தலைப்பு

வெள்ளி, 1 நவம்பர், 2019

சத்ய சாயி தந்த குழந்தை வரம்!


திரு. பாலகிருஷ்ணன் தற்போது சென்னை வாஸி. முன்பு மதுரையில் வசித்தவர், மதுரை சமிதியில் அங்கம் வகித்து பல சேவைப் பணிகளில் ஈடுபட்டவர். அவர் தனது தெய்வீக அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

"எனக்கு திருமணம் 1985ல் நடைபெற்றது. ஆயின் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இந்நிலையில், பகவானின் பக்தனான நான் 1990ம் வருடம் மதுரையில் எனது சமிதி உறுப்பினர்களுடன் பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற பகவானின் 65வது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொள்ள சென்றேன். அவ்வமயம் உலக சாயி நிறுவன மாநாடும் நடந்தது.

ஆனந்தமாய் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், மனதின் ஓரம் ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது.

நவம்பர் 23, 1990. பகவானின் பிறந்த தின கொண்டாட்டம் ஹில் வ்யூ ஸ்டேடியத்தில் நடக்கிறது. பகவான் ஊர்வலமாக வந்து அனைவருக்கும் ஆசி வழங்கி மேடையில் வீற்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த கூட்டத்தின் ஒருகோடியில் இருந்த நான் மனமுருகி பகவானிடம், 'ஸ்வாமி, எனக்கு மணமாகி 5 வருடங்கள் ஆகியும் இன்னமும் குழந்தை இல்லை. இதனால் நானும் என் மனைவியும் மிகவும் வருந்தும் நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு உம்மை தவிர வேறு கதி இல்லை. நீரே எமக்கு அக்குறையினை அகற்றி இன்பத்தை வழங்க வேண்டும். அடுத்த வருடத்திற்குள் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும், அதுவும் உமது பிறந்தநாளான நவம்பர் 23 அன்றே பிறக்க வேண்டும்.' என வேண்டிக்கொண்டேன். இதற்கு என் உடன் இருந்த எனது சமிதி அன்பர்கள் திரு. சங்கர்லால், திரு. ரமாராவ் போன்றோர்கள் சாட்சி. அதன் பின் அன்றே பகவனுக்காக இனி நான் மீசை வைத்துக் கொள்வதில்லை என முடிவு செய்து, மீசையை எடுத்தேன்.

பிறந்த நாள் வைப்பவங்களை முடித்து ஊர் திரும்பினோம், மாதங்கள் கடந்தது. ஆச்சரியமான சம்பவங்கள் நடந்தன. ஆம், என் மனைவி கரப்பவதி ஆனால்!

பகவானின் அருளால் ஆனந்தமடைந்த நான், மனைவியின் வளைகாப்பன்று, சமிதி மகளிர் அன்பர்களை அழைத்து சிறப்பு சாயி பஜன் ஏற்பாடு செய்தேன்.

வேண்டுதல்களை அரைகுறையாக நிறைவேற்றி வைப்பதில்லை பகவான் என்பது எனக்கு பின்புதான் புரிந்தது. 1991, நவம்பர் 23ம் தேதி எங்களுக்கு பகவானின் அருட் பிரசாதமாக குழந்தை பிறந்தது...ஒன்றல்ல இரண்டு! ஒரு பெண் ஒரு ஆண்!! சரியாக ஒரு வருடத்தில் எனது பிரார்த்தனை நிறைவேறியது. இப்போது பெண்ணிற்கு நல்ல முறையில் திருமணம் முடிந்திருக்கிறது, பையனும் நன்றாக படித்து, நல்ல வேலையில் இருக்கிறான்.

அஹங்காரத்தை அழித்து நீயே அபயம் என சரணடைந்தோர்க்கு 'நான் இருக்க பயமேன்' என்று காத்தருள்பவர் கலியுக கண்கண்ட தெய்வம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா!"

திரு. பாலகிருஷ்ணன், இந்த ஆனந்த அனுபவத்தை நேரில் பகிர்ந்து கொண்டார்.
அவரது தொடர்பு எண்: 9940516127.

ஜெய் சாய்ராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக