தலைப்பு

திங்கள், 17 ஜூன், 2019

ஸுதர்சன சாயி!


நிகில துஷ்கர்ம கர்சந! 
நிகம  ஸத்தர்ம தர்சந! 
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்சன! 
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்சன! 
- ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 'ஸுதர்சநாஷ்டகம்'

மேற்சொன்ன மனநோய்களின் வரிசையிலேயே வரும் ஒன்றிலிருந்து ஒரு பெண்மணி விடுதலை பெற்ற அற்புதத்தை சொல்ல வேண்டும். ஸ்தூலத்தில் தோன்றாமல், சூட்சுமமாய் செய்த அருள் லீலை.

25 வயது இளைஞன் உதயகுமார் திருநெல்வேலி மாவட்ட தாழையூத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பகுதி பொறியாளராக இருந்தான். திருமணமாகாத அவனுக்கு சென்னையில் இருந்த தாயிடம் மிகவும் பற்றுதல் .தாய்க்கு ஏழுமலையானிடம் பற்றுதல் .தாழையூத்தில் இருந்து அடிக்கடி லீவு போட்டுவிட்டு சென்னை வருவான் பிள்ளை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று, பிறகு அவளை சென்னையில் விட்டு ஊர் திரும்புவான். அடிக்கடி லீவு போடுவதால் வேலைக்கு குந்தகம் செய்துகொள்ள போகிறானே என்று தந்தை புருஷோத்தமன் வேதனைப்பட்டார். அப்படி நடக்கவில்லை. ஆனால் வேறு விதத்திலே விதி அதைவிட பயங்கரமாக சிரித்து விட்டது!

1976 ஏப்ரலில் உதயகுமார் வழக்கம்போல் லீவ் போட்டு விட்டு சென்னைக்கு வந்தபோது தாழையூத்து அலுவலகத்தில் சுமார் 250 ரூபாய் பெருமானமுள்ள பொருட்கள் களவு போய்விட்டன. வேலைக்கு திரும்பிய உதயகுமார் சஸ்பென்ட் ஆனான். திருட்டுக்கு அவன் உடந்தையாயிருந்திருக்க வேண்டும் என்றும், எனவே இது குறித்த விசாரணை முடியும் வரை அவனை வேலை நீக்கி இருப்பதாகவும் அவனுக்கு 'மெமோ' கொடுக்கப்பட்டது.

ஸாதுப்பிள்ளை, மானமிக்க பிள்ளை அதைப் பார்த்து அப்படியே நிலைகுலைந்தான்.  சென்னைக்கு ஓடி வந்தான். ஆனால் தகப்பனாரின் முகத்தில் விழிக்க தைரியம் இல்லை. நண்பன் ஒருவனிடம் சென்று "அப்பாரை எப்படி பார்ப்பேன்"? என்று கதறினான். நண்பன் ஏதோ ஆறுதல் கூறி அவனைத் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டான்.

ஸாது பிள்ளை நிரந்தர ஆறுதலுக்கான தீர்வு என நினைத்து ஒரு பயங்கரத்தை செய்து விட்டான். நண்பன் படுக்க போன பின், அவன் மூட்டை பூச்சி மருந்து அருந்தி விட்டான். காலையில் நண்பன் பார்க்கும்போது நினைவிழந்து கிடந்தான். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவனை சேர்த்தான் நண்பன். நண்பகலில் உதயகுமாரனின் இனிய வாழ்வு அஸ்தமித்து விட்டது!

மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருந்த தந்தைக்கு மகனின் மரணச்செய்தி இரண்டாவது மகன் ரவிக்குமார் மூலம் சென்றது. வீட்டுக்கு வந்த அந்த துயர தகவலை அந்த பிள்ளை தாயிடம் தெரிவிக்க தயங்கி, தந்தையிடமே அவரது பள்ளிக்கு சென்று தெரிவித்தான். ஆசிரியர்கள் சூழ தந்தை புருஷோத்தமன் ஜிஹெச் சவக்கிடங்குக்கு சென்றார். கோரமான உண்மையை கண்ணெரிய நேரே கண்டார்.

எப்படியோ சமாளித்துக் கொண்டு, துர் மரணம் குறித்து ஆஸ்பத்திரியில் செய்யவேண்டியவற்றை முடித்து, உற்றார்க்கு தந்தி கொடுத்து, பிறகே ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார்.

 உடன் வந்த ஆசிரியருள் ஒருவரான கமலாவும் ஆதம்பாக்க வாசிதாம். சடலத்தை பார்த்ததுமே வீட்டுக்குப் புறப்பட்ட அவர் நேரே புருஷோத்தமன் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் புத்திரனின் காலகதி பற்றி கூறினார்.

இங்கு தான் இவ்வாறு இவ்வத்தியாயத்துக்கான விஷயம்!

செய்தி கேட்டாளோ இல்லையோ, அந்த தாயின் மூளை பாதிக்கப்பட்டது ."என் "மகன் செத்துப் போனான் என்று எப்படி சொல்வாய்"? என்னை திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போக இருந்தவனல்லவா அவன்? அவன் மட்டும் அங்கே போய் விட்டான். இதோ நானும் அங்கே போய் அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன். அப்போது பார், ராட்சசி! அவன் செத்துப் போனதாக கூசாமல் புளுகுகிறயே" என்று கமலாவை ஏகமாக ஏசி துரத்தி விட்டாள்.

அதுமட்டுமின்றி, மாலை மயங்கி வந்த அவ்வேளையில் மெய்யாலுமே தன்னந்தனியாக திருப்பதிக்கு புறப்பட்டும் விட்டாள்.

இரண்டு நாள் சென்றபின் பிள்ளை நல்லடக்கம் பெற்று, பால் ஸஞ்சயனமும் ஆன பின்னரே ,மாலை 5 மணிக்கு திருப்பதியில் இருந்து வீடு திரும்பினாள் தாய்.

நடு வீட்டில் தேங்காய் உடைத்து, படம் வைத்திருப்பதை பார்த்தாளோ இல்லையோ, கோபாவேசமாக கத்தோ கத்து என்று  கூப்பாடு போட்டாலானாள்." யார் இப்படி அக்கிரமம் செய்தது"? மகன் திருப்பதியிலே சொஸ்த்தமாக இருக்கிறானே! பெருமாள், தாயார் பக்கத்திலேயே அவன் பஜனை பண்ணிக் கொண்டிருப்பதை இந்த கண்ணாலே பார்த்துவிட்டு வருகிறேன்; இங்கே அடாத காரியம் செய்திருக்கிறதே"? என்றாள்!

மூளைக் கோளாற்றிலேயே இப்படி நல்ல ரகமாய் இருப்பதற்கு காரணம் 'பஜனை' என்றாளே, அதில் தான் இருக்கிறது. புருஷோத்தமன் சத்ய சாயி பக்தர். நாத்திகராக இருந்து திடீர் மனமாற்றம் கண்ட பக்தர். உதயகுமாரும் அந்த பக்தியில் கவரப்பட்டு, சாயி பஜன்களும் பாடுவான். அதுதான் இத்தனை கொடுமையிலும் வேப்பம்பழத் தித்திப்பு காட்டியது. ஆனாலும் வினை வழி போலும், கொடுமை நடக்கவே செய்தது.

இதன்பின் தந்தை புருஷோத்தமன் அந்த தாயிடம் பட்டபாடு! திருப்பதியில் உள்ள மகனை அழைத்து வர அவர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பதற்காக அவரை அவள் கண்டபடி காய்ச்சலானாள். அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடும் "அர்ச்சனை" !சொல்லர்ச்சனை மட்டுமல்ல;கல் அர்ச்சனையுமே! கல்லானாலும் கணவனல்ல; கணவனுக்கானாலும் கல்தான்!

1978இல் புருஷோத்தமன் உத்தியோக ஓய்வு பெற்ற பின் வீட்டிலேயே தங்கியதில் தம் ஓய்வை  மனையாளிடம் அடியோடு இழந்தார்! மனையையே இரண்டு படுத்திவிட்டாள் விசித்திர மனையாள். கணவருக்கு உணவிட பிடிக்காமல் இரண்டு பெண் மக்களை மட்டும் உடன் வைத்துக் கொண்டு தனி சமையல் தொடங்கிவிட்டாள். புருஷோத்தமனும் இரு ஆண்மக்களும் ஹோட்டலில் உண்டும் தாங்களே பொங்கி போட்டுக்கொண்டும் எப்படியோ காலம் தள்ளலானார்கள்.

இவர் அழைத்து வராத மகனை தான் அழைத்து வருவதாக சொல்லி, மாதம் ஒருமுறை இருமுறை அந்த அம்மாள் திருப்பதி சென்று வருவாள் .அந்த நாட்களில் இவருக்கு 'அர்ச்சனை' மிச்சமானாலும் பொருளை மிச்சப்படுத்த முடியாமல் செலவாயிற்று! ஒவ்வொரு முறையும் மகனை பெருமாளின் சன்னிதியில் கண்டதாக சொல்வாள். இப்படி ஒரு சில ஆண்டுகளில் 77 முறையாக்கும் திருப்பதி யாத்திரை செய்தாள்! ஏழுமலையானுக்கு ஏகாதசி விசேஷம் .ஏழை ஏகாதசத்தால் பெருக்கினால் 77!

இத்தனையிலும் புருஷோத்தமன் சாயி பக்தியை விடவில்லை. இப்போதுதான் அப்பிடிப்பை மேலும் கெட்டியாக்கி கொண்டார். சாயி சாநித்யம் அபாரமாக பொலிகின்ற, பொழிகின்ற கிண்டி பாபா ஆலயத்தில் நிரம்ப பொழுதை செலவிட்டார். வெளியிலே பட்ட மொத்துக்களுக்கெல்லாம் அங்கே ஆறுதல் கண்டார். 1983 ஜனவரியில் பாபா சென்னைக்கு விஜயம் செய்தபோது கிண்டி ஆலயத்திலுள்ள சீரடி சாய் மூலவருக்கு மீண்டும் அஷ்டபந்தனம் செய்தார். அப்போது தமது கையசைப்பில் சுதர்சன சக்கரம் வரவழைத்து அம் மூர்த்தியின் அடியில் அதை பிரதிஷ்டை செய்தார்.

அந்த சுதர்சனத்தின் வழியே பாய்ந்த சாயியின் அருட் பிரகாசத்தை என் சொல்ல? எந்த தேவதைக்கான யந்திரமுமே சக்கர காரமாக இருப்பதால் 'சக்ரம் 'என்று வழங்கப்பட்டாலும், சுதர்சன சக்கரம் தான் அசலே சக்ரம் ஆகும்.
திருமாலின் ஜோதி திருவாழிக்கே சுதர்சனம் எனப்பெயர். உட்பகை, வெளிப்பகை ஆகிய அனைத்தையும் துரத்தி துரத்தி சென்று அறவே அழிப்பதில் அபரிமித வல்லமை பொருந்தியது அது.' காலத்தின் தத்துவத்தின் ரூபம்; இருளை அழிப்பதான ஒளி முதல்; தீய சக்திகளை வென்று அவற்றின் குருதிதோய்ந்த திகிரி; அப்படிப்பட்ட இச்சக்ரம் நமக்கு எக்காலும் பெருநலம் பயப்பதாக'! என்று சங்கரர் போற்றுவார் தமது "விஷ்ணு பாதாதிகேசாந்த ஸ்தோத்திரத்"திலே.

நூறெழுத்துக்கொண்ட சுதர்சன மகா மந்திரமோ  மகா மேருவாய் சக்தி பெற்றது.

பாபா சக்ரப் பிரதிஷ்டை செய்த விசேஷம் பாருங்கள்! கிண்டி கோயிலையே புகல் கொண்ட இன்னொரு அடியாரான, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆர். என். ஐயர் பல ஆண்டுகளுக்கு முன் சுதர்சன மந்திர உபதேசம் பெற்றவராயினும், அதன் ஜெபத்தை இதுவரை நிறுத்தி இருந்தார். ஆனால் இப்போது மந்திரம் அவரை திடுமென பிடித்துக் கொண்டு ஆவேசமாக தனது ஜெபத்தில் ஈடுபடுத்தியது. தாம் ஜெபிப்பது மட்டுமின்றி ஏனைய சாயி பக்தர்களையும் சுதர்சன மகா மந்திர ஜபத்தில் ஐயர் ஈடுபடுத்தினார். இவர்களுள்  தீவிர ஈடுபாடு பெற்ற ஒருவர் நமது புருஷோத்தமன்.அவ் வீடுபாடு சாயியின் கொடையே என அவர் உணர்ந்தார்.

தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புருஷோத்தமன் பத்மாசனத்தில் அமர்ந்து சத்ய சாயியின் அருள் ஜோதி வட்டமாகவே சுதர்சன சக்கரத்தை பாவித்து மந்திர ஜபம் புரியலானார். அதிலிருந்து மெல்ல மெல்ல மனைவியின் மனநோய் தெரியலாயிற்று. கணவர் மேல் அவளுக்கிருந்த த்வேஷ பேய் நலியலாயிற்று. அதோடு, தனது 77வது யாத்திரை யோடு, திருமலை பயணத்தை "மலையேற்றி"விட்டாள். ஏன்? "இதோ பெருமாள் வந்து சக்கரம் சுழற்றுகிறாரே" என்று அடிக்கடி அவள் கூவும்படியாக, வீட்டிலேயே அவள் கண்ணுக்கு மெய்யாய் சுதர்சனத்தின் தரிசனம் பெற்றதுதான் காரணம்! ஒருமுறை புருஷோத்தமனே அவள் திருப்பதி போக பணம் கொடுத்தனுப்பியும், சுமார் 100 கெஜம் சென்றவள், "நாராயணன் அங்கே வராதே" என்கிறார், என்று கூறி தொகையை கணவரிடமே வீசிவிட்டாளென்றால், பார்த்துக் கொள்ளுங்கள். இது சத்திய நாராயண ஸாயின் அருள் விளையாட்டே என காண்கிறார் அக்கணவர்.

முன்பு "மகனை திருப்பதியில் இருந்து அழைத்து வருகிறாயா இல்லையா"? என்று கணவரை மிரட்டி உருட்டி வந்தவள் அதையே கெஞ்சலாக வருத்தத்தோடு கேட்கத் தொடங்கினாள். பின்னர் மெல்ல மெல்ல அந்த வேண்டுதலும் குறைந்தது! இந்த ஆகஸ்ட் முடிவிலே புருஷோத்தமனிடமிருந்து நான் பெற்ற தகவலின் படி, பிள்ளையின் நினைவு அவளுக்கு மறக்கவில்லையாயினும், அதிலே உபாதையம்சம் இல்லை .மற்றபடி அவள் முற்றிலும் குணமாகி விட்டாள். இரட்டை சமையல் மீண்டும் ஒற்றையாயிற்று.மீண்டும் ஜாடைமாடையாக புருஷனுக்கு சிற்றுண்டி மட்டும் வைத்து போனாள். காலக்கிரமத்தில் அவளது காலச்சக்கரத்தின் சுற்றலில் ,அதாவது பெருமாள் சுற்றும் சுதர்சனத்தின் சுற்றலில்,  இவளது மூளை சுற்றல் திருந்தி திருந்தி, பிறகு கணவருக்கு ஒவ்வொரு வேளையும் தானே உணவு பரிமாறலானாள். அவர் எங்காவது சென்று இரவு பத்து பத்தரை மணிக்குத் திரும்பினால் கூட முணு முணுக்காமல் கவனித்து பரிமாறலானாள். தம் வீட்டை கவ்வியிருந்த இருளை சுதர்சன ஜோதி காட்டி சாயிநாதனே விலக்கி ஒளி வளம் காட்டுவதாக  உருகி உணர்ந்து கூறுகிறார் நல்லன்பர் புருஷோத்தமன்.


கொன்று உயிருண்ணும் வியாதி பகை பசி தீயன வெல்லாம் நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான். - நம்மாழ்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக