தலைப்பு

புதன், 15 நவம்பர், 2023

25 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த கை கால்களை இயங்க வைத்த சாயி இறைவன்!

எவ்வாறு கை கால்கள் முடங்கி இருந்த ஒருவருக்கு தனது தரிசன வரிசையில் குணமளித்தார் எனும் ஆச்சர்ய சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

அவர் பெயர் எஸ்.ஏ.பதேர்! பாபா பக்தர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க சாயி நிறுவனத்தின் சேர்மன்! டர்பனில் வசிக்கிறார்! பாபாவோடு ஒருமாத காலம் தங்கும் பாக்கியம் பெறுகிறார்! அது 1970. அவரின் முதல் தரிசனம் பம்பாயில் (தற்போது மும்பை) பாபாவின் கோவிலான தர்ம ஷேத்திராவில்... அந்த முதல் தரிசனமே ஆன்மா வரை தெய்வீக அதிர்வலைகளை நிரப்புகிறது அவருக்கு...!

ஒருமுறை வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர்... கை கால்கள் முடமாகி இருந்த ஒரு வாலிபரை மிகவும் சிரமப்பட்டு பாபா தரிசனத்திற்காகவே அழைத்து வருகிறார்! பொதுவாக பொது தரிசனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாகத் தான் அமர்ந்து கொள்வர்! தம்பதியாக வந்தாலும் கூட தனித் தனியாகத் தான் அமர வேண்டும்! இதுவே பாபா வகுத்த ஆசிரம நன்னெறி! ஆகையால் தான் அழைத்து வந்த 36 வயதான அந்த வாலிபரை பதேரிடம் அவர் அருகில் அமர வைக்கும்படி வேண்டுகோள் விடுத்து பெண் வரிசைக்குச் செல்கிறார் அந்த மூதாட்டி! 

தனது 12 ஆவது வயதில் இருந்தே இப்படி கை கால்கள் இயங்காமல் இருப்பதாக அந்த வாலிபர் பதேரிடம் தனது துயரச் சூழ்நிலையைப் பகிர்ந்து கொள்கிறார்!
பாபாவின் தரிசனம் ஆரம்பமாகிறது! பாபா அப்படியே பதேர் பக்கமாக வந்து அப்படியே கடந்து போகிறார்! பதேரும் அந்த வாலிபரும் பாபாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்! இருவருமே எதிர்பாராத அந்த நொடி.. திடீரென பாபா திரும்பி அவர்களை நோக்கி நேராக வருகிறார்! இருவருக்கும் ஒரே பரவசம்! தனது தெய்வீகத் திருக் கரங்கள் அசைய பாபா சிருஷ்டி விபூதியை அந்த வாலிபரின் வலது கை மற்றும் இடது கையில் தானே திவ்யமாகப் பூசிவிடுகிறார்...
சஞ்சீவி மலையே நகர்ந்து வந்து தனது மூலிகையை தானே கிள்ளி கையில் போட்டது போல் அந்தத் திருக்காட்சி பரவசப்பட வைக்கிறது! அதே சஞ்சீவி மலையில் இருந்து மூலிகைக் காற்று தழுவிய பின் விலகுவது போல் விபூதியை தடவிய பின் பாபா அப்படியே செல்கிறார்! பாபாவின் முகத்தில் பூரிப்பும் இல்லை, எப்பேர்ப்பட்ட செயல் புரிந்திருக்கிறோம் என்கிற புளகாங்கிதமும் இல்லை, எதற்கும் உணர்ச்சிவசப்படாத பற்று அற்ற பாபா தனது பெருங்கருணை மாறாமல் நகர்கிறார்!



சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த வாலிபர் அருகே இருந்த பதேரிடம் தனக்குள் ரத்த ஓட்டம் சீராகப் பாய்வதாகப் பரவசப் படுகிறார்! வலது கையை அசைக்க முடிவதை எண்ணி அவரே அதிசயப்படுகிறார்! இப்போது இடது கையையும் அசைக்க முடிகிறது! அப்படியே அந்த வாலிபர் எழுகிறார்... ஆஹா...! கால்களையும் அசைக்க முடிகிறது! அவர் மனம் ஆச்சர்யத்தில் பொங்குகிறது! மனம் பொங்குவதில் விழிகள் நீரை பொங்கல் பானையாக பொங்கித் ததும்பி ஓட வைக்கிறது! எதிர்பாராத அந்த ஆச்சர்யத்தை அந்த வாலிபரால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை! 24 நீண்ட நெடிய கொடும் வருடங்கள் கடந்து அந்த வாலிபர் முடம் என்ற சிறையிலிருந்து விடுதலை அடைகிறார்!
அதைக் கண்ட அந்த மூதாட்டியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை! அந்த வாலிபரின் உடம்புக்குள் நடந்து கொண்டிருந்த ரசவாத மாற்றம் பேரற்புதமாகத் திகழ்கிறது!
பதேர் இதை எல்லாம் நேரிலேயே பார்த்துப் புல்லரித்துப் போகிறார்! அந்த மூதாட்டி சிரமப்பட்டு அழைத்து வந்த வாலிபர் அந்த வயதானவளின் மகனே தான்! இந்த நேரான மாற்றம் எத்தனை விதமான ஆனந்தத்தை அந்தத் தாய் மனதில் அளித்திருக்கும்! பற்றி எரிந்த பெற்ற வயிறே அன்று தான் குளிர்கிறது!

(Source : Miracles of Divine love - vol 1 | Page : 48, 50 | Compiled by P. Gurumoorthy ) 

வெறும் கை கால்களின் முடக்கத்தை மட்டுமல்ல மனிதர்களின் ஜென்ம முடக்கமான அறியாமைக் கட்டுகளைக் கூட பேரிறைவன் பாபாவே விடுவிக்கிறார்! பெரிய முடமே மனதின் முடம் தான்! ஆயிரம் அறியாமைக் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு ஆன்ம ஞானத்திடம் இருந்து விலகிச் செல்வது தான் மனதின் குரங்கு சேஷ்டையே! அத்தகைய மன முடத்தையே குணமாக்கி முக்தி தரும் முழுமுதற் பொருள் பேரிறைவன் பாபா ஒருவரே!

  பக்தியுடன் 
வைரபாரதி

1 கருத்து: