தலைப்பு

சனி, 5 மார்ச், 2022

ஒரு ஆஸ்திரேலியா தம்பதியர்க்கு மகப்பேறு வரம் அளித்த மகா சாயி!

மகப்பேற்றையும் அதோடு சேர்த்து  மனப்பக்குவத்தையும் அளித்து ஒரு ஆஸ்திரேலிய வக்கீல் குடும்பத்தையே நல்வழிப்படுத்துகிறார் பிரபஞ்ச நீதிபதியான சுவாமி சுவாரஸ்யமாய் இதோ...

சிலோனை சேர்ந்த சாந்தினி தம்பதிகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்...இதில் திருமதி சாந்தினிக்கு 1970 களில் இருந்தே சாயி இலக்கியங்கள் படித்து சுவாமியின் பக்தராக இருக்கிறார்... அவருக்கு சுவாமி கடவுள் என்பதில் சந்தேகமே இல்லை... எப்பேர்ப்பட்ட பக்தி! சந்தேக மேகங்கள் விலகும் போதே ஞானம் எனும் சூரியன் ஒளிர்கிறது...! பூசனைகள் கூட விலக்காத யோசனைகளை ஆன்ம சாதனையே விலக்குகிறது... சுவாமி இறைவனே என விளக்குகிறது! அந்த இளமைக்காலத்தில் திருமதி சாந்தினி சிலோன் மட்டக்களப்பில் இருக்கிற அமிர்தகழியில் ஷிர்டி சுவாமிக்கென ஒரு ஆசிரமம் இருக்கிறது.. அங்கே தனது பால்ய வயதில் அடிக்கடி செல்வார் சாந்தினி...அங்கே ஒரு ஆன்மீகப் பெரியவர் இருப்பார்.. அவர் பெயர் சுந்தரேஷ்வரர். நிறைய சுவாமி திருப்படங்கள் மாட்டி இருக்கும்... அவை அனைத்தும் சாந்தினியின் இதயத்தில் நுழைந்து பக்தி தந்து பூட்டியிருக்கும்... தன் அப்பாவோடு செல்வார் சாந்தினி... ஒருமுறை தனியாகச் செல்கையில் சுவாமி படத்திலிருந்து பால் வழிவது சாந்தினி கண்களுக்கு மட்டும் தெரிகிறது... குழந்தை சாந்தினி பேராச்சர்யப்படுகிறாள்.. அந்த ஆன்மீகப் பெரியவரோ "உனக்காக இது சுவாமி வழங்கிய பிரத்யேக ஆசீர்வாதம்" என நெகிழ்கிறார்! குழந்தை சாந்தினி வளர்ந்து 21 வயதை அடைந்து கல்லூரி பயில்கிறார்... அங்குள்ள சாந்தினி யின் கல்லூரி தோழர்கள்... "நீ பாபாவை பார்க்க இந்தியா செல்லும் போது... நாங்களே உனக்கு பணம் சேர்த்துத் தருகிறோம்... அதை அவரிடம் கொடுத்து முதலில் உன் சுவாமியை முடி வெட்டிக்கச் சொல்!" என கிண்டல் பேசி சிரிப்பர்...அப்போது சாந்தம் உடையும் சாந்தினிக்கு...! 


சுவாமியின் திருமுடி என்பது இதுவரை ஆண்ட மன்னாதிமன்னர்களின் மணிமுடியை விடவும் சிறப்பானது! அதி சூட்சுமமானது! அதில் சிக்கிக் கொள்ளாத பக்தி இதயங்களே இல்லை...! இப்படி "ஆரா" வடிவத்தில் கேசப் பேரழகு கொண்ட ஒருவர் கூட இதுவரை பூமியில் பிறந்ததில்லை... சுவாமி மனிதர் இல்லை... அவர் பேரிறைவன் என்பதற்கு அவரின் ஒரு வாகனமான அந்தத் தோற்றமே மிகப் பெரிய சாட்சி! மனிதனின் சுபாவமான போலச்செய்தல் "காப்பி அடித்தல்" அந்த திருரூபத்தில் இயலாது! சுவாமி ஏற்று வந்தது மிக சூட்சும திருரூபம்! பலருக்கு சுவாமியின் திருக்கேசம் நாகமாக தெரிந்திருக்கிறது... "ஆதி சேஷனை கேசத்தில் கொண்ட ஆதிபுருஷனே ஆன்ம அரசனே" என்கிற வகையில் அது அமைகிறது!  சில மாணவர்கள் கத்திரிக்கோல் கொண்டு சுவாமியின் திருக்கேசத்தை வெட்ட முயன்றபோது.. அதற்கு பவ்யமாக சுவாமியும் தலை தாழ்த்தி அவர்களுக்கு காட்டுகையில்... "இது முடியே அல்ல ... கல்" என்றிருக்கின்றனர்... இப்படி பரம விசித்திர சூட்சுமம் நிறைந்தது சுவாமியின் திருக்கேசம்! எப்படி சாந்தினியின் கல்லூரித் தோழர்கள் திருக்கேசத்தை கிண்டல் செய்தனரோ அப்படியே தெள்ளத் தெளிவாய் உணர்ந்து சுவாமியின் பக்தர்களாகவும் மாறிப் போயினர்... அதில் G'யும் ஒருவர்! முன்பு பிரதானமாய் கிண்டல் செய்த நபர் G'யையே திருமணமும் செய்து கொள்கிறார் சாந்தினி... அந்த ஆன்மீகப் பெரியவர் சுந்தரேஸ்வரர் வாயிலாக சுவாமியை பற்றி நிறைய அறிந்து கொள்கிறார்.. திருமணமாகி 5 வருடங்களுக்குப் பிறகு இருவரும் பெங்களூர் வொயீட் ஃபீல்ட் வருகிறார்கள்!

இலங்கை குரூப்பை சுவாமி நேர்காணலுக்கு அழைக்க... அவர்களும் செல்கிறார்கள்... ஒவ்வொருவரிடமும் வரிசையாக விபூதி பொட்டலங்களை மடியில் போட்டுக் கொண்டே வந்த சுவாமி.. சாந்தினியை நெருங்கியவுடன் "அடுத்த முறை வரும் போது மடியில் குட்டியோடு வா!" என்கிறார் மிகவும் பரிவுடன்... சாந்தினி கண்கலங்குகிறார்... 5 வருடமாக பாவம் குழந்தை இல்லை! ஆஸ்திரேலியா திரும்புகின்றனர்... சுவாமி ஆசி வாக்கை எண்ணி பூரிக்கிறார்கள்... சுவாமி சொல் நிகழ்கிறது... இதில் ஒன்றும் அதிசயமில்லை.... சுவாமி சொல் மட்டுமே எப்போதும் பூமியில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது! அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது! உடனே சிலோன் வருகிறார்கள்... அங்கே கலவரம்... உடனே பர்த்தி விஜயம்... 3 மாதம் அங்கேயே தங்குவதான பாக்கியம்...சுவாமியே குழந்தைக்கு அன்னப்பிராசனம் (முதல் சோறூட்டல்) செய்ய வேண்டும் என மனதிற்குள் வேண்டுகிறார்! சுவாமியிடம் எடுத்துச் செல்கிறார்... சாந்தினியின் எண்ணத்தைப் பார்த்த சுவாமி அந்த அன்னத்தைப் பார்க்கிறார்... "இது உன் முதல் குழந்தையா? இப்படியா சாதம் செய்வது? சாதத்தைக் குழைத்து சமைக்க வேண்டாமா?" இதை கொடுத்தால் குழந்தையின் வயிறு என்னவாகும்?" என கடிந்து கொண்டு சோறூட்டாமலேயே செல்கிறார்! கருணை கடிதல் அது! சுவாமியின் பெருங்கருணைக்கு முன் பிரபஞ்சம் கூட ஒன்றுமில்லை... இதைத் தான் வள்ளலார் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்கிறார்! 

அடுத்த நாள் சாந்தினியின் குழத்தைக்கு சாதம் ஊட்டி... மொட்டை அடிப்பதற்காக முடியை கத்தரித்தும் அருள்கிறார்!"


சாந்தினி குடும்பம் இருந்த அந்த 3 மாதங்களும் அவர்கள் வைகுண்டத்தில் இருப்பதைப் போன்று உணர்கிறார்கள்.. சுவாமி பரிவோடு பேசியபடி தினந்தோறும் தரிசனமும் தருகிறார்! 

பெரும்புகழோடும் பெரும்பணத்தோடும் வக்கீல் தொழிலை நடத்த வேண்டும் என விரும்பியவர்கள்... சுவாமி அவர்களை நேராக மாற்றுகிறார்... ஆம் தலைகீழாக இல்லை... ஆன்மீகமாய் பக்குவப்படுவதே மனிதன் நேராக இருப்பது... பற்றோடு இருப்பதே தலைகீழாக இருப்பது... பிறகு ஆஸ்திரேலியா செல்கிற சாந்தினி பாலவிகாஸ் குருவாக மாறி சுவாமியின் திருச்சேவை ஆற்றுகிறார்! 

குழந்தை இல்லாதவர்க்கு குழந்தையையும் கொடுத்து... பல குழந்தைகளுக்கு பால விகாஸ் குருவாகும் பாக்கியமும் கொடுத்தாரே...அது தான் சுவாமி!!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 80 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமியின் அக்கறை கோடித்தாயின் அக்கறையை விட தூய்மையானது என்பதை சுவாமி சோறூட்டும் விஷயத்தில் உணர முடிகிறது! லௌகீக வாழ்விலே பேறுகளில் சிறந்த பேறு மகப்பேறே... அதையும் விட சிறந்த பேறு ஒன்று இருக்கிறது.. அது தான் மனப்பேறு... அந்த மனப்பக்குவத்தை நாம் அனைவரும் அடைந்துவிட்டால் அதைவிட வேறென்ன ஆராதனையோ பூஜா நெறிமுறையோ சுவாமிக்கு தேவை!?


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக