தலைப்பு

சனி, 9 ஜூலை, 2022

சுவாமி ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி



சுவாமி ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி:

வெறும் மகிமைகள் மட்டுமே செய்யக்கூடியவர் பாபா.. அவருக்கெங்கே வேதாந்தமும் ஆத்ம ஞானமும் விவரிக்கவரும்? என நினைத்திருந்த சுவாமிகள் அடைந்த அனுபவம் என்ன? பாபா பௌதீக உடம்பெடுக்கும் முன்பே சுவாமிகள் அடைந்த அனுபவத்தை பாபா கூறிய விந்தை யாது? பாபா பற்றி சுவாமிகள் சுவாரஸ்யமாக இதோ...


சுவாமிகள் சச்சிதானந்தா டிசம்பர் 22 1914 அன்று தமிழக செட்டிபாளையத்தில் பிறந்தவர்... தாய் வேலம்மை ஆன்மீக நாட்டம் மிகுந்தவர்... சுவாமிகளுக்கு ராமசுவாமி என்கிற பெயர்... ராமு என செல்லமாக பெற்றோர்கள் அழைத்தனர்... குடும்ப ஆட்டோமொபைல் ஏற்றுமதி வியாபாரம் மேற்கொள்கிறார்..திருமணம் முடிந்து 5 ஆண்டுகளிலேயே மனைவி காலமாகிறார்... பிறகு அப்படியே சுற்றி மகான் அரவிந்தரிடம் சிறிது காலம்.. ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் ஆத்ம சாதகராக இணைகிறார்...சாம்பசிவ சைதன்யா என நாமகரணம் அடைகிறார்.. பகவான் ஸ்ரீ ரமணரை தரிசித்து அங்கே தங்கி பாலபாடம் பயில்கிறார்.. 1950'ல் பகவானின் சமாதியில் நிலைகுலைந்து ரிஷிகேஷ் யாத்திரை மேற்கொள்கிறார்.. சுவாமி ஸ்ரீ சிவானந்த சரஸ்வதியால் சுவாமி சச்சிதானந்த சரஸ்வதி என சன்யாச தீட்சை அடைந்து முழு துறவியாகிறார்!

சுவாமிஜி தனது குரு சிவானந்தர் உடன்... 

அது 1957 ஆம் ஆண்டு வெங்கடகிரியில் நடைபெற்ற 9வது அகில இந்திய தெய்வீக வாழ்வு மாநாட்டில் பங்கேற்கிறார்... அங்கே பாபாவை தரிசிக்கிறார்... அந்த நிகழ்வு மதராஸ் வரை நீள்கிறது... ஒரு நிகழ்வில் சுவாமிகள் பேசுகிற போது... "பாபா வெறும் அற்புதங்களையே புரிபவர்...அவருக்கு வேதாந்த ஞானம் இல்லை என நினைத்து விட்டேன்.. எவ்வளவு அறியாமையான எண்ணம் அது! இந்த அமைப்பிற்கு பாபாவை தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி...!" என மனம் திறக்கிறார்...3 நாள் நிகழ்விலும் பாபா அதிஅற்புதமாக வேதாந்த ஞானத்தை மிக எளிமையாக புரிய வைக்கிறார்... மலைத்து போகிறார் சுவாமிகள்!


1957 - 9வது அகில இந்திய தெய்வீக வாழ்வு மாநாடு, வெங்கடகிரி 


வேங்கடகிரியில் பாபா தங்கி இருக்கிற சமயம்... சுவாமிகளோடு பேசுகிறார்... "பங்காரு.. உன்னை சந்திப்பதில் சுவாமிக்கு மிகவும் மகிழ்ச்சி!" என்று சொல்லிவிட்டு 37 வருடங்கள் முன்பு சுவாமிகளுக்கு நிகழ்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்... "ஒருமுறை உன் தியானத்தில் குளிர்ந்த கடற்காற்றும் வீசியும் முழு நிலாவையும் நீ அனுபவித்தாய்...! உன் ஆன்ம இலக்கை நோக்கி நீ வேகமாக பயணிக்கிறாய்... அப்படியே தடை இன்றி தொடரட்டும்... சுவாமி உன் கூடவே இருக்கிறேன்! எங்கே நீ இருந்தபோதும் உனக்கான தேவைகளை சுவாமி கவனித்துக் கொள்கிறேன்!"என்கிறார் பாபா! பேராச்சர்யப்பட்டு "நான் அந்த அனுபவம் அடைந்த போது நீங்கள் பிறந்திருக்கக் கூட மாட்டீர்கள்! எப்படி உங்களுக்கு தெரியும் பாபா? " என சுவாமிகள் கேட்க... "பங்காரு நான் எங்கே பிறக்கிறேன்? எங்கே இறக்கிறேன்?" என பதில் கேள்வி கேட்டு பிரம்மிக்க வைக்கிறார் பாபா!


ஒருமுறை சுவாமிகளிடம் பாபா "நீ ஏன் இப்படி உன் ஆசிரமத்திற்காக நன்கொடையை திரட்டுகிறாய்? அப்படி செய்யாதே! வேண்டாம்! அது உன் ஆன்ம சாதனையை குலைத்துவிடும்!" என்கிறார்.. "இல்லை பாபா மக்கள் நன்மைக்காகத்தான்!" என்கிறார்... "குகையில் இருந்து கொண்டே ரிஷிகள் தனது யோக சக்தியால் மக்களுக்கு உதவி செய்ததை/ செய்வதை நீ அறிந்ததில்லையா?" என பாபா கேட்கிறார்! "நீயும் தனிமையை மேற்கொண்டு யோக தவம் செய்!" என அறிவுறுத்தி பாபா சிருஷ்டி விபூதி தருகிற போது.. "பாபா விபூதி எதுவும் வேண்டாம்... எனக்கு நீங்களே வேண்டும்!" என சுவாமிகள் கண்கலங்க.. பாபா புன்னகைக்கு அந்த வேண்டுகோளை ஆமோதித்து அனுகிரகம் புரிகிறார்!


பாபா 29 ஜுன் 1959 ல் ஆன்ம சாதகர்களுக்காக பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் தபோவனம் பிரதிஷ்டை செய்கிறார்! அந்த நிகழ்வில் பேசுகிற சுவாமிகள் "பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபாவை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் என் அனுபவத்தில் அவர் அறிவே வடிவான தட்சிணாமூர்த்தியாக, எங்கும் நிறைந்தவராக... எதுவும் புரிபவராக... எல்லாவற்றையும் உணர்ந்தவராக, எல்லாவற்றிலும் பரிமளித்து, எல்லாவற்றையும் வழி நடத்துபவராக, எல்லா உயிரினங்களுக்கும் உயிராக விளங்குபவராகவே உணர்கிறேன். ஒருமுறை கொடைக்கானலில் பாபாவின் அறையில் நானும் இருந்தேன்.. அப்போது திடீரென "சுட்டுக் கொள்ளாதே!" என கூறியபடி தரையில் சாய்கிறார்...பிறகு 1 மணிநேரம் கடந்து கண்திறக்கிறார்... பிறகு நடந்தவற்றை விவரிக்கிறார்... பாபா விவரித்த படியே போபாலில் பாபாவின் பக்தர் ஒருவர் தற்கொலை செய்ய இருந்ததை பாபா சென்று தடுத்த நிகழ்வும் தந்தியில் வந்தது.. இதற்கு சாட்சியாக நானே இருக்கிறேன்... சந்தேகமே வேண்டாம்! பாபா பரப்பிரம்மம்... எங்கும் நிறைந்திருப்பவர்... எல்லாம் அறிந்திருப்பவர்... இதை பூரணமாக உணர்கிறேன்!" என்கிறார்!

உரையாற்றுவதோடு நின்றுவிடாமல்.. ரிஷிகேஷ் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சீடரான சச்சிதானந்த சுவாமிகளோடு சக சீடர் சதானந்தரும் சேர்ந்து தங்களின் ரிஷிகேஷ் குருவான சிவானந்தருக்கு பாபா மகிமை பற்றி விரிவான ஒரு கடிதமும் வரைகின்றனர்... மேலும் சகல மதமும் ஒன்றெனும் சத்திய தத்துவத்தை சுவாமி ஒரு வெளிநாட்டு கிறிஸ்துவருக்கு சிலுவை மற்றும் அவர்கள் வழிபாட்டு ஜபமாலையை சிருஷ்டி செய்து விவரித்ததைக் கண்டு வியந்து  உணர்கின்றனர்.


நடிகர் ரஜினி தன் குருவான சுவாமி ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதிகளுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்...  


சுவாமிகள் சச்சிதானந்தா விர்ஜீனியாவில் யோக வில்லே ஒன்றை நிறுவகித்து யோக மார்க்கத்திற்கு சீடர்களை தயார்செய்தும்.. பல்வேறு நூல்கள் குறிப்பாக பதஞ்சலி யோக சூத்திரம் , ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற ஞான நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார்.. நடிகர் ரஜினி சுவாமிகளின் அடியவர் என்பது குறிப்பிடத்தக்கது!


ஆதாரம்: Sri SathyaSai and Yogis / Page no: 43/ Author - Jantyala Suman babu & SRI SATHYA SAI DIGVIJAYAM THE GLORIOUS JOURNEY OF SRI SATHYA SAI AVATAR PART 1 (1926 – 1985)


துறவிகளும் மகான்களும் பாபாவின் தூய அன்பையும் பாதுகாவலையும் பெற்றவர்கள்! பாபா பரப்பிரம்மமே என்பதால் மகான்களோ துறவிகளோ நமக்கு எதற்கு? என ஒருவேளை நினைக்கும் பக்தர்களுக்கு... பாபாவின் உடல் உறுப்புகளே மகான்கள்.. பாபாவின் கைக்கருவிகளே துறவிகள்... தெய்வத் திருமுருகனை மட்டும் வழிபட்டுவிட்டு அவன் தெய்வத் திருவேலை யாரும் வீசிவிடுவதில்லை... அதுபோலவே நாம் மகான்களை மதித்துத் துதித்தும் தூய துறவிகளின் வாழ்வை கடைபிடிக்க வேண்டும்! ஆன்மீகம் என்பது அகத்துறவே...! துறவிகள் நம் ஆன்ம வாழ்வுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து உத்வேகமும் அளிக்கிறார்கள்!


  பக்தியுடன் 

வைரபாரதி







2 கருத்துகள்:

  1. எந்த தடைகளோ..அபவாதமோ ஏற்படாமல்..சர்வ ஜாக்ரதையாக..ஆன்மீக வாழ்வை வாழ்ந்து..இந்த நல்ல மனிதப் பிறவி...சுபமாக முடிய இறைவன் அருள் வேண்டும்!! ஸ்வாமியின் பரம கருணை நம் மீது பொழிந்து கொண்டிருக்க வேண்டும்!!

    பதிலளிநீக்கு