தலைப்பு

சனி, 7 டிசம்பர், 2019

சென்னையை சேர்ந்த பிரபல கண் டாக்டர் ரங்காராவ் அவர்களின் அனுபவங்கள்.


ரங்காராவ் என்ற டாக்டர், சென்னையில் இருந்த முன்னணி கண் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் தனது தொழில் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் பீமாவரத்தில் பொது மருத்துவராக இருந்துவந்தார். ஒரு முறை, சீரடி பாபாவை உயிருடன் தரிசித்த ஒரு பக்தருக்கு வைத்தியம் செய்ய நேர்ந்தது. அன்று முதல் ரங்காராவ் டாக்டரும் சீரடி பாபா பக்தராகி, தினமும் அவரை பிரார்த்தித்து வந்தார், எப்பொழுதும் தன்னை ஷீரடி பாபா வழி நடத்துவதை உணர்ந்தார்.

1954 ஆம் ஆண்டு U.S லோவா யூனிவர்ஸிட்டியில் சேர்ந்து மேற்படிப்பை முடித்து இந்தியா திரும்பி, முதல் தர கண் அறுவை சிகிச்சை நிபுணராகி, பீமாவரத்தில் தன் தொழிலைத் தொடங்கினார்.

ஒரு நாள் சத்ய சாயி பாபாவின் பக்தை ஒரு பெண்மணி இவரிடம், தன் கண் மிக மங்கலாக இருப்பதால் சிகிச்சைக்கு வந்தார்.  அப்பெண்மணிக்கு கண்புரையோடு மட்டுமன்றி, மூட்டு வலி, ஐரிடிஸ் (Iritis) போன்ற மற்ற தொந்தரவுகளும் இருந்தன.  டாக்டர் ரங்காராவ், இப்பெண்மணியின் உறவினர்களிடம் “இப் பெண்மணி அறுவை சிகிச்சை செய்ய இயலாது" என தெரிவித்தார். ஆனால் அப் பெண்மணியோ, சீரடி சாயின் மறு அவதாரமாகிய சத்ய சாயிதான் தன்னை பீமாவரத்தில் உள்ள இந்த மருத்துவரிடம் செல்லுமாறு கூறியதாகவும், ரங்காராவ் அவர்கள் நெடுங்காலமாக தன்னுடைய பக்தராக இருப்பது தனக்குத் தெரியும் எனவும் விவரங்கள் கூறி அனுப்பி இருந்தார்!. இவர் தான் அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும் என்று, குணமாகி விடும் என்றும் சொன்னதாக கூறினார். டாக்டருக்கு ஆச்சரியமும் குழப்பமும் தோன்றின. சத்ய சாயி சீரடியின் அவதாரம் தான் என்பதை, அப்பெண்மணி சொற்படி மிகுந்த நம்பிக்கையோடு, தனது தொழில் தர்மத்தையும் மீறி சிகிச்சை செய்தார்.

பாபா கூறியது போலவே, அப்பெண்மணி மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றார். டாக்டர் உடனே புட்டபர்த்தி சென்று சத்ய சாயியின் திருவடிகளில் வீழ்ந்து ஆசி பெற விழைந்தார். சில மாதங்களுக்குப் பிறகு மெட்ராஸ் வந்து அங்கு பணி புரிய ஆரம்பித்தார்.  மெட்ராஸ் வந்த சில நாட்களிலேயே பாபா மெட்ராஸூக்கு விஜயம் செய்து ஸ்ரீ வெங்கடமுனியின் இல்லத்தில் தங்கினார்.

டாக்டர் ரங்காராவ் வெங்கடமுனியின் வீட்டிற்கு சென்று பாபாவைப் பார்க்க முயன்றார். பெருங்கூட்டத்தைக் கண்டு, முடியாது போல் இருப்பதை உணர்ந்தார்.  அப்பொழுது வெங்கடமுனியின் மகன் ஒரு இளைஞன் ரங்காராவிடம் வந்து, "தாங்கள் தான் ரங்காராவ் என்றால் தங்களை குடும்பத்தோடு பார்க்க பாபா விரும்புகிறார், அவ்வீட்டின் முதல் மாடியில் தங்கியுள்ளார் பாபா" என்று கூறினார்.

 டாக்டர் முதல் மாடிக்கு ஒரே ஓட்டமாக ஓடி, ஆரஞ்சு நிற உடையில் நிற்கும் சிறிய உருவத்தைக் கண்டார். பாபா டாக்டரை முதுகில் செல்லமாகத் தட்டி, “டாக்டர், நாம் இருவரும் காலம் காலமாக ஒன்றாக இருந்திருக்கிறோம். “நான் தான் உங்களை மெட்ராஸூக்கு வரவழைத்தேன் கவலையே இனி உங்களுக்கு இல்லை” என்றார். டாக்டருக்கு, பாபா தன் மீது பொழியும் கருணையை நம்பவே முடியவில்லை!.

டாக்டரின் வாழ்வில் தொடர்ந்து பாபாவின் அருள் மழை பொழிந்தவண்ணம் இருந்தது. தான் செய்யும் பணிகளில் பாபாவின் விரல்களே தன்னோடு இணைந்து செயல்படுவதாக உணர்ந்தார். நோயாளிகளுக்கு இவரிடம் பாபாவைக் காண முடிந்தது.

பாபா ஒரு முறை டாக்டரை, ஸர்ஜனுக்கு எல்லாம் ஸர்ஜன் இருப்பதை (கடவுள்) உணருமாறு செய்தார். ஒரு முறை கண் புரை அறுவை சிகிச்சைக்காக, தனது பக்தர்களில் ஒருவரான சாகன்லால் என்பவரை, டாக்டர் ரங்காராவிடம் அனுப்பினார்.  எற்கனவே பல முறை பல அறுவை சிகிச்சை நிபுணர்களாலும், ரங்காராவாலும், சிகிச்சை மறுக்கப்பட்டவர் அவர் ஏனெனில் அவருக்கு ஒரு சிக்கலான நிலையில் கண் நோய் வந்திருக்கிறது, ஆனால் இப்பொழுது பாபாவிடமிருந்து வந்திருப்பதால் மறுக்கமுடியாமல் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை!.

டாக்டருக்கு, பதட்டமும் பயமுமாகவே இருந்தது, திடீரென அவர், பாபா தன் கைகளைப்பற்றி, ஆபரேஷன் தியேட்டருக்கு வருமாறு அழைப்பதை உணர்ந்தார். படிகளில் ஏறும் போது, தனக்கு முன்பாக, ஆரஞ்சு வண்ண உடை மேலே ஏறுவது போல் டாக்டர் உணர்ந்தார்.  கரங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, தனது கவுன், மற்றும் கையுரைகளை மாட்டிக் கொண்டார். நோயாளி மேஜை மீது படுத்திருந்தார், அவரது ரத்த அழுத்தம் அதிகமாக, இதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது. அவர் இறந்துவிடுவாரோ என்று கூட தோன்றியது. டாக்டரை பயம் கவ்விக் கொண்டது, டாக்டர் செய்வதறியாது இருந்தார். ஸாயிராம், ஸாயிராம் எனக்கூறிககொண்டு இருக்க, உதவி டாக்டரும், நோயாளியும் கூட சேர்ந்து ஸாயி நாமா கூறலாயினர்.

எல்லோரும் ஆச்சரியப்படக்கூடிய விதத்தில், டாக்ரின் வெள்ளை கவுன், ஆரஞ்சாக மாறியது. தனது கரங்களில் ஸாயியின் கரங்களை உணர்ந்தார்.  பகவான் சத்ய சாயி, டாக்டராக வந்து ஆபரேஷனை நடத்தினார்.  ஆபரேஷன் நிறைவு செய்யும் பணிகள் ஸ்வாமியின் கைளால் நிகழ்ந்தன ஸாயியின் உருவம் மறைந்து, டாக்டர் ரங்காராவின் கோட் வெள்ளை நிறமாக மாறியது.

அதே நேரம் பாபா, பிரசாந்தி நிலையத்தில் தன்னோடு இருந்த பக்தர்களிடம், “சாகன்லாலின் ஆபரேஷன் முடிந்து விட்டது” என்றாராம்.

பாபாவின் ஆசிபெற்ற, அளவிடமுடியாத கருணை பெற்ற அந்த டாக்டர், சமூகத்திற்கு சேவை செய்ய தனது கரங்களை இறைவனின் மிகச் சிறந்த கருவியாக செயல்படுத்தினார்.
                                                     
ஆதாரம்: "Sai Baba Man of Miracles" எழுதியவர் திரு. ஹோவர்டு மர்ஃபெட். பக்கம் 158; 1972 ஆம் ஆண்டு - பதிப்பாக்கம் - மேக்மில்லன் இந்தியா லிமிடெட்.

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக