தலைப்பு

ஞாயிறு, 24 நவம்பர், 2019

பாபாவின் நேர்காணல் அறை வழியே ஆஸ்திரேலியா வந்து சேர்ந்த அன்பர்!


ஒருமுறை ஆஸ்திரேலியாவிலிருந்து பகவானைக் காண ஆறு சாய் அன்பர்கள் புட்டபர்த்திக்கு வந்திருந்தனர். பாபா அவர்களை நேர்காணலுக்கு அழைத்தார். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு பக்தரை நோக்கி,"நீ ஏன் இப்பொழுது வந்தாய்? உன் தாயார் உடல் நலமில்லாமல் இருக்கிறார்; அவர் உன்னைக் காண தவிக்கின்றார்", என்று கூறினார்.

அதற்கு அந்த சாயி அன்பர், "ஆம் சுவாமி, நேற்றிரவு  நான் வீட்டிற்கு பேசியபோது  இத்தகவலைத் தெரிவித்தார்கள். அவரது  உடல் நலம் பெற நீங்கள் அருள்புரிய வேண்டும்"என்றார். பாபா உடனே, "நீ வீட்டிற்குச் செல். அவர்  உன்னைக் காண விழைகிறார். உடனே செல்ல வேண்டும்", என்று கூறியபடியே தன் கை அசைவின் மூலம் உலக வரைபடத்தை வரவழைத்தார். அதனை அவ்வறையின் சுவரில் பரப்பினார். பின் அவர்களிடையே கீழ்கண்ட உரையாடல் நிகழ்ந்தது.

பாபா: "இந்த வரைபடத்தில் ஆஸ்திரேலியா எங்கே இருக்கிறது?"

அன்பர்: பாபா, இங்கிருக்கிறது.(வரைபடத்தில் சுட்டிக் காட்டுகிறார் )
பாபா அந்த இடத்தைத் தொட்டவுடன் உலக வரைபடம், ஆஸ்திரேலியா வரைபடம் ஆனது.

பாபா: ஆஸ்திரேலியாவில் எங்கு வசிக்கிறாய்?

அன்பர்: நியூ சவுத் வேல்ஸ், பாபா.. (சுட்டிக் காட்டுகிறார்)
பாபா ஆஸ்திரேலியா வரைபடத்தை தொட்டவுடன் அது நியூ சவுத் வேல்ஸ் வரைபடமாக மாறியது.

பாபா: இதில் நீ எங்கே வசிக்கிறாய்?

சாயி அன்பர் தன் வசிப்பிடத்தை சொன்னவுடன், பாபா தொடுகிறார். தொட்ட வுடன், சார்ட்டில் அந்த பகுதியில் உள்ள அனைத்து அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் தென்பட்டன. இப்போது பாபா அவ்வன்பர் வசிக்கும் வீட்டைத் தொடுகிறார். என்ன அதிசயம்!! நேர்காணல் அறையினுடைய சுவர், அந்த அன்பரது வீட்டின் கதவாக மாறிப் போனது. பாபா அந்த கதவைத் திறந்து காண்பிக்கிறார். அங்கு சோஃபாவில் நம் சாயி அன்பரது தாயார்  உறங்கிக் கொண்டிருக்கிறார். பாபா அந்த அன்பரை அழைத்து உள்ளே செல்லுமாறு கூறி, அவர் சென்றவுடன் கதவை மூடுகிறார். பின் தன் கைகளால் கதவைத் தடவ, அது பழைய படி நேர்காணல் அறையின்  சுவராக மாறியது. பிறகு, நேர்காணல் அறையிலிருந்து ஆறு ஆஸ்திரேலிய சாயி அன்பர்களுக்கு பதில் ஐந்து பேர் மட்டுமே வெளியில் வந்ததை, பிரசாந்தி நிலையத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கண்டு, நடந்ததைக் கேட்டு அறிந்தனர். ஒருமணிநேரம் கழித்து அந்த ஆஸ்திரேலிய அன்பர், தான் பத்திரமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தாக அவருடன் வந்த புட்டபர்த்தியில் வசிக்கும் மற்ற ஐந்து நண்பர்களுக்கும் தொலைபே‌சி வாயிலாக இத்தகவலை தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து பகவான் கூறியதாவது:

"இந்த  காலம்(நேரம் ), இடம்(தூரம் )  முதலானவை லௌகீக உலகிலேயே காணப்படும். தெய்வீக உலகில்.. தூரமும் இல்லை, நேரமும் இல்லை. எனக்கு எப்போது வேண்டுமோ அப்போதெல்லாம் நான் அவற்றை சுலபமாகக் கடந்து விடுவேன். அந்த பக்தர் நேர்காணல் அறை வழியாக தூரத்தை கடந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தது, எனது லீலையே ஆகும்.தேவை ஏற்படும் போது என்னால் அங்ஙனம் செய்ய முடியும் என்று காட்டவே அவ்வாறு அருள் புரிந்தேன். சுவாமிக்கு காலமும்(நேரமும் ) இடமும்(தூரமும்) ஒருபோதும்  தடையில்லை" என்றார்.

ஆதாரம்:  பிரசாந்தி ரிப்போர்ட்டர்

தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக