தலைப்பு

வெள்ளி, 9 ஜூன், 2023

இரு பிறப்புமே சாதாரண பிறப்பல்ல - பேரவதார உயிர்ப்பு!

எவ்வாறு துவாபர யுகத்திலும் கலியுகத்திலும் இறைவனின் அவதார பிறப்பைப் பற்றி சான்றோர்கள் மொழிந்த சரிசமமான ஞான வாசகம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...


"பூமித்தாயின் மேல் தாண்டவமாடும் அதர்ம பாரத்தை குறைக்கவே இறைவன் ஸ்ரீமன் நாராயணர் மனித வடிவெடுக்கிறார்! யாதவ குலத்தில் (யது குலம்) நந்தனுக்கும் யசோதைக்கும் மகனாக திகழ்வதற்காகவே தன் சுய சங்கல்பத்தோடு  அவதரிப்பதற்கு தேவகி தேவியின் கருவில் அவதரிக்கிறார்!"

(பாகவதம் 10.67) 


தேவாக்யம் தேவ ரூபின்யம் 

விஷ்ணு சர்வ குஹசயஹா

அவிராஸித் யதா ப்ரச்யாம்  

திஸிந்து ரிவா புஷ்கலஹ


சந்திரன் கிழக்கில் உதிப்பது போல் இறைவன் விஷ்ணு தேவகி தேவியின் தூய கருவில் உதிக்கிறார்! அந்த நிலவுக்கும் கிழக்கிற்கும் எவ்வகையான சம்பந்தமோ அவ்வகையான சம்பந்தமே இறைவன் விஷ்ணுவுக்கும் தேவகி தேவிக்கும் என்று ஸ்ரீதரா என்கிற புராதன ஜோதிடர் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை விவரிக்கிறார்! 


அது போலவே ஒருமுறை இறைவன் பாபா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பக்தர்களால் சூழ்ந்திருந்த போது , ராம சர்மா என்கிற வேத பண்டிதர் பாபாவிடம்  ஒரு கேள்வி எழுப்புகிறார்...

"சுவாமி தங்களுடைய பிறப்பு பிரசவமா? பிரவேசமா?" என்பது அவருடைய மிக முக்கியமான கேள்வி! 

அப்போது அதுவரை யாரிடமுமே பாபாவின் பௌதீகத் தாய் ஸ்ரீ ஈஸ்வராம்பா பகிராத பரவச அதிசய சம்பவத்தை பகிர்ந்து கொள்ளும் படி "அன்று நீ கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது என்ன நடந்தது? என்று சொல்!" என்று பாபா கேட்கிறார்! 


"நான் கர்ப்பம் தரித்திருந்த போது ஒரு நாள் எனது மாமியாரிடம் இறைவன் சத்ய நாராயணர் கனவில் தோன்றி "விரைவில் உன் வீட்டில் நான் அவதரிக்கப் போகிறேன்" என்று சொல்லியதை என்னிடம் தெரிவித்து ஏதாவது பரவசம் தரும்படியான தெய்வீக சம்பவம் நேர்ந்தால் அதிர்ச்சி அடையாமல் சமாதானத்தோடு இரு என்று அறிவுரை வழங்கினாள்! அந்த காலை நான் அவசரத்திற்காக கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன்! அப்போது ஒரு நீல ஒளிப் பந்து ஆகாயத்திலிருந்து தோன்றி என் கர்ப்பத்திற்குள் நுழைந்தது.. நான் மயக்கம் போட்டு கீழே விழுந்து கிடந்தேன்!" என்று ஸ்ரீ ஈஸ்வராம்பா விவரித்த உடன் பாபா பண்டிதர் ராம சர்மாவை நோக்கி "இப்போது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... என்னுடைய பிறப்பு பிரசவமா? பிரவேசமா?" என பாபா பண்டிதரின் கண்களையே உற்று நோக்க.. அந்த பாண்டித்யம் பவ்யம் ஆனது! 

பரவசத்தில் வேத பண்டிதர் விழி கங்கோத்ரியானது!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 21,22 | Author : Dr. J Suman babu ) 


இறைவன் அவதரிக்கிற போதெல்லாம் அசாதாரண நிகழ்வே நிகழ்கின்றன.. யாக ஜோதியில் எழுந்த பாயாசம் வழி நுழைந்ததும் , ஆகாய ஜோதியில் எழுந்த நீல ஒளியாய் நுழைந்ததும், சிறையில் தேவகியின் கரு சிறையில் நுழைந்ததும் ஒரே பரப்பிரம்மமே என்பது பாகவதமும் சரி கலியுக பக்தர்களின் அனுபவமும் சரி ஒரேவித பரவச லயம் தனையே பரதிபலக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக