தலைப்பு

புதன், 27 ஜூலை, 2022

"நான் யார்?" என பாபா தனது மாணவர்களுக்கு விளக்கிய கலியுக கீதை!

பாபா தன்னையே விளக்காமல் இன்னொருவரால் பாபாவை விளக்குவது கடினம்... ஆகாயம் தன்னைப் பற்றி பேசாமல் அதை அண்ணார்ந்து பார்க்கிற அருகம்புல்லால் வானம் பற்றி என்ன பேச இயலும்? என்கிறபடி தன்னை விளக்குகிறார் தெய்வ சாயி இதோ...


அது கொடைக்கானல் மேமாதம் முதற்பகுதியில் அழிகிய காலை நேரம்.. மனங்கவர் மலைப்பகுதி... தேராந்தெடுக்கப்பட்ட பக்த மாணவர் பாபாவை சூழ்ந்திருக்கின்றனர்...

 திடீரென யாரும் எதிர்பாரா வண்ணம்... பாபா ஒரு கேள்வி கேட்கிறார்... பதில் சொல்ல சுலபமான கேள்வி போல் அது இருக்கிறது... "நான் யார்? என சொல்லுங்கள் பாராப்போம்?" என்கிறார்... பாபா யார் இறைவன் அல்லவா என மாணவர்கள் ஒவ்வொருவராக விடை அளிக்கிறார்கள்!

"சுவாமி நீங்கள் இறைவன்!" "சுவாமி நீங்கள் சிவசக்தி ஸ்வரூபர்!" "சுவாமி தாங்கள் மறுபடியும் வந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர்" "சுவாமி நீங்கள் சர்வ தேவதா ஸ்வரூபர்" என வரிசையாக ஒவ்வொரு மாணவராக பதில் மழை பொழிய... எந்த பதிலையும் "சரி அல்ல!" என்று சொல்லியே இறுதியில் தானே விடையளிக்கிறார்... 

"நான் நானே" என புன்னகைக்கிறார்... அனைவரும் நகைத்தனர்... ஆனால் பாபா மிகத் தீவிரமாக "நான்" என்கிற ஞானத்தை பொழிய ஆரம்பிக்கிறார்! நான் (I) என்பதே அனைத்திற்கும் அடிப்படை நான்! இது அல்லது அது என் கூறுவது துவைத பாவனை (இருண்மை) இரட்டை நிலை... நானே நான் என்பது அத்வைதம்/ ஏகத்துவம் / ஒருமைத்தன்மை... இதுவே முடிவான சத்தியம் என்கிறார்! இந்த நான் தான் இறைவன் / ஆத்மா / ஸ்ரீ கிருஷ்ணர் / ராமன் / சிவன் / அல்லாஹ் என பெயர்களால் அழைக்கப்படுகின்றன... 

அவதாரம் என்பதை மனிதர்களால் உணரப்பட முடியாதது.. பல யோகிகள் தவமிருந்தும் முழுமைக்கும் உணர முடியாத அவதார பிரவாகமே பாபா என நூலாசிரியர் விளக்குகிறார்...



"நான் மிக தீவிரமான விசாரணைக்கும்... மிகத் துல்லியமான அளவீடுகளுக்கும் அப்பாற்பட்டவன்... எனது பேரன்பை உணர்ந்தவர் மட்டுமே ஓரளவுக்காவது என்னை உணர முடியும்! கணக்கற்ற தேவர்களும் ரிஷிகளும் யோகிகளும் கூட என் தொடக்கத்தை உணர முடியாது! ஏனெனில் நான் ஒவ்வொரு அம்சத்திலும் தேவர்களின் ரிஷிகளின் மூலமாவேன்! நான் யார் என அறிந்து கொள்வதற்கு பதிலாக நீ யார் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்! உன்னை நீ அறிந்து கொள்ளும் போது என்னை நீ அறிந்து கொள்ளலாம்!" அந்த அறிந்து கொள்ளுதல் தான் ஆன்ம ஞான விழிப்பு நிலை (Enlightment)... 


"எல்லா அவதாரங்களைப் போலவே நானும் சிறிது சிறிதாக‌... படிப்படியாக சுற்றி உள்ள மக்களின் புரிந்துணர்வு நிலைக்கேற்ப என்னை அறிய வைத்து - புரிய வைத்து- உணர வைத்து... எனது உண்மைத்தன்மையை அவர்களை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும்படி செய்தேன்! அப்படியே தான் இந்த சாயி அவதாரமும்..." என்கிறார் சத்திய இறைவன் ஸ்ரீ சத்யசாயி 


தன்னைச்‌ சுட்டிக் காட்டி "இந்த சாயியை இன்னொரு சாயியால் அன்றி வேறு யாராலும் விளக்க முடியாது!" என்று பாபா கூறுவதே  உச்சபட்ச சர்வ சத்தியம்! ஆகவே தான் பாபா தனது முந்தைய ஷிர்டி அவதார ஜனன சம்பவ திருநிகழ்வை அவ்வளவு துல்லியமாக விளக்கினார்... அவ்வாறே பர்த்தி பாபாவை பற்றி பிரேம பாபாவும் தனது பிரகடனம் பிறகு விளக்கி புரிய வைத்து உணர வைப்பார் என்பது இதன் மூலம் நன்கு உணர முடிகிறது!


(ஆதாரம் : சத்தியம் சிவம் சுந்தரம் - பாகம் 5 / பக்கம் : 13 -16/ ஆசிரியர் : பி.என். நரசிம்மமூர்த்தி)


இறைவன் பாபா என அவதாரம் எடுத்து போயும் போயும் பாழான இந்த கலியில் வந்திறங்குகிறார் எனில் அதற்கு காரணம் கருணை கருணை கருணையே... அதைத் தவிர வேறெது பாபாவை அழைக்கிறது? தாகம் எடுத்து நாவரண்டு அலையும் ஆத்மாக்களுக்கு தண்ணீருக்கு பதில் பழச்சாறே கிடைத்தால் எவ்வகை பேரின்பமோ அதையே அவதாரங்கள் எதிர்பாரா விதமாய் கருணை பொழிந்து தங்களது காலடியில் தகுந்த ஆன்மாக்களை முக்தி அடைய வைக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக