தலைப்பு

புதன், 10 நவம்பர், 2021

அமெரிக்க பக்தருக்காக தனது மூன்றாவது கண்ணை திறந்து காட்டிய பரமசிவ சாயி!

ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு வெளிநாட்டு தம்பதியினர் எவ்வாறு சுவாமி பக்தராய் எளிமையாய் மாறி நற்சேவை ஆற்றும் அளவிற்கு மனப்பக்குவம் அடைந்தார்கள் என்பதையும் அதற்கு சுவாமி அவர்களுக்கு தந்த அற்புதமான பரிசு என்ன? என்பதையும் பேரனுபவமாக சுவாரஸ்யமாய் இதோ...


மேரிபெத் மெஹர் எனும் பெண்மணி அமெரிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர். கணவர் டெளக் ஒரு பிரபல வியாபாரி.. பணத்தை தண்ணீராய் செலவளிப்பவர்கள் அவர்கள்... சொகுசு வாழ்க்கைப் பிரியர்கள் இருவரும்... அது நிரந்தரம் இல்லை என்பதற்கான ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது... லாஸ் ஏஞ்சல்ஸ் பங்களாவை பரிமரிக்க முடியாத சூழல்... காடிலாக் கார் பணத்தை விழுங்கும் பூதமாக ஏகப்பட்ட செலவு.. வரவு மங்கியதில் செலவும் மங்க ஆரம்பித்தது... சேமிப்பு மருந்தளவுக்குக் கூட இல்லை... 

மனிதன் சங்கடத்தில் ஆழும் போதே இறைவனை நினைக்கிறான் என்கிறது விவிலியம். அப்படி விவிலியப் பொருளாகிறார்கள் இருவரும்... திடீர் அதிர்ச்சி நிகழ்கிற போதே திடீர் மாற்றமும் நிகழ்கிறது.. எப்படி இடி இடிக்கையில் மழை பெய்கிறதோ அப்படி...

அவர்கள் டாக்டர் ரேயஸை சந்திக்கிறார்கள்... நண்பராகிறார்கள்.. அவர் வீட்டு பஜனையில் கலந்து கொள்கிறார்கள்... அக மாற்றம் தனது முதல் கிரணத்தை சிந்த ஆரம்பிக்கிறது...

சுவாமி படம் பரம சாந்தியை அளிக்க ஆரம்பிக்கிறது.. ஆடம்பர சொகுசான வாழ்கையில் கிடைக்காத மன நிம்மதியை சுவாமியின் திருமுகம் தர ஆரம்பிக்கிறது...

டாக்டர் ரேயஸ் குடும்பத்தினர் இந்தியாவில் சுவாமியை தரிசித்துவிட்டு வருகையில் ஒரு திருப்ப(ட)த்தை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.. அதை வைத்து வீட்டில் நேரம் ஒதுக்கி தியானம் பஜனை என ஆரம்பிக்கிறார்கள்...

அந்த அக வழிபாடு ஆடம்பர வாழ்வின் விஷ மரத்தை வேரோடு முறித்து விடுகிறது... பங்களா, காடிலாக் கார், இதர சொத்துக்களை விற்று சிறிய வீட்டில் சிக்கனமாய் குடும்பம் நடத்துகிறார்கள்...

சிக்கனத்தில் இல்லாத சுகம் எக்கணத்திலும் இல்லை என்பது புரிகிறது... 'நான் சம்பாதித்தது எல்லாம் போதும்.. இனி கிடைக்கின்ற உபரி பணத்தில் சுவாமியின் பெயரில் சேவைகள் செய்யப் போகிறேன்" என மனம் திறக்கிறார் டெளக்... அந்த நாள் முதல் அவருடைய வருவாயும் கூட ஆரம்பிக்கிறது...சுவாமியை தரிசித்தால் தான் மனநிம்மதி முழுமை பெறும் என அவர் உணர... தரிசனத்திற்கான ஆவல் பெருகுகிறது... எதிர்பாராத இடங்களில் எல்லாம் பணம் வருகிறது.. அவரும் இந்திரா தேவி அம்மையாரை சந்திக்கிறார்.. அவர் தனது குடும்பத்தோடு பர்த்தி சென்று சுவாமியை தரிசிக்கிறார்...


அப்போது சுவாமியிடம் அவர் தனக்கு நேர்ந்த சோதனைகளை பகிர்ந்தபோது... "நீங்கள் எதையுமே இழக்கவில்லையே... உண்மையான உலகம் உங்கள் இதயத்திலே தான் இருக்கிறது... இத்தனை நாட்களும் நீங்கள் இருவரும் அதை வெளியே தேடி அலைந்து கொண்டிருந்தீர்கள்.. அது தான் தவறு... அது வெளியே இல்லை... இனிமேல் நீங்கள் வாழப் போவது தான் உண்மையான வாழ்க்கை..‌அதில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்!" என்று சொல்லி... "நீ ஒரு நல்ல காரியத்துக்கு பயன்பட போகிறாய்... அதற்கு வேண்டிய சக்தியும்,பொருளும் உனக்கு வந்து சேரும்!" என கூறி அவர் கையில் ஒரு செப்பு தகட்டை சுவாமி அளிக்கிறார்... 

மீண்டும் அமெரிக்க பயணம். விற்பனை ஆகாத அவரின் சில நிலங்கள் விற்பனை ஆனதில் அவருக்கு ஏராளமான பணம் கிடைத்தது.. அதை அவர் டாக்டர் ரேயஸ் ஆரம்பித்திருந்த ஆன்மீகப் பல்கலைக் கழகத்திற்கு வாரி வாரி அளிக்கிறார்.. இதயம் யகரத்தை விட்டு இத(ய)த்தை பெற்றது!! ஒருமுறை அவர்கள் ஜான் என்ற புகைப்பட கலைஞரை சந்திக்கிறார்கள்... அவர் சிவராத்திரி வைபவத்தில் சுவாமியை நேரடியாக அவர் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை அவர்களுக்கு தருகிறார்.. கவரை பிரித்துப் பார்க்கையில் டௌக் மற்றும் அவர் மனைவி புல்லரிக்கின்றனர்.. மெய் சிலிர்க்கிறது... சுவாமி அதில் தனது நெற்றிக் கண்ணை காட்டிய வண்ணம் தரிசனம் தருகிறார்...


"இப்படி ஒரு தோற்றம் நெகட்டிவ் ஃபிலிமில் எதுவுமே இல்லை... நான் எடுத்த மூன்று பிரின்ட்டுகளிலும் இப்படியே வந்திருக்கிறது‌.." என புகைப்பட கலைஞரே தனது வியப்பை அவர்களிடம் பரிமாறுகிறார்... அவர்களுக்கு சுவாமியின் அபூர்வ நெற்றிக் கண் புகைப்படம் சுவாமியின் பரிசாய் கிடைக்கிறது!!

நாம் ஒரு கண்ணையாவது திறந்து நல்லதைப் பார்த்தால்...சுவாமியோ தனது மூன்றை கண்ணையும் திறந்து நம்மை பார்க்கிறார்!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 257 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


ஆடம்பரமாக சொகுசாக வாழ்ந்த வரை கிட்டாத மன நிம்மதி... எளிமையாக வாழும் போது கிடைத்தது... எளிமையே மகிமைக்கான தனது முதல் அடியை எடுத்து வைத்தது... இந்த அமெரிக்க வியாபாரியின் பரந்த இதயத்திற்கு சுவாமியின் அபூர்வ திருப்படமே கிடைத்தது... அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.. நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்பதற்காகவும் அவர்கள் நல்ல செயல்களை செய்யவும் இல்லை... ஆன்மீகம் என்பதன் பொருள் அவர்களின் வாழ்க்கையிலேயே அடங்கி இருக்கிறது... எதிர்பாரா தன்மையே ஞானத்தை தொடங்கி வைக்கிறது !!


  பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து:

  1. "எதிர்பாராத் தன்மையே ஞானத்தைத் தருகிறது" உண்மைதான்!( ஏமாற்றம் மே ஞானத்தை த் தருகிறது)

    பதிலளிநீக்கு