தலைப்பு

சனி, 1 ஜூன், 2019

தத்தாத்ரேயராக ஸ்ரீ சத்ய சாயிபாபா!


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா தான் அனைத்து இறைவடிவங்களின் ஒன்றிணைந்த அவதாரம் என்பதை பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். இங்கே அவர் ஸ்ரீ தத்தாத்ரேயரின் வடிவமாகவும் இருப்பதை வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியை காண்போம்.... 

1978 - ஆம் வருடம் சிவராத்திரி தினம் .ஸாயி பாபா ஊட்டியிலிருந்து , பெங்களூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
நிறைய பக்தர்களும் மாணவர்களும் அவரைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
திருமதி ரதன்லால் பாடியா தினமும் பாபாவுக்காக பெங்களூரில் சமைப்பவர் கூட அந்த கூட்டத்திலிருந்தார்.ஒரு இடத்தில் பாபா காரை விட்டு இறங்கினார்.
எல்லோரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் ,பாபா அங்கிருப்பவர்களிடம் ஆன்மீக விசயங்களைப் பற்றி பேசத் தொடங்கினார்.அவர் ஒரு மாணவனிடம் பேசினார். அந்த மாணவனுக்கு பாபாவின் மேல் சந்தேகமும் ,தவறான எண்ணங்களும் இருந்தன. நீ இன்னும் வைத்திருக்கும் சந்தேகங்களினால் அவதிப்படுகிறாய் இல்லையா?  உன்னிடம் ஒரு போலராய்ட் காமிரா இருக்கிறது. என்னைப் படம் எடு.நீ எனது உண்மையான அடையாளத்தைக் காண்பாய். (போலராய்ட் காமிரா என்பது  போட்டோ எடுத்தவுடன் உடனடியாக பிரிண்ட் வரக்கூடிய கேமரா) 

திருமதி ரதன்லால் தன் தெய்வத்துடன்.. 

பாபா ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றார். அந்த மாணவனும் தன்னை சரிப்படுத்திக் கொண்டு, படம் எடுக்கத் தயாரானான்.
திடீரென்று திருமதி ரதன்லால் ஓடி வந்து ஸ்வாமியின் உடைகளில் கசங்கியிருந்த பகுதிகளை சரி செய்ய வந்தாள்.ஸ்வாமி அவளைத் தள்ளி நிற்குமாறு கண்டிப்பாக உரக்க உத்தரவிட்டார்.அதைக் கேட்டு அவள் பயந்து விட்டாள்.மாணவன் காமிராவால் படம் எடுத்தான்.சில விநாடிகளில் அந்தக் காமிரா நல்லதொரு வண்ணப்படத்தை வெளியிட்டது. அது தத்தாத்ரேயரின் திருவடிவம்.மூன்று சிரசுகள் . பிரம்மா விஷ்ணு மகேஸ்வரன் திருமுகங்கள். அந்தப் படத்தில் நான்கு நாய்களும் தத்தாத்ரேயரின் அருகில் ஒரு பசுவும் கூட காணப்பட்டன. 



இந்தப் படத்தை பகவானிடம் 
காட்டியபோது அவர் திருமதி ரத்தன்லாலிடம் , "உனக்கு இப்போது புரிகிறதா ,உன்னை ஏன் படம் எடுக்கும்போது விலகியிருக்கச் சொல்லி கட்டளையிட்டேன் தெரிந்ததா? அந்த நேரத்தில் என்னிடமிருந்து மிகுந்த சக்தி கதிர்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் தாக்கத்தை உன்னால் தாங்கியிருக்க முடியாது. ஸத்திய ஸாயி உயர்ந்த பரம்பொருள், ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் மூன்றுக்கும் ஆதாரம். இந்த சத்தியத்தைத் தான் எல்லாம் கடந்த தெய்வீகம் என்பதை , பிரம்மா,விஷ்ணு,
மகேஸ்வரன் ஆகியோரின் திரு வடிவமாய் தத்தாத்ரேயராய் காட்சியளித்து நிரூபித்தார். 

ஆதாரம் : தபோவனம்


வாசித்தவர்கள் கவனத்திற்கு... சுவாமி சங்கல்பித்திருந்தால் நேரிலேயே சுவாமி தனது ஸ்ரீ தத்த ரூபத்தை காட்டி இருக்கலாம்... ஏன் காட்டவில்லை எனில் .. அருகே பக்தை வந்ததற்கே தன்னிலிருந்து வெளிப்படும் பேராற்றலை அவர்களால் தாங்க முடியாது என்பதால் அகலச் சொன்னார்.. அப்படி இருக்கையில் நேரில் அதை காட்டி இருந்தால் எந்த மனிதர்களாலும் தாங்கி இருக்கவே முடியாது... தனது பரிபூரணப் பேராற்றலை குறைத்துக் கொண்டு தான் சுவாமி தினசரி தரிசனமே அளித்து வந்தார்... அதனை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலும்... ஆன்ம சாதனையில் பழுத்து பரிபக்குவ நிலையில் நாம் இல்லை என்பதாலும்... 
கண்டிப்பான காவல்துறை அதிகாரியே ஆனாலும் எந்தத் தாயும் தனது அதிகார ஆளுமையை கைக்குழந்தையிடம் காட்டுவதில்லை அல்லவா... அதுபோல்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக