தை பார்த்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்! ஆகையால் எந்த மொழியில் வேண்டினாலும், அவருக்கு எழுதிய கடிதத்தை எங்கு வைத்தாலும்,அவர் அதை அறிவார்! ஏனெனில் அவர் எங்கும் நிறைந்து இருப்பவர் அல்லவா?

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 321:

 இந்த நிகழ்வு சுவாமி தன் பூத உடலை நீத்த பிறகு பல நாட்கள் கழித்து நடந்த ஒன்றாகும்.... 

 ஒரு நாள் புட்டபர்த்தியில் எனது பழைய மாணவர் ஒருவரை சந்தித்தேன். அவரது கதை என் அகக்கண்களைத் திறந்தது.

 அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சில வருடங்கள் கழித்து அவருக்கு வினோதமான ஒரு நோய் ஏற்பட்டது. அது என்ன நோய், எதனால் ஏற்பட்டது என்று எந்த மருத்துவருக்கும் புலப்படவில்லை. மேலும் அங்கே மருத்துவ செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் அவர் இந்தியாவுக்கே திரும்பி விட்டார். இங்கேயும் அவர் பல மருத்துவர்கள் சந்தித்தும் பயனில்லாமல் போயிற்று. அவர் தன் மன அமைதி மற்றும் பொறுமையின் எல்லைக்கு சென்ற பின், தனக்கு நோய் ஒருநாள் குணமாகும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டார். அந்த நேரத்தில் சுவாமி அவருடைய கனவில் தோன்றி ' ருத்ரம் ' என்ற வேத மந்திரத்தை உச்சரித்தால் போதும், வேறு ஒன்றும் உனக்கு தேவையில்லை என்று கூறினார்! அதன்படி அவரும் அதனை ஒரு நாளைக்கு 22 முறை உச்சரித்து வந்தார். அவர் தனியாக ஒரு சிறிய குடியிருப்பில் தங்கியும், தனக்குத் தானே உணவு சமைத்துக் கொண்டும், ருத்ரம் சொல்லி வந்தார். நான் அவரைப் பார்த்த போது, தான் சதா சர்வ காலமும் சுவாமியுடன் வாழ்ந்து வருவதாகவும், அவர் எப்போதும் தன்னுடனேயே இருப்பதை உணர்வதாகவும் தெரிவித்தார். இப்படியாக ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து வந்த மூன்று மாத காலத்திற்குள் அவருடைய நோய் 90% தன் உடலில் இருந்து நீங்கி விட்டதாக என்னிடம் கூறினார்!  

 ஆகையால், சுவாமி நம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டார் என்றோ, அல்லது அவரை தொடர்பு கொள்ள நமக்கு வேறு ஒரு ஊடகம் ஒன்று தேவைப்படுகிறது என்றோ நாம் எப்படி சொல்லலாம்?

ஆதாரம்: ஸ்ரீ சத்யசாயி ஹையர் செகண்டரி ஸ்கூலில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராக பணியாற்றிய திரு.B.K. மிஷ்ரா அவர்களது கட்டுரைப் பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 322:

 ஒவ்வொரு குறிப்பிட்ட யுகத்திற்கும் அதற்கு என வகுக்கப்பட்டிருக்கும் உலக வாழ்க்கை நீதி மற்றும் ஒழுக்க நெறி  முறைகளைக் கடைப்பிடித்தல் குறையும் போதும் புறம்பான போக்குகள் அதிகரிக்கும் போதும் அவற்றை ஒழுங்குபடுத்தும் பொருட்டு இறைவன் இப் பூவுலகில் அவதரிக்கிறார்.  நம்  சுவாமியின் சிறப்பு என்னவெனில் அளவற்ற கருணை, அன்பு, மற்றும்   வழி தவறிய மனிதனின் மீது அவர் கொள்ளும் அனுதாபம் இவற்றினால் மட்டுமே அவனை நல்வழிப்படுத்துதல் என்பதாகும்.  முந்தைய அவதாரங்களோ ஒரு கசப்பான மருந்தின் மூலமே சரி செய்தனர். ஆனால் இந்த அவதாரத்தில் ஒரு மனிதனை நல்வழிக்கு மாற்றுதல் என்பது , சுவாமியால் ஒரு மாற்றம் ஏற்படும் அந்த மனிதனுக்கு ஒரு இனிமையான அனுபவமாகவே அமையும்!

 ஹைதராபாத்தில் டாக்டர் பகவந்தம் அவரது மகன்களில் ஒருவர் அவரது இளம் வயதில் சுமாராக ஒரு நாளைக்கு இரண்டு திரைப்படங்கள் பார்த்துக் கொண்டிருந்தார். 

 இவருக்கு காயத்ரி உபதேசம் செய்வதற்காக டாக்டர் பகவந்தம் அவர்களது வீட்டிற்கு சுவாமி வந்திருந்த போது இவர் ஒரு சினிமா தியேட்டரில் இருந்து உள்ளார்!  வீட்டிலிருந்தோர் அனைவரும் இவரைத் தேடி இருக்கின்றனர். ஏதாவது ஒரு தியேட்டரில் இருப்பார் என்று தெரிந்திருந்தும் எந்த தியேட்டரில் போய் தேடுவது என்று தெரியாமல் திகைத்தனர்!  இதற்கிடையில் அவர் தன் வீட்டின் சுவர் ஏறி குதித்து யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். சுவாமி அவரைப் பார்த்துவிட்டு, " ஓ!  நல்லது! வந்து விட்டாயா?" என்று மட்டும் கூறினார். மிகவும் அன்புடன் அவரை தன் பக்கத்தில் கீழே அமரச் செய்தார். பிறகு அவரது காதில் காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்தார். பிறகு அவரிடம் " நான் உனக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்குகிறேன்! அடுத்த முறை நீ ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்தால் இந்த கைக்கடிகாரம் நின்றுவிடும்!" என்று கூறி எச்சரித்தார்!

 பின் தொடர்ந்த நாட்களில் அவ்வப்போது அவரது தந்தை அவரிடம், " இப்போது என்ன நேரம்?" என்று கேட்டுக் கொண்டிருப்பார் -  ஏதாவது திரைப்படம் அண்மையில் பார்த்திருக்கிறாரா என்று அறிந்து கொள்ள!! 

ஆனால் ஒருநாள் சுவாமி கூறியபடியே அந்த கைக்கடிகாரம் தான் வேலை செய்வதே நிறுத்திக் கொண்டது! இதை அறிந்த தந்தை, "அப்படி என்றால் நீ ஏதோ ஒரு திரைப்படம் பார்க்க  தியேட்டருக்கு சென்று இருக்கிறாய்!  சுவாமிக்கு நீ அளித்த வாக்குறுதியை மீறி விட்டாய்!" என்று வருத்தத்துடன் கூறினார். மகனும் ஊரில் உள்ள பல கடைகளுக்கு சென்று ரிப்பேர் செய்ய முயற்சி செய்தும் யாராலும் அதனை சரி செய்ய முடியவில்லை. இறுதியில் சுவாமியிடம் வந்த போது, "நீ திரைப்படம் பார்ப்பதற்கு சென்றிருக்கிறாய்! இனிமேலாவது போகாதே!! " என்று மீண்டும் அறிவுறுத்தினார். இந்த அனுபவம் அவருக்குத் தேவையான மன மாற்றத்தை ஏற்படுத்தியது.இதுதான், மக்களின் நடத்தைகளை நல்ல விதமாக மாற்றி அமைக்க   சுவாமி கையாளும் இனிமையான  செயல்முறையின் ஒரு உதாரணம் ஆகும்.

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 323:

 கோட்டயத்தில் நான் பாபாவை பற்றி உரை நிகழ்த்துவதாக இருந்தது. முதலில் நான் திருச்சூருக்கு சென்றேன்; அங்கிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். பஸ் புறப்படுவதற்கு சிறிது தாமதம் ஆயிற்று; எனக்கு மிகுந்த தாகம் எடுத்ததால்  நீர் அருந்துவதற்காக -ஏதோ ஒரு ஞாபகத்தில் பணம் வைத்திருந்த என் கைப் பையையும் காலணிகளையும் பஸ்ஸிலேயே விட்டுவிட்டு -இறங்கிச் சென்றேன். சில நிமிடங்களில் திரும்பிய போது பஸ் ஏற்கனவே சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்! அப்போது மதியம் மூன்று மணி ஆதலால் தரை மிகவும் சூடாக வேறு இருந்தது.  இத்தருணத்தில் சுவாமியிடம் முறையிடுவதை தவிர வேறு வழி இல்லை என்று தெளிந்தேன்.  அதே கணத்தில் திடீரென்று ஒரு டாக்ஸி என் அருகில் வந்து நின்றது!  அதன் ஓட்டுனர் என்னிடம் எதையும் கேட்காமல்," உடனே ஏறிக்கொள்ளுங்கள்!" என்றார்! என் கையில் பணம் இல்லாததால் நான் மறுத்தேன். ஆனால் அவர் வலுக்கட்டாயமாக என் கைகளைப் பற்றி காரினுள் ஏறச் செய்தார். ஒரு வார்த்தையும் பேசாமல் டாக்ஸியை வேகமாக ஓட்டத் தொடங்கினார்! சில நிமிடங்களில் டாக்ஸி நான் தவறவிட்ட பஸ்ஸின் அருகே சென்றது.  டாக்ஸி ஓட்டுநர் முந்திக் கொண்டு சென்று பஸ்ஸை நிறுத்தி அதில் என்னை ஏறச் செய்தார். நான் உடனே என் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து அவருக்கு கொடுக்க முற்பட்டபோது அவர் "பிறகு நான் வாங்கிக் கொள்கிறேன்"என்று கூறிவிட்டு, ஒரு அவசரத்தில் இருந்ததைப் போல டாக்ஸியை ஓட்டி சென்று விட்டார்!  அந்த டாக்ஸியின் எண்ணை குறித்துக் கொண்டேன். 

எர்ணாகுளத்தில், பிற்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தவரும் சுவாமியின் பழம்பெரும் பக்தருமான  நீதியரசர் திரு எராடி(Eradi) அவர்களது வீட்டில் தங்கினேன்.  அந்த டாக்ஸி டிரைவர் பற்றிய விவரங்களை அறிய அங்கிருந்து தொலைபேசியில் திருச்சூருக்கு தொடர்பு கொண்டேன். தீவிர விசாரணைக்குப் பிறகு நான் குறித்துக் கொடுத்த எண் உடைய டாக்ஸி அங்கே இல்லை என தெரிய வந்தது!!

 ஆதாரம்: திரு. பால பட்டாபி அவர்கள் எழுதிய, "நெக்டரைன் லீலாஸ் ஆஃப் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 324:

தீய வழியிலே வெகுதூரம் சென்று விட்டிருந்த ஒரு இளைஞர் கல்கத்தாவில் வசித்து வந்தார். அவரது தந்தை ஒரு கோடீஸ்வரர்; அவர் நல்ல மனிதராக இருந்தாலும் *தன் மகனை மிகவும் செல்லம் கொடுத்து, கண்டிக்காமல் வளர்த்ததால் அவர் தீய வழியில் பயணித்தார்.* திரைப்பட நடிகர்கள், சூதாடுபவர்கள், பந்தய குதிரைகள் ஆகியோர் இவரது நண்பர்கள் ஆயினர்! அவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தந்தையினிடத்தில் மேலோங்க, அவர் *தனது மகனது மேசை மீது "சத்யம் சிவம் சுந்தரம்" புத்தகத்தின் மூன்று பாகங்களையும் வைத்தார்.* அந்த புத்தகங்கள் எப்போதும் மேசை மீது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வீட்டில் இருந்த பணியாளரிடம் தெரிவித்தார். மகன் அந்த நூல்களைப் பார்த்தும் அவற்றை அலட்சியம் செய்தார். ஒருநாள் தன் நண்பர்கள் சிலருடன் ஒரு நடிகையை அவர் சந்தித்து பேசுவதாக இருந்தது. மேலும் அவர்கள் அந்த நடிகையுடன் சுற்றுலா சென்று வருவதற்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்பு செய்திருந்த ஏற்பாட்டின் படி அவரது நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேரவில்லை; அவர்களது வருகைக்காக இவர் மிகவும் காத்திருக்க நேர்ந்தது; அவர் மனம் நொந்து போய், நேரத்தை போக்குவதற்காக வேறு ஒன்றும் *செய்வதறியாது மேசையின் மீது இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தார்.*

அங்கே அவர் படித்த வரிகள் தான் என்ன? - *"நீ உன் நண்பர்களை நம்பாதே! அவர்கள் உன்னை தங்கள் சவுகரியத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நான் தான் உனது மகத்தான நண்பன்! உன்னிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்!..."* போன்ற வரிகள் அந்தப் பக்கம் முழுவதுமாக நிரம்பி இருந்தன. இந்த வரிகள் அவரது அறியாமை என்னும் *இருள் சூழ்ந்த மனதில் காலை கதிரவனின் இளம் ஒளிக் கதிர்கள் போல வெளிச்சத்தைப் பாய்ச்சின!* அவர் மனம் மாறினார்! ஏனென்றால் இந்த வரிகள் சுவாமியின் சொந்த வரிகள் அல்லவா? 

 சில நாட்கள் முன்னர் தான் அவர் மந்திரத்தில் உள்ள வராந்தாவில் உட்கார்ந்து இருந்தார்! வைட்ஃபீல்டுக்கு அருகே உள்ள ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் "சாய்ராம்" என்னும் லிகித ஜபம்! புத்தகத்தின் ஒரு பக்கத்தில் அவர் கண்களுக்குத் தோன்றிய வரிகளே இந்த மாற்றத்திற்கான ஒரே காரணம். *சுவாமி அவரைப் பிடிப்பதற்கான தக்க தருணத்தை நோக்கிக் காத்திருந்துள்ளார்!* அவர் அந்த புத்தகத்தை திறந்த போது அவரை வரவேற்க அங்கே நின்று உள்ளார்!! 

 தன் ' சபதம் ' என்று எதனை சுவாமி குறிப்பிடுகிறார்? , *"நல்வழியிலிருந்து விலகி உள்ளோரது கைகளைப் பிடித்து அவர்களை நல்வழிக்குக் கொணர்ந்து காப்பாற்றுவதே என் சபதம்"* என்றே கூறியுள்ளார்.

பிறகு அந்த நண்பர்கள் தாமதித்து வந்த போது அவர்களை எவ்வாறு அந்த நபர் எதிர்கொண்டார்? *"நான் வரப்போவதில்லை! எனக்கு இந்த சுற்றுலா தேவையில்லை! இனிமேல் நான் உங்களுடன் சேரப் போவதில்லை! இப்போது எனக்கு ஒரு மகத்தான நண்பர் கிடைத்துவிட்டார்! "* என்று கூறி அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்.

*விஸ்கி கோப்பையை பிடித்து பழகிய கை இப்போது விபூதி பொட்டலத்தை பிடித்தது! எவ்வாறு இந்த மாற்றம் சாத்தியமாயிற்று? எந்த உண்மையை உணர்வு பூர்வமாக அவர் அறிந்து தெளியவெண்டும் என்று சுவாமி நினைத்தாரோ அதனை வரிகளின் வடிவமாக அந்தப் புத்தகத்தில் தோன்றச் செய்தார்! அவை நாங்கள் அச்சிட்டிருந்த வரிகள் அல்ல!*

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 325:

புட்டபர்த்தியில் கோடை வெயில் என்பது மிகவும் கொடூரமாகவே இருக்கும். நமக்கு சுவாமி வேண்டுமென்றால் அதை அனுபவித்தே தீர வேண்டும்! கோடையில் சுவாமி பழரசம் அருந்துவார். *ஒரு கோடைகாலத்தில் சுவாமியை பார்க்கவும் பேசவும் பிரசாந்தி மந்திரத்தின் மாடிக்குச் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.* ஆனால் மந்திரத்தின் கிழக்குப் பகுதியின் மாடியில் இருந்த சுவாமியின் உணவு அருந்தும் அறைக்கு செல்ல என் அம்மாவுக்கும் மனைவிக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் பெங்களூருக்கு சென்றிருந்தோம். புட்டப்பர்த்திக்கு திரும்பும் முன் எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு சென்றிருந்தோம். அப்போது என் அம்மா, *"சுவாமிக்கு ஏதாவது பழரசம் வாங்கு"* என்றார். உடனே நான், *"அம்மா! சுவாமிக்கு நாம் பழரசம் கொடுக்க வேண்டும் என்றால், நாம் பழங்களை வாங்கிச் சென்று வீட்டில் நாமே பழரசம் தயார் செய்து வழங்க வேண்டும்.  இங்கே பாட்டில்களில் கிடைக்கும் பழரசங்கள் உண்மையானவை அல்ல"* என்றேன். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்ததால் *"சரி, வாங்குவோம்"* என்றேன். ஆனால் அந்த நேரத்தில் என் ஆழ்மனதில் *"சுவாமி  மறுத்துவிடுவார்; நாம் அவற்றைக் குடித்து விடலாம்" என்ற எண்ணம் திடீரென தோன்றி மறைந்தது.* இந்த எண்ணம் தன்னிச்சையாகவே தோன்றியது; இயற்கைக்கு மாறானது என்றும் சொல்ல முடியாது. முடிவில் மூன்று பாட்டில்கள் வாங்கிக் கொண்டு புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தோம். 

என் அம்மாவும் மனைவியும் படிக்கட்டு ஏறி சுவாமியின் உணவு அறைக்கு சென்றனர். அப்போது சுவாமி அங்கு இருந்தார். நான் படிக்கட்டுக்கு கீழே நின்று கொண்டிருந்தேன். அவர்கள் சுவாமிக்காக வாங்கி வந்ததை ஒவ்வொன்றாக பையில் இருந்து வெளியே எடுத்தார்கள். அந்த காலங்களில் வெற்றிலை, காபிப் பொடி ஆகியவை புட்டப்பர்த்தியில் கிடைக்காது. ஆகவே அவற்றை நாங்கள் வாங்கிச் சென்றிருந்தோம். சுவாமி அவைகளை பார்த்து, *"ஆ! வெற்றிலை? நல்லது!... காபிப் பொடி? நல்லது!... அது என்ன!" என்று கேட்டார்.*  அதற்கு என் அம்மா, " உங்களுக்காக பழரசம், சுவாமி!" என்றார். உடனே சுவாமி, *"வேண்டாம்! கஸ்தூரிக்கு அதன் மேல் விருப்பம்!  எனவே கஸ்தூரிக்கே கொடுத்து விடு!"* என்றார்!  பாவப்பட்ட நான் கீழே நின்று கொண்டு இந்த வார்த்தைகளை என் காதுகளால் கேட்டுக் கொண்டிருந்தேன்.  எந்த ஒரு முகத்தோடு  இந்த கசப்பான வார்த்தைகளை நான் கேட்டிருப்பேன் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்! 

இது ஒரு தண்டனை என்று நான் சொல்ல மாட்டேன்; மாறாக ஒரு எச்சரிக்கை ஆகும்! *"அவருக்கே முழுமையாக அர்ப்பணம் செய்யப்படாத எதையும் அவருக்கு நாம் கொடுக்கக் கூடாது"* என்பதுதான் அந்த எச்சரிக்கை!

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 326:

சுவாமியின் படம் - அது ஒரு வெறும் படம் அல்ல! படத்தில் இருக்கும் தன் உருவத்தின் மூலம் அவர் பேசுகின்றார்! புன்முறுவல் பூக்கின்றார்!

போபாலில் ஒருவரது வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அவர் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். அவருக்கு தொண்டையில் ஒரு நோய் ஏற்பட்டது. அவரது மனைவி "அது புற்றுநோயாக இருக்கும்; ஆகவே நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்தியாக வேண்டும். எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் இருவரும் ஏற்கனவே புட்டப்பர்த்திக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தனர். ஆகையால் அவர் *"புட்டப்பர்த்தியில் சுவாமி என்னிடம் ' புகைபிடிப்பதை நிறுத்திவிடு'* என்று சொன்னால் நிறுத்தி விடுகிறேன்" என்றார். உடனே அவர்களது வீட்டில் இருந்த சுவாமியின் படத்திலிருந்து சுவாமியின் குரல் ஒலித்தது: *"நீ ஏன் இப்போதே நிறுத்திக் கொள்ளக்கூடாது?"* என்று!

உடனே அதிர்ச்சி அடைந்த அவர் அந்தக் கணத்திலிருந்து அந்த தீய பழக்கத்தைக் கைவிட்டு விட்டார்! 

சுவாமி சொல்கிறார்: *"எங்கெல்லாம் என் நாமம் அழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நான் இருக்கின்றேன்; எங்கெல்லாம் என் உருவம் வைக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நான் இருக்கின்றேன்"* என்று ! அதுதான் இந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 327:

பெங்களூரில் ஒரு மூத்த அரசு அலுவலர் இருந்தார். அவர் கல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்தார். அவர் சுவாமிக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பெங்களூரிலேயே இருக்க விரும்பினார். *சுவாமி புட்டப்பர்த்தியில் மட்டுமே இருக்கிறார், கல்கத்தாவில் இல்லை என்று நினைத்தார் போலும்!* அவர் வருத்தத்திற்கு மேலும் ஒரு காரணமும் இருந்தது. அவரது மனைவியினுடைய தமக்கையின் கணவர் கல்கத்தாவிலேயே தன் கணவரை விட உயர்ந்த பதவியில் இருந்ததால் அவரது மனைவிக்கு கல்கத்தா செல்வதில் விருப்பமில்லை. வேறு வழியின்றி இருவரும் கல்கத்தா சென்றனர். ஆனால் *அங்கே இந்த அரசு அலுவலருக்கு தொடர்ச்சியாக துயரம் மற்றும் சிக்கல்கள் தரும் நிகழ்வுகள் நடந்தேறின.* ஒரு நாள் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு பற்களை இழந்தார். அதற்காக *பல் மருத்துவரை அணுகிய போது அவர் அளித்த ஊசி மருந்து இவருக்கு உடல் முழுவதும் ஒருவிதமான ஒவ்வாமையை ஏற்படுத்தியது.* மேலும் உதவிக்காக மேலே குறிப்பிட்ட உறவினரின் உதவியை வேறு வழியின்றி அவர் நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் மிகவும் விரக்தி அடைந்த அவர் சுவாமி மீதே கோபம் கொண்டார்: *"சுவாமி! நான் உன்னையே முற்றிலும் நம்பி இருக்கும்போது நீ எனக்கு துன்பங்கள் தந்து கொண்டிருக்கிறாய்! பெங்களூரை விட்டு வெகு தூரத்திற்கு அனுப்பினாய்! கீழே விழுந்து பற்களை இழக்கச் செய்தாய்! எங்களுக்கு ஒவ்வாத உறவினரிடமே சென்று உதவி கேட்கச் செய்தாய்!"* என்றெல்லாம் புலம்பினார். 

ஒருநாள் மதியம் அவர் சாய்வு *நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கையில் சுவாமி அவர் முன்னே தோன்றினார்!* தோலினால் பைண்டிங் செய்யப்பட்டிருந்த ஒரு பருமனான புத்தகத்தை அவரது நெஞ்சின் மீது நிற்க வைத்து அதன் பக்கங்களை புரட்டினார்! அதில் மிகவும் அரிய விதமாக, ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று நெடு வரிசைகளாக வரிகள் அச்சிடப்பட்டிருந்தன; மேல் பகுதியில் அந்த அத்தியாயங்களின் தலைப்புகளும் இருந்தன. சுவாமி ஒரு பக்கத்தை தேர்ந்தெடுத்து அவரிடம் காட்டி, *"இதனைப் படி!"* என்றார். அதற்கு அவர், "சுவாமி! என்னிடம் இப்போது படிப்பதற்கான கண்ணாடி இல்லை!" என்று பதிலளித்தார். அதற்கு சுவாமி, "அப்படி என்றால் சரி, கண்ணாடியை எடுத்து வந்த பிறகு படி" என்று சொல்லிவிட்டு புத்தகத்துடன் மறைந்து விட்டார்! பிறகு அவர் *கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்திற்கு சென்றார். அங்கே அவர் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை.* அங்கிருந்த நூலகத் துணை அலுவலரிடம் அந்த புத்தகத்தின் அடையாளங்களை கூறிய போது அவர், *"ஒரே பக்கத்தில் 3 நெடு வரிசைகளாக அச்சடிப்பு, முலாம் பூசப்பட்ட முனைகள், தோல் பைண்டிங்! ஆம், சார்! எனக்கு தெரியும்! ஒரு பைபிளின் சிறப்பான பதிப்பு இது! எங்களிடம் இருக்கிறது!"* என்று கூறிவிட்டு அதனை எடுத்துக் கொடுத்தார். அவர் உடனே அதன் பக்கங்களை திருப்பி கொண்டு வந்து சுவாமி அவருக்கு காண்பித்த அதே பக்கத்தை அடைந்தார். அந்த பக்கத்தில், *"எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளான ஜாப் (Job) என்பவரையும் அவரது இறை நம்பிக்கையையும் பற்றி நீ கேள்விப்படவில்லையா? அவர் அனைத்தையும் இழக்கவில்லையா? ஆனால் அவர் நம்பிக்கையை இழக்காதால் இறுதியில் அவர் முற்றிலும் காப்பாற்றப்பட்டார்! அவரது சொத்து, உடல்நலம் போன்ற அனைத்தையும் அவர் திரும்பப் பெற்றார். அவரது துன்பங்கள் அனைத்தும் அவரை விட்டு நீங்கின. கடவுள் அவருக்கு கருணை மழை பொழிந்தார்!"* என்று எழுதியிருந்தது. இந்த பத்தியை தான் இவர் படிக்க வேண்டும் என்று சுவாமி காட்டி இருந்தார்! ஆகவே துன்பப்படும் பக்தர் ஒருவர், தான் ஆறுதல் அடைவதற்காக சுவாமி பைபிளை படிக்க சொன்னார்! 

இந்த அவதாரத்தின் ஒரு புதிய நோக்கம் இதுவே ஆகும். 

  *"சமயம் எதுவாகினும் அதனைச் சார்ந்த வேதத்தின் உட்பொருளை உணர்ந்து அதன்படி வாழ வேண்டும்; அது மட்டுமின்றி, அவரவர் வேதங்களே பெரிது என்று கூறிக்கொண்டு சண்டையிடுவது அல்ல, வாழ்க்கையின் குறிக்கோள்!"* என்பதை நம் சுவாமி வலியுறுத்துகிறார்.

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


 📝 நிகழ்வு 328:

1968 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் நாள், மும்பையில் *'தர்மக்ஷேத்ரா'* என்ற தனது இருப்பிடம் மற்றும் சாயி சேவை மையத்தை சுவாமி திறந்து வைத்தார். அப்போது அங்கு உள்ள 'சத்யம்' என்ற பெயர் கொண்ட மத்திய கூடத்தில் *ஒரு கடிகாரத்தைப் பொருத்தி இருந்தார்.* ஆனால் அது *வழக்கமான நேரம் காண்பிக்கும் கடிகாரம் அல்ல; மாறாக, இறைவனை அடைய நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்பது பக்தி வழிமுறைகளை காண்பிக்கும் ஒன்றாகும்.* அவற்றை ஒன்பது வழிமுறைகள் என்பதற்கு பதிலாக 9 படிகள் என்று சொல்லலாம். சுவாமி அந்தக் கூடத்தில் நடந்து கொண்டிருந்த போது ஒரு நேரத்தில் சரியாக அந்த கடிகாரத்தின் கீழே நின்றார். *அப்போது சிலர் அந்த காட்சியை தங்கள் கேமராக்களில் படம் பிடித்தனர்.* அந்த சமயத்தில் அங்கிருந்த திருமதி. கோவன் அவர்கள் (சென்னையில் இவரது கணவர் திரு.கோவன் அவர்கள் இறந்த பின்பு சுவாமியால் மீண்டும் உயிர்ப்பிக்க பெற்றார் என்பதை நாம் பலரும் அறிந்து இருப்போம்) தனக்கு *அந்த போட்டோ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.* ஆனால் அந்த திறப்பு நிகழ்ச்சிக்கு *பிறகு அவரால் போட்டோ எடுத்தவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அமெரிக்காவுக்கும் திரும்ப சென்று விட்டார்.*

பிறகு சில நாட்கள் கழித்து எனக்கு அவர் கடிதம் எழுதினார். அதில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்:

*ஒருநாள் இரவில் அவர்கள் வீட்டில் இருந்த சுவர் கடிகாரத்திற்குக் கீழ்ப் பகுதியில் இருந்து ஏதோ ஒரு சுரண்டல் சத்தம் கேட்டது. யாரோ ஒருவர் தரையையோ சுவரையோ சுரண்டுவது போல இருந்தது. வயதான கோவன் தம்பதியினர் உடனே எழுந்தனர். அந்த சப்தம் கடிகாரத்திற்கு கீழ் இருந்தும் அலங்கார மேசைக்கும் சுவற்றுக்கும் இடையில் இருந்தும் வருவது போல இவர்களுக்கு தோன்றியது. அதற்கான காரணத்தை கண்டறிய அவர்கள் இருவரும் சேர்ந்து மிகுந்த சிரமத்துடன் அந்த மேசையை ஒரு சில அங்குலங்கள் இழுத்தனர். அந்த இடைவெளியில் ஒரு காகிதச் சுருள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! திருமதி.கோவன் அவர்கள் மிகவும் ஆசைப்பட்ட போட்டோ தான் அது !*

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


  📝 நிகழ்வு 329:

1992 ஆம் வருடம் கோடை விடுமுறையின் போது சுவாமி கொடைக்கானலுக்கு செல்வதாக இருந்தது. நான் எனது Ph.D ஆராய்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிப்புகள் முதலியவற்றை விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யுனிவர்சிடியைச் சார்ந்த நூலகத்தில் மிகச் சிறந்த முறையில் சேகரித்து வைத்திருப்பதாக தெரியவந்ததால் நான் அங்கு செல்ல இதுதான் நல்ல தருணம் என்று எண்ணினேன். ஆகவே சுவாமியிடம் சென்று அதற்கான அனுமதியை வேண்ட, அவரும் எனக்கு அனுமதி அளித்து ஆசீர்வதித்தார். நானும் விசாகப்பட்டினம் சென்றடைந்து என் பணியை தொடங்கினேன். இதனிடையே அந்த ஊரில் இருந்த பக்தர்கள் சிலருக்கு "சுவாமியினுடைய மாணவர் ஒருவர் இங்கு வந்துள்ளார்" என்ற தகவல் எப்படியோ கிடைத்திருக்கிறது. உடனே அவர்கள் என்னை தொடர்பு கொண்டு எம். வி. பி. காலனி என்ற இடத்தில் உள்ள சமிதியில் நான் வந்து பக்தர்களுக்கு சுவாமியைப் பற்றி உரையாட முடியுமா என்று கேட்டார்கள். நானும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். அங்கே அந்த சத்சங்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

  அக்காலங்களில் விசாகப்பட்டினம் ஒரு வித்தியாசமான நகராக இருந்தது. அந்த நகரமே சீக்கிரமாக இரவில் உறங்கிவிடும் போல! இரவு எட்டு மணிக்கு எல்லாம் சுமாராக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் ஆட்டோ, பேருந்து போன்ற பொது போக்குவரத்து சாதனங்களும் இயங்கவில்லை. நாங்களோ சுவாமி பற்றிய அனுபவங்களில் கிடைத்த ஆனந்தத்தில் மூழ்கியபடியால் மணியும் 8:30 pm ஆகிவிட்டது! நான் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றேன். 9.00 மணி வரை எந்த ஒரு பேருந்தோ அல்லது ஆட்டோவோ வரவில்லை. எனக்கு மெதுவாக கவலை ஏற்பட்டது. நான் தங்கி இருக்கும் பகுதியின் பெயர் கூட நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லை. எனது ஹோட்டல் பெயர் மட்டும் தான் எனக்கு தெரியும். ஏனென்றால், இதுவரை நான் விசாகப்பட்டினம் வந்ததில்லை. நான் அப்படியே நின்று கொண்டிருந்தபோது ஒரு ஸ்கூட்டர் என்னை தாண்டி சென்றது. அதில் இருந்தவர் தலைக்கவசம் அணிந்திருந்தார். என்னைத் தாண்டி சில மீட்டர்கள் தூரம் சென்ற பிறகு ஸ்கூட்டர் நின்றது; பிறகு பின்னால் வந்தது. அப்போதுதான் அதன் ஓட்டுனர் தன் தலை கவசத்தை எடுத்து விட்டு ' சாய்ராம் ' என்றார்! இதை கேட்டவுடன் எனக்கு எங்கிருந்தோ ஒரு சக்தி கொடுக்கப்பட்டது போன்ற உணர்வு! நானும் பதிலுக்கு ' சாய்ராம் சார்!' என்றேன். அவர் உடனே , "இப்பொழுதுதான் நீங்கள் எம். வி. பி. சமிதியில் உரையாற்றினீர்கள் அல்லவா?" என்று கேட்டார்! அதற்கு "ஆமாம் சார்!" என்றேன். அவர் சிரித்துவிட்டு, " எட்டு மணிக்குப் பின் எந்த பேருந்தும் கிடைக்காது என்று யாரும் உங்களுக்கு சொல்லவில்லையா? நான் இவ்வழியாக வந்தது உங்களுடைய அதிர்ஷ்டம்! வாருங்கள்! பின்னால் ஏறிக்கொள்ளுங்கள்! நான் உங்களைக் கொண்டு விடுகின்றேன்!" என்றார்! நானும் ஏறிக்கொண்டேன். பயணித்துக் கொண்டே, அவர் என்னிடம் நான் பேசிய சில கருத்துக்கள் தொடர்பாக அவருடைய சிறிது மாறுபட்ட எண்ணங்களை முன் வைத்தார். நானும் அவற்றை கேட்டுக் கொண்டு எனக்குத் தோன்றிய விதத்தில் அவற்றிற்கு மறு கருத்துக்களையும் கூறிவந்தேன்.

  ஒரு 20 அல்லது 25 நிமிடங்களுக்கு பின்னர் அவர் என்னை நான் தங்கி இருந்த ஹோட்டலின் வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். நான் முதல் தளத்தை அடைந்த பிறகு தான் எனக்கு திடீரென ஒரு அதிர்ச்சியை தரும் எண்ணம் தோன்றியது! நான் அவரிடம் உரையாடி வந்தாலும் எங்கே தங்கி உள்ளேன் என்ற விவரத்தை நான் கூறவில்லை ஆனால் மிகவும் துல்லியமாக கூட்டி வந்து என் ஹோட்டலின் வாயிலில் இறக்கி விட்ட பின் விரைந்து சென்று விட்டார். உடனே நான் வேகமாக படி இறங்கி மீண்டும் வாயிலுக்கு ஓடினேன் அவரது ஸ்கூட்டர் அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் தென்படவில்லை. அதன் பிறகு நான் அதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நாட்கள் கடந்தன; விசாகப்பட்டினத்தில் இருந்து திரும்பி , கோடை கால வகுப்பில் கலந்துகொள்வதற்காக பிருந்தாவனத்திற்கு வந்தேன். 

   அதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பேட்ஜுகள் கொடுப்பதற்காக வேறு சில மாணவர்களோடு சுவாமி என்னையும் ,"த்ரயி பிருந்தாவன"த்திற்குள் அழைத்தார். அனைத்தும் கொடுத்து முடித்தவுடன் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். நானும் வெளியே செல்ல முற்பட்டபோது சுவாமி திடீரென்று பின்புறம் என் சட்டை காலரைப் பிடித்து இழுத்தார்! திரும்பிப் பார்த்தவுடன் என்னை இழுத்தது சுவாமி என்று அறிந்தவுடன் அதிர்ச்சியானேன். அவர் என்னை பார்த்து , "ஏமி ரா! வாட்ச் லேதா? ( என்னடா! உன்னிடம் வாட்ச் இல்லையா?) என்றார்! அதற்கு நான் , "இல்லை, சுவாமி ! வாட்ச் இல்லை!"என்றேன்! என் தலையில் ஒரு தட்டு தட்டி, " நான் ஒன்றும் உனக்கு வாட்ச் கொடுக்கப் போவதில்லை! நீ எங்காவது சொற்பொழிவு ஆற்றும் போது கடிகாரத்தை பார்க்க மாட்டாயா?" என்றார்! நான் பிரமிப்புடன் மனதில் எந்த ஒரு எண்ணமும் இன்றி சுவாமியை வெறித்துநோக்கிக் கொண்டிருந்தபோது , அவர் மேலும் தொடர்ந்து" நான் மட்டும் ஸ்கூட்டரில் உன்னை அழைத்துவந்து இறக்கி விடவில்லை என்றால் உனக்கு என்ன ஆகி இருக்கும்?" என்றார்!! அப்போதுதான் எனக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது!! உடனே அவரது கால்களில் விழுந்து நன்றியை தெரிவிப்பதை விட எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை!!

ஆதாரம்: சனாதன சாரதி - ஜூலை 2023 இதழில், முன்னாள் மாணவரான, முனைவர். எம். சாயிநாத் அவர்கள் எழுதிய பதிவில் இருந்து.

 

📝 நிகழ்வு 330:

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தாந்திரீக வழிபாடு செய்பவராக இருந்தார். மேலும் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரை பின்பற்றுபவராகவும் இருந்தார். ஒருமுறை அவரது (தாந்திரீக) குரு அவரிடம், " நீ என்னுடைய ஒரு சிறந்த சீடனாக இருந்து வந்திருக்கிறாய்; ஆகவே உனக்கு இப்போது ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் உனக்கு அளிக்கும் மந்திரத்தை 41 நாட்களுக்கு விடாது ஜெபித்து வா! பின்னர் சத்யசாயி பாபாவிடம் சென்று அவரது கால்களை தொடு! உடனே அவரது எல்லா சக்திகளும் உனக்கு வந்துவிடும்!" என்றார்! அதற்கு அந்த சீடர், " அப்படி என்றால் அவர் தனது சக்திகள் அனைத்தையும் இழந்து விடுவாரா?" என்று கேட்டார். உடனே அவர், " இல்லை, அவரது சக்திகள் அவரிடம் இருக்கும்; ஆனால் உனக்கும் கிடைத்துவிடும்!" என்றார். அதற்கு அந்த சீடர், " அப்படி என்றால் பரவாயில்லை, முயற்சிக்கலாம்! ஆனால் அவர் தன் சக்திகளை இழப்பதை நான் விரும்பவில்லை!" என்று கூறினார். இந்த அளவிற்காவது ஒரு அக்கறை உள்ளவர் போலும்!! அவரும் அந்த மந்திரத்தை பெற்றுக்கொண்டு குரு கூறியதைப் போல 41 நாட்கள் விடாமல் ஜெபித்தார். அப்போது அவர் அதன் அதிர்வுகளை உணர்ந்தார்! உடனே சுவாமியை பார்க்க வைட்ஃபீல்டுக்கு வந்து தரிசன வரிசையில் அமர்ந்தார். சுவாமி நேராக அவரிடம் வந்து நின்றார்! இவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவர், சுவாமியிடம் ஆசிகளும் கையெழுத்தும் வாங்குவதற்காகத் தன் கையில் வைத்திருந்த போட்டோவை சுவாமியிடம் கொடுத்தார். அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு தன் கைகளை சுவாமியின் பாதங்களில் வைக்க முயற்சித்தார்!.ஆனால் அவரது கைகள் சுவாமியின் பாதங்களைத் தேடின!!! சுவாமியின் பாதங்கள் அங்கே தரையில் இல்லை!! " பாதங்கள் இல்லாமல் அவர் எப்படி நிற்கிறார்? எப்படி நடக்கிறார்?" போன்ற கேள்விகள் அவரது மனதில் வேகமாக எழுந்தன. சுவாமி வழக்கம் போல ஒரு சுற்று தரிசனத்தை முடித்துக் கொண்டு சென்றார். மறுநாள் காலையில் இந்த சீடரை இன்டர்வியூவிற்கு அழைத்தார். சுவாமி அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு அவரிடம் புல்லிங்க சுவாமி என்பவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று கேட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை வாரணாசி சென்று புல்லிங்க சுவாமியை தரிசித்து இருக்கிறார்! அந்த மகான் தவத்தில் அமர்ந்திருக்கும் போதே தரைக்கு மேல் எழும்பி மிதக்கும் சக்தி கொண்டவர். அந்த சீடரும், " ஆமாம்! எனக்குத் தெரியும்! அவர் காற்றில் மிதப்பவர்!" என்று பதிலளித்தார். அதற்கு மேல் சுவாமி வேறு ஒன்றும் கூறவில்லை! " நான் மிதந்தேன்" என்று அவரிடம் கூறவில்லை! நான் கல்கத்தா சென்றிருந்தபோது என்னிடம் இந்த நிகழ்ச்சியை அவர் விவரித்தார்.

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 331:

 ஒரு காலத்தில் சென்னையில் உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையின் தலைமை இயக்குனர், சுவாமியின் பக்தராக இருந்தார். கொரியா நாட்டிற்கு இரயில் பெட்டிகள் தயார் செய்து கொடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப் போட்டியின் முடிவில் சென்னையில் உள்ள தொழிற்சாலை வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அந்த நாட்டினுடைய தேவையை, குறித்த தேதிக்குள் முடித்துக் கொடுப்பதற்கு இந்த தலைமை இயக்குனரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் வேறு சில காரணங்களினால் தேவையான எண்ணிக்கையில் ரயில் பெட்டிகளை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு நடுவே பம்பாயிலிருந்து இந்த இரயில் பெட்டிகளை கொண்டுசெல்வதற்கான கப்பல் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் சென்னையை வந்தடைய இருந்ததால், கொரியாவைச் சேர்ந்த ரயில் சேவை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ரயில் பெட்டிகளின் தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக தொழிற்சாலையை வந்து அடைந்தார். பெட்டிகள் அனைத்தும் தயார் நிலையில் இல்லை என்ற உண்மை அவருக்கு தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் தொழிற்சாலையின் உள்ளே வருவதை எப்படியோ அதிகாரிகள் தடுத்து விட்டனர். இந்த தருணத்தில் இயக்குனரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே செய்வதொன்றும் அறியாது திகைத்த அவர், மிகுந்த கவலையில் ஆழ்ந்தார். அவர் உடனே சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதினார்: "சுவாமி! என்னுடைய சிக்கலை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் " என்று எழுதி அதனை தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினார். அந்த உதவியாளர் அனந்தபுரம் வந்தடைந்து அன்று சுவாமி தங்கியிருந்த வீட்டை அடைந்து வாயில் கடிதத்துடன் நின்றார். சுவாமி வெளியே வந்தார்; இருபுறமும் பலர் நின்று கொண்டிருந்தனர். சுவாமி தன் கையில் ஒரு கைக்குட்டை (kerchief) வைத்திருந்தார். அதில் விளையாட்டாக மேலும் மேலும் முடிச்சுகள் போட்டுக் கொண்டே இருந்தார்! அவர் அவ்வாறு செய்து கொண்டே நடந்து வந்து இந்த உதவியாளரின் முன் நின்றார்: " உன்னுடைய அதிகாரி எதற்கு இப்படி கவலைப்படுகிறார்? எல்லா இரயில் பெட்டிகளும் முழுமையாக தயார் செய்யப்பட்ட பின்னர் தான் அந்த கப்பல் சென்னை வந்து சேரும்! அவரது கவலைகள் அனைத்தும் இவ்வாறாக தீர்ந்துவிடும்!" என்று கூறி, முடிச்சுகள் போட்ட கைக்குட்டையின் ஓரங்களைப் பிடித்து இழுத்தார்! உடனே அத்தனை முடிச்சுகளும் ஒரே கணத்தில் அவிழ்ந்து விட்டன!! அப்போது தன் கைகளால் காற்றில் சில சைகைகளை செய்தார்! சுவாமி அனந்தபுரத்தில் இவ்வாறு செய்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் என்ன நடந்தது என்றால், கடலின் வெகுதூரத்தில் அந்த கப்பல் பயணித்துக் கொண்டிருக்கும் இடத்தில் மிகப்பெரிய புயல் தோன்றியது!! அதனால் கப்பல் சேதமடைந்தது! அந்த கப்பல் கொழும்புவிற்கு கொண்டு செல்லப்பட்டு, பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு 25 நாட்களுக்குப் பின்னர் அந்த கப்பல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மேலும் அனைத்து துறைகளிலும்(docks ) ஏற்கனவே கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றதால் மேலும் நான்கு நாட்களுக்கு துறைமுகத்தை விட்டு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது அந்தக் கப்பல் ! தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை வந்து அடைந்தபோது அனைத்து ரயில் பெட்டிகளும் தயார் நிலையில் இருந்தன!! யாரும் எதிர்பாராதவாறு நிகழ்வுகள் நடந்தேறின!! இதுதான் நம் சுவாமியின் மகிமை!

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 332:

1800 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பட்டப் படிப்பு முடித்த எனது பேரன், மேற்கொண்டு படித்து ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கு விரும்பினான். அந்த விருப்பத்தினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து அவன் காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் இருந்ததால் சுவாமி அவனது கனவில் தோன்றினார்! அவனிடம், "நீ பிற்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு எந்த துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" என்று கேட்டார்! அதற்கு அவன், " கடல் சார் உயிரியல்(msarine biology)" என்று பதில் அளித்தான்! உடனே சுவாமி அது வேண்டாம்! 'பூச்சியியல்(entomology)' எனும் துறையை எடுத்துக்கொள்" என்றார். பிறகு அவன் எனக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில், "என்ன இது? நான் கடல்சார் உயிரியல் துறையை விரும்பினால் இவர் என்னவோ பூச்சியியல் என்னும் துறையை எடுத்துக் கொள்ளும்படி கூறுகிறார்?" என்று எழுதி இருந்தான்! நானும் சுவாமியிடம், "சுவாமி! அவன் கடல்சார் உயிரியல் படிப்பை விரும்புகிறான். ஆனால் நீங்கள் பூச்சியியல் என்னும் துறையை எடுத்துக் கொள்ளும்படி கூறி இருக்கிறீர்கள்!" என்றேன். ஆனால் அவர் என்னிடம், " நீ மறந்து விட்டிருப்பாய், ஆனால் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது! அவனுக்கு சிறுவயதிலேயே நீர் சம்பந்தமான ஒவ்வாமை இருந்தது! ஆகையால் அவன் கடல்சார் உயிரியல் படிப்பது அவனுக்கு நன்மை செய்வதாக இருக்காது! உனக்கும் அவனது பெற்றோருக்கும் பிற்காலத்தில் துயரை கொடுக்கக் கூடியதாக அமையுமாதலால் நான் அவனை பூச்சியியல் படிப்பை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினேன்!" என்றார்! 

 ஆகவே அவர்தான் நம்மை அளித்துக் காப்பவர்! நமக்கு என்ன நடக்கப் போகிறது, நமக்கு எது நன்மை தரும் -போன்றவை அவருக்கே நன்றாக தெரியும்!

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 333:

 நீ கோவிலுக்கு சென்றாலும் சர்ச்சுக்கு சென்றாலும், நெடுஞ்சாண் கிடையாய் கீழே விழுந்து வணங்கினாலும் மண்டியிட்டு வணங்கினாலும், உனது வேண்டுதல்களுக்கு பதில் அளிக்கும் இறைவன் ஒருவனே ஆவான். அதனால் தான் அவன் 'பிரபு'என்றும் 'மாஸ்டர்' எனவும் அழைக்கப்படுகிறான்.

 எனது பிறந்த தினத்தை நான் வழக்கமாக சுவாமியுடன் தான் அனுபவிப்பேன். ஆனால் ஒரு பிறந்தநாளன்று சுவாமி என்னை வேறு ஒரு இடத்திற்கு சென்று அங்குள்ள பக்தர்களிடம் உரையாடச் சொன்னார். அதற்கு உடனே நான், " என்ன இது, சுவாமி! என்னை என் பிறந்தநாள் அன்று வெளியே அனுப்புகிறீர்களே?' என்று கேட்டேன். அதற்கு சுவாமி அளித்த பதில் இதோ! -" என்ன பெரிய பிறந்தநாள்? அது ஒன்றும் ஒரு முக்கியமான நிகழ்வு அல்ல! அடிப்படையில், பிறப்பு என்பது மிகவும் ஒரு சோகமான நிகழ்வாகும்! கொண்டாடப்பட வேண்டியது அல்ல!" என்றார்! தென்னிந்தியாவில் ஒரு கோவிலில் இருக்கும் கடவுளுக்கு கஸ்தூரி ரங்கநாதர் என்று பெயர்; எனது பெயர் காரணமும் அவரே. 

 ஆகையால் எனது ஒரு பிறந்த நாளுக்கு முன்பு நான் சுவாமியிடம் எனது பிறந்தநாளுக்கு அந்த புனித தலத்துக்கு செல்லப் போவதாகக் கூறினேன். அதற்கு சுவாமி, "அங்கே செல்! அங்கே நீ என்னை பார்ப்பாய்! இங்கு இருப்பது போலவே நான் அங்கும் இருப்பேன்! " என்றார்! நீங்கள் நம்பினால் நம்புங்கள்! நான் அங்கே சென்றபோது கஸ்தூரி ரங்கநாதரை பார்க்கவில்லை! எனக்கு சொந்தமான சுவாமியைத்தான் கர்ப்ப கிரகத்தில் பார்த்தேன்! ஆகவே எல்லா இடங்களிலும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் பதில் அளிப்பவர் அவரே!! அந்த வேண்டுதல் எந்த மொழியில் இருந்தாலும் சரி, எந்த கடவுளிடம் வேண்டப்பட்டதாக இருந்தாலும் சரி! 

ஒரு தாய் தன் மகனைப் பற்றி சுவாமியிடம் புகார் செய்தார்: "சுவாமி! எனது மகன் திருப்பதிக்கு செல்கிறான், ஆனால் புட்டபர்த்திக்கு வருவதில்லை" என்று; அதற்கு சுவாமி, " நீ ஏன் அதற்காக கவலைப்படுகிறாய்? அங்கே இருப்பதும் நானே! " என்றார்!

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


 📝 நிகழ்வு 334:

ஒரு தசரா பண்டிகையின் போது தான் பேசுவதற்கு முன்னால் சுவாமி என்னை பேசுவதற்கு பணித்தார். நானும் எனக்கே உரிய உற்சாகத்துடன் "சர்வத: பாணி பாதம்" என்ற வாக்கியத்துடன் தொடங்கினேன். பிறகு தொடர்ந்து அதனை விளக்கும் விதமாக, "சுவாமியின் கால்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன! ஒருமுறை மங்களூரைச் சேர்ந்த  தீக்ஷித் என்பவரிடம், அவரது வீட்டிற்கு டிசம்பர் மாதத்தில் தான் வருவதாக சுவாமி கூறினார். உடனே தீக்ஷித் அவர்கள் சுவாமியிடம், " எந்த டிசம்பர், சுவாமி!" என்று கேட்டார்! அதற்கு சுவாமி, 'இந்த  டிசம்பர்!" என்று பதிலளித்தார். அவருக்கு தேதியும் அறிவித்தார். ஆனால், எந்த காரணத்தினாலோ தெரியவில்லை, அந்த நாளில் தீக்ஷித் அவர்கள் தன் வீட்டில் இல்லை! மேலும் அவர் வீட்டில் இருந்த பெண்மணிகள் உணவு உண்டு கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வாயிற் கதவு தட்டப்பட்டது! மேலும் ' தீக்ஷித்! தீக்ஷித் ! ' என்று கூப்பிடுவதும்  கேட்டது! அது சுவாமியின் குரலாகும்! உடனே அவர்கள் உண்பதை நிறுத்திவிட்டு ஓடி வந்து கதவை திறந்தனர்! ஆனால் அங்கே சுவாமி இல்லை! ஆனால்  வலது காலும் இடது காலுமாக, காலடிகளின் வரிசை தென்பட்டது. அங்கே அவை விபூதியால் அமைந்தவைகளாக இருந்தன! அந்த காலடிகளின் வரிசை, வெளி வாயிலிருந்து பூஜை அறை வரை சென்றது ! அதைப் பார்க்க வந்த பக்தர்கள், காலடிகளில் இருந்த விபூதியைப் பிரசாதமாக எடுத்துக் கொண்டனர். ஒரே ஒரு காலடியின் பதிவு மட்டும் காப்பாற்றப்பட்டது! அதில் மேலும் மேலும் விபூதியின் உற்பத்தி அதிகரித்தது. ஒரு இரண்டு சென்டிமீட்டர் தடிமனுக்கு பெருகி விட்டு, பிறகு நின்று விட்டது! அவரது வீடு ஒரு யாத்திரை தலமாக மாறியது! ஆகையால், அவரது கால்கள் எங்கும் உள்ளன!" என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாக அமர்ந்தேன். பிறகு சுவாமி பேச ஆரம்பித்தார். அவர் என்னைக் குறிப்பிட்டு, " இந்த மனிதர் தான் பேசுவதைத் தானே முழுமையாக நம்புவதில்லை. என்னுடைய பாதங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன என்று இவர் கூறுகிறார். ஆனால் நான் வைட்ஃபீல்டு  அல்லது வேறு ஏதாவது ஒரு ஊருக்கு சென்று அங்கே ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் தங்கினால் அவர் எனக்கு , "சுவாமி! உங்களது கால்களைத் தொடுவதற்கும் மசாஜ் செய்வதற்கும் அருகில் அமர்வதற்கும் எப்பொழுது எனக்கு மீண்டும் வாய்ப்பு கிட்டும்?" என்று  கடிதம் எழுதுகிறார்!  ஏன்? அவர் எங்கிருந்தாலும் என்  கால்களும் அங்கேயே இருக்கின்றனவே? இவை அனைத்தையும் அங்கேயே செய்யலாமே? ஆனால் அவர் எனது உடல் சார்ந்த பாதங்களையே என் பாதங்களாக பாவிக்கிறார்! ஆகையால் அவரது வார்த்தைகள் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை!" என்று கூறினார்!

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 335:

 நாம் அனைவரும் அவரினுள் வசிக்கிறோம். அவர் நம்முள் வசிக்கிறார்! அவர் தான் "நிவாஸா " ! அதனால்தான் அவர் "வாசுதேவா" என்று அழைக்கப்படுகிறார். யாரும் அவரிடமிருந்து தப்ப முடியாது! நார்வே நாட்டைச் சேர்ந்த டைடுமன் ஜோஹான்சன் என்ற கடல் சார்ந்த பொறியாளர் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் தன் தொழில் தொடர்பாக சிட்டகாங் துறைமுகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. சுவாமியின் அனுமதியுடன் அங்கு சென்றார். பிறகு தன் வேலையை முடித்துவிட்டு வைட்ஃபீல்டுக்கு வந்தார். சுவாமியை சுற்றி பலர் இருந்த சமயம் அவர் அமைதியாக ஒரு மூலையில் சென்று அமர்ந்தார். அவரை கவனித்துக் கொண்டிருந்த சுவாமி, அவரிடம் வந்து "உன்னுடைய மோதிரம் எங்கே?" என்று கேட்டார். ஏற்கனவே சுவாமி அவருக்கு கொடுத்திருந்த மோதிரம் அது. அவர் உடனே "சுவாமி! நான் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு கப்பலில் இருந்து சறுக்கியவாறு கீழே இறங்கிக் கொண்டிருந்த போது அந்த மோதிரம் சிட்டகாங் நதியில் விழுந்துவிட்டது என்றார்! அதற்கு சுவாமி, " அட பாவமே!" என்று கூறி தன் கையை அசைத்து ஒரு மோதிரத்தை வரவழைத்தார். "அதே மோதிரம் தானா, சுவாமி?" என்று கேட்க வேண்டும் போல எனக்கு மட்டுமல்லாமல் அங்கிருந்து அனைவருக்கும் தோன்றியது! ஆனால் யாருக்கும் தைரியம் இல்லை! ஆனால் தனது விஞ்ஞான ரீதியான ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாத டாக்டர். பகவந்தம் அந்த கேள்வியை சுவாமியிடம் கேட்டு விட்டார்! சுவாமி அவரை சிறிது கோபத்துடன் பார்த்துக் கொண்டு, "உன்னுடைய நம்பிக்கை இவ்வளவுதானா? அந்த மோதிரம் என் கைகளில் விழுந்தது! நான் அந்த ஆற்றில் இருந்தேன்!" என்றார்!! யாரால் அப்படி சொல்ல முடியும் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்! "சர்வத: பாணி பாதம்"! அவருடைய கைகளும் கால்களும் இல்லாத இடமில்லை! நாம் இதனை கீதையில் படிக்கிறோம், திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்கிறோம் ஆனால் அதன் மீது முழு நம்பிக்கை இல்லை. இதற்காகத்தான் இறைவன் அவதரித்து வந்திருக்கிறார் -நம் எல்லோரையும் நம்ப வைப்பதற்காக!

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 336:

டைடுமேன் ஜோஹான்சன்(நிகழ்வு எண் 335இல் குறிப்பிடப்பட்டவர்) தன் நாட்டிற்கு திரும்பிச் சென்ற பிறகு  பல மாதங்கள் கழித்து மீண்டும் சுவாமியிடம் வந்தார். அவர் சுவாமியின் அறைக்கு வந்த போது நானும் இருந்தேன்.  சுவாமி அவரைப் பார்த்து, "ஆஹா! இப்போது நீ புதிய வீட்டில் இருக்கிறாய்! பின்புறம்  பைன் மரங்களும், முன்புறம் கடலும் உள்ளன! மிகவும் அழகான இடம்!!" என்றார். ஆயிரம் மைல்களுக்கு அப்பால், நார்வே நாட்டில் எங்கோ இருக்கும் இவரது வீட்டின் அழகை சுவாமி விவரிக்கிறார்! மீண்டும் தொடர்ந்து அவர், "நீ பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறாய்!" என்று சொல்லிவிட்டு, "நான் எப்படி இருக்கிறேன்?" என்று கேட்டார்! அதற்கு அவர் "மிகவும் பொலிவுடனும், நறுமணத்துடனும், ஆனந்தமாகவும் காணப்படுகிறீர்கள், சுவாமி !" என்றார்! நானும் அங்கே நின்று கொண்டிருந்தேன். சுவாமி மேலும் தொடர்ந்து, " கஸ்தூரி எப்படி உனக்கு தோன்றுகிறார்?" என்று கேட்டார். அதற்கு அவர், "சுவாமி! அவரும் மிக நன்றாகவே காணப்படுகிறார்! பொலிவுடனும் இளமையாகவும் தென்படுகிறார்!" என்று கூறினார். உடனே சுவாமி, "ஏன், அப்படி என்று தெரியுமா?  நீ என்னுடைய பிம்பம்! கஸ்தூரியம் எனது பிம்பம்! "என்றார்! 

 இறைவன் அனைவரையும் அவரின் பிம்பங்களாகவே படைத்துள்ளார்!

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 337:

முன்பு ஒரு முறை இந்த ' டைடுமேன் ' என்ற பக்தர் தன்னுடைய வெண்மை நிறம் கொண்ட இம்பாலா காரை பிருந்தாவனத்தில் உள்ள சுவாமியின் இல்லத்தில் இருந்த போர்டிகோவில் நிறுத்தி வைத்திருந்தார்.அதன் மேல் ' பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ' என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காரின் சாவியை அவர் சுவாமியிடம் கொடுத்திருந்தார். சுவாமி அவரிடம், "நீ ஊருக்கு எப்போது கிளம்புகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவர் ஏதோ ஒரு தேதியை குறிப்பிட்டார். உடனே சுவாமி, " நான் உன்னுடைய காரில் ஹைதராபாத் செல்லப் போகிறேன்! நீயும் என்னுடன் வரலாம்!" என்றார்! சுவாமி ' உன்னுடைய காரில் ' என்று கூறியதை நினைத்து அவர் வருந்தினார். ஆகவே அவர், "என்னுடைய கார், சுவாமி?" என்று கேட்டார். அதற்கு சுவாமி, " ஆமாம்! உன்னுடைய கார் தான்! அந்த தகரக் கார் எனக்கு வேண்டாம்! உனக்கு தெரியுமா, என்னிடமே ஒரு இம்பாலா கார் உள்ளது என்று ?" என்றார்! உடனே சுவாமியிடம் மற்றொரு இம்பாலா கார் இருக்கிறது போலும் என்று டைடுமேன் நினைத்துக் கொண்டார். உடனே சுவாமி, "என்னிடம் இருக்கும் இம்பாலா கார் நீதான்! நீதான் எனது வெள்ளை நிற இம்பாலா கார்! அந்த தகர காரில் செல்வதை விட உன்னுடன் செல்லும் பயணத்தையே சுகமானதாக நான் நினைக்கிறேன்!" என்றார். ஆகவே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் சுவாமி பயணம் செய்யும் கார்கள் !! ஒவ்வொருவரின் இதயத்திலும் சுவாமி வீற்றிருக்கிறார். நீங்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது திடீரென்று ஒருவரது வீட்டில் சுவாமியின் படத்தை பார்க்கின்றீர்கள். உடனே உள்ளே சென்று அவர்களிடம் ஒரு இனிமையான உரையாடலை மேற்கொள்ள நாம் விரும்புவோம். சுவாமியின் படம் வைத்திருப்பவரை இயற்கையாகவே ஒரு உடன்பிறப்பை போல நமக்குப் பார்க்கத் தோன்றுகிறது! ஆனால் சுவாமி கூறுகிறார்: "எல்லோரிடத்திலும் எனது படம் உண்டு; ஆனால் உனக்கு அதை பார்ப்பதற்கான கண் இல்லை!" என்று. நாம் மட்டும் பிறரிடம் இருக்கும் சுவாமியைப் பார்க்க முடிந்தால் எப்பேற்பட்ட ஒரு பரந்த சகோதரத்துவத்தை நாம் உணர்ந்திருக்க முடியும்! இந்த இயலாமைக்கு நம் அகக் கண்களைத் தான் குறை சொல்ல வேண்டுமே தவிர பிறரின் இதயத்தில் சுவாமி இல்லை என்று அவர்களைக் குறை கூறுவது முறையற்றதாகும்!

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 338:

1970களில் அமெரிக்காவின் பிரபலமான எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அர்னால்ட் ஷூல்மன் என்பவருக்கு சுவாமி புட்டபர்த்தியில் இன்டர்வியூ அளித்தபோது அவரிடம், "உனக்கு என் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நீ என்னை மறந்தாலும், நீ என்னை பார்த்து நகைத்தாலும், என்னை வெறுத்தாலும் நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்! இதை உனக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு பொருள் என்னிடமிருந்து உனக்கு தேவை!" என்று கூறிவிட்டு தனது அங்கியின் கைப்பகுதியை நன்றாக மேலே தள்ளிக்கொண்டு (அங்கியினுள் மறைத்து வைத்துள்ளாரோ என்ற ஐயத்தை தீர்ப்பதற்காக) திறந்த உள்ளங்கையை சுழற்றி, மூடிவிட்டு, பின் திறந்தார். அப்போது அவர் உள்ளங்கையில் தனது படம் பொறித்த ஒரு மோதிரம் இருந்தது. படத்தை சுற்றிலும் 16 வைரம் போன்று ஜொலிக்கும் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன! அந்த மோதிரத்தை ஷூல்மனின் கைவிரலில் சுவாமி அணிவித்தார். அது அவரது விரலில் மிகச்சரியாக பொருந்தியது. அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர் சுவாமியிடம் , " நான் எப்படி இதனுடன் சுங்கத்துறை அதிகாரியை கடந்து செல்வது?" என்று கேட்டார். அதற்கு சுவாமி, " நீ கவலைப்படாதே! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்! அந்த மோதிரத்தை தொட்டுக் கொண்டே சுவாமி அவரிடம், " நான் உன்னுள் இருக்கிறேன்; நீ என்னுள் உள்ளாய். ஆகவே இதனை மறந்து விடாதே! நம்மை யாராலும் பிரிக்கவே முடியாது!" என்றார். பிறகு தனது பயணத்தின் முடிவில் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையின் போது அவர் தானாகவே இந்த மோதிரத்தை அவர்களிடம் காண்பித்து இந்த மோதிரத்தின் விலை மதிப்பு எனக்கு தெரியாது,; எனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது" என்றார்! அங்கிருந்த இரண்டு அதிகாரிகள் அதனை தீவிரமாகப் பரிசோதித்த பின்னர் "இந்த மோதிரம் முற்றிலும் மதிப்பற்றது; ஒரு சாதாரண பொருள் தான்" என்று முடிவெடுத்தனர்! " நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி அதை திருப்பிக் கொடுத்து விட்டனர்! சில நாட்களுக்கு பின்னர் அவர் நியூயார்க் சென்றிருந்தபோது அங்கே இருந்த "மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ்" என்ற நிறுவனத்தை அணுகி "இந்த ஊரில் ஒரு ஆபரணத்தின் விலை மதிப்பை மிகச் சரியாக நிர்ணயம் செய்பவர்கள் யாரேனும் இருக்கின்றனரா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "காமன்வெல்த் அப்ரைசல் கார்ப்பரேஷன்" என்ற நிறுவனத்தைப் பரிந்துரைத்தனர். அவர் அங்கே சென்று இந்த மோதிரத்தை கொடுத்தார். அதை அவர்கள் பரிசோதித்து விட்டு, " 18 கேரட் கோல்ட் , வெள்ளை குங்குமப்பூ மோதிரம், முட்டை வடிவ மேல் பகுதி , அதை சுற்றிலும் 16 சஃபையர் கற்கள், முழுப்பளு 2.40 கேரட், மத்தியப் பகுதியில் முட்டை வடிவில் ஒரு கௌரவமான மனிதர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் போன்ற எனாமல் பூச்சு - மதிப்பு 150 டாலர்கள்" என்று அறிக்கை அளித்தனர்!! 

 சுவாமியின் செயல்கள் இப்படித்தான்!!

 ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 339:

தன் தாயை இழந்த மாணவர் ஒருவர் இருந்தார். அவருடைய தந்தை அவருக்கு துணையாக இருந்தார். ஒருநாள் சுவாமி இந்த மாணவரிடம் உனது செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்; இனிமேல் உனது அன்றாட தேவைகளுக்காக உன் தந்தையை தொந்தரவு செய்யாதே!" என்று கூறினார். அதேபோல ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் சுவாமி  அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை கொடுத்து விடுவார். ஆனால் ஒரு தடவை சுவாமி அவருக்கு கொடுக்க மறந்துவிட்டார். தனது விடுதியில் அன்றாட செலவிற்கான பணம் அவரிடத்தில் இல்லாமல் போயிற்று.  சுவாமியின் அறிவுறுத்தலின் காரணமாக அவர் தன் தந்தையிடம் கேட்க விரும்பவில்லை. ஓரிரு நாட்கள் கடந்தும் சுவாமியிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. அப்போது நவராத்திரி வைபவம் நடந்து கொண்டிருந்தது. ஆகவே இந்த மாணவர் லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் ஜபித்து வந்தார். அவ்வாறு ஜபித்து வந்த போது "அன்னதா வசுதா வ்ருத்தா ப்ரம்மாத்மைக்ய ஸ்வரூபிணி" என்ற வரியை உச்சரித்த போது (தெய்வத்தாய் நமக்குத் தேவையான உணவு, செல்வம் ஆகியவற்றை வழங்குபவள்; ஜீவன் பிரம்மத்துடன் ஒன்றிய வடிவத்தை உடையவள்) அவருக்கு உணவின் ஞாபகம் வந்து பசி ஏற்பட்டது. அவர் உடனே சுவாமியை நினைத்துக் கொண்டார். ஆழ்ந்த பக்தியுடன் சுவாமியிடம் மனதில் வேண்டினார்: "சுவாமி! நீங்கள் தான் எனக்கு உணவளிப்பவர். கடந்த இரண்டு நாட்களாக நான் சரியாக உணவு அருந்தவில்லை. எனது வேண்டுகோளுக்கு எப்பொழுது செவி சாய்ப்பீர்கள்?"

 என்று.  இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் போதே தன் முதுகில் யாரோ தட்டினார்கள்.  மற்றொரு மாணவர் சுவாமியிடமிருந்து ஒரு உறையைக் கொண்டு வந்திருந்தார். அவர், "சுவாமி உனக்காக இதனை அனுப்பி இருக்கிறார்!" என்று கூறி அந்த உறையை அவரிடம் கொடுத்தார். அதனை அவர் திறந்தபோது அவருக்கு தேவையான "பாக்கெட் பணம்" அதிலிருந்தது!

  அவரிடம் வேண்டித்தான் அவரது கிருபையைப் பெற முடியும் என்று நாம் பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நமக்கு அவர் மீதான பக்தியும் ஏக்கமும் அதிகரிப்பதற்காக அவரே ஒரு சில சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே தோற்றுவிக்கிறார். அதன் பிறகு நமது வேண்டுதல்களுக்காக அவர் காலம் கடத்துவதில்லை! ஒரு கணப்பொழுதில் நமக்கு ஆவன செய்கிறார்!

 ஆதாரம்: முனைவர்.சஷாங்க் ஷா எழுதிய, " My Students are My Property" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 340:

தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே திருமதி. கீதா மோகன் ராம் அவர்கள் சுவாமிக்கு ரோஜா மலர்கள் சமர்ப்பிக்கும் பழக்கம் உடையவர். திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கிய பின்னரும் இன்றுவரை அவர் இந்த பழக்கத்தை கைவிடவில்லை. ஒருநாள் தனது தோட்டத்திலிருந்து ஒரு ரோஜா பூவை பறித்து பூஜை மேடையில் இருந்த சுவாமியின் போட்டோவின் முன்னால் வைத்தார். முந்தைய நாட்களில் தனக்கு சுவாமியிடம் ரோஜா மலர் நேராக அளிக்கும் வாய்ப்புகள் பல கிடைக்கப்பெற்ற பாக்கியத்தை நினைத்து ஆனந்தம் நிரம்பப் பெற்று அன்பு பொங்க சுவாமியின் படத்துடன், அவருடன் நேராக பேசுவது போல், பேச ஆரம்பித்தார். "சுவாமி! இந்த மலரை உனக்காக சமர்ப்பிக்கிறேன்! நீ அதனை ஏற்று மகிழ்வாயாக!" என்று கூறிவிட்டு தனது வேலைக்கு சென்று விட்டார்; இந்த உரையாடலையும் மறந்துவிட்டார். மறுநாள் காலையில் பிருந்தாவனத்தில் சுவாமி, கீதா மோகன் ராமின் அம்மாவான கமலம்மாவிடம், " கீதா எப்படி இருக்கிறாள்?" என்று கேட்டார். அவர், " சுவாமி! உங்களது கிருபையால் அவள் நன்றாகத் தான் இருக்க வேண்டும்! நான் பல நாட்களாக அவளிடம் பேசவில்லை" என்றார். உடனே சுவாமி, " ஆமாம்! அவள் நன்றாகவே இருக்கிறாள்! நேற்று என்னிடம் பேசினாள்! எனக்கு ரோஜா மலரை சமர்ப்பித்து, அதை அனுபவிக்குமாறு என்னிடம் கூறினாள்!" என்றார்! பிறகு கமலம்மா அவர்கள் தன் மகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த நிகழ்வினை பகிர்ந்த போது அமெரிக்காவில் பூஜை மேடையில் அளிக்கப்பட்ட ரோஜா மலரை சுவாமி ஏற்றுக்கொண்டார் என்ற உண்மை இருவருக்கும் புரிந்தது!

  ரோஜா மலர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பயணித்ததா? அல்லது சுவாமி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றாரா? என்ற கேள்விகள் சிலருக்கு மனதில் தோன்றும் அல்லவா? உண்மை என்னவெனில், இறை தத்துவம் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் நிலை பெற்று உள்ளது. எல்லாம் வல்ல இறைவன் நமது இதயங்களில் குடிகொண்டு உள்ளார்.

 அஸ்தினாபுரத்தில் ராஜசபையில் தனது மானத்தைக் காக்கும் படி திரௌபதி கண்ணனிடம் வேண்டிய போது அங்கே வருவதற்கு கண்ணன் மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக திரௌபதி குறை கூறிய போது, கண்ணன் திரௌபதியிடம், " நீ ஏன் என்னை ' மதுரா நாதா! துவாரகாதீசா! ' என்றெல்லாம் அழைத்தாய்? இதனால்தான் எனக்கு மதுராவிலிருந்தும் துவாரகாவிலிருந்தும் அஸ்தினாபுரத்திற்கு வருவதற்குத் தாமதம் ஆயிற்று! நீ என்னை ' ஹ்ருதய நிவாஸி! ' என்று அழைத்திருக்க வேண்டும்! நான் அந்தக் கணமே அங்கு தோன்றியிருப்பேன்! ஏனெனில் அங்கு தான் நான் நிரந்தரமாகவே வசிக்கிறேன்!- உண்மையான பக்தர்களின் இதயத்தில்!!" என்றார்.

 ஆதாரம்: முனைவர்.சஷாங்க் ஷா எழுதிய, " My Students are My Property" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 341:

 1970களில் பிருந்தாவனத்தில் படித்த மாணவர்கள் சுவாமியின் அருகிலே இருந்து அவரது இறை அன்பினை அபரிமிதமாக அனுபவித்தனர். அவர்கள் தமக்கென தனிப்பட்ட உரிமைகளும் சுவாமியை வேண்டும்போது அணுகும் வாய்ப்புகளும் அதிகம் பெற்றவர்களாக இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் ஒரு முறை ஒரு மாணவர் சுவாமியின் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். எப்படியோ காரின் சாவியை கைப்பற்றி வாகன கூடத்தில் நின்று கொண்டிருந்த காரில் அமர்ந்து சாவியை பொருத்திவிட்டு அதனை திருப்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது! வெள்ளை நிற இம்பாலா கார் முதல் கியரில் நிறுத்தப்பட்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை! உடனே அது நகர்ந்து அருகில் இருந்த சுவரின் மீது மோதியது! உடனே மிகவும் பயந்து போன அந்த மாணவர் அவசரமாக விடுதிக்குச் சென்று விட்டார்! இரண்டு நாட்கள் விடுதியை விட்டு தரிசனத்திற்காக வெளியே வரவே இல்லை. அவர் தென்படாததை கவனித்த சுவாமி, விடுதியின் பாதுகாவலரை அழைத்து, " ஏன் அந்த மாணவர் தரிசனத்திற்கு இரண்டு நாட்களாக வரவில்லை?" என்று கேட்டார்! உடனே அவர் விடுதிக்குச் சென்று அந்த மாணவரிடம், "சுவாமி உன்னை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்! நீ ஏன் தரிசனத்திற்கு வரவில்லை?" என்று கேட்டார். தனது "விலை உயர்ந்த பரிசோதனை"யால், தாம் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவோம் என்ற ஒரு நடுக்கத்துடன் ஏற்கனவே தன் பெட்டி படுக்கையைக் கட்டி வைத்திருந்தார்! பாதுகாவலரின் வார்த்தையை கேட்ட அந்த மாணவர் உடனே சுவாமி தரிசனத்திற்கு சென்றார். சுவாமி அவரை அழைத்து, " குழந்தாய்! நீ ஏன் தரிசனத்திற்கு வரவில்லை? சுவாமி உன் மீது கோபமாக இருப்பார் என்ற நினைப்பா? என் அன்பு மகனே! என் காரை விட உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்! உயிரற்ற காரை விட நீ தான் எனக்கு மதிப்பு மிக்கவன்! ஆகவே நீ ஏன் சுவாமியிடமிருந்து தூரமாகச் செல்ல வேண்டும்? மாணவர்களாகிய நீங்கள் மட்டுமே எனது ஒரே சொத்து ஆவீர்கள்!" என்றார்! எதிர்பாராத இந்த வார்த்தைகளை சுவாமியிடம் இருந்து கேட்ட அந்த மாணவர் உடனே கண்கலங்கினார். சுவாமியின் பாதங்களில் விழுந்து அவற்றைத் தன் கண்ணீரால் நனைத்தார்! இந்த நிகழ்வை எங்களுடைய ஆசிரியர் ஒருவர் சொல்லக் கேட்ட எனக்கு, இப்படிப்பட்ட அன்பும் மன்னித்து அருளும் குணமும் நம் பெற்றோர்களில் ஒருவருக்காவது இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது!!

 ஆதாரம்: முனைவர்.சஷாங்க் ஷா எழுதிய, " My Students are My Property" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 342:

1997 லேயே எங்களது குடும்பத்திற்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் கார்ட்) கிடைத்திருந்தது. பிறகு நான் பர்த்தியில் இருந்த போது 2003 அக்டோபரில் அதனை புதுப்பிக்க வேண்டி இருந்தது. அதற்காக நான் அமெரிக்காவிற்கு போக வேண்டி இருந்தது. நான் அங்கு போகாமல் இருந்தால் அதனை முற்றிலும் இழக்கும் அபாயம் இருந்தது. இப்போது ஒரு குழப்பமான சூழ்நிலை உருவெடுத்தது. தந்தையின் விருப்பங்களுக்கும், ஏற்கனவே இந்த தகுதியைப் பெறுவதற்காக செய்த செலவுகளுக்கும் முன்னுரிமை அளிப்பதா அல்லது, இப்போது யாருக்கும் எளிதில் கிடைக்காத சுவாமியின் அருகாமையில் இருப்பதற்கு  முக்கியத்துவம் அளிப்பதா என்ற  குழப்பமே அது!  இப்போது நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது  இறைவனே முன்வந்து அளித்த வரத்தைப் போல சுவாமி என்னையும் சேர்த்து எட்டு மாணவர்களை பூர்ணச்சந்த்ரா ஆடிட்டோரியத்திற்கு அழைத்தார். இந்திய பல்கலைக்கழக மானிய குழுமத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக, '  கல்வியில் அறநெறி முறைகள் ' என்ற தலைப்பில் அகில இந்திய துணைவேந்தர்கள் மாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற இருந்தது. அப்போது உரைகள் ஆற்றுவதற்காகவே சுவாமி எங்களை தேர்ந்தெடுத்திருந்தார்.  அதற்கு ஒத்திகை பார்ப்பதற்காக சுவாமி எங்களை ஆடிட்டோரியத்திற்கு அழைத்திருந்தார்.  எனது குழப்பத்திற்கு சுவாமியிடமிருந்து தீர்வு காண இந்த வாய்ப்பை இறுகப் பற்றினேன். மதியம் அவரது காலடிகளில் அமர்ந்திருந்த போது நான் எனது கடிதத்தை அவரிடம் அளித்தேன். அதை அவர் முழுதும் படித்துவிட்டு என்னை பார்த்து ஒரு குறும்பு சிரிப்புடன், " அமெரிக்காவிற்கு போ" என்றார்! ஆனால் நானோ அங்கு அவருடனே இருக்க விரும்புகிறேன் என்று மன்றாடினேன். ஆனால் அவரோ அன்புடன் "நீ அமெரிக்காவிற்கு போ" என்றே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்! இதன் நடுவில் எங்களுக்கு சுவாமி டிபன் ஏற்பாடு செய்திருந்தார். நான் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தேன். இட்லியும் சட்னியும் வந்தன. நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் நமட்டுச் சிரிப்புடன் "நீ அமெரிக்காவிற்கு சென்றால் உனக்கு சட்னி அங்கே கிடைக்காது!" என்றார். உடனே அங்கிருந்த பெரியவர்கள் சிரித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுவாமியுடன் அந்த பொன்னான நேரம் கழிந்தபின் நாங்கள் விடுதியை நோக்கி வந்து கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு மூத்த மாணவர் என்னிடம் வந்து, " சுவாமி உன்னிடம் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்?" என்று கேட்டார். அப்போது அவரிடம் எனது குழப்பம் முதலிய எல்லாவற்றையும் அவரிடம் விவரித்தேன். உடனே அவர்," சென்ற வருடம் சுவாமி எங்களில் சிலரை இதே போல இன்டர்வியூ அறைக்கு அழைத்திருந்தார். அப்போதும் எங்களுக்கு இட்லியும் சட்னியும் கொடுத்தார். அப்போது நடந்த உரையாடலின்போது திடீரென, " இட்லி, சட்னி என்றால் என்ன!" என்று கேட்டார்!யோசித்த பிறகு நாங்கள்," சுவாமி! இட்லி பெரியது. ஆகையால் இட்லி தான் இறைவன்; உலகம்தான் சட்னி " என்றோம்.  உடனே சுவாமி,"அப்படி அல்ல! சட்னி இல்லையேல் இட்லிக்கு மதிப்பில்லை. ஆகவே இறைவன் தான் சட்னி! உலகம்தான் இட்லி! " என்றார்!" என்று கூறிவிட்டு மேலும் அந்த மூத்த மாணவர் தொடர்ந்து என்னிடம் " 'நீ அமெரிக்காவிற்கு போனால் உனக்கு சட்னி கிடைக்காது ' என்று சுவாமி கூறியதன் உட்பொருள் என்னவெனில்' நீ அங்கு சென்றால் நீ  இறைவனின் அருகாமையில் இருப்பதை இழப்பாய் ' என்பதே ஆகும்!" என்றார். இப்போது நான் கேட்ட இறைவனின் வழிகாட்டுதல் கிடைத்துவிட்டது! உடனே நான் முடிவெடுத்தேன்! கிரீன் கார்டு தகுதியைத் துறந்தேன்!

 ஆதாரம்: முனைவர்.சஷாங்க் ஷா எழுதிய, " My Students are My Property" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 343:

1986 ஆம் வருடம் பிருந்தாவனத்தில் சுவாமி எங்களையும் சேர்த்து மெக்சிகோவை சேர்ந்த ஒரு தம்பதியினரையும் மேலும் அவர்களது இரண்டு நண்பர்களையும் இன்டர்வியூவிற்கு அழைத்தார். அதில் இரண்டு பெண்மணிகளை உள்ளே அழைத்துச் சென்றபோது என் தலையை லேசாக தள்ளிவிட்டார்! நான் உடனே அவரை நோக்கிய போது, அவர் மெதுவாக, " இந்தப் பெண்மணிகளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல் கூட தெரியாது!" என்று  கிசுகிசுத்தார் . உள்ளே அவர்களுடன் சுவாமி 20 நிமிடம் உரையாடினார். சுவாமியின் குரல் மிகவும் மெல்லியதாக என் காதுகளில் விழுந்தது. அந்தப் பெண்மணிகள் சில சமயம் அழுதார்கள், சில சமயம் சிரித்தார்கள்! அவர்கள் வெளியே வந்த பிறகு சுவாமி தன் நாற்காலியில் வந்து  அமர்ந்து கொண்டார். அவர் என்னைப் பார்த்து, " நீ ஏன் என்னை அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்! அதற்கு நான்,  "சுவாமி!  உள்ளே நீங்கள் வேறு ஏதோ ஒரு மொழியில் பேசுவதைப் போல இருந்தது! அது எந்த மொழி, சுவாமி? " என்றேன். சுவாமி உடனே, "மெக்சிகன்!" என்றார்.  நான்  திரும்பவும்,  "ஸ்பானிஷ் மொழியா, சுவாமி?" என்று  கேட்டேன்! அதற்கு அவர் , "இல்லை, இல்லை! அது ஸ்பானிஷ் அல்ல,  அது மெக்சிகன் ஸ்பானிஷ்!  நான் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுவேன்! ஏனென்றால் உண்மையில் ஒரே ஒரு மொழி தான் உள்ளது! அதுதான் இதயம் சம்பந்தப்பட்ட மொழி! ' அன்பு ' எனும் மொழி!! "என்றார்!
 
ஆதாரம்: திரு. பி. வி. சங்கர் என்ற பக்தர் எழுதிய, "Yaksha Prashna ( யக்ஷனின் கேள்விகள்)" என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 344:

ஒரு சாயி குடும்பத்தில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது தாய் சுவாமிக்காக தினமும் நைவேத்தியம் தயார் செய்வது வழக்கம். அவ்வாறு தயார் செய்த நைவேத்தியத்தை பூஜை அறைக்கு எடுத்துச் சென்று சுவாமிக்கு படைப்பது இந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு கடமையாக இருந்தது. இந்த சிறுவனும் தவறாமல் தினமும் நைவேத்தியத்தை எடுத்துச் சென்று சுவாமிக்குப் படைத்துவிட்டு பின்பு அதனை எடுத்து உண்பான். ஒருநாள் அவனது தாயாரும் பாட்டியும் சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டிருந்த போது விளையாட்டாக இந்த சிறுவன் ஒரு நாணயத்தை வாயில் போட்டுக் கொண்டதால் அது அவன் தொண்டையில் சிக்கிக்கொண்டது! வீட்டில் இருந்தவர்கள் எப்படியெல்லாமோ முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் போக , அவனுக்கு மூச்சு திணற ஆரம்பித்தது! அனைவரும் செய்வதறியாது திகைத்துத் கொண்டிருந்தபோது திடீரென்று யாரோ ஒருவர் அவன் தலையில் மிகவும் வேகமாகவும் பலமாகவும் தட்டியதைப் போல உணர்ந்தான் அந்த சிறுவன்! அடுத்த கணம் அந்த நாணயம் அவனது வாயிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தது!! அந்த அதிர்ச்சியில் சில நிமிடங்கள் பிரமை பிடித்தவன் போல் இருந்தான்! சுற்றி இருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர்! சிறிது நிமிடங்களுக்கு பின் அவன் தன் இயல்பு நிலைக்குத் திரும்பினான்.

  மறுநாள் காலையில் சமையல் அறையில் சுவாமிக்கு நைவேத்தியத்தை தயார் செய்த அவனது தாய் அவன் அங்கே வராமல் இருந்ததை கவனித்து அவனிடம் சென்று அவனுடைய மாறுபட்ட நடத்தையின் காரணத்தைக் கூறுமாறு வற்புறுத்தினர்! அதற்கு அவன், "நான் இனி சுவாமிக்கு நைவேத்தியத்தை எடுத்துச் செல்லப் போவதில்லை! உங்களுக்கு தெரியுமா? நேற்று பூஜை மேடையில் உள்ள அந்த போட்டோவில் இருந்து வெளியே வந்த சுவாமி என் தலையில் இந்த இடத்தில் மிகவும் பலமாக அடித்து விட்டு சென்றுவிட்டார்!! நான் அங்கே சென்றால் திரும்பவும் என்னை அவ்வாறு அடித்துவிடுவார்! "என்று கூறினான்!! பாவம்! ஒன்றும் அறியாத அந்த சிறுவன் சுவாமி தான் தன்னை அபாயத்திலிருந்து காப்பாற்றியுள்ளார் என்பதை உணரவில்லை! இந்த சிறுவன் கூறிய பின்பு தான் அவனது பெற்றோர்களுக்கும், சுவாமி எவ்வாறு தானாகவே முன்வந்து தங்களது ஒரே மகனை காப்பாற்றியுள்ளார் என்ற உண்மை தெரிந்தது! இறைவனை எவ்வாறு வழிபாடு செய்வது, அவரிடம் எவ்வாறு வேண்டுகோள்கள் விடுப்பது என்பனவற்றை அறியாத சிறுவன் அவன்! (ஆனால்) தெய்வத்தாயான நம் சுவாமி, வேண்டுகோள்களுக்காக காத்திருப்பதில்லை! 

  "தயவு செய்து என்னை காப்பாற்று! என்னும் கூக்குரலுக்காகக் காத்திருப்பதில்லை!! 

  தேவை ஏற்படும்போது தோன்றுகிறார் அவர்!! 

  அவரது அனுக்கிரகம் என்பது, வழிபாடுகளுக்கும் வேண்டுகோள்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும் !

 ஆதாரம்: முனைவர்.சஷாங்க் ஷா எழுதிய, " My Students are My Property" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 345:

ரொனால்ட் என்ற பக்தர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள நேடால் மாகாணத்தில் வசித்து வந்தார்.  அந்த மாகாணம் சமூக விரோத செயல்களுக்கு மிகவும் பெயர் போனதாக இருந்துள்ளது.  ஒரு இரவில் மழை அதிகம் பெய்து கொண்டிருந்தது. அப்போது இவரது வாயிற் கதவை யாரோ தட்டினார்கள். யாரென்று இவர் கேட்க, "சார்! நாங்கள் பாதசாரிகள்! இந்த மழையில் எங்களால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை! தயவுசெய்து இந்த இரவில் மட்டும் இங்கே தங்கிக் கொள்ள அனுமதியுங்கள்!" என்று வெளியில் இருந்து குரல்கள் ஒலித்தன. அந்த கணத்தில் ரொனால்டுக்கு எந்த சந்தேகமும் தோன்றவில்லை. ஆகையால் அவர் கதவைத் திறந்தார். அடுத்த கணமே உள்ளே நுழைந்தவர்களால் அவர் மிக அருகாமையில் துப்பாக்கியால் சுடப்பட்டார்! அவர் ரத்தம் பீறிட கீழே விழுந்தார்! வந்தவர்கள் அந்த வீட்டில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்! அரை-நினைவில் கீழே கிடந்த ரொனால்டோ அங்கே இருந்த சுவாமியின் படத்தைப் பார்த்துக் கொண்டே வலியுடன் சுவாமியை  அழைத்தார்!! உடனே அந்த பெரிய படம் நகரத் தொடங்கியது! அவரது அழைப்பின் அழுத்தம் அதிகரிக்க அது மேலும் வேகமாக அதிரத் தொடங்கியது!! அப்போது அந்தப் படத்தில் இருந்து சுவாமி வெளிக்கிளம்பி தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார்! அருகில் வந்த சுவாமி, மிக அதிகமான அளவில் விபூதியை வரவழைத்து அவரது உடலின் கல்லீரல் பகுதியில் வைத்து அழுத்தி தேய்த்தார்! பிறகு அவரிடம், "கவலைப்படாதே!  உன் காயத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்! அந்தத் தோட்டா உனது கல்லீரலின் ஒரு மூலையில் புதைந்து உள்ளது. நான் உனக்கு பிரசாதம் அளித்துள்ளேன். நீ அறுவை சிகிச்சை எதையும் மேற்கொள்ள வேண்டாம்! அந்தத் தோட்டா தானாகவே கரைந்து விடும்!" என்று கூறினார்! பிருந்தாவனத்திற்கு ரொனால்ட் வந்திருந்த போது ஒருநாள் காலையில் தரிசனம் முடிந்த பிறகு ஹாஸ்டலுக்கு சென்று வார்டனை அவர் சந்தித்தபோது இந்த நிகழ்வை  அவரிடம் விளக்கி கூறினார். அவருக்கு ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் 9  அங்குலமாக இருந்த அந்த தோட்டா தற்போது 3.5 அங்குலமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்! இந்த நிகழ்வின் விவரங்கள் பிருந்தாவனத்தில் அன்று இருந்த அனைவரிடமும் வேகமாக பரவியது. பலர் அவரிடம் பேச ஆசைப்பட்டனர்; அவரது எக்ஸ்ரேக்களையும் பார்க்க விரும்பினர். இத்துடன் முடியவில்லை, இந்த நிகழ்வு!! மறுநாள் காலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த போது ரொனால்டின் அருகே வந்த சுவாமி, "ஹலோ, ரொனால்ட்! இப்போது தோட்டா எப்படி இருக்கிறது?" என்று கேட்டாரே பார்ப்போம்!! உடனே அவர், " சுவாமி உங்களது அளவற்ற கிருபையினால் மூன்று மாதத்தில் 5.5 அங்குலம் கரைந்து விட்டது" என்றார். அதற்கு சுவாமி, " இன்னும் இரண்டு மாதங்களில் மீதமுள்ள 2.5 அங்குலமும் கரைந்து விடும்!" என்றார்!! அவ்வாறு  கூறி முடித்த சுவாமி அவருக்கு விபூதியை வரவழைத்து அவரது வாயில் போட்டுவிட்டு, " Good boy... Good boy..!"என்று கூறி முதுகில் தட்டினார்!  பூரண ஆனந்தத்தில் திளைத்த ரொனால்ட் தென்னாபிரிக்காவுக்கு திரும்பச் சென்றார்.  சுவாமி கூறியதைப் போலவே இரண்டு மாதம் முடிவில் அவர் எடுத்த எக்ஸ்ரேயில் அந்த தோட்டாவின் சுவடே இல்லாமல் இருந்ததாம்!

 ஆதாரம்: திரு.கார்த்திகேயன் அவர்கள் தொகுத்து எழுதிய"Beyond  Borders- Bhagawan Sri Sathya Sai Baba" என்ற  புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 346:

1973 - மகாசிவராத்திரி தினம். நான் எனது Phd பட்டத்திற்கான ஆய்வறிக்கையை தயார் செய்து முடிக்கும் மும்முரத்தில் ஈடுபட்டிருந்தேன். குறிப்பாக அன்று நேரம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருந்தேன். இரவில் உணவு உண்பதற்காக (பெங்களூருவில்) விடுதியின் உணவகத்திற்குச் சென்றேன். திடீரென ' இன்று மகா சிவராத்திரி தினம்'  என்ற நினைவு வந்தது. உடனே என் உள் மனத்திலிருந்து ஒரு தூண்டுதல் வந்தது: "  பிருந்தாவனத்திற்கு சென்று நீ இரவுப் பொழுதை கழிக்கலாம் " என்று!  உடனே அதற்கு மதிப்பளித்து அங்கிருந்து கிளம்பி இரவு 8:55 மணிக்கு பிருந்தாவன வளாகத்தினுள் நுழைந்தேன். பெரும்பாலும் இருட்டியிருந்தது; ஒரு சில விளக்குகளே எரிந்து கொண்டிருந்தன. அப்போது உள்ளே இருக்கும் வாயிலின் முன் நின்று கொண்டிருந்தார் திரு. ராமப்ரம்மம் அவர்கள்! அவர் என்னை பார்த்தவுடன்," சங்கர்! நீ வந்து விட்டாயா?  நான் உன்னை எதிர்பார்த்தேன்! உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன்!" என்றார்! நான் உடனே, " நான் வரப்போகிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கே 7:00 மணிக்கு பின் தான் தெரியும் "என்றேன்!  உடனே அவர், "நான் உனக்குச் சொல்கிறேன்; ஆனால் உன்னுடன் மற்றும் ஒருவர் வந்திருக்க வேண்டுமே, அவர் எங்கே? "என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அந்த நேரத்தில் வெளி வாயிலின் அருகே யாரோ ஒருவர் உள்ளே வருவது தெரிந்தது. ராமப்ரம்மம் உடனே, " சின்ஹா ஜீ! நீங்கள் வந்துவிட்டீர்களா?" என்றார்! சின்ஹா அவர்கள் இந்திய சேனையில் இருந்து ஓய்வு பெற்ற கர்னல் ஆவார். அவர் எப்போதுமே களத்தில் இறங்கி உற்சாகமாகப் பணிபுரிபவராக இருந்ததால் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். "நீங்கள் ஏன் வந்தீர்கள்?" என்று ராமப்ரம்மம் கேட்டதற்கு  அவர், "ஒரு மணி நேரத்திற்கு முன்பு என் உள் மனம் என்னை பிருந்தாவனத்திற்கு செல்லுமாறு ஆணையிட்டது!" என்றார்! அதே கேள்வியை ராமப்ரம்மம் என்னிடமும் கேட்டார். அதற்கு நான், "என்னை இங்கே வருமாறு 7:00 மணியளவில் என் உள் மனம் எனக்கு அறிவுறுத்தியது!" என்றேன்! பிறகு நாங்கள் இருவரும் ராமப்ரம்மத்திடம், "நாங்கள் வரப்போகிறோம் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டோம். அதற்கு அவர், "பிரசாந்தி நிலையத்திலிருந்து சுவாமி இங்கு வந்தார். அவர் அங்கே மகாசிவராத்திரியை கொண்டாடுவதாக இல்லை. ஆகவே அவர் இங்கேதான் கொண்டாடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் ஹிஸ்லாப்பையும் சேர்த்து ஒரு குழுவை தன்னுடன் அழைத்துக்கொண்டு சுவாமி பந்திப்பூர் சென்று விட்டார்! அவர் செல்வதற்கு முன்னர், "ராமப்ரம்மம்! குறைந்தபட்சம் இரு சேவாதல தொண்டர்களை இந்த இரவில் காவல் பணியில் இருக்கும்படி செய்! அவர்கள் இரவு முழுவதும் பிருந்தாவனம் வளாகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்! உறங்கக்கூடாது!!" என்று கூறினார்! அதற்கு நான், "இனிமேல் நான் எப்படி தெரியப்படுத்துவது? மிகவும் காலதாமதம் ஆகிவிட்டதே சுவாமி?"  என்றேன். அதற்கு சுவாமி, "இரண்டு நபர்கள் வருவார்கள். நான் அவர்களை அனுப்பிவைக்கிறேன்!" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்!  நான் சுவாமியை பூரணமாக நம்பினாலும் நான் உங்களுக்கு இரவு உணவு எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. ஏனென்றால் நீங்கள் வந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியாது" என்றார். அதற்கு சின்ஹா ஜீ,  அதனால் பரவாயில்லை; இன்று சிவராத்திரி தினமாதலால் உபவாசம் இருப்பதே சிறந்தது!" என்று கூறினார்.

 ஆதாரம்: திரு. பி. வி. சங்கர் என்ற பக்தர் எழுதிய, "Yaksha Prashna ( யக்ஷனின் கேள்விகள்)" என்ற நூலில் இருந்து..

 


📝 நிகழ்வு 347:

1974 இல் நான் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரு நாள் அங்கு ஒரு பெண்மணியின் வயிற்றில் இருந்த அல்சர் புண் முற்றிப்போனதால் அவர்  அதிகமான அளவில் இரத்த வாந்தி எடுத்ததன் காரணமாக அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார. இதனை கேள்வியுற்ற நான் உடனே அங்கு விரைந்தேன். அவரது நிலையைக் கண்ட நான், காபூலில் இருந்த ஒரு சுவாமியின் பக்தரின் வீட்டுக்குச் சென்று அங்கே சுவாமிக்கு  என்றே தனியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறு கோயிலை சென்றடைந்தேன். அங்கு இருந்த போட்டோவில் சுவாமியின் பாதங்களின் மீது என் தலையை வைத்து ஆழ்ந்த பக்தியுடனும் வருத்தத்துடனும் வேண்டினேன்: "சுவாமி! நீங்கள் உண்மையிலேயே கடவுள் என்றால் திருமதி. ஷாங்லூ அவர்களை காப்பாற்ற வேண்டும்" என்று.  ஒரு சில நொடிகளில் நான் தலை வைத்த அந்த பாத கமலங்களில் இருந்து மிகவும் தெய்வீகமான மணத்துடன் கூடிய விபூதி தோன்ற ஆரம்பித்தது! அதன் உற்பத்தி மள மளவென்று வேகமாக அதிகரித்தது! வரவேற்பு அறையில் இருந்த அனைவரும் அந்த சுகந்ததின் காரணமாக அந்த கோயிலுக்குள் ஆர்வத்துடன் ஈர்க்கப்பட்டனர்! அங்கு உருவாகிக் கொண்டிருந்த விபூதியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்! அவர்களால் நம்பவே முடியவில்லை! உடனே அவர்கள் என்னிடம் பல கேள்விக் கணைகளை தொடுத்தனர். நான்  அவற்றிற்கெல்லாம் ஒரே பதில் கூறினேன்:" நான் செய்தது ஒன்று மட்டும் தான்! உண்மையான வருத்தத்துடன் ஆத்மார்த்தமாக சுவாமியிடம் அந்தப் பெண்மணியை காப்பாற்றுமாறு வேண்டினேன்!"என்று . 

 உடனே அந்த விபூதியை எடுத்துக் கொண்டு  அபு சேனா மருத்துவமனைக்கு விரைந்தேன். விபூதியை அவருக்கு அளித்து உண்ணச் செய்தேன். அவர் மெதுவாக தன் கண்களை திறந்தார்! சாதாரணமாக மூச்சு விடத் தொடங்கினார் !

அவரது வலியைப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் உடனடி அறுவை சிகிச்சைக்கு கூட தயாராக இருந்தார்கள். ஆனால் அவர் சிறிது சிறிதாக வலியில் இருந்து விடுபட்டார்! ஒரு வார காலத்திற்குள் அவர் முழு ஆரோக்கியத்துடன் எப்போதும் போல தனது தினசரி வாழ்க்கையை வாழத் தொடங்கினார்! விபூதி உட்கொண்ட இரண்டே நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் அல்சர் முழுமையாக குணமாகி இருந்தது தெரிய வந்தது! இதுதான் என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக அனுபவித்த மறக்க முடியாத இறை அனுபவம் ஆகும்! இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் உண்மையான  வேண்டுதல்களை சுவாமி உடனே ஏற்று அருள் புரிகிறார் என்ற உண்மையை மனமார நான் உணர்ந்தேன்!

 பின்குறிப்பு: திருமதி ஷாங்லூ அவர்கள் அந்த நிகழ்விற்கு பிறகு 16 வருடங்களுக்கு மேல் சுறுசுறுப்புடனும் தெம்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாயி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு. S.N. Saraf அவர்களது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 348:

100 வயதிற்கு மேல் வாழ்ந்த திருமதி.சுந்தரம்மா அவர்கள் பிரசாந்தி நிலையத்திலேயே வெகுபல வருடங்கள் வசித்து வந்தவர் ஆவார். 1910 இல், அவருக்கு 13 வயதாக இருந்தபோது, ​​​​அவரது கணவர் ‘மன்மாடி’ல் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தார். சாயிபாபாவின் இருப்பிடமான ஷீரடியில் இருந்து மன்மாட் நகருக்கு செல்ல சில மணி நேரங்களே பிடித்தது.  பாபாவின் பக்தரான அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தனது மனைவியுடன் ஷீரடி பாபாவை தரிசனம் செய்யச் சென்றார். அந்தப் பயணத்தில், பாபா கணவரை அழைத்து, அவருடைய பாதங்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தை அவருக்குக் கொடுத்து, 'தினமும் இந்த பாதங்களை வணங்குங்கள்' என்று கூறினார்.

வருடங்கள் உருண்டோடின, கணவர் இறந்து போனார். 1960களில், புட்டபர்த்தி என்ற குக்கிராமத்தில் சாய்பாபா மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார் என்று சுந்தரம்மாவிடம் அவரது தோழி ஒருவர் சொன்னபோது, ​​அவர் நம்பவில்லை. ஆனால் அவரது ஆர்வம் அதிகமாகி, ஒருநாள் அவர் 'அவரது ஷீரடி பாபா' என்று கூறிக்கொள்ளும் இளம் சத்ய சாயி பாபாவைப் பார்க்க வந்தார். சில நாட்கள் கடந்தும், இவர் ஷீரடி சாயியே தான் என்று சுந்தரம்மாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பக்தரான தன் தோழி ஒருவரிடம், "இந்த பாபாவை நான் ஒருபோதும் கும்பிடமாட்டேன். என் ஆண்டவர் ஷீரடி பாபா மட்டும்தான். நான் விரைவில் இந்த இடத்தை விட்டுச் செல்லப் போகிறேன்" என்று கூறினார். சுந்தரம்மாவின் திட்டங்களைப் பற்றிய தகவல் சுவாமிக்கு எட்டியது. ஷீரடி தொடர்பை அவளுக்கு நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு நாள், அவர் அமைதியாக சுந்தரம்மாவின் அறைக்குள் சென்றார். அப்போது அவர் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். "சுந்தரம்மா! நீ இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புவது உண்மையா?", என்று கேட்டார். அதற்கு அவர்,"ஆமாம்,சுவாமி, நான் இந்த, கடவுளால் கைவிடப்பட்ட கிராமத்தில் இருப்பதை விட ஷீரடிக்குப் போவதே நல்லது!" என்று கூறினார். அவர் இன்னும் சமைத்துக்கொண்டுதானிருந்தார், அவரது கண்கள் சுவாமியின் கண்களை இன்னும் சந்திக்கவில்லை.

"நீ ஷீரடி பாபாவைப் பார்க்க விரும்புகிறாயா ?" என்று சுவாமி கேட்டார். அதற்கு அவர்,

"நான் பார்க்க விரும்புகிறேன்! … .

ஆனால்? அவர்தான் பல வருடங்களுக்கு முன்னால் சமாதி அடைந்துவிட்டாரே!"என்று , வேறு ஒரு பக்கம் பார்த்துக்கொண்டே பதிலளித்தார். ஆனால் சுவாமியோ விடாமல் மேலும் தொடர்ந்து, " அப்படியிருந்தும், இன்னும் உனக்கு அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "அது எப்படி.... சாத்தியம்? அவர்தான் இப்போது இங்கே இல்லையே?" என்று சொல்லிக்கொண்டே, திரும்பி சுவாமியைப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்! அப்போது தான் பார்த்ததை அவரால் நம்பவே முடியவில்லை!! ஆம்!! ஷீரடி பாபா தான் அங்கே இருந்தார், சதையும் இரத்தமும் சேர்ந்த ஷீரடி பாபாவை உயிருடன் தரிசித்தார்!! அவர் கண்ணீருடன் சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கினார்!! காலம் அப்படியே நின்றது....விண்வெளியே மறைந்தது!! ஷீர்டி பார்த்தியுடன் இணைந்தது!! அவரும் அவரது சாயி பாபா மட்டுமே எஞ்சியிருந்தார்கள்!

ஆதாரம்: ரேடியோ சாய் - அக்டோபர் 2003.


📝 நிகழ்வு 349:


கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி புட்டப்பர்த்தியில் என் தாயின் நண்பராக இருந்தார். பல அற்புதங்களையும் மகிமைகளையும் தரிசித்த பின்னரும் அவர் சுவாமியை கடவுள் என முழுமையாக ஏற்கவில்லை. ஆனால் அவர் சுவாமிக்கு காலை உணவு தயாரிப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார்.
 அவர் அப்போது சென்னையில் ஒரு பெரிய உயர் பதவி வகித்த அதிகாரியின் மனைவி ஆவார். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். சென்னையில் ஒரு மிகப்பெரிய பங்களாவிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர் இந்த தம்பதியர். அவ்வப்போது சென்னைக்கு வரும்போதெல்லாம் சுவாமி அவர்களது வீட்டில் தங்குவார்.அவ்வாறு ஒரு முறை சுவாமி அவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது மறுநாள் இந்த பெண்மணியை உடனே புட்டபர்த்திக்கு கிளம்ப ஆயத்தமாகுமாறு பணித்தார். ஆனால் அவருக்கோ  சிறிது காலம் தேவைப்பட்டது. வீட்டில் செய்வதற்காக இருந்த முக்கியமான வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி சுவாமியிடம் சிறிது அவகாசம் வேண்டினார். சுவாமி ஒன்றும் கூறவில்லை; அவர் புட்டபர்த்திக்கு கிளம்பிவிட்டார். அந்தப் பெண்மணி தன் வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் புட்டபர்த்தி சென்றடைந்தார்.  ஆனால் சுவாமியோ அவரை மந்திரத்தினுள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்! அவர் தான் கொண்டு வந்திருந்த உடைமைகளுடன் மந்திரத்திற்கு எதிரே இருந்த ஒரு மரத்தடியில் காத்து நின்றார். ஆனால் சுவாமியோ அவரை பார்க்கவோ அவரிடம் பேசவோ இல்லை.  பல மணித்துளிகள் காத்திருந்த பின்னர் அவர் சென்னைக்கு திரும்பி விட்டார்! சில காலம் கழித்து அவர் மறுபடியும் புட்டப்பர்த்திக்கு வந்த போது சுவாமி அவரிடம், "நான் உன்னை உடனே புறப்படும்படி சொல்லும்போது நீ சிறிது காலம் தேவைப்படுகிறது என்கிறாய்! எமன் வந்து உன்னை அழைக்கும் போது உன்னால் இவ்வாறு கேட்க முடியுமா?" என்றார்!  (தன் கட்டளைகளுக்கு உடனே அடிபணிவதையே சுவாமி தன் பக்தர்களிடம் எதிர்பார்க்கிறார்).

ஆதாரம்: திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி எழுதிய, " ஶ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி" எனும் நூலில் இருந்து.


📝 நிகழ்வு 350:
புட்டபர்த்தியில் ஒருநாள் சுவாமியுடன் எங்களது உரையாடலின் ஒரு பகுதி இதோ:

 ராதா ( கருணாம்பா அவர்களின் சகோதரி): சுவாமி நீங்கள் இப்போதெல்லாம் பழைய நாட்களைப் போல அடிக்கடி வெளியே வருவதில்லை. மேலும் எங்களுடன் பேசுவதும் இல்லை இதை நினைத்து நாங்கள் பெரிதும் வருந்துகிறோம்.

 சுவாமி: நீங்கள் எதற்காக வருத்தப்பட வேண்டும்? உங்களிடம் மட்டுமே நான் பேசிக் கொண்டிருந்தால் மற்ற பக்தர்கள் 'நான் அவர்களிடம் பேசுவதில்லை' என்று குறை கூறுவார்கள்! நான் அனைவரையும் திருப்தி செய்ய வேண்டும்!

 ராதா: ஆனால் எங்களுடன் நீங்கள் பேசி, பல நாட்கள் ஆயிற்றே, சுவாமி?

 சுவாமி: ஒருவர் அதிகமான இனிப்பு பண்டங்களை ஒரே தடவையில் உட்கொண்டால் அது திகட்டிவிடும்! என்னிடமிருந்து நீங்கள் அனைத்தையும் ஒரே தவணையில் பெற்று விட்டால் நீங்கள் புட்டபர்த்திக்கு வர மாட்டீர்கள்! இதற்காகவே நான் என்னுடைய தரிசனம், ஸ்பரிசனம் மற்றும் சம்பாஷணம் ஆகியவற்றைப் பல தவணைகளாக உங்களுக்கு அளிக்கிறேன்! நான் லட்டுவைத் துளித்துளியாக உங்களது வாய்களில் போடுகிறேன்! ஒரு தடவை உட்கொண்டால் நீங்கள் மீண்டும் மீண்டும் புட்டபர்த்திக்கு வந்து கொண்டு இருப்பீர்கள்!

 ராமமூர்த்தி( கருணாம்பா அவர்களின் கணவர்): சுவாமி! நான் இரயில்வே துறையில் ஒரு தற்காலிகப் பணியில் இருக்கிறேன். அந்தத் துறையில் ஏற்கனவே அளவுக்கு அதிகமானோர் பணியில் இருப்பதால் எனது வேலை பறிபோய் விடுமோ என்று பயமாக இருக்கிறது! எனது வேலையில் நான் தொடர்ந்து நீடிப்பதற்கு சுவாமி தான் அருள்புரிய வேண்டும்!

 சுவாமி:( வானத்தில் சந்திரனைப் பார்த்துக் கொண்டே) பயப்படாதே! தைரியமாக இரு! சுவாமியின் பக்தனாக இருப்பதால் நீ உன் வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டாய்! உனது வேலை நிரந்தரம் செய்யப்படும்! நான் கடவுளர் அனைவருக்கும் மேலான கடவுள் ஆவேன்! எனது வார்த்தை என்றும் பொய்க்காது! பயப்பட வேண்டாம்!

( சுவாமி கூறியபடியே அவருக்கு வேலை நிரந்தரம் செய்யப்பட்டது!)

" நான் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று கூறிப் புலம்பாதே! நீ மேன்மேலும் துன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பதன் மூலம் உனது கர்மவினை என்னும் மூட்டையின் சுமை குறையும்! அதிகமான துன்பங்களை அனுபவிக்கும் ஒருவர்," விரைவிலேயே நல்ல காலம் பிறக்கும்" என்பதை மனதில் கொள்ள வேண்டும்! ஆகையால் துன்பங்கள் வந்தால் அவற்றை எண்ணி வருந்தாதே! மாறாக அவற்றை வரவேற்பாயாக! பருவ காலமும் எப்போதுமே கோடையாக மட்டுமே அல்லது குளிர் காலமாக மட்டுமே இருக்காது! துன்பங்கள் அடங்கிய காலம் உனக்கு முடியும்போது அதிர்ஷ்டம் உன்னை நோக்கிப் புன்முறுவல் பூக்கும்! உண்மையைச் சொல்லப் போனால், சந்தோஷமாக இருக்கும்போது தான் , இதன் முடிவில் துன்பங்கள் தலைதூக்கும் என்பதை எண்ணி நீ கவலைப்பட வேண்டும்!

ஆதாரம்: திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி எழுதிய, " ஶ்ரீ சத்ய சாயி ஆனந்த தாயி" எனும் நூலில் இருந்து.





2 கருத்துகள்: